குறளின் கதிர்களாய்…(242)
-செண்பக ஜெகதீசன்
உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்
கட்காதல் கொண்டொழுகு வார்.
-திருக்குறள் -921(கள்ளுண்ணாமை)
புதுக் கவிதையில்..
கள்மீது பற்றுற்றே
என்றும்
குடிக்கு அடிமையான
காவலன்முன்
பகைவன்கூடப் பயப்படமாட்டான்,
பெற்ற புகழும்
நிலைப்பதில்லை…!
குறும்பாவில்…
கள்ளிற்கு அடிமையாகி அதன்மேல்
அன்புற்றொழுகுவோக்கு எதிரியும் அஞ்சான்,
நில்லாதே எல்லாப் புகழும்…!
மரபுக் கவிதையில்…
குடிக்கும் கள்ளுக் கடிமையாகி
கூற்றா மதன்மீ தன்புகொண்டு
தொடர்ந்தே யொழுகும் மன்னவரும்
தீதாம் குடியின் சேர்க்கையாலே
தொடரும் பகைவரும் அஞ்சிடாத
தன்மை தன்னைப் பெறுவதுடன்,
கிடைத்த புகழையும் தானிழந்து
கீழ்நிலை யதனை அடைவாரே…!
லிமரைக்கூ..
கள்ளிற்கு அடிமையரசனை இகழும்
நாட்டில் எதிரியும் அவனுக்கு அஞ்சுவதில்லை,
போய்விடுமே சேர்த்துவைத்த புகழும்…!
கிராமிய பாணியில்…
குடிக்காதே குடிக்காதே
கள்ளு குடிக்காதே,
குடியக் கெடுக்கிற
கள்ளக் குடிக்காதே..
கள்ளுகுடிக்கு அடிமயாகி
கண்டபடி வாழுறவன் ராசாண்ணாலும்
எதிரிகூட மதிக்கமாட்டான்,
அவனுக்கு
எள்ளளவும் பயப்படமாட்டான்..
சேத்துவச்ச செல்வாக்கு
பெருமயெல்லாம்
சேந்தாலப் போயிடுமே..
அதால
குடிக்காதே குடிக்காதே
கள்ளு குடிக்காதே,
குடியக் கெடுக்கிற
கள்ளக் குடிக்காதே…!