சி. ஜெயபாரதன், கனடா

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++

[41] மீளாப் புரிக்கு !

என்னுள்ளத்தின் சுவர்களில்
ஒவ்வோர் அறையிலும்
நான் காண விழைவது
துணைவி படம் ஒன்றைத்தான் !
நான் கேட்க
விரும்புவது துணைவி
இனிய குரல்
ஒன்றைத் தான் !
ஓவ்வோர் அறைத் தளத்திலும்
என் காதில்
விழ வேண்டுவது
துணைவி தடவைப்பு
எதிரொலி
ஒன்றைத்தான் !
ஒவ்வோர் சுவர்ப் படத்திலும்
அவளது கண்கள்
உற்று நோக்க வேண்டுவது
எனது கண்களைத் தான் !
எண்ணற்ற அவளது
படங்களைத் தேடி எடுத்து
பலகையில் ஒட்டிப்
பலர் பார்க்க வைத்தேன்,
ஈமச் சடங்கிலே !
யாரை நான் இழந்தேன் என்று
ஊராரும், உற்றாரும்
பார்க்க வேண்டும் அன்று !
உடலையும் உயிரையும்
பிடித்து வைக்க முடிய வில்லை !
படங்களை யாவது
தினம், தினம்
பார்த்துப் பார்த்து
துணைவியை நினைக்கலாம் !
திரைப் படங்களில் அவள்
உயிரோடு
நடமாடி இருந்ததைக்
காணலாம்
மீண்டும், மீண்டும் !
என்னை விட்டுத் துணைவி
பிரிந்து விட்டாள்
நிரந்தரமாய் !
எனது இல்லத்தில் இனிமேல்
வாழத் தேவை யில்லை
என்று ஆயுள்
அத்தமனம் ஆனது !
ஒருபோக்குப் பாதையில்
திரும்பிப் பாராது,
புலம் பெயர்ந்து விட்டாள்
மீளாப் புரிக்கு !

+++++++++++++++
[42] உயிரா ? உடலா ?

உயிர் என்னும் மாய விசை
இல்லையேல்,
உடம்பெனும் யந்திரம்
ஓடாது இப்புவியில் !
உடம்பு என்றோர்
பம்பரம் இல்லை யெனின்
உயிருக்கு வேலை
உண்டோ ?
தனித்து வாழ முடியாத
இரண்டும்
பிணைந்து வாழ வேண்டும்,
பிறப்புருவில்.
அல்லது
முறிந்து வீழ வேண்டும்,
என்பது ஊழ்விதி !
முதன் முதல்
உயிர் நீங்க வில்லை
துணைவிக்கு !
முறிந்து,
முடங்கியது முதலில்
உடம்பு !
உயிருக்கு ஆயுள் நீட்சி
இருப்பினும்
நோயுற்ற கூண்டிலே
குடியிருக்க
முடிய வில்லை,
உயிர்ப் புறா !
இறுதியிலே
பூரண
ஓய்வெடுத்தது உயிரும்
உடம்பும் !

+++++++++++++++++
பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்
++++++++++++++

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *