-முனைவா். இரா. மூர்த்தி 

புகைவண்டி புறப்படுவதற்கு அரைமணி நேரமே இருந்தது. நேரத்தை விரயம் செய்யாமல் எப்படியாவது இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் டிக்கெட் வாங்கும் இடத்திற்கு வேகமாக நடந்தான் ரகிம்.

டீக்கெட் கவுண்டரில் பதினைந்து பேர் மட்டுமே வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஐந்து நிமிடத்திலே டிக்கெட்டும் கிடைத்தது.  நடைபாதையில் வரும் வழியில் ஒருவரிடம் ‘சார் அமிர்தா எக்ஸ்பிரஸ் எத்தனையாவது நடைமேடையில் நிக்குது.

“தம்பி மூன்றாவது நடைமேடையில்” சரி நன்றி சார். எனச் சொல்லிவிட்டு வேகமாக சென்றான். அங்கு கடைசியாக இருந்த அன் ரிசர்வ்டு பெட்டியில் நுழைந்து ஒவ்வொரு சீட்டாகக் கேட்டுக்கொண்டு சென்றவன், ஒரு சீட்டில் ஒரே பெண்மணி மட்டும் அமர்ந்திருந்தனள்.

இங்கே யாராவது வாராங்களா? இல்லைங்க… தான் சுமந்து வந்து பேக்கை அதில் வைத்து அருகில் அமர்ந்தான்.

ரகிம் இவ்வளவு வேகமாக வருவதற்குக் காரணம்? தீபாவளி முடிந்த மறுநாள். கூட்டம் அதிகமாக இருக்கும். பொள்ளாச்சி வரைக்கும் இடம் கிடைக்காது. நின்று கொண்டே போக வேண்டும் என்ற பயத்தில் வீட்டிலிருந்து கிளம்பும் போதே பஸ்சில் அடித்துப் பிடித்து ஏறினான்.

ரகிம் சொந்த ஊர் மேற்குத்தொடர்ச்சி மலை அருகிலுள்ள சதுரகிரி. விருதுநகர் மாவட்டம். சிவன் (லிங்கம்) சுயம்பாக உருவாகிய தளம். பிரசித்தி பெற்ற மலைத்தளம்.

நண்பகல் ஒரு மணிக்கு பேருந்தில் ஏறியவன், திருமங்கலம் இறங்கி அங்கிருந்து வேறு ஒரு பேருந்தில் ஏறி மதுரை பெரியார் பேருந்து நிலையம் இறங்கி இரயில் நிலையத்திற்கு நடந்துபோக வேண்டும். இத்தனை இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் அவனுக்குப் புகைவண்டியில் இடமும் கிடைத்தது.

புகைவண்டி சரியாக 3.45 மணிக்கு திருவனந்தபுரத்தை நோக்கி புறப்பட்டது. புகைவண்டி திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாகத் திருவனந்தபுரத்திற்குச் செல்லக் கூடியது.

வண்டி கிளம்பி பத்து நிமிடத்தில் எனது இருக்கையைக் கடந்து கூட்டத்தில் கழிவறைக்கு 23 வயது மதிக்கத் தக்க நாகரிகத் தோற்றத்தில் இளைஞன் ஒருவன் நடந்து சென்றான். போகும்போது ஒரு சிரிப்பு. வரும்போது ஒரு சிரிப்பு சிரித்தான். என் தலைக்கு மேல் பெர்த் சீட்டில் உட்கார்ந்து இருந்த இளைஞனைப் பார்த்து…

திடீரென முன்னே எட்டு வைத்த இளைஞன் வழிப்பாதையிலே கீழே விழுந்தான். அருகிலிருந்தவர்கள் தூக்கும்போது நிலைகுலைந்து கிடந்தான். தூக்கி உட்கார வைத்தால் உட்காரவில்லை. வண்டியில் சிலர் அபாயச் செயினைப் பிடித்து இழுத்து விடுங்கள் என்றனர். சிலர் இரயில்வே போலிசுக்குப் போன் போடுங்கள் என்றனர். சிலர் தண்ணீர் கொடுங்கள் என்றனர். அந்த இளைஞனால் எதுவுமே பேச முடியவில்லை. காரணம் ‘லோ சுகர்’, பதற்றம் வேறு அதிகரித்தது.

புகைவண்டியும் வேகமாகச் சென்றது. அடுத்து திண்டுக்கல்லில் தான் நிற்கும். திண்டுக்கல் வருவதற்கு இன்னும் நாற்பது மணித்துளி நேரம் ஆகும். ஒரு நிலையில் உயிர் போகும் நிலையும் ஏற்பட்டன.

அருகிலிருந்த ஒரு பெண்மணியிடம் தண்ணீர் வாங்கி முகத்தில் தெளித்து கொஞ்சம் தண்ணீர் குடிக்கச் செய்து எழுப்பிய பின்பும் ஒரே பதற்றம், அந்த இளைஞன் நெஞ்சைப் பிசைத்துக் கொண்டே இருந்தான்.

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், தம்பி நீ யாரு? எங்கே போற? என்று கேட்டார். அதற்கு எந்தவித பதிலும் இல்லை. வாய்பேசவும் இல்லை. அவனது சட்டை, பேண்ட் பாக்கெட்டிலும் எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அப்பாவோடு போன் எண்ணைக் கேட்டாலும் சொல்லவில்லை.

இதற்கு இடையிலே, பிஸ்கட், மிட்டாய், பழம் அருகிலிருந்தவர்களிடம் வாங்கி சாப்பிட வைத்துக் கேட்டபோது, வாய் மட்டுமே சைகை செய்தான். பார்த்தவர்கள் அனைவரும் கண்களில் கண்ணீர் வடியத் தொடங்கின….

ஒரு பேப்பரில் திண்டுக்கல் என்று மட்டுமே எழுதினான். சிறிது நேரம் கடந்த பின்பு, சைகை மூலம் கூறத் தொடங்கினான். திண்டுக்கல் ஊர். பாட்டிக்கு உடம்பு சரியில்ல. மதுரை பெரியாஸ்பத்திரிக்கு போய்விட்டுட்டு வரேன்.

டீக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுத்துட்டு வரும்போது என்னுடைய பர்ஸ், பணம் எல்லாம் பிடிங்கிட்டு விட்டானுக. மதுரைக்காரனுக. கூட்டத்தில் சில வயதான பெண்களும், முஸ்லிம் பெண்களும் வாய்ப்பேச்சாக “மதுரைக்காரனுக பகலிலே ஆள முழுங்கிடுவனுக” என்று சொல்லிக் கொண்டனர்.

இதைக் கேட்டதும் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் கண்கலங்கியதுடன் தன்னுடைய பையிலிருந்த நூறு ரூபாயை எடுத்து அவனது பையில் வைத்தார். அவன் வாங்க மறுத்தான் சைகை மூலமாக.

பின்பு சமாதானப்படுத்தி அங்கிருந்தவர்கள் ஆளுக்கு ஐம்பது ரூபாய் சேர்த்து 200 ரூபாய்  அவனது சட்டைப் பையில் வைத்தனர். கூட்டத்தில் சிலர் வாய் பேசமுடியாத, ‘லோ’ சுகரில் உள்ள இந்த பையனை ஏன் தனியா அனுப்புறாங்க இவனது அப்பா அம்மா? என்று கோபப்பட்டனர். உடல் நடுக்கம் குறையவே இல்லை.

இத்தகைய சூழலில் சிலரது மனதிற்குள் பல உளப்போராட்டங்கள் எழுந்திருக்கும். இந்த நிலைமை நாளை நமக்கும் தான்? அல்லது தனியாகக் கல்லூரிக்கு அனுப்பும் நமது மகளுக்கு? மகனுக்கு? என்று எண்ணத் தொடங்கி இருக்கும். இதை வாசிக்கும் நமக்கும் அந்த எண்ணங்கள் எழக் கூடும்.

ஆனால் நாட்டில் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை. இருந்து கொண்டுதான் இருக்கு. உயிர்போகக் கூடிய நேரத்துலகூட  சாதி, மத வேறுபாடு என எதையும் பார்க்காமல் உயிர்மேல் உள்ள பற்றால், முன்வந்து உதவக்கூடிய சில மனிதர்கள் இருக்கும் வரை மனிதநேயம் வாழ்வதுடன் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆகையால் பேருந்திலோ, வண்டியிலோ தனியாக இரவு, பகல் நேரங்களில் பிரயாணம் செய்யும் நபர்கள் தங்களது சுயமுகவரி, போன் எண் முதலியவைகளை எடுத்துச் செல்லுங்கள்.

நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்நாட்கள் எப்போது நிறைவுறும் என்பது புரியாத புதிர். வாழட்டும் மரணத்தை சாகடித்த மனித நேயம்……

*****

கதாசிரியர் – உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -20

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மரணத்தைத் தடுத்த மனித நேயம்!

  1. இது நாளும் நடக்கும் நடப்பியல். எப்படிக் கதையாகும்? இதனைக் கதையெனக் கொள்வதற்கு ஏதுமில்லை. அதனால் இந்தப் பதிவுக்குத் தாழ்வுமில்லை. ஒரு விளம்பரப் பதிவாகக் கூட அமையலாம். மனித நேயம் மிக்க ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டிய நிலையைச் சமுதாயமே உருவாக்கிவிடுகிறது என்பதை உணர்த்துகிற பதிவு.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *