மலையாளம் தமிழ் அகராதி
தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்ட திராவிட மொழிகளில் ஒன்றே மலையாளம். இன்று இலக்கியச் செல்வங்களுடன் புதுப் பொலிவு பெற்றுத் திகழும் மலையாள மொழி பண்டைய தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியான சேர நாட்டில் பேசப்பட்டு வருகிறது. இதற்குப் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் போன்ற நூற்களே சான்றாகும். மலையாள மொழியின் தொடக்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களிலும் தமிழின் ஆதிக்கமே மிகுந்துள்ளது. இம்மொழி தனித்தனியாகப் பிரிந்தாலும் இன்றும் அம்மொழி பேசுவோர் இலக்கணமோ அகராதியோ இன்றி தமிழர் மலையாளத்தையும் மலையாளி தமிழையும் புரிந்துகொள்ளத்தான் செய்கின்றனர். இருப்பினும் மொழியின் உள்ளமைப்பில் ஏற்படுகின்ற மாற்றங்களும் பிறதொடர்புகளும் வேறுபடுவதால் செப்பமாக மொழியைப்பயில்வதற்கு இலக்கண நூல்களும் அகராதிகளும் ஏழவேண்டிய தேவை எழுகிறது. இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மலையாளம் தமிழ் அகராதி ஒன்றை உருவாக்கி 2016 – ஆம் ஆண்டில் வெளியிட்டது.
மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்திற்கு வித்திட்டவர்கள் இத்துறையின் மேனாள் பேராசிரியர் பெருமக்களாவார். அவர்கள் இத்துறையில் பணியாற்றிய காலத்தில் ஆய்வு மாணவர்களைக்கொண்டு சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரையிலான அனைத்து இலக்கியதங்களுக்கும் சொல்லடைவு உருவாக்கி அகராதி தொகுப்பிற்கு வித்திட்டனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பேரா. மா . இளையபெருமாள் ஆவார். அவர் மலையாள இலக்கண நூல்களைத் தமிழுக்கும் தமிழ் இலக்கண நூல்களை மலையாளத்திற்கும் மொழிபெயர்த்துள்ளார். மேலும் அவர் மலையாளம் – தமிழ் , தமிழ் – மலையாளம் அகராதியையும் தயாரித்து வைத்திருந்தார். அது அச்சில் வராமல் போனது. அவரைத் தொடந்து தற்போது பணியாற்றும் பேரா. ப. . ஜெயகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நான் உள்ளிட்ட துறையின் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் போன்றொரின் அரிய முயற்சியால் உருவானதே இவ்வகராதி. இதனை கேரளப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வெளியிட்டுள்ளது.
அகராதி அமைப்பு
மலையாளம் – தமிழ் அகராதி வரலாற்றில் இது முதன்மையானது. மலையாளம் தலைச்சொல்லாக அமைகிறது. தொடர்ந்து அச்சொல்லுக்காண இலக்கண விளக்கம் , ஆங்கில ஒலிபெயர்ப்பு , தமிழ் விளக்கம் என்ற அமைப்பில் இவ்வகராதி அமைந்துள்ளது. தலைச்சொல் மலையாள சொல்லாக இருப்பதால் மலையாளம் அறியாத அனைவரும் எளிதில் வாசிக்கும் வகையில் ஆங்கில் ஒலிபெயர்ப்பு ( Translitration) கொடுக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிலையில் இவ்வகராதி அமைந்துள்ளது.
இவ்வகராதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைச்சொற்கள் தற்கால மொழிப்பயன்பாட்டிற்கு ஏற்ற முறையிலான இருபதாயிரம் மலையாளச் சொற்கள் தேர்வுசெய்யப்பட்டன. இச்சொற்கள் சப்ததாராவலியில் இருந்தும், மலையளப்பேரகராதியில் இருந்தும் மலையாளச் சொல்தரவகத்திலிருந்தும் எடுக்கப்பட்டவையாகும்.
இருமொழி அகராதி உருவாக்கச் சிக்கல்களும் தீர்வுகளும்
ஒருமொழி அகராதி உருவாக்குவதை விட பணிச்சுமையும் குழப்பங்களும் கொண்டதே இருமொழி அகராதி உருவாக்கம். இருமொழி அகராதியின் தலையாய நோக்கம் ஒருமொழியிலுள்ள சொற்களைப் பிரிதொரு மொழிச்சொல்லோடு ஒப்புமைப்படுத்திக்க காட்டுவதாகும்.தமிழும் மலையாளமும் ஒரு மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் என்றாலும் அம்மொழிகள் பேசுவோர் இருவேறு சமூகத்தைச் சார்ந்தவர் ஆவர். அவர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், மொழிக்கூறுகள், போன்றவை பல நேரங்களில் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன. உலகமொழிகள் அனைத்திலும் அவ்வவ் மொழிக்குரிய தனித்தன்மைகள் காணப்படத்தான் செய்கின்றன. பிஞ்சு, காய் போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் இல்லாதது போல கணினி, பேருந்து போன்ற சொற்கள் மலையாளத்தில் இல்லை. எனினும் மலையாலத்திற்கே உரிய தனிப்பட்ட சொற்கள் அம்மொழியில் காணப்படத்தான் செய்கின்றன. சான்றாக,
மாப்பு சாக்ஷி – என்ற சொல்லிற்கு இணையான தமிழ் சொல் இல்லை. அதற்கு அகராதியில் ஒரு தொடராகத்தான் விளக்கம் கொடுக்க முடிந்தது. அதாவது ”குற்றங்களைச் செய்து விட்டு கூட இருப்பவரைக் காட்டிக்கொடுத்து சாட்சி கூறுபவன்”. எனபொருள் விளக்கம் கொடுக்கப்பட்டது.
கேரளப் பண்பாட்டோடு தொடர்புடைய சில பண்பாட்டுச் சொற்களுக்கு விளக்கம் தரும்போதும் சிக்கல்கள் ஏற்பட்டது. சான்றாக,
கை நீட்டம் – என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் இல்லை. அதற்கு “ விசுப்பண்டிகையின் போது கொடுக்கப்படும் பரிசுப்பொருள் ‘ என் விரிவான முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
அஞ்சாம்புரை – நம்பூதிரிப் பெண்ணை விசாரணைக்காக வைக்கப்படும் அறை
படிப்புர- வெளிப்புறக் கதவுள்ள வீடு. இச்சொற்கள் கேரளப் பண்பாட்டோடு தொடர்புடைய சொற்களாகும்.
மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்தின்போது தமிழ் மலையாள ஒலியொற்றுமையுடைய சொற்களுக்கு பொருள் எழுதும்போதும் சிக்கல்கள் தோன்றின.
கழி- மலையாளத்தில் சாப்பிடுதல் என்னும் பொருளில் வரும். தமிழில் வெளியேற்றுதல், மலம் கழித்தல் என்னும் பொருளில் வரும். அதேபோன்று அவசரம்- என்ற சொல் மலையாளத்தில் சந்தர்ப்பம் வாய்ப்பு என்ற பொருளில் வருகிறது. தமிழில் சீக்கிரம் என்ற பொருளில் வருவதைக்காணலாம்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் – என்ற குறளுக்கேற்ப
மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்தின் போது பல்வேறு சிக்கல்கள் தோன்றினும் இன்று இருமொழியாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் அமைந்திருப்பது மகிழ்ச்சியே.
ஆசிரியர்:-
முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி. அ
உதவிப்பேராசிரியர், கேரளப் பல்கலைக்கழகம்
கட்டாயம் தமிழர்களும் சேரத்தமிழர்களும் படிக்கவேண்டிய அகராதி