-திருச்சி புலவர். இரா. இராமமூர்த்தி

சுந்தரருக்குத் திருமணக்கோலம் புனைவித்து, உயர்ந்த குதிரையின் மேலேற்றி ஊர்வலம் வந்தார்கள்! அந்த ஊர்வலத்தில் உறவினரும், நட்பினராகிய அரசரைச் சார்ந்தோரும் தொடர்ந்து வந்தனர்! அவ்வாறு வந்தோர் தத்தமக்கு உரிய தேர், யானை, குதிரை முதலிய வாகனங்க ளிலும், வண்டிகளிலும் வந்தார்கள்!

சிறந்த திருமணக் கோலத்துடன் திருமணம், நிகழும் புத்தூரை நோக்கி அனைவரும் வந்தனர்! புத்தூர், மணமகளின் தந்தை சடங்கவி சிவாசாரியாரின் ஊர் ஆதலால் அங்கேதான் திருமணம் புரிவித்தனர்! இங்கே சேக்கிழார் ஒருகுறிப்பைத் தருகிறார்! அன்றுமுதல் புத்தூரின் பெயர்’’மணம் வந்த புத்தூர் ‘’ எனப்பட்டது, என்று எழுதுகிறார்! சுந்தரர் திருமணத்தின் அடையாளமாக எஞ்சப்போவது, அந்தப் பெயரே ஆதலால் அவ்வாறு கூறினார்! ஆனால் காலப்போக்கில் அவ்வூர் ‘’மணம் தவிர்ந்த புத்தூர் ‘’ என்று மாறியது!

அவ்வூர் நோக்கி வந்த சுந்தரர் சுற்றத்தினரை பூரண கும்பம் கொடுத்துப் புத்தூர் அந்தணர்கள் வரவேற்றனர்! அவ்வாறு ஊர்வலத்தில்வந்த சுந்தரரைக் குறித்தும் , திருமணப் பெண் குறித்தும், தம்மைக் குறித்தும் பெண்கள் உரையாடியதை அடுத்த பாடலில் நயம்படக் கூறுகிறார்!

திருமணத்தில் பேரழகர் சுந்தரரின் அலங்காரத் தோற்றத்தைக் கண்ட ஊர்வலப் பெண்டிர், ‘’ கண்கள் எண்ணிலாத வேண்டும் காளையைக் காண ‘’ என்றார்கள்! சுந்தரரைக் ‘’காளை’’என்று கூறிய சேக்கிழாரின் சொல்லாட்சி தனித் தன்மை வாய்ந்தது! திருமண நங்கை சடங்கவி பேதை!அவளுடன் காளையை இணைப்பது சற்றுத் தயக்கம் தருகிறது! திருமணத்துக்கு மணம்பேசிய அளவில் திருமணத்தகுதி வந்துவிட்டது என்றாலும் , அவர்கள் திருமணத்தைப் பெருமான் தடுத்தாட்கொண்டார்! ஆதலால் கண்கள் எண்ணில்லாத வேண்டும் என்று சுந்தரரரைக் காண விரும்பியவர்கள், நங்கையாகிய சடங்கவி திருமகளின் அழகு குறித்து ஏதும் கூறாமல், ‘’பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை! என்பார்!’’ என்று சேக்கிழார் கூறுகிறார்! சுந்தரர் என்னும் சிவனடியாருடன் திருமணம் என்ற அளவிலேயே சடங்கவி மகள் சிவலோகப் பேறு பெற்றாள். ஆதலால் ‘’பெண்களில் சிவலோகப்பேறு பெற்று உயர நோற்றாள், சடங்கவி பேதை ‘’ என்று சேக்கிழார் பாடுகிறார் ‘சடங்கவி பேதை’ என்ற தொடர் அவர்தம் அஞ்ஞானம் விளைத்த ஞானத்தை உணர்த்துகிறது! அதனால்தான் சிவலோகப்பேறு பெரும் தகுதியுள்ள பேதைப்பெண்ணின் மேனியழகின் வருணனையைச் சேக்கிழார் பாடவில்லை.

சுந்தரர் சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப் பெற்றார். ஆனால் அவரைக் கணவனாக நினைத்த சடங்கவியார் திருமகள் என்ன ஆனார்? என்றார் வினாவுக்கு விடை தருவது போல் சேக்கிழார்,

‘’அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும்
உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்
பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள்.’’

என்று அப்பேதையும் சிவலோகம் பெற்றதைக் கூறுகிறார்! இவ்விடத்தில் சிவப்பேறு பெறத்தக்க காரைக்காலம்மை வரலாற்றில் அவருக்கும் பரமதத்தனுக்கும் நிகழ்ந்த திருமணத்தை ,

தளிரடிமென் னகைமயிலைத் தாதவிழ்தார்க் காளைக்குக்
களிமகிழ்சுற் றம்போற்றக் கலியாணஞ் செய்தார்கள்.

என்று சேக்கிழார் பாடியதை இங்கே நினைவில் கொண்டு வருதல் வேண்டும்! காளையும் மயிலும் திருமணப் பொருத்தத்தில் பகையாகும்.

இங்கே முறையான திருமணத்தில் இணைந்த இராமன்-சீதை திருமணம் குறித்த கம்பன் பாடல்கள் படித்துச் சுவைக்கத் தக்கன! அங்கே மகளிர்,

“நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்!
கொம்பினைக் காணும்தோறும் குரிசிற்கும் அன்னதேயாம்!’’

என்று ஒருவரை ஒருவர் விஞ்சிய அழகைக் காட்டுகிறார்! இதனை நன்கறிந்த சேக்கிழார், சற்றே மாற்றிப் பாடிய நயம் போற்றுதற்கு உரியது! இனிச் சேக்கிழார் பாடலை மீண்டும் காண்போம்!

‘’கண்கள் எண்ணிலாத வேண்டும் காளையைக் காண என்பார்
பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார்
மண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார் ‘’‘.

இப்பாடலில் ஈற்றடியில் இந்த மண்ணில் மட்டும் மகிழ்ச்சி தரும் திருமணமத்தைக் காணுமுன் வாழ்ந்தோம் என்று கூறிய பெண்களின் கூற்று நயம் மிக்கதாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *