பசுமை இந்தியா
–முனைவர் இரா. இராமகுமார்
தீவாகிய மனங்களை
தீபகற்பமாய்
கொள்ளை கொண்ட இந்தியா.
குமரி முதல்
இமயம் வரை
பசுமையை ஆடையாக்கியதால்
கொள்ளையனும்
விரும்பும் இந்தியா.
பசுமையில்
சுமையிருப்பினும்
பார்வையில்
பாவையிருப்பினும்
அயல்நாட்டவரும்
சுற்றுலாவாய்
விரும்பும் இந்தியா.
மூன்றாம் உலகப்போருக்கு
இந்திய வரைபடத்தில்
இடமில்லை.
பசுமைையைப் போருக்கு
அழைப்பதில்
நியாயமில்லை……”
“நஞ்சையும் புஞ்சையும்
தேசத்தின் உடல்.
சமுத்திரங்கள்
சரித்திரத்தின் திடல்.
ஆறுகளும் நதிகளும்
பாரத உடை.
வயல்வெளிகளே
பாமரனின் நடை.
அருவிகள் கூந்தலாயின
சோலைகள்
தங்குமிடமாயின.
காலைநேர பனித்துளி
பசுமை நெற்றிக்கு
திலகமாயின.
வறுமையைப் போக்கிட
பறவைகளும்
இரை தேடின.
வளமையை காட்டிட
காடுகளும்
வகிடு எடுத்தன.
என் இந்தியா என்பது
தலையாக சுய நலம்.
நம் இந்தியா என்பதே
இதயமாய் பெருமிதம்.
விதை நெல்லாய்
மாநிலங்கள்.
விதைப்பவர்களாய்
பாரதப் புதல்வர்கள்.
புண்ணியத்தை
அறுவடையாக்கிட
நாள்தோறும் பசுமை தேசத்தில்
தானங்களும் தர்மங்களும்…..
இயற்கையை
வளப்படுத்திட
நாள்தோறும்
கருணையும் மனிதமும்
எங்கே !
பாரதத்தின்
பசுமையை பகையாக்காதீர்….!
சீற்றங்கள் இயற்கையின்
கோபமல்ல!
மாற்றங்கள் செயற்கைக்கு அழகல்ல!
பழமைக்கு வளம் சேர்ப்போம்
புதுமை இந்தியாவிற்கு
வலிமை சேர்ப்போம்.
முனைவர் இரா. இராமகுமார்,
எம்.ஏ., எம்.எட்., எம்பில்., பி.எச்.டி.,
எம்.ஏ(வரலாறு). அக்ரி(உ)., த.பண்டிட்.,
டி.டி.எட்., நெட்., ஜே.ஆர்.எப்
உதவிப் பேராசிரியர் & நெறியாளர்,
தமிழ் உயராய்வு மையம்,
விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம்,
கன்னியாகுமரி மாவட்டம் – 629 701
அலைபேசி 9994054671
மின்னஞ்சல் drrksir121314@gmail.com