-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 9 – விருந்தோம்பல்

குறள் 81:

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

குடும்ப வாழ்க்கைல பொருளச் சேத்து காப்பாத்தி  குடித்தனம் நடத்துதது எல்லாம் வந்த விருந்தாளிய நல்ல படியா கவனிச்சி ஒதவியா இருக்கதுக்காகத்தான்.

குறள் 82:

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

விருந்தாளி வீட்டுக்கு வெளிய இருக்கும்போது உள்ள ஒக்காந்து தான் மட்டும் தனியா சாப்பிடுதது சாவாம இருக்கதுக்காக சாப்பிடுத அமிழ்தம் னாலும் அது நல்ல பழக்கமில்ல.

குறள் 83:

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

தெனைக்கும் வர விருந்தாளிய நல்ல கவனிச்சு பேணுததனால ஒருத்தன் வறுமைப்பட்டு வாழ்க்கைல அழிஞ்சி போயிடமாட்டான்.

குறள் 84:

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்

வர விருந்தாளிய சிரிச்ச மொகத்தோட வரவேத்து பேணுதவனோட வீட்ல சொத்து சொகத்த கொடுக்கும் மகாலச்சுமி வந்து குடியிருப்பா.

குறள் 85:

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

விருந்தாளிக்கு மொதல்ல சாப்பாடுபோட்டு பொறவு தான் சாப்பிடுதவனோட நெலத்துல விதைய விதைக்கவும் வேணுமா?

குறள் 86:

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு

வர விருந்தாளிய நல்ல கவனிச்சி அவுங்க போன பெறகு அடுத்த விருந்தாளி எப்பம் வருவாரு னு காத்துகெடக்குத மனுசன வானத்துல இருக்க தேவர்ங்க எல்லாம் தங்களோட விருந்தாளியா நெனச்சி கவனிப்பாங்க.

குறள் 87:

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

விருந்தாளியப் பேணுததும் யாகம் மாதிரிதான். அதனால கெடைக்க நன்மை இவ்வளவுனு அளந்து சொல்ல ஏலாது. அது வர விருந்தாளியோட தகுதிய பொறுத்து மாறிக்கிடும்.

குறள் 88:

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

விருந்தாளிய கவனிக்குத யாகத்த செய்யாதவங்க தங்ககிட்ட இருக்க செல்வத்த சிரமப்பட்டு காத்து அத இழக்குத நிலை வருதபோது எந்த தொணையும் இல்லாம ஆயிட்டோமே னு வெசனப்படுவாங்க.

குறள் 89:

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

விருந்தாளிய உபசரிச்சி பேணாதவங்க முட்டாளுங்க. அவங்க கிட்ட எவ்ளோ பணம் இருந்தாலும் தரித்திரம் பிடிச்சவங்களாவே நெனைக்கப் படுவாங்க.

குறள் 90:

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

மோந்து பாத்த ஒடனே வாடுத பூ அனிச்சம். அதப் போல வாங்க னு கூப்பிடுத சமயம்  லேசா மூஞ்சிய காட்டினாலே விருந்தாளிங்க வாடிப் போயிருவாங்க.

______________________________________

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *