– திருச்சி புலவர் இராமமூர்த்தி

இறைவன் திருவருள் விருப்பத்தால் மாதவம் செய்த தென்திசையில், திருமுனைப்பாடி நாட்டில், திருநாவலூரில்  சடையனார்க்கும் இசைஞானியார்க்கும்  மைந்தராக,  சுந்தரர் திருவவதாரம் செய்தார். அவர் அவதாரம் செய்த நாடு  தனிச் சிறப்புப் பெற்றது. இந்நாட்டில்தான் அப்பரடிகள் அவதரித்தார். இந்நாட்டில்தான் சைவ சமய சந்தானாசாரியார்களாகிய ஸ்ரீ மெய்கண்டாரும் ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியாரும்  அவதாரம் செய்தனர்!

இந்தச் சுந்தரர் சிறு குழந்தையாகத் தெருவில் விளையாடிய போது , நகர்வலம் வந்த அரசராகிய நரசிங்க முனையரையர், அக்குழந்தையின் ஒளிபொருந்திய அழகைக் கண்டு , அன்புற்று அவரைத் தம் வளர்ப்பு மைந்தராக ஏற்று மகிழ்ந்தார். ஆனாலும் சிவவேதியர் குடும்பத்தில் பிறந்த அவருக்கு, அவர் பெற்றோர் உரிய முறையில் உபநயனச் சடங்கு செய்தார்கள். பின்னர் உரிய பயிற்சிகள் பெற்று முறையாக வளர்ந்து திருமணத்துக்கு உரிய வயதை அடைந்தார். பின்னர் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார்  திருமகளைக் குலம்,  கோத்திரம், ஆகியவற்றின் பொருத்தம் பார்த்துத் திருமண ஏற்பாடுகள் செய்தனர் . அரசர் வளர்ப்பு மகன் என்பதால் செல்வச்  சிறப்புடன்  அளவில் அவரை அலங்கரித்து யோகப்புரவி மேல் ஏற்றி ஊர்வலம் வந்தனர் .

திருமணநாளுக்கு  ஏழு நாட்களுக்கு முன் மங்கையர்கள் பன்னிரண்டு சிறுமண் கலயங்களில்  முளைப்பாலிகை எனப்படும் நவதானிய வித்துக்களை இட்டு நீரூற்றினர் . அவை பன்னிரண்டு ஆதித்தர்களைப் போற்றி வழிபாடு செய்து அவர்களின் ஒப்புதல் பெறும் சடங்காகும். அதன் பின் முதல்நாளில் சுந்தரர் திருக்கரத்தில் காப்புக் கயிறு காட்டினார் , திருமணம் நிறைவேறி முழுமையான சடங்குகள் முடிந்து  காப்புக்  கயிற்றை அவிழ்க்கும் வரை எந்த இடையூறும் நேரா வண்ணம் பிரார்த்தித்துக்  கட்டுவதே காப்புக் கயிறாகும்.பின்னர்  அவருக்குத் திருமணத்துக்குரிய மாப்பிள்ளைக் கோலம் புனைவித்தனர்!

அவர்தம் திருமணக்  கோலம் காண்பதற்கு அனைவரும் அதிகாலையிலேயே திரண்டனர். அப்போது கீழ்த்திசையில் கதிரவன் உதித்தான்! கதிரவன் இயற்கையாக உதிப்பதைச் சேக்கிழார் , ஒரு காரணம் பற்றி உதிப்பதாகத்  தம்  கருத்தை ஏற்றி அழகான  கற்பனை செய்து பாடினார்!    காவியங்களில் கதிரவன் தோற்றத்தைப் பாடுதல் மரபு. சிலப்பதிகாரத்தில் ஞாயிறு போற்றுதும் என்று இளங்கோவடிகள் பாடியுள்ளார்!

முதல்நாள் இரவெல்லாம் திருமணச் சடங்குகள் வேதியர்கள் மந்திரவிதிப்படி நிகழ்ந்தன. இதனை , ‘’மாமறை விதி வாழாமல் மணத்துறைக்  கடன்கள் ஆற்றி ’’ ,    என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார்! தூய மறையோர் முக்காலமும் வேதம் ஓதும் ஊர் என்பதால்’’ தூமறை மூதூர்’’ என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். அவ்வூரில்  நள்ளிரவில்  மங்கலவாழ்த்து நிறைந்து ஒலித்தது! சுந்தரருக்கு திருமணச் சடங்குகளில் தொடர்ந்து மாலைகள் சூட்டினர்! ‘’அத்தகைய மணமாலை அணிந்து தோன்றும் சுந்தரர் என்ற இயல்பான திருப்பெயர் பெற்ற பேரழகரின் திருமணக் கோலத்தில்  தன்  வெளிச்சக் கதிர்களை வீசி, ஒளியூட்டித் தானும் உலகினரும் கண்டு மகிழ்வதற்காகக்  கீழ்த்திசையில் கதிரவன் உதித்து வந்தான்’’, என்று கதிரவன் உதித்தமைக்குத்  தான் விரும்பிய குறிப்பை ஏற்றிச் சேக்கிழார் பாடுகிறார்! இதனை அணியிலக்கணம் ‘’தற்குறிப்பேற்றம்’’ என்று குறிப்பிடும்! இனி முழுப்பாடலையும் படிப்போம்,  

‘’மாமறை   விதிவ  ழாமல்  மணத்துறைக்  கடன்கள்  ஆற்றித்

 தூமறை    மூதூர்க்   கங்குல்  மங்கலம்  துன்றி  ஆர்ப்பத்

 தேமரு   தொடையல்  மார்பன்   திருமணக்   கோலம்  காணக்

 காமுறு   மனத்தான்  போலக்  கதிரவன் உதயம் செய்தான்!

இப்பாடலில் சுந்தரரின் திருமணத்தைச் சிவபிரான் தடுத்து, ஆட்கொள்ளப் போவதால் , ‘’திருமணம்  காண ‘’ என்று பாடாமல் திருமணக் கோலத்தை மட்டும் காண்பதற்கு  என்ற பொருளில் , ‘’திருமணக் கோலம் காண’’ என்று கூறினார். உதித்தான் என்று கூறாமல்  ‘’உதயம் செய்தான் ‘’ என்று கூறியதன் நுட்பம் உணர்ந்து கொள்ளற்ற்கு உரியது!

கம்பராமாயணத்தில் காட்டில் இராமனும் சீதையும் அண்ணங்களையும், யானையையும் கண்ட காட்சியை,

ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும்
சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான்
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கி புதியது ஓர் முறுவல் பூத்தாள்

என்று பாடுகிறார்!  இப்பாடலில் , சீதையின் நடையைக் கண்டு ஒதுங்கிய அன்னத்தின் நடையைக்  கண்ட   இராமன், சீதையின்  நடை எதனையும் வெல்லும் இயல்புடையதுதானே என்று, அந்த நடையைச் சிறியது என்று நினைத்து, ஒரு  சிறு முறுவலைச் செய்தான்!    ஆனால் குளத்தில் இறங்கி  நீருண்டபின் தாகம் தீர்ந்த நிறைவுடன் கம்பீரமாக நடக்கும்  யானையின் நடையை விடவும் பெருமிதம் கொண்ட இராமனின் நடையைக் கண்ட  சீதை அதில் ஒரு புதுமை இருப்பதை எண்ணி, புதியது ஓர் முறுவல் பூத்தாள். என்கிறார்கம்பர், முறுவல் செய்தமைக்கும்  முறுவல் பூத்தமைக்கும் இடையில் உள்ள வேறுபாடு   அப்பாட்டில் புலனாகின்றது! இங்கே உதயம் செய்தான் என்பதில் கடமை தெரிகிறதே யன்றி, ஆவல் புலப்பட வில்லை. மேலும் காமுறு மனத்தான் போல என்பதில் , காமுறு  மனத்துடன் உதிப்பது போல என்றில்லாமல் , மனத்தான் போல என்பதில் சிறு வேறுபாடு உண்டு. மக்கள் ஆர்வம் கொண்டார்கள் , ஆனால் கதிரவனுக்குக் கைலை நிகழ்ச்சி தெரிந்திருக்கும் என்பதால்  ‘மனத்தான்போல’ என்றும் , ‘ உதயம் செய்தான்’ என்றும் சற்றே வித்தியாசமாக, நயம்படச்  சேக்கிழார் குறிப்பிடுகிறார்!  

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *