-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்

குறள் 51:

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

குடும்பத்துக்கு ஏத்த நல்ல குணவதியா புருசன் சம்பாத்தியத்துக்கு ஏத்தமாறி குடித்தனம் நடத்துதவ தான் நல்ல பொஞ்சாதி. (மனைவி).

குறள் 52:

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்

குடும்பத்துல நல்ல குணவதியா பொஞ்சாதி இல்லன்னா வாழ்க்கை எவ்வளவு சிறப்பா இருந்துச்சுன்னாலும் பிரயோசனம் இல்ல.

குறள் 53:

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

நல்ல குணவதியான பொஞ்சாதி அமைஞ்சா வாழ்க்கையில எல்லாம் இருக்கும். அப்டி அமையலன்னா எதுவுமே இருக்காது.

குறள் 54:

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

பொஞ்சாதி கிட்ட கற்பு ங்குத மன திடம் இருந்துச்சுன்னா அவள விட ஒசந்தது வேற என்ன இருக்க முடியும்.

குறள் 55:

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

மத்த எந்த கடவுளையும் கும்பிடாம புருசன மட்டுமே கடவுளா நெனக்க பொஞ்சாதி மழைய பெய் அப்டின்னு சொன்னா பெய்யும்.

குறள் 56:

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

தன்னைய நல்லபடியா பாத்துக்கிட்டு புருசன நல்ல அக்கறையோட கவனிச்சி குடும்பத்தோட புகழையும் காப்பாத்ததுல திண்ணமா இருக்குதவ தான் பொம்பள. (பெண்)

குறள் 57:

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

பொம்பள பிள்ளைங்கள இப்படித்தான்இருக்கணும் னு காவல் காக்குததுல ஒரு பிரயோசனமுமில்ல. அவங்க தங்கள தாங்களே மனசார அடக்க ஒடுக்கமா காத்துக்கிடதது தான் ஒசத்தி.

குறள் 58:

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

பொம்பளப் பிள்ளைங்களுக்கு நல்ல குணத்தோட புருசன் அமைஞ்சா, குடும்ப வாழ்க்கைல கெடைக்குத சந்தோசம் மேலுலக வாழ்க்கையப் போல சிறப்பா இருக்கும்.

குறள் 59:

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

குடும்பத்தோட புகழக் காக்குத பொஞ்சாதி இல்லாத ஆம்பிளைக்கு தன்னைய இளக்காரம் செய்யுதவங்க முன்ன ஆம்பிள சிங்கம் போல நடக்க ஏலாது.

குறள் 60:

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

குடும்ப வாழ்க்கையில மங்கலம் னு சொல்லுதது பொஞ்சாதியோட நல்ல குணத்த. நல்ல பிள்ளைகள பெத்து வளக்குதது அதுக்கு பூட்டுத நக நட்டுபோல.

______________________________________

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *