இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (288)
அன்பினியவர்களே !
இந்தப் புத்தம் புதிய 2019ம் வருடத்தில் உங்களுடன் கலந்துரையாட விழையும் முதலாவது மடலிது. 2018 அவசரமாக ஓடி தன்னை சரித்திரப் புத்தகத்தில் மூடப்பட்ட அத்தியாயம் ஆக்கிக் கொண்டது. 2019 புதிதாகப் பிறந்ததோர் குழந்தை போன்று எம்மிடையே தவழத் தொடங்கியுள்ளது. 2018 தன்னோடு முடிக்காமல் மூடிக் கொண்ட பல விடுகதைகளுக்கான விடைகளை இந்த 2019ல் கண்டெடுக்கும் ஆவலுடன் நாம் பலரும் மிகவும் முனைப்புடன் இயங்க ஆரம்பித்துள்ளோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள் எம் முன்னோர்கள். இந்த வழிதான் என்ன ? இதுவரை அப்படிக் கண்டுபிடிக்க முடியாத வழி ஒன்று எமக்குக் கிடைத்து விடுமா? எனும் எண்ணம் எம்மை நோக்கிப் பரிகசிப்பது போலத் தோன்றுகிறது. உண்மையில் இதன் அர்த்தம் தான் என்ன? மிகவும் இலகுவாக நம்பிக்கை என்பது புரிகிறது. ஆம் நம்பிக்கையே ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கிய திருப்புமுனையாக அமைக்கிறது என்பதனையே எமது முன்னோர்கள் எமக்கு உணர்த்த முயன்றுள்ளார்கள்.
இதேபோலத்தான் 2018கூட ஒரு புது நம்பிக்கையுடன் தான் எம்மை அதனுள் அழைத்துச் சென்றது ஆனால் அந்த நம்பிக்கை எத்தனைதூரம் வெற்றியளித்துள்ளது என்பது ஒவ்வொருவரைப் பொறுத்தவரையும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. நாம் எதிர்பார்த்தவைகளில் எத்தனை நிறைவேறியதோ அன்றி எத்தனை ஏமாற்றமாக முடிந்தனவோ என்பது ஒருபுறமிருக்க நாமனைவரும் நம்பிக்கையோடு அடுத்த ஆண்டில் நுழையக்கூடிய வகையில் எமக்கு ஒரு சந்தர்ப்பத்தையளித்துள்ளது என்பதே உண்மையாகிறது. வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போன்றதே! நாம் எந்த நிலையத்தில் ஏறுகிறோம் என்பதோ அன்றி இறங்குகிறோம் என்பதே எம்மால் நிர்ணயிக்கப்படமுடியாத விடயமாகிறது. எம்மோடு எத்தனை பேர் பயணம் செய்வார்கள் என்பதோ அன்றி எவ்வளவு தூரம் பயணிப்பார்கள் என்பதும் எமது கைக்களில் இல்லை. எம்முடன் பயணிக்கும் சிலரை மட்டும் தெரிவு செய்யக்கூடிய வல்லமையே எமக்கு உண்டு. இதுதான் வாழ்வின் யதார்த்தம். இந்த வகையில் எம்மோடு பயணித்த சிலரை காலம் இறக்கி விட்டிருக்கலாம், வேரு சிலருடன் பயணிக்கப் பிடிக்காமல் நாமாக இடத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம், வேறு சிலரை நாமாகத் தேடி எமது பயணத்தில் இணைத்திருக்கலாம் இல்லையானல் அவர்களது பயணத்தில் இணைந்திருக்கலாம். இத்தகைய ஒரு சூழலில் தான் எமது வாழ்க்கைப்பயணத்தின் கூட்டல் கழித்தல்களை நாம் எண்ணிப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது.
நாம் எப்படியான ஒரு உலகில் வாழ வேண்டும் என்று எண்ணுக்கிறோமோ அப்படியான ஒரு உலகத்தை நோக்கியோ அன்ரி அப்பசியான உலகத்தைன் பாதையிலிருந்து விலகியோ செல்லும் வகையிலான நிகழ்வுகளை கடந்த 2018ம் ஆண்டு நிகழ்த்தி விட்டு இலகுவாக தன்னை எம்மிடமிருந்து மறைத்து விட்டது. ஆனால் அவ்வாண்டில் நிகழ்ந்த தாக்கங்களின் விளைவுகளில் இருந்து நாம் எம்மை இலகுவாக விலக்கிக் கொள்ள முடியாது. அதற்கான வழிமுறைகளைத் தேடும் நம்பிக்கையைத் தாங்கியவாறே நாம் இவ்வாண்டினுள் நுழைந்துள்ளோம்.
சர்வதேச அரங்கில் நிகழ்ந்த பல நிகழ்வுகளின் தாக்கங்கள் உலகை ஒரு சமாதான பூமியாக மாற்றும் வகையில் அல்லாது உலக மக்களிடையே பிரிவினைகளையும், நம்பிக்கையற்ற ஒரு நிலையைத் தோற்றும் வகையிலுமான விளைவுகளைநோக்கியதாக அமைந்துள்ளனவோ எனும் அச்சத்தை பலர் மனங்களிலும் தோற்ருவித்திருக்கிறது என்பது உண்மையே. திடமான ஜனநாயகப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் மேற்குலக நாடுகளின் அரசியல் அரங்குகளில் ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் ஒரு தீவிரவாத போக்கினை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றனவோ எனும் மனக்கிலேசம் அனைவர் மனங்களிலும் ஏற்பட்டிருக்கின்றது என்பது கசப்பான உண்மை. தம் நாட்டின் மீது கொண்ட தீவிரமான பற்று எனும் போர்வையில் தீவிர வலதுசாரப் போக்குக்கொண்ட அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் இனத்துவேஷத்துக்கு வழிகோலுக்கின்றதோ எனும் எண்ணம் மேலோங்குகிறது. வெளிநாட்டிலிருந்து மேர்குலகநாடுகளில் குடியேறுவோரின் எண்ணிக்கைக்குக் எதிரான கோஷம் என்பது இனவாத, இனத்துவேஷ வடிவெடுப்பதைத் தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டிய தேவை எப்போதுமில்லாத வகையில் இப்போது அவசியமாகிறது.
இத்தகையதோர் பின்னனியில் நாம் 2019 தமிழர் தைத்திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை நோக்கி நடைபயில்கிறோம். சேற்றிலே கால் பதித்து உலகோரெல்லோருக்கும் சோறளிக்கும் உழவுத் தோழர்களின் உன்னத சேவையை உணர்த்திடும் வகையில் இத்திருநாளை அனைவரும் சிறப்பிக்க வேண்டும்.கைகளிலே ரும், கண்களில்லே நீருமாக வாழ்வோர் விவசாயிகள் எனும் நிலை மாறி உழைப்போர் கைகள் உயர்ந்தோங்கும் நிலை வரவேண்டுமெனும் சீரிய எண்ணம் கொண்டு தமிழர் திருநாளைக் கொண்டாடுவோம். அனைவரும் எனது தைத்திங்கள் ம்திருநாள் வாழ்த்துக்கள்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்