=======================

திருச்சி புலவர் இராமமூர்த்தி

————————————————–

 

திருவாரூரில் மனுநீதிச் சோழன் மைந்தன் ஏறிச்  சென்ற தேர்க்காலில் அடிபட்டு மரணமடைந்த கன்றுக்காக அரசன் மனம் கலங்குகிறான். அப்போது மறையோர் இதற்குப் பிராயச்சித்தம் என்ற கழுவாயை மறைநூலில் சொன்னபடியம், மனுநீதி முறைப்படியும் செய்தால் அரசன் மைந்தன் செய்த தவறுக்குக்  கழுவாய்  தேடலாம் என்கிறார்கள். மறைநூலையும் மனுநீதியையும் நன்கறிந்த மன்னன், அமைச்சர்களும் வேதியர்களும் கூறியதை ‘ வழக்கு’என்றே ஒத்துக்கொள்ள வில்லை! அதனைச் சழக்கு என்று இகழ்கிறான். ‘’நான் மைந்தனை இழக்கிறேனே என்ற வருத்தத்தால் , எனக்கு நீங்கள் கூறும்  வழக்கம், தான் இப்போதுதான் ஈன்ற, மிகவும்  இளமையான கன்றினைப் பறிகொடுத்து அதனால் அந்தத்  தாய்ப்பசு அடையும் மிகுந்த வருத்தத்தைத் தீர்க்கும் மருந்தாகி , அந்நோயைத்  தீர்க்குமா?’’ என்று கேட்கிறான். அதனை அடுத்து எக்காலத்துக்கும், எந்நாட்டிற்கும், எப்போதும் பொருந்தும் ஓர் அரச நீதியை வகுத்துக் கூறுகிறான்.

‘’ஒருநாட்டைக் காக்கும் அரசன் அக்காவல் கடமையைச் செய்யும்போது, நாட்டுக்கு, அதாவது நாட்டு மக்களுக்கு வாழ்க்கையில் இடையூறாகி, விளைவிக்கும் மிகப்பெரிய ஐவகை அச்சங்களையும்  தீர்த்து அரசாளவேண்டும்’’ என்கிறான். அவை: தன்னால் , தன்பரிசனத்தால், பகைத்திறனால் , கள்வரால், மற்ற கொடிய உயிர்களால் நிகழும் அச்சசங்களாகும்.  மற்ற நால்வகைகளாலும் வரும் இடையூறுகளை அரசன்தானே தீர்க்க வேண்டும்? ஆனால் அரசன் தன்னால் வரும் இடையூற்றினைத் தானே தீர்க்கும் கடப்பாடு உடையவன் ஆவான். அவனாலேயே வரும் இடையூற்றை யார் தீர்க்க வல்லார்?

ஒருமுறை இராமன் நீராடக் செல்லும் போது , குளக்கரையில் தம் வில்லை நேராகத் தரையில் ஊன்றி நிறுத்தி விட்டு, நீர்நிலையில் நீராடித் திரும்பினான். அப்போது தாம் ஊன்றிய வில்லின் கீழே கொஞ்சம் குருதியைக் கண்டான்! உடனே வில்லை எடுத்துக் கீழே பார்த்தான். அவனது ஊன்றிய வில்லின் கீழே ஒரு தவளை நசுங்கிக் காயத்துடன் இருந்தத்தகு. இராமன் பதறிப்போய் அந்தத் தவளையைக் கையில் ஏந்தித் தடவிக் கொடுத்து காயத்துக்கு மருந்திட்டான். அவன் கரம் பட்டவுடன் தவளையின் அச்சமும் நோயும் நீக்கியது. அவன் தவளையிடம் ‘’ தவளையை நீ குளத்தில் இருந்து கத்தும் ஓசை மிகவும் பெரிதாகவே இருக்குமே? நான் வில்லை ஊன்றிய நேரத்தில் உன்மேல் என் வில்லின் நுனி பட்டு அழுத்திய போது, நீ வலிதாங்காமல் கத்தியிருந்தால், இப்படிக்கு காயம் அடைந்திடிருக்க மாட்டாயே?’’ என்றார். உடனே தவளை வேறெவராலும் எனக்குத் தீங்கு நேர்ந்தால், நான் இராமா, காப்பாற்று! என்று உன்னை வேண்டுவேன்.  ஆனால் உன்னாலேயே எனக்குத் தீங்கு வந்தால் உன்னைவிடப் பெரிய கடவுளாக  யாரையும் நான் அறியேனே!’’ என்றதாம். ஆம்! அரசன் தன்னால் மக்களுக்கு வரும் இடையூற்றைத் தீர்க்க , அந்நாட்டின் அரசனைவிடப் பெரியவர் இல்லாததால் தானே அந்த அச்சத்தை நீக்க வேண்டும். அதனை இந்த வரிசையில் ‘’தன்னால்’’ என்ற சொல்லால் தன்னை முதலில் கூறினான். அரசனால் மக்களுக்கு வரும் இடையூறுகள், அதிக வரியை வசூலித்தல்,அதனையும் வன்முறையால் கவர்தல், மிகுந்த ஏழைக்கு  வரிவிலக்கு அளிக்காமல் , அவரிடமும் உள்ளதைப் பிடுங்குதல், மக்களை வருத்தும் தீங்குகளை நீக்காதிருத்தல், மக்கள் காண்பதற்கு  அரிய நிலையில்காவலர் நடுவில்  இருத்தல், கடுமையான சொற்களைக் கூறுதல், தன்னை இடித்துக் கூறும் நல்லவர் சொல்லை மதித்து ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல், அறநிலையங்களின் சொத்துக்களை அபகரித்தல் ஆகியவை.  இவை என்றைக்கும், எந்நாட்டுக்கும், இன்றைக்கும்பொருந்துவன அல்லவா?

அடுத்துத்  தன்  பரிசனத்தால் என்ற தொடர். அரசனின் பரிசனம் என்பன, அவரால் நியமிக்கப் பெற்றும், அவரது உறவு, நட்பு முதலான சலுகையைப் பெற்றும் , இறுமாப்புடன் அதிகாரம் செலுத்துவோர். இவர்களை புறநானூறு, வயலில் தாமே புகுந்து அழிவுகளை செய்யும் யானைகளை போன்றோர் என்று கூறுகிறது. அவர்களது தகுதி மீறிய அடக்குமுறையையும் சேக்கிழார் குறிக்கிறார். அதிகாரிகளுக்கு சட்டத்தைக்  கடைப்பிடிக்கத்  தெரியுமே தவிர  நியாயத்தை வழங்கத் தெரியாது. சட்டப்படி வெள்ள  நிவாரணமோ, பஞ்ச நிவாரணமோ வழங்க இடப்பட்ட ஆணையைச் செயல் படுத்துவார்கள். அது சரியான நிவாரணத்தை அளித்து , நியாயமான  முழு உதவியையும் செய்யுமா என்பதை உறுதி செய்ய முடியாது. முழு வீட்டையும் வெள்ளத்தில் இழந்தவர் அரசின் எளிய நிவாரணத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும்?

அடுத்து ஊனமிகு பகைத்திறத்தால் என்ற தொடர். நாட்டை அழித்து வென்று மக்களை துன்புறுத்தும் வேற்று நாட்டுப் பகைவர், உள்நாட்டிலேயே அழிவுச் செயல்கள் செய்து மக்களைத் துன்புறுத்துவோர், அவர்கள் மக்கள் மேய்க்கும் பசுக்களைக் கவர்வர். கொள்ளையிட்டு மக்களின் பொருள்களைக் கவர்வோர். பெண்களைக் கற்பழித்துத் துன்புறுத்திக் கொல்வோர் ஆகியோராவர். இவர்களைத் தலையெடுக்க விடாமல் அடக்கி வைக்கவும், அழிக்கவும் வேண்டும்.

அடுத்து கள்வர். இவர்கள் உள்நாட்டில்  வழிப்பறி செய்வோர்.இவர்களை தண்டிக்க   வேண்டும்.இழந்தவற்றை மீட்டெடுத்து வழங்க வவேண்டும். அடுத்து உயிர்கள். அவை மக்களைத் துன்புறுத்தி,அடித்து உண்ணும் கொடிய விலங்குகள். இவற்றை வேட்டையாடுவது மன்னன் செயல்.

‘’பயந் தீர்த்துக் காத்தலே காவலன் கடமை என்பதை “இத்தனை காலமு நினது சிலைக்கீழ்த் தங்கி இனிதுண்டு தீங்கின்றி இருந்தோம்’’ என்று கண்ணப்பர்புராணத்தில் மக்கள் கூறும் பாதுகாவல்  நிலை.இந்நாள் நவீனர் அரசாட்சியிலே நமது நாட்டுக் குற்றத்தீர்வு நீதிச்சட்டமும், குடிகளின் உயிருடம்புகளையும், உடைமைகளையும், காவல்புரிதலையே குறிக்கோளாகக் கொண்டு, உடம்பைப் பொறுத்த குற்றங்கள் – உடைமையைப் பொறுத்த குற்றங்கள் என்று (Offences against perosn & offences against property) இரு பெரும் பிரிவுகளாக வகுத்ததும், அக்குற்றம் செய்தார்க்குத் தண்டம் விதித்ததும், குற்றங்கள் நிகழாமல் குடிகாவல் விதித்ததும், இங்கு வைத்து ஒப்பு நோக்கிக் காணத்தக்கன’’. என்று சம்பந்த சரணாலயர் கூறுகிறார். இனி சேக்கிழார் எழுதிய முழுப்பாடலையும் படிப்போம்.

“மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலைத்
 தான்  அதனுக்கு இடையூறு தன்னால், தன் பரிசனத்தால்,
 ஊன மிகு பகைத் திறத்தால், கள்வரால், உயிர்கள்  தம்மால்
 ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ?”

இந்தப்பாடல் இக்கால மக்களின் அச்சம் போக்கும் அரசின் கடமைகளைப் பொதுவாகக் கூறுகிறது.அக்காலச் சோழரின் முதலமைச்சரான சேக்கிழாரின் தீர்க்க தரிசனம் இதில் தெரிகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *