அவனருள் கும்பிடடா!
நல்லவை சுமந்து நன்மைகள் ஆற்றின் நாடு போற்றுமடா – நல்லது
அல்லவை சுமந்து அல்லல்கள் வளர்ப்பின் அகிலம் தூற்றுமடா!
பிறப்பின் பயனும் பிறர்க்கெனச் சொல்லும் பணியை ஆற்றிடடா – தனிச்
சிறப்பை அதிலும் செலுத்தியும் வாட்டும் சிறுமை தூற்றிடடா!
வாழ்வின் பயனும் புகழெனச் சொல்லும் வாழ்வை அமைத்திடடா – மிகத்
தாழ்வுறும் நினைவை அறவே தள்ளியும் தர்மம் சமைத்திடடா!
ஏற்றமும் இறக்கமும் இரட்டைப் பிறவிகள் என்பதை அறிந்திடடா – நிலை
மாற்றியும் இயற்கை காட்டுதல் உணர்ந்து மமதை எறிந்திடடா!
காற்று என்றும் ஓர்திசை தன்னில் காலமும் வீசாது – நலம்
ஆற்றும் செயலில் நன்மைகள் விளையின் நாடுனை ஏசாது!
நல்லவை விதைப்பின் நன்மைகள் விளையும் நினைவில் ஏற்றிடடா – துயரில்
தள்ளிடும் நினைவுகள் தன்னைத் தள்ளும் தர்மம் போற்றிடா!
நாடுனைப் போற்றும் வண்ணம் நடந்து நற்பெயர் பெற்றிடடா – பெரும்
கேடன் என்றுனை ஊரார் சாடா கொள்கையில் முற்றிடடா!
மகிழ்ச்சி என்பது மனத்துள் உள்ளது மறந்தும் போகாதே – நிகழும்
நிகழ்ச்சிகள் யாவும் ஈசன் செயல்தான் எவரையும் நோகாதே!
இறைவன் வழங்கும் கடுகுள் மலையும் இருக்கும் நம்பிடடா – கூர்
அறிவும் காலமும் சமமாய் வழங்கிய அவனருள் கும்பிடடா!