படக்கவிதைப் போட்டி 198-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
குடும்பத்துக்கு உணவூட்ட கொல்லைப்புறம் அடுப்புமூட்டிச் சமையல் செய்யும் இப்பெண்மணி நாம் மறந்துபோன பழைய சமையல்முறையை நமக்கு நினைவூட்டுகின்றார்.
எரிவாயுச் சமையல்முறை வந்தபின்னே காண்பதற்கு அரிதாகிவிட்ட இக்காட்சியைத் தன் புகைப்படத்தில் பதிவுசெய்து வந்திருக்கும் திரு. வெங்கட் சிவாவுக்கும் அவரின் புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 198க்குத் தெரிவுசெய்து தந்த திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
சமைப்பதற்கு நேரம் பிடித்தாலும் கோட்டை அடுப்பிலும் குமுட்டி அடுப்பிலும் தயாராகும் உணவுகளின் சுவையே தனிதான்!
”தேர்ந்த தமிழ்ச்சொற்களால் கவி பாடுக!” என்று ஆர்வத்தோடு காத்திருக்கும் கவிஞர்களை அழைக்கிறேன் இனி!
*****
கோட்டையும் குடிசையும் அருகருகே இருக்கும் தெருவில் குடிசைவீட்டில் குடியிருக்கும் இப்பெண்மணி, ”குடிசையே தன் கோயில்” என்று நிறைவோடு வாழ்வதைத் தம் கவிதைவழி நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.
குடியிருப்பு
செங்கல்
கோட்டையும், கீற்றுக்
குடிசையும்
எங்க தெருவிலே ஒன்றாய்க்
குடியிருப்பு!
செங்கல் வீட்டுக்கு
அத்திவாரம் ஆழத்தில்!
குடிசைக்குப் புயலடித்தால்
இறக்கை முளைத்து விடும்!
வீட்டு
வேலைக்காரி நான்!
மாத வாடகை
குடிசை இடத்துக்கு
ஆயிரம் ரூபாய்!
தென்னங் கீற்று
என்னது!
மாதச் சம்பளத்தில்
பத்து ரூபாய் கொடுப்பேன்!
என் வாரக் கூலியோ
நூறு ரூபாய்!
ஆறு வாய்களுக்கு அதிலே
சோறு போடணும்!
இந்தக் கூரை வீடு
என் கோயில்!
இது போதும் எனக்கு!
*****
”நாட்டுப்புறத்து நயமிகு வாழ்க்கை ஆட்டம் காட்டிடும் நாகரிகத்தால் அசைக்க முடியாதது” என்று தெம்பாகப் பாட்டிசைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
நிறைவு…
காட்டில் பொறுக்கிய சுள்ளியுடன்
கட்டாந் தரையில் அடுப்புவைத்த
நாட்டுப் புறத்து சமையலிலே
நிறைந்திடும் வயிறும் மனமும்தான்,
வாட்டம் வாழ்வில் வந்தாலும்
வெளியே காட்டிடா நிறைவிதுவே,
ஆட்டம் காட்டிடும் நாகரிகம்
அசைக்க முடியா வாழ்விதுவே…!
*****
”குழந்தைப்பேறு வேண்டி வெள்ளிக்கிழமை விடிகாலையில் குலமகள் வைக்கும் பொங்கலிது” என்று இக்காட்சிக்குச் சுவையான விளக்கமளிக்கிறார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.
பொங்கல்!
குடிசைக் கோவில் கட்டி
குழந்தை வேண்டி என் வழிபாடு
கும்பிடுவோம் வாருங்கள்
குலசாமி நாகத்தை – என்
ஓட்டு வீட்டுக்கு முன்னே
ஓரமாய் பாம்புப் புற்று
வெள்ளிக்கிழமை தோறும்
விடிகாலைப் பொங்கலிட்டு
மணக்கும் பொங்கச்சோற்றை
மண்தரையில் இட்டு உண்டால்
மழலைச் செல்வம் வந்து
மடியில் தவழுமென்று
சாமியாடி சொன்ன குறியை
சரிவர நான் செய்கின்றேன்.
வயல்காட்டை அடுத்த
வாய்க்கால் அருகே என் வீடு
வந்துவிட்டுப் போங்களேன்
வாழை இலையில் விருந்துண்ண
வாசனைப் பொங்கலுடன்
வடை சாம்பார் சட்டினியும்
அவியல் பொறியலுடன்
அவித்துவைத்த இட்லியையும்
உண்டு மகிழ்ந்து தமிழச்சி என்னை
உளமார வாழ்த்துங்கள்
வெயில் ஏறுமுன்னே
வேகமாய் வாருங்கள்!
*****
”தென்னங்கீற்றை நேர்த்தியாகப் பின்னி, தானே உருவாக்கிய அருமைக் குடிசையில் வாழ்வதில் கிடைக்கும் நிறைவும் இன்பமும் மாடிவீட்டில் தேடினாலும் கிடைக்காது” என்று உளம் பூரிக்கும் பாவையைக் காண்கிறோம் திரு. ஆ. செந்தில் குமாரின் பாடலில்.
நிறைமனம்…
நல்லநல்லத் தென்னங்கீத்த.. நேத்தியாக நான்பின்னி..
சீட்டுக்கட்டு அதுமாதிரி.. சேத்துசேத்து அடுக்கிக்கட்டி..
எனக்காக நான் கட்டுன குடிசயிது..!!
கழனிக்கு நான்போயி.. கஷ்டப்பட்டு நாள்முழுக்க..
களையெடுத்து நாத்துநட்டு.. களப்போட வரும்போது..
ஓஞ்சி சித்த ஒக்கார.. ஒதவிசெய்யும் எங்குடிச..!!
சுட்டெரிக்கும் வெயிலடிச்சா.. சடசடன்னு மழபெஞ்சா..
எட்டநின்னு பாதுகாப்பா.. எப்பவுமே எனக்குநல்லா..
அண்டிக்கிட வசதிதரும்.. அருமையான எங்குடிச..!!
வசதியாஒரு வாசலுந்தான்.. கடலாட்டம் கெடக்குதுங்க..
வேணும்போது வெறகுவச்சி.. தீமூட்டிச் சமச்சித்திங்க..
அம்சமா ஒருஅடுப்பு.. அந்தப்பக்கம் இருக்குதுங்க..!!
படுத்துத்தூங்க கயித்துக்கட்டில்.. இல்லாட்டி கோரப்பாயி..
மாடிமேல மாடிகட்டி.. கட்டில்மேல மெத்தபோட்டு..
படுத்தாகூட கெடைக்காதுங்க இந்த சுகம்..!!
*****
குடிசை வீடும், கோட்டை அடுப்பும் நம் கவிஞர்களின் கற்பனைக்கு நல்ல தீனி போட்டிருப்பதை இக்கவிதைகள்வழி உணர்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞர்களே!
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…
பழமை மறந்த பாரதம்
இருக்க ஓர் இடம் வேண்டும் என்று எண்ணிக்
கட்டிடங்கள் கட்டி வைத்தோம்
பாதுகாப்பு என்று எண்ணி கதவுகளைப் பூட்டி வைத்தோம்
அக்கம் பக்கம் எது நடந்தாலும் தட்டிக் கேட்க மறந்தோம்
காந்தி சொன்னதைப் போல் அத்தனையும் மூடியே வளர்ந்தோம்!
உடுத்தும் உடையில் காதி மறந்தோம்
சமைக்க மறந்து உண்ணும் உணவில் கிடைக்கும் பலனை மறந்தோம்
அடுப்பில் எரிவாயு தீர்ந்து போக
பின்னங்கதவு திறந்து பார்க்கையில்
கடந்து வந்த பாதை கனவாய்த் தெரிந்ததே
மழையோ வெயிலோ ஒதுங்க ஓர் இடமாய் இருந்த குடிசை
கால் கடுக்கத் தண்ணீர் கொண்டுவந்த நெகிழிக் குடம்
சமையல் செய்த மண்சட்டியும் கரண்டியும்
உலை கொதிக்க உதவிய விறகுகளும் மண்அடுப்பும்
என் வீட்டுத் தோட்டத்தில்
கடற்கரையில் விட்டுச்சென்ற காலடிச் சுவடுகளாய்
மாற்றம் என்ற பெயரில்…
மறந்துதான் போனோமே!
கடற்கரையில் விட்டுச்சென்ற காலடிச் சுவடுகளாய்க் கடந்துவந்த பாதையை, அதை அலங்கரித்த இனிய எளிய விஷயங்களை அசைபோட்டுப் பார்க்கும் வகையில் நனவோடை உத்தியில் (flashback) கவிதை புனைந்திருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
இந்த வாரத்தின் சிறந்த கவிஞராய் என்னை தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க
நன்றி
வல்லமை வாசகர்களே !
தேர்ந்தெடுக்கப்பட்ட
இது தமிழ்க் கவிதையா ?
புதுக் கவிதையா ?
வசனக் கவிதையா ?
இதில் என்ன கவிதா அம்சம் உள்ளது ?
கவிதையாக இல்லாததைக் கவிதை என்று எதை வைத்து
இது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது ???
சி. ஜெயபாரதன்
+++++++++++++++++++++++++++++
/////பழமை மறந்த பாரதம்
இருக்க ஓர் இடம் வேண்டும் என்று எண்ணிக்
கட்டிடங்கள் கட்டி வைத்தோம்
பாதுகாப்பு என்று எண்ணி கதவுகளைப் பூட்டி வைத்தோம்
அக்கம் பக்கம் எது நடந்தாலும் தட்டிக் கேட்க மறந்தோம்
காந்தி சொன்னதைப் போல் அத்தனையும் மூடியே வளர்ந்தோம்!
உடுத்தும் உடையில் காதி மறந்தோம்
சமைக்க மறந்து உண்ணும் உணவில் கிடைக்கும் பலனை மறந்தோம்
அடுப்பில் எரிவாயு தீர்ந்து போக
பின்னங்கதவு திறந்து பார்க்கையில்
கடந்து வந்த பாதை கனவாய்த் தெரிந்ததே
மழையோ வெயிலோ ஒதுங்க ஓர் இடமாய் இருந்த குடிசை
கால் கடுக்கத் தண்ணீர் கொண்டுவந்த நெகிழிக் குடம்
சமையல் செய்த மண்சட்டியும் கரண்டியும்
உலை கொதிக்க உதவிய விறகுகளும் மண்அடுப்பும்
என் வீட்டுத் தோட்டத்தில்
கடற்கரையில் விட்டுச்சென்ற காலடிச் சுவடுகளாய்
மாற்றம் என்ற பெயரில்…
மறந்துதான் போனோமே! /////