-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

குறள் 31:

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு!

நாலு பேர் முன்னால நம்மள ஒசத்திய காட்டி நமக்கு சீரையும் சிறப்பையும் கொடுக்குத அறத்த விட ஆக்கமான பாத வேற ஏதும் இருக்கா என்ன?

குறள் 32:

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

அறம் செய்யுதத போல நல்லது வேற எதுவும் இல்ல. அத செய்ய ஓர்ம கெட்டு அலையுதத (மறப்பதப்) போல தீங்கும் வேற இல்ல.

குறள் 33:

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

முடிஞ்ச மட்டும் சொணங்காம எல்லா இடத்திலயும் நல்லதையே (அறச்செயலயே) செய்யணும்.

குறள் 34:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

மனச சுத்தபத்தமா வச்சிக்கிடணும். அறம் னு சொல்லுதது அம்புட்டுதான். அத உட்டுபோட்டு பேசுத பசப்பு வார்த்த நடிப்பு எல்லாம் வெறும் வெத்துவேட்டு ஆரவாரந்தான்.

குறள் 35:

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்

மத்தவங்கள பாத்து பொறாமல புழுங்குதது, அஞ்சு புலனால வெளையற ஆசை, ஆசைக்கு தட சொல்லுதபோது வர கோவம், கோவத்துல சொல்லுத கெட்ட வார்த்த இந்த நாலயும் நீக்கிட்டு தொடர்ச்சியா செய்யுத செயலத்தான் நல்ல செயல் (அறம்னு) சொல்லுவாங்க.

குறள் 36:

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

சின்ன வயசில பொறவு பாத்துக்கிடலாம் னு தள்ளிப்போடாம நல்ல விசயங்கள (அறம்) செய்யணும். அப்பந்தான் அது நாம செத்த பிறவு கூட நமக்கு தொணையா நிக்கும்.

குறள் 37:

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை

அற வழில நடக்கவனுக்கு துக்கம் சொகம் ரெண்டும் ஒண்ணு போலத்தோணும். பல்லக்குக்கு உள்ள ஒக்காந்து அலுங்காம போகுதது மாதிரி. கெட்ட செயல செய்தவன் பல்லக்கு தூக்கிட்டுப் போவுதவன மாதிரி சொகத்தயும் அறியமுடியாம துக்கத்தையும் தாள மாட்டாம அவதிப்படுவான்.

குறள் 38:

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

தெனக்கும் தவறாம நல்லது (அறம்) செய்யுதவனுக்கு அது அவன் மறு பிறப்பு எடுக்குத வழிய அடைக்குத கல்லா நின்னு துணை நிக்கும்.

குறள் 39:

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல

நல்லத செஞ்சவனுக்கு கெடைக்குததே இன்பம். மத்த வழில வருதது எல்லாம் புகழ்ச்சி ஆவாது.

குறள் 40:

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

ஒருத்தன் புகழடயணும் னு நெனைச்சாம்னா அவன் பழி பாவம் செய்யாம நல்ல செயல (அறத்தை) மட்டுந்தான் செய்யணும்

******************************

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *