நிர்மலா ராகவன்

 

எப்படியெல்லாம் கையாளுகிறார்கள்!

`பெண் என்றால் ஆணுக்கு அடங்கி இருக்கவேண்டும்!’

பெண்கள் கல்வியறிவு பெறுவதே தகாத காரியம் என்றிருந்த காலத்தில் எவரெவரோ எழுதி வைத்துவிட்டுப்போனது. ஆணாதிக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் தற்காலத்திலும் நம்புவது – தமக்குச் சாதகமாக இருப்பதால்.

இன்று பெண்களும் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். உத்தியோகம் வகித்து, சொந்தக்காலில் நிற்கவும் முடிகிறது. அவர்களை இப்போது நேரிடையாக எதிர்த்தால், ஆத்திரம்கொண்டு எதிர்ப்பார்களே! அதனால், அவர்களே உணராதபடி கையாள்வது வழக்கமாக ஆகிவிட்டது.

பிறரைக் கையாள்வதற்கு எத்தனை எத்தனையோ வழிமுறைகள்!

1   போலியான புகழ்ச்சிமூலம்.

எந்தப் பெண்ணும், `நீ எவ்வளவு அழகு!’ `உன்னைமாதிரி வெகுளித்தனமாக சிரிப்பவர்களை இப்போது எங்கே பார்க்க முடிகிறது!’ என்றெல்லாம் பலவாறாகப் பாராட்டினால், உடனே மயங்கிவிடுவாள்.

2   வேறு எந்த கவனமும் இல்லாததுபோல் அவளையே கூர்ந்து கவனிப்பது. (பல நாட்டுப் பெண்களும் இதற்குத்தான் மயங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்).

3   போலியான கரிசனத்தால்.

`இந்த இளம் வயதில் உனக்கு இவ்வளவு பொறுப்புகளா!’

`நீ வயதுக்குமீறிய  புத்திசாலி. அதனாலேயே உன்னை ஒருவருமே புரிந்துகொள்வது கிடையாது, இல்லையா?’

4   இனிமையான பேச்சு.

ஒரு பெண்ணுக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அதைப்பற்றியே பேசி, அவள் நம்பிக்கையையும், நட்பையும் பெறுவதற்கு ஒரு நல்ல வழி இது.

5   ஒருவரது மனதைப் புண்படுத்திவிட்டு, அளவுக்கு மீறி, திரும்பத் திரும்ப மன்னிப்பு கோருவது.

6   ஒரு பெண் வேடிக்கை என்றெண்ணி எதையாவது ரசித்துக் கூறுகையில், பெரிதாகச் சிரிப்பது.

7   பரிசுகள் வழங்குவது.

(இவற்றில் சில வழிகளைப் பெண்களும் கையாளக்கூடும்).

`நான் சொன்னதைக் கேட்க யார் இருக்கிறார்கள்!’ என்று கழிவிரக்கத்துடன் பேசி, பச்சாதாபத்தை உண்டுபண்ணுவது.

8   கத்துவது. இம்முறை பலிக்காதுபோனால், அழுவது. (சிறு குழந்தைகளுக்கு இத்தன்மை இயற்கையாகவே அமைந்திருக்கிறது).

வாழ்க்கைத்துணையோ, நண்பர்களோ, ஒருவரின் நம்பிக்கையைப் பெற்றபின், தமக்குச் சாதகமானதை சூழ்ச்சி செய்தாவது படியவைக்கிறார்கள் பலரும். இலக்கானவர்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல் புரிய வைக்கிறார்கள்.

கதை

சிவானி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, உயர்கல்வி படித்தபோது காதலனாக அமைந்தவன் ராஜா. காதல் மயக்கத்தில், அவனுக்குப் போதைப்பழக்கம் இருந்தது அப்போது அவளுக்குத் தெரியவில்லை.

சில மாதங்கள் உல்லாசமாகக் கழிந்தன.

`உனக்கு உண்மையில் என்மேல் காதல் இருந்தால், நான் சொன்னதைக் கேட்பாய்,’ என்று ராஜா வற்புறுத்த ஆரம்பித்தான். முதலில் மறுத்த சிவானி, அவன் பேச்சில் மயங்கி, ஓரிரு முறை அவனுடன் சேர்ந்து போதை மருந்தை உடலில் செலுத்திக்கொண்டாள். விரைவிலேயே அப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாது போயிற்று.

பணத்திற்கு என்ன செய்வது?

அதற்கும் ஒரு வழி காட்டினான் காதலன்.

போதை மருந்தை விற்பனை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாள் சிவானி.

`புத்தி கெட்டுப்போய் அவனோட சேர்ந்து, என் வாழ்க்கையையே பாழடிச்சுக்கிட்டேன்!’ என்று கதறினாள் சிவானி. (மலேசிய தொலைகாட்சியில் பார்த்தது).

பிறரைத் தம் வசப்படுத்த விரும்புகிறவர்கள்  தாமே சிறந்தோங்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் பிறரை ஏளனம் செய்தும், அச்சமுறுத்தியும் அவர்களுக்குத் தம்மேலேயே சந்தேகம் எழச் செய்துவிடுவார்கள்.

`எனக்குத் தெரிந்துவிட்டது. உனக்கு யாரோ காதலன் இருந்திருக்கிறான்!’ என்று மிரட்டி மனைவியின் பணிவைப் பெற முயற்சிப்பார்கள் சிலர். பழி உண்மையாக இல்லாவிட்டாலும், பெண்ணுக்கு அச்சமும் துக்கமும் எழும்.

பொறுக்க முடியாது அவள் எதிர்த்தால், சாமான்களைத் தூக்கிப்போட்டு உடைத்தல். `விவாகரத்துதான் ஒரே வழி!’ என்று மிரட்டுவான்.

குடும்ப அமைதி கெடுமே, குழந்தைகள் அஞ்சுவார்களே என்று பணிந்துவிடுகிறாள் பெண்.

`நீங்கள் ஓயாமல் என்னைக் கட்டுப்படுத்துகிறீர்கள்!’ என்ற எதிர்ப்பு எழுந்தால், அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதும் ஒரு கலைதான்

லாவகமாக பேச்சை மாற்றக்கூடும்.

`நான் சிறு வயதில், உன்னைப்போல் மகிழ்ச்சியாக இருக்கவில்லை!’ (அந்தஸ்து வித்தியாசத்தில் மணம் புரிந்துகொள்பவர்கள் கையாளும் முறை).

வலிய வரவழைத்துக்கொண்ட அலுப்பு: `உனக்கு என்னை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்!’

கதை

“உனக்குக் கடையில் இருப்பதை எல்லாம் வாங்கிவிட வேண்டும்!”

பாஸ்கரன் கத்தியது எல்லாருக்கும் கேட்கும்படி அமைந்தது. அவன் தன் மனைவியைத்தான் வார்த்தைகளால் தாக்கினான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.

“எனக்கென்று வாய்த்தாயே! அடிமுட்டாள்!” என்ற சீறல் வேறு!

முகம் சிறுக்க, தாரா சுற்றுமுற்றும் பார்த்தாள். அனைவரும் எதுவும் காதில் விழாததுபோல் தத்தம் காரியத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் அந்தப் பேரங்காடியில்.

வீட்டுக்கு வந்ததும், அழுகையுடன், ஒரு பொது இடத்தில் கணவன் தன்னை அவமானகரமாக நடத்தியதை பதின்ம வயது மகளிடம் முறையிட்டாள் தாரா.

“ஒன்றைப் பத்தாக்குவதே இவள் வேலை! சும்மா சொல்கிறாள்,” என்று சமாளித்தான் பாஸ்கரன்.

மனைவியிடம், “நீயே ஏதேதோ கற்பனை செய்துகொள்கிறாய்! நான் எங்கே அப்படிச் சொன்னேன்!” என்று அப்பாவித்தனமாகக் கூற, அவளுக்குக் குழப்பம் உண்டாகியது.

பல முறை அப்படியே நடக்க, தாராவின் பொறுமை மீறியது. “இன்னொரு முறை நீங்கள் அப்படி நடந்தால், நானும் அங்கேயே பதிலுக்குக் கத்துவேன்!” என்று மிரட்டினாள்.

அடுத்த முறை, அவள் ஒவ்வொரு சாமானைக் கையில் எடுக்கும்போதும், `இது எதற்கு? அநாவசியம்!’ என்று பாஸ்கரன் ஆட்சேபிக்க, அவள் வாங்கவில்லை. (அவர்களுக்குப் பணப்பிரச்னை கிடையாது. அதிகாரம் செய்பவன்தான் ஆண் என்ற மனப்பான்மை கொண்ட மனிதர்களுள் ஒருவன் பாஸ்கரன்).

“சாப்பிட நொறுக்குத்தீனி ஒன்றுமே இல்லையே1” என்று குறைப்பட்டபோது, “எதுவுமே வாங்காதே என்று நீங்கள்தானே சொன்னீர்கள்? எப்படிப் பண்ணுவது?” என்று தாக்கினாள் மனைவி.

பயம், மரியாதை, கலாசாரம் என்று ஒரேயடியாக விட்டுக்கொடுத்துவிட்டால், நம்மையே நம்மால் மதிக்க முடியாது போகலாம். அல்லது, நம் அதிர்ஷ்டத்தைக் குறை கூறிக்கொண்டே இருப்போம்.

முடிவெடுப்பது உன் கையில்தான்!

சில சமயம், நண்பர்களோ, உறவினர்களோ, `நீ இதுதான் செய்யவேண்டும், இப்படித்தான் செய்யவேண்டும்!’ என்று வற்புறுத்துவார்கள். சாப்பாட்டு சமாசாரமோ, உடை வாங்குவதோ எல்லாவற்றிலும் அவர்களின் குறுக்கீடு இருக்கும்.

நம் உணர்வுகளைவிட அவர்களது உணர்வுக்கு எதற்காக அதிக மதிப்புக் கொடுத்து நடக்கவேண்டும்?

(விருந்தோம்பல் என்ற பெயரில் நம்மை அளவுக்குமீறி சாப்பிட வைத்து, மறுநாள் வயிற்றுக்கோளாறால் அவதிப்பட வைப்பவர்கள் சிந்திப்பார்களா?!)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *