நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 14
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை
குறள் 131:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
ஒழுக்கம் அத உடையவங்கள ஒசத்தியா காட்டுததால அத நம்ம உயிர விட மேம்பட்டதா நெனைச்சி போற்றுதோம்.
குறள் 132:
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
எதனாலயும் அழிஞ்சி போவாத ஒழுக்கத்த விரும்பி காத்துக்கிடணும். ஏம்னா எல்லா அறத்திலயும் வாழ்க்கைக்கு தொணையா நிக்குதது ஒழுக்கம் மட்டுந்தான்.
குறள் 133:
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
ஒழுக்கம் ஒடையவரா வாழுதது தான் ஒசந்த குடிப்பிறப்புக்கு பெருமை. ஒழுக்கம் தவறினவங்கல்லாம் இழிந்த குடில பொறந்ததாவே நெனைக்கப்படுவாங்க.
குறள் 134:
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
பார்ப்பான் தான் கத்துகிட்ட வேதத்த மறந்தாக்கூட பொறவு இன்னொருக்க படிச்சிக்கிடலாம். ஆனா அவன் பொறந்த ஒசந்த குலத்துக்குண்டான ஒழுக்கத்திலேந்து பிசகினாம்னா குலத்திலயும் தாழ்ந்துட்டதாவே நெனைப்பாங்க.
குறள் 135:
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு
பொறாமைல புழுங்குதவனுக்கு செல்வம் இல்லாம போகுதது போல ஒழுக்கம் இல்லாதவனுக்கு ஒசந்த வாழ்க்க இல்லாம போவும்.
குறள் 136:
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து
ஒழுக்கம் தவறினா குத்தம் கொற உண்டாவும்னு அறிஞ்சி நெஞ்சுறுதி இருக்க படிச்ச பெரியவங்க எத்தன சங்கடம் வந்தாலும் ஒழுக்கமா நடந்துகிடுவாங்க.
குறள் 137:
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி
ஒழுக்கத்தினால ஒருதங்களுக்கு ஒசத்தி உண்டாவும். ஒழுக்கம் இல்லாதாவங்கள வேண்டாத பழி பாவம் அண்டும்.
குறள் 138:
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
நல்லொழுக்கம் சந்தோசமா நல்லா வாழுததுக்கு தொணையா நிக்கும். தீயொழுக்கம் எப்பமும் தீராத துன்பத்த மட்டுமே கொடுக்கும்.
குறள் 139:
ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்
மறதியால கூட தீய சொல்ல தங்க வாயால சொல்லுதது ஒழுக்கம் ஒடையவங்களால ஏலாது.
குறள் 140:
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்
ஒலகத்து ஒசந்தவங்க ஏத்துக்கிட்ட ஒழுக்கம் ங்குத கொணத்தோட வாழ கத்துக்கிடாதவங்க எத்தன படிச்சிருந்தாலும் புத்தியில்லாதவங்க தான்.
______________________________________
கட்டுரையாளரைப் பற்றி
இயற்பெயர் – பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்