-சி. ஜெயபாரதன், கனடா

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[ Miss me, But let me go]

++++++++++++++

 

[25]

தங்க ரதம்

தங்க ரதம் போல்
வீட்டில் தினம்
உலாவி வருவாள் !
மங்கா ஒளி முகத்தோடு
வீட்டில் தினம்
விளக்கை ஏற்றுவாள்.
தகதகக்கும் அந்தத்
தங்க மேனியாளை
திருமணத்தில் கைப் பற்றிய நான்,
இறுதியாக
என்னிரு கைகளால்
எரியும் நெருப்பிலே
தள்ளினேனே! நான்
தள்ளினேனே!
+++++++++

[26]

மரணம்

மானுட இனத்துக்கு
மரணம் என்பது
புதிதல்ல !
மரணத்தின் கூரிய பற்கள்
பொல்லாதவை!
மரணம் என்பது
விதியல்ல என்று நீ
சொல்லாதே !
மதியால் நீ விதியை
வெல்லலாம் என்று
சொல்லிக் கொள்ளலாம்!
ஆனால்
மரணத்தை வெல்ல
முடியுமா !
பிறப்பும், இறப்பும்
உயிரின வாழ்க்கையின்
இருதுருவங்கள்.
பிறந்தவர்
ஒருநாள் இறப்பவர் தான்!
இறப்பவர் மீண்டும்
பிறப்பர்
என்பது தெரியாது!
மரணம் புதிதல்ல என்று
உரைத் தெனக்கு
ஆறுதல் கூற வராதீர்!
மரணம் விதியல்ல என்று
இறையிடம்
முறையிடுவேன்!
மரணம்
அரக்கர் தொழில் !
மானிடப் படைப்பைச் சீராய்
உருவாக்கிய பிறகு
ஊனுருகப் பறிப்பது தான்
உன் அறுவடையா ?
அல்லது
அறநெறியா ?

+++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது….
சி. ஜெயபாரதன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *