-சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலுடன் உங்களிடையே மனந்திறக்கிறேன். நாளொரு மேடை பொழுதொரு வண்ணமாக இங்கிலாந்து அரசியல் மேடையில் பல நிகழ்வுகள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவ்வரசியல் நிகழ்வுகளில் பார்வையாளர்களாக மர்ந்திருக்கும் மக்களின் வாழ்வில் இவைகள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்பது கேள்விக்குறியே! நடைபெறும் நிகழ்வுகள் அதனால் ஏற்படப் போகும் தாக்கங்கள் இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றுப் புத்தகத்தில் சரித்திர முக்கியத்துவம் நிறைந்த அத்தியாயமாக எழுதப்படப் போகிறது என்பதுவே உண்மை.

ஜக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று 17.2 மில்லியன் மக்கள் ஆணையிட்டார்கள். அதுவே பெரும்பான்மை முடிவாக இருந்த போதும் வெளியேறக்கூடாது என்று வாக்களித்த 16 மில்லியன் மக்களை மறந்து விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. 2016ம் ஆண்டு நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு ஜரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா? இல்லையா? எனும் பிரச்சனைக்கு முடிவு கட்டியதோ இல்லையோ நாட்டில் புதுவகையான பிரிவினையை உருவாக்கி விட்டது என்பது உண்மை. ஜக்கிய இராச்சியத்தின் வெளியேற்றத்தை விரும்பியவர்களில் பலர் ஜக்கிய இராச்சியம் அன்றொரு காலத்தில் வகித்த உலகின் முக்கியத்துவத்தை மீண்டும் அடையும் எனும் ஒரு கனவில் இருப்பதாகவே தோன்றுகிறது.

அன்றைய உலகிற்கும் இன்றைய உலகிற்கும் இருக்கும் வித்தியாசத்தை அவர்கள் உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை. வெளிநாட்டவரின் அளவுக்குமீறிய குடியேற்றம் ஜக்கிய இராச்சியத்தில் ஒரு பாரிய பிரச்சனையாக இருப்பது உண்மையே ஆனால் ஜக்கிய இஆராச்சியத்தின் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிகழ்வு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனும் கருத்து எந்தவகையில் யதார்த்தம் என்று தெரியவில்லை. பொருளாதார நெருக்கடிகள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளினாலும் எதிர்கொள்ளப்பட்ட நிகழ்வு அதன் தாக்கமாக நாட்டில் மக்களின் சேவைகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு ஒரே காரணம் வெளிநாட்டவர் ஜக்கிய இராச்சியத்தில் குடியுரிமை பெற்றுக் கொள்வது எனும் வாதம் முற்றிலும் உண்மையாகாது.

இத்தகைய வாதங்களே இங்கிலாந்தை இந்த “ப்ரெக்ஸிட்” எனும் சிக்கலை நோக்கி இழுத்துச் சென்றது என்பதுவே உண்மை. சர்வஜன வாக்கெடுப்பின் போது தமது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் செய்த வன்மையான பிரச்சாரங்களினால் அவர்கள் அந்த ஒரு சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றியடைந்திருந்தாலும் அதனால் சமுதாயத்தில் மக்களுக்கிடையே ஏற்பட்ட பிரிவினைகளின் தாக்கங்கள் பலருக்கு வாழ்வில் பல அச்சங்களை ஏற்படுத்தியிருப்பது உண்மை.

ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து அவர்களுடன் எதுவிதமான உடன்பாடும் இல்லாமல் வெளியேறுவதை பெரும்பான்மையான இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை. பிரதமர் தேரேசா மே கடந்த இரண்டரை வருடங்களாக ஜரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் முடிவாக ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார். நேற்று அதாவது ஜனவரி 15ம் திகதி அவ்வுடன்படிக்கை இங்கிலாந்து பாராளுமன்றத்தினால் 202 க்கு 432 எனும் வாக்கு வித்தியாசத்தினால் தோற்கடிக்கப்பட்டது. முன்னைய பாராளுமன்ற ச்ட்டப்பிரகாரம் இங்கிலாந்து மார்ச் மாதம் 29ம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும். இந்நிலையில் எதுவிதமான உடன்படிக்கையும் இன்றி வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோமா? எனும் அச்சம் பலரின் மனதிலும் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று அதாவது 16ம் திகதி இங்கிலாந்து அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை இங்கிலாந்துப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கொண்டு வந்தார். அதற்கான வாக்கெடுப்பு இன்று இரவு 7 மணிக்கு நடந்தேறியது. இந்நம்பிக்கையில்லாத்தீர்மானம் அரசுக்கு ஆத்ரவாக 325 வாக்குகள் எதிராக 306 வாக்குகள் எனும் வித்தியாசத்தினால் தோற்கடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் தெரேசா மே இந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளியேறுவதற்காக தான் பாராளுமன்றத்திலிருக்கும் அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்களைத் தனித்தனியாக சந்தித்து உரையாடி எவ்விதமான் உடன்படிக்கையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிடப்போவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் பொருளாதார நிபுணர்கள், வியாபார முகவர்கள் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையின்றி வெளியேறுவதின் எதிர்மறையான தாக்கங்களை மிகவும் விளக்கமாக எடுத்துக்கூறுகிறார்கள். ஆனால் இஅக்கிய இராச்சியத்தின் பண்டைய பெருமைகளின் வகை கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் கோஷமெழுப்புவர்களின் செவிகளில் அவை விழுந்ததாகத் தெரியவில்லை.

சரி அடுத்த கட்டத் தெரிவுகள் பிரதமரின் முன்னால் இருப்பவை எவை?

தோல்வியடைந்த உடன்படிக்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் வாக்கெடுப்புக்கு விடுவது

எதுவிதமான உடன்படிக்கையும் இன்றி வெளியேறுவது

மக்களின் தீர்ப்புக்காக இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவது

இதில் எந்த முடிவை பிரதமர் எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்றைய பிரதமரின் மற்றைய கட்சிகளைக் கலந்தாலோசிப்பது எனும் முடிவை இரண்டரை வருடங்களின் முன்னரே எடுத்திருந்தால் . . . . . . .

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *