=======================

திருச்சி  புலவர் இரா.இராமமூர்த்தி

———————————————————–

 

ஓரூரின் சிறப்பு அவ்வூர் மக்களின் நல்வாழ்வைப் பொறுத்தே அமையும்! ஒவ்வோர் ஊரிலும் அந்த ஊரில்  நெடுங்காலம் வாழ்வோரின் வரலாறு, எல்லா வகையிலும்  வெளிப்படும். தமிழ் நாட்டின் பழங்காலத்து நகரங்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களின் வரலாற்றைப் புலப்படுத்தும்! பூம்புகார் சோழ நாட்டின் பழங்காலத்  துறைமுக நகரம்! அந்த நகரின் சிறப்பினைப் பற்றி சிலப்பதிகாரத்தின் தொடக்கத்திலேயே இளங்கோவடிகள் கூறுகிறார்!

’பொதியிலாயினும்  இமயமாயினும்

  பதியெழுவறியாப்  பழங்குடி  கெழீஇய

 பொதுவறு  சிறப்பின் புகாரே  யாயினும்

 நடுக்கின்றி  நிலைஇய என்பதல்லதை

 ஒடுக்கம் கூறார்  உயர்ந்தோர் உண்மையின் ‘’

என்று பாடுகிறது. பொதியில், இமயம், புகார் என்ற மூன்று இடங்களையும்  கல்வியிற் சிறந்த பெரியோர் ‘’எக்குறையும் இல்லாமல் நிலைத்த  சிறப்பின, என்பார்களே அல்லாமல் எந்தக்  குறையையும் கூற மாட்டார்கள்! அதற்குக்  காரணம்  அங்கெல்லாம்  நீண்டகாலம்  உயர்ந்தோர் வாழ்வதே!’’ என்று புகழ்வர்!

பொதியில் அகத்தியர் முதலான முனிவர்களும், இமயத்தில் சிவபிரானும், புகாரில் , எக்காரணத்தைக் கொண்டும் ஊரைவிட்டுச் செல்லாத சோழ நாட்டுப் பழங்குடிகள் நிறைந்து வாழ்வதாலும் , அவ்வாறு புகழ்வர்.  அவ்வகையில் ஓரூரின் சிறப்பு அங்கு நீண்டகாலம் வாழும் மக்களால் விளங்கும்!

தமிழகத்தின் சிறந்த நகரங்களில் ஒன்றாகிய திருவாரூரின் சிறப்பைச்  சேக்கிழார் சுவாமிகள் பற்பலபாடல்களில் புகழ்கிறார்! ஓரூரின் சிறப்பு அங்குள்ள சிறந்த சான்றோர்களாலும் , அங்குள்ள நீர்வளம், நிலவளம், தொழில் வளம், கோயில் முதலானவற்றாலும் புலப்படும் என்பதைச் சிலம்பு கூறுவதை மேலே கண்டோம்! அவ்வகையில் ‘’திருவாரூர்  அங்குள்ள பறவைகளின் ஒலிகளால்,  சிறந்த ஊர் என்பதை அறிந்து கொள்ளலாம்! ‘’ என்கிறார் புலவர்.

சங்க இலக்கியமாகிய பெரும்பாணாற்றுப் படையில் , பாணர்களை அந்தணர் வாழும் இல்லத்துக்குச்சென்றால், அங்கு எவ்வகை உணவைப் பெறலாம் என்பதைக் கூறி ஆற்றுப்படுத்துகிறார்கள். அப்போது, ‘’அந்தணர் இல்லத்தில் பசுமாட்டின் கன்றைக் கட்டிவைத்த பந்தலின் உள்ளே,பசுஞ்சாணத்தை இட்டு  மெழுகிய யாகசாலை உடைய வீட்டில், கோழியும்,அதனை விரட்டும்  ஆடும் உள்ளே நுழைய மாட்டா! அங்கே வளைந்த வாயினை உடைய கிளிகள்   வேளைதோறும் இடைவிடாது அந்தணர்கள் கூறும் அறிய வேதங்களைக் கேட்டு, மீண்டும் சொல்லிப்  பயிலும் ‘’  என்பதை,

‘’செழுங்கன்று  யாத்த  சிறுதாள் பந்தல்

 பைஞ்சேறு  மெழுகிய படிவ நன்னகர்

 மனையுறை  கோழி, அடு ஞமலி துன்னாது

 வளைவாய்க்  கிள்ளை  மறைவிளி  பயிற்றும்

 மறைகாப்பாளர்  உறைபதி’’

என்று பாடுகிறது.  வேதங்களைக் கிளிகள் பயிலும் அடையாளம் சிறந்த வேதியர் வாழும் இடத்தைக் குறிக்கிறது!திருவெண்காடு சிறந்த சிவத்தலம்! அங்கே வாழும் அந்தணர்கள் ஸ்ரீருத்திரம் போன்ற வேத மந்திரங்களை வேளைதோறும் விடாமல் ஒதுகின்றனர்! அதைக்கேட்ட அவ்வூரில் உள்ள  கிளிகள் அவ்வேத மந்திரங்களைக்   கொண்டே  பேசப்   பழகுகின்றனவாம்! இதனைத் திருஞானசம்பந்தர் ,

“நாதன்  நமையாள்வான்   என்று  நவின்றேத்தி

 பாதம்  பன்னாள்  பணியும் அடியார்கள் தங்கள்மேல்

 ஏதம்தீர   இருந்தான்   வாழும்    ஊர்போலும்

வேதத்து  ஒலியால்  கிளிசொல்  பயிலும்  வெண்காடே!’’ என்று பாடுகிறார்!

 மேலும் அவர் ‘’திருவீழி மிழலை என்ற திருத்தலத்தில், இடமகன்ற திருமடங்களில்  அந்தணச் சிறுவர்கள் ‘பதம்’ என்ற வகையில்   படித்த நால்வேதங்களைக் கேட்டு, மகிழ்ந்து இருந்த பசுங்கிளிகள் , அவ்வாறே ஓதக்கேட்டு , அத்திருக்கோயில் வாயிலில் படுத்துக் கிடந்த பசுக்குலங்கள்,வேத ஒலியைத் தாமும் பயின்று முழங்குகின்றன. இத்தலத்தின் இறைவனின்  திருவைந்தெழுத்தை  நாமும் ஓதினால் நம் வினைகள் கெடும்!’’ என்கிறார்! அவர் பாடல்,

’அஞ்செழுத்துரைக்க அருளினன்   தடமிகு  நெடுவாள்

படித்த  நான்மறைகேட்    டிருந்த பைங்கிளிகள்  பதம்ஓத, பாடுஇருந்த

விடைக்குலம்  பயிற்றும்  விரிபொழில்வீழி  மிழலையான்  எனவினை  கெடுமே!’’

என்று பாடுகிறார்.  மேலும் விடமுண்ட கண்டராகிய சிவபிரான் என்றும் வாழும் நகராகிய  சீர்காழியை, ‘’மிகவும் நல்லவர்களாகிய வேதியர் கற்றுப்  பயில்கின்ற வேதங்களைக் கேட்டு, அவ்வூர்ச் சோலைகளில் பறந்து திரியும் கிளிகள், தாமே அப்பதங்களைச்  சொல்லி மகிழும் திருப்புகலி!’’ என்று பாடுகிறார்! இதனைத் திருமுறை,

“ சால  நல்லார் பயிலும்  மறைகேட்டுப் பதங்களை

 சோலை மேவும் கிளித்தான்  சொல்பயிலும் புகலியே!’’    

என்று பாடுகின்றது!

இவையனைத்தையும்  பயின்ற   சேக்கிழார்   பெருந்தகை,   திருவாரூரில் உள்ள  இல்லங்களில், சிறந்த திருமுறைகளை  அனைவரும் வேளைதொறும் பயில்வர்! அதனை அங்கே  வாழும் கிளிகள் கேட்டு மீண்டும் கூறுமாம். அதனை நாகணவாய்ப் பறவைகளும் கேட்டு மகிழும் என்று பாடுகிறார்.

‘’உள்ளம்  ஆர் உரு  காதவர்?  ஊர்விடை

 வள்ள   லார்திரு  வாரூர்  மருங்கெலாம் 

 தெள்ளும்  ஓசைத்  திருப்பதி  கங்கள் பைங்

 கிள்ளை  பாடுவ  கேட்பன  பூவைகள்!’’

என்பது அவர் அருளிய திருப்பாடல். இப்பாடலில் வேதப்  பதங்களைக் கிளிகளும், பசுக்களும் பயிலும் என்று, சங்க இலக்கியமும், சம்பந்தர் தேவாரமும் கூறியதைச் சற்றே மாற்றம் செய்து பாடுகிறார்! திருவாரூரில் இல்லங்களிலும் , வீதிகளிலும், திருக்கோயிலிலும் , புறநகர்ப் பகுதிகளிலும் அடியார்கள் இடைவிடாமல்  சைவத்  திருமுறைப் பதிகங்களைப்    பயில்கிறார்கள், என்று மாற்றி, வேதமும்  திருமுறையும் ஒன்றே என்ற கருத்தை நிலை நாட்டுகிறார்!

மேலும் ‘வள்ளலார்’ என்று திருவாரூர்த் தியாகேசரைக் குறிப்பது, அவர் தம்மையே தமர்க்கு நல்கும் தியாகத்தைச் செய்தருளுபவர் என்பதை நமக்குத் புலப்படுத்தும். அவ்வூரில் தம்மைக் காதல் தூதுவராக்கிக் கொண்டு இரண்டு முறை திருவாரூர் வீதியிகள் நடந்தருளியவர்! அவர் திருவருட் சிறப்பைப் பாடும் பாடல்கள் நால்வரும், காரைக்காலம்மையாரும்  நல்கிய பத்துப் பத்துப் பாடல்களால் ஆகிய பதிகங்களே, என்கிறார்! முன்னோர் மொழிந்த  கருத்துக்களைக்  காலத்துக்கும்  இடத்துக்கும் ஏற்பச்  சற்றே  மாற்றிப்  பாடிய சேக்கிழாரின் திருமுறைப் பற்றினை இப்பாடல் குறிக்கின்றது!

=====================================================================13

——— சே.பா.ந. – 12 —- sent  on   15/11/’18.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *