மருதூர் அந்தாதியில் இடம்பெற்றுள்ள புராணக்கூறுகள்

0

-திருமதி. ப. மாக்கில்மா

இலக்கிய உலகில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய சிற்றிலக்கியங்கள் பொருள் அமைப்பிலும் வடிவ அமைப்பிலும் சங்க இலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைகளாகப் பாட்டியல் நூலார் பாகுபடுத்தியுள்ளனர். அவற்றுள் “அந்தாதி”என்பது சிற்றிலக்கிய வகையினுள் ஒன்றாகும். அந்தாதி இலக்கியங்களுள் தலைமலை கண்ட தேவர் இயற்றிய மருதூர் அந்தாதி என்னும் நூலில் அமைந்துள்ள புராணக் கூறுகளான மார்க்கண்டேய வரலாறு, அடிமுடி தேடுதல், மாலுக்கு சக்கரம் அளித்தல் முப்புரம் எரித்தது, பிரமன் சிரம் கொய்தது, பாம்பை அணியாகக் கொண்டது, அருச்சனனுக்கு அருளியது முதலியன பற்றி ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புராணம்  விளக்கம்

புராணம் என்பது பழங்கதை. மாக்கதை எனப் பெயர் பெறுகிறது.காலம் செல்லச் செல்ல இவையே சமயத்தின் ஊடாடுகிறது. சமயம் புராணத்திற்குக் கருவியாக அமைகிறது. சைவ சமயத்திலும், புராண வரலாறுகள் சமய பக்திக்கும் நல்லொழுக்கத்திற்கும் நடைமுறையில், உயர்ந்த ஞானத்தையும் சாமானியப் புராணக் கதையையும் தழுவி எழுந்தவையே கோயில்கள். கோயில்களில் ஸ்தூலமான பொருள் புராணக் கதைகளேயாகும்.

புராணக்கூறு என்பது இறைவன் செய்துள்ள அற்புதச் செயல்கள்,இறைவன் கொண்ட இல்பலி போன்ற இறைவனின் செயல்கள் பற்றி மருதூர் அந்தாதி மூலம் கீழ்க்கண்டவாறு காணலாம்.

மார்க்கண்டேய வரலாறு

  மார்க்கண்டேயரது பெற்றோரின் தவத்தை மெச்சிய இறைவன் அவர்களிடத்து “அறிவும் திறமும் உடைய பதினாறு ஆண்டுகள் ஆயுளையுடைய மகனா? அன்றி அறிவற்ற நீண்ட ஆயுளையுடைய மகனா? யார் வேண்டும்? எனக் கேட்க அவர்கள் அறிவுடைய பதினாறு வயது ஆயுளையுடைய மகனையே வேண்டிப் பெற்றார்” அதன்படி மார்க்கண்டேயனுக்கு பதினாறு வயதில் இறப்பு என்று குறிக்கப்பட்டது. பதினாறாவது வயது முடியும் தருவாயில் அவரது உயிரைக் கொல்லுதற்காக இயமன் வர அந்நிலையில் மார்க்கண்டேயர் இறைவனை விடாது வழிபாடு செய்தார். குறிப்பிட்ட காலம் வந்ததும் இயமன் எங்கு தேடியும் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசி அக்கயிறு சிவலிங்கத்தின் மீதுப்படடது. சினங்கொண்ட சிவபெருமான் இயமனைக் காலால் உதைத்து மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறாக வயது இருக்குமாறு அருளுகிறார். இப்புராணக் கருத்தை,

     “முனியாய மானுடர்க் காவந்
              துகனை முனிந்தவனே”1  என்று மருதூரந்தாதி பாடல் வரிகள் விளக்குகின்றன.

அடிமுடி தேடுதல்

 படைத்தற் பிரமனும், காத்தற் திருமாலும் தமக்குள் யார் பெரியவர் என்று போட்டி மேற்கொண்டு தம் கருத்தைச் சிவபெருமானிடம் முறையிட்டனர்.”உங்கள் இருவரில் ஒருவர் எனது திருவடியையும் ஒருவர் திருமுடியையும் காணுதல் வேண்டும். கண்டு யார் முதலில் வருகிறார்களோ அவர்ளே பெரியவர்கள்”என்று சிவபெருமான் கூறுகிறார். திருமால் பன்றியாக உருவெடுத்து அடியையும், பிரமன் அன்னமாக உருவெடுத்து முடியையும் தேடிச் சென்றனர். சிவபிரான் அவர்கள் காணமுடியாத வண்ணம் சோதி வடிவமாகத் தோற்றமளித்தார். இப்புராணக் கருத்தை,

      “யாலை யனங்கம் வருந்தியுந்
                தேடற் கரியவன்கை”2  என்ற பாடல் வரிகள் காட்டுகின்றன.

மாலுக்குச் சக்கரம் அளித்தது

சிவபெருமான் உள்ள சக்கராயுதம் “சலந்தாசுரன்”என்ற அசுரனைக் கொன்ற சிறப்புடையது. அவ்வரிய சக்கராயுதத்தைப் பெறுதற்காகத் திருமால் ஆயிரம் மலர்கள் கொண்டு சிவனை நாள்தோறும் வழிபட்டார். ஒரு நாள் வழிபாட்டின் போது ஆயிரம் மலர்களில் ஒரு மலர் குறைவது கண்டு, அதற்காக வருந்தாது அம்மலருக்குப் பதில் தான் தன் கண்ணையே மலராக இட்டு வழிபட்டார். மாலின் இவ்வன்பிற்கு இரங்கிச் சிவன் சக்கராயுதத்தை மாலுக்கு வழங்கினார். இப்புராணக் கருத்தினை,

                     “ ரஞ்சக் கருத்தை யரிக்களித்
                       தார்மரு தூர ரங்கி”3

என்ற மருதூரந்தாதி பாடல் வரிகள் விளக்குகின்றன.

முப்புரம் எரித்தது

தாருகாட்சன், கமலாடசன், வித்துயுன்மாலி மூவரும் பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகளாக மாறுவதற்குரிய வரத்தினைப் பிரம்மாவிடம் பெற்றனர். அவ்வசுரர்கள் அக்கோட்டைகளோடு பறந்து சென்று தாம் விரும்பிய ஊர்களை அழித்து விட்டு மீண்டும் தம்மிடம் வந்துவிடுவர் இவனது துன்பம் தாங்காது தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அவ்வசுரர்களை அழிப்பதற்காகப் பூமியைத் தேராக்கி, சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாக்கி, நாள் வேதங்களைக் குதிரையாக்கி, பிரம்மனை தேர்ப்பாகனாக்கி, மேருவை வில்லாக வளைத்தார். வாசுகியை நாணாக்கினார். திருமாலை அம்பாகவும் கொண்டார். இவர்கள் தத்தம் உதவியால் சிவன் முப்புரங்களை அழிக்கப் போகிறார் என எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது சிவபெருமான் இதனைக் கேட்டு சிரிக்க அச்சிரிப்பே முப்புரங்களை எரத்தது. இப்புராணக் கருத்தை,

                “ பகைத்த பருப் பதங்கடந் தான்”4    என்ற மருதூரந்தாதிப் பாடல் வரி குறிப்பிடுகிறது.

பிரமன் சிரம் கொய்தது

பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைச் சிவபிரான் கிள்ளி எரிந்ததாகப் பல கதைகள் கூறப்படுகின்றன. அவற்றுள் ஒன்று அந்தாதியில் இடம்பெற்றுள்ளது. பிரமன் சிவபெருமானினும் தான் உயர்ந்தவராக எண்ணிப் பிதற்றியமையால் பெருமான் அவ்வாறு பிதற்றிய தலையைக் கொய்து எறிந்தார்.என்றும் சிவபெருமான் தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்றும் பிரமன் வரம் கேட்டபோது, அப்பெருமான் இட்ட சாபத்தால் ஐந்தாவது தலை வெடித்து உதிர்ந்தது என்றும் புராணக்கதைகள் பலவாகக் காணப்பெறுகின்றன இதனை,

                            “கையாலை யனங்கங்கொண் டோன்மரு
                             தூர னடி வணங்கே”5 ஏன்ற பாடல் வரி குறிப்பிடுகிறது.

பாம்பை அணியாகக் கொண்டது

கருடனும் பாம்பும் ஒரு தந்தையின் இரு மனைவியரின் மக்கள். இவர்களுக்குள் பல காரணங்களால் பகைமை ஏற்பட்டு கருடன், பாம்புகள்,  கருடனுக்கு அஞ்சி சிவபெருமானிடம் அடைக்கலம் புகுந்தன. சிவபெருமான் அவற்றைத் தமது அணிகளாக அணிந்து கொண்டார்.இப்புராணக் கருத்தை,

              “………………………………உய்ய
              வரியர விந்தம் புனைவோன்
              சிலம்பி லதர்மனித”6 என்ற பாடல் வரிகளில் குறிப்பிடுகின்றன.

அருச்சனனுக்கு அருளியது

பாண்டவர்களின் இளையவர் அருச்சுனன் தன் பங்கு நாட்டைப் பெறவேண்டும் எனப் பாண்டவர்கள் கவலை கொண்டிருந்தனர். அச்சமயம் இந்திரன் ஒரு முதிய அந்தணன் வடிவில் தோன்றி அருச்சுனனை ஒத்த வீரர் உலகில் இல்லை என்றும் சிவபெருமானை நேரில் கண்டு படைக்கலங்களைப் பெற்று எதிரிகளை வெல்லலாம் என்றும் அறிவுரை வழங்கினார்.அவ் ஆலோசனைப்படி அருச்சுனன் காட்டில் கடுந்தவம் இருந்தார். அப்பொழுது ஒரு பன்றி அவரைக் கொல்ல வருவது போல் நெருங்கி வந்தது. வீரம் மிகுந்துள்ள அருச்சுனன் பூசையை மறந்து வில்லை வளைத்து பன்றியை நோக்கி எய்தார். பன்றி அம்பு பட்டு விழுந்தது. அக்கணையை எய்தவன் ஒரு வேடுவன். இவர்கள் இருவரின் முதலில் எய்தவர் யார் என்ற விவாதம் ஏற்பட்டு அதன் வழி அவர்கட்குள் விற்போரும் நடந்தது. விற்போரில் வெல்ல எண்ணி வேடனின் தாளை அருச்சுனன் பிடித்தார். அங்கு வேடுவனைக் காணவில்லை. அவ்வேடுவன் மிகப்பொலிவு பெற்ற சிவபெருமானாகி உமையுடன் காட்சி அளித்தார். அருச்சுனன் வணங்க அவர் படைக்கலங்களையும் வரங்களையும் அருளினார். இறைவனின் இத்தகைய அற்புதச் செயல்களைப்

         “பார்த்ததற்கு வாய்த்த வெற்றி
         முலரம்பை யாரஞ் சடையார்”7 என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.

இவ்லாறு ஆசிரியர் மருதூர் அந்தாதி நூலுள் உள்ள புராணக் கூறுகளான மார்க்கண்டேய வரலாறு, அடிமுடி தேடியது, முப்புரம் எரித்தது, பிரமன் சிரம் கொய்தது. பாம்பை அணியாகக் கொண்டது, அருச்சுனனுக்கு அருளியது போன்ற புராணக்கூறுகள் ஆகியவற்றை இம் மருதூரந்தாதி நூலின் மூலம் தெற்றென விளக்கியுள்ளார்.

ஆய்வு முடிவுகள்

புராணம் பற்றிய கருத்துக்கள் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இறைவனின் அற்புதச் செயல்களான அருச்சுனனுக்கு அருளியது, பாம்பை அணியாகக் கொண்டது, முப்புரம் எரித்தது போன்ற அற்புத நிகழ்வுகள் எழுந்த சூழல் விளக்கப்பட்டுள்ளது. இறைவனின் திருவடியையும் திருமுடியையும் தேடும் பொருட்டாகத் திருமாலும் பிரமனும் தேவியும் காணமுடியாத இறைவன் சோதி வடிவாக எழுந்த சூழல் விளக்கப்பட்டுள்ளது. இறைவன் திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்த நிகழ்வு விளக்கப்பட்டுள்ளது. இறைவன் பிரமனது சிரம் கொய்த நிகழ்வு பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

அடிக்குறிப்புகள்

  1. மருதூரந்தாதி பாடல் எண் – 79
  2. மருதூரந்தாதி பாடல் எண் – 10
  3. மருதூரந்தாதி பாடல் எண் – 29
  4. மருதூரந்தாதி பாடல் எண் – 67
  5. மருதூரந்தாதி பாடல் எண் – 10
  6. மருதூரந்தாதி பாடல் எண் – 8
  7. மருதூரந்தாதி பாடல் எண் – 16

*****

கட்டுரையாளர் – தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்),
வீராச்சிப்பாளையம், சங்ககிரி.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *