நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 18
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 18 –வெஃகாமை
குறள் 171:
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்
மத்தவங்களோட பொருள ஒருத்தன் அநியாயமா அபகரிச்சாம்னா அவனோட குடும்பம் அழிஞ்சி போவும், பழியும் வந்து அண்டும்.
குறள் 172:
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்
நியாயத்துக்கு பயந்தவன் மத்தவங்க பொருள அனுபவிக்கணுங்குத நெனப்புல பழி பாவம் செய்ய மாட்டான்.
குறள் 173:
சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்
அறத்தால வருத நெலையான பயன விரும்புதவங்க ஒடனடியா பயன் கெடைக்கும் ங்குத நெனைப்புல மத்தவங்க பொருள எடுக்க நியாயம் இல்லாத செயல செய்யமாட்டாங்க.
குறள் 174:
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்
ஒண்ணுமில்லாம போய் ஏழ்ம நெல வந்தாலும் அஞ்சு பொறிய அடக்கின படிச்ச பெரியவங்க மத்தவங்க பொருளுக்கு ஆசப் பட மாட்டாங்க.
குறள் 175:
அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
பொறத்தியார் பொருள் மேல ஆச வச்சி நியாயமில்லாத வழில அத எடுக்க நெனைச்சவனுக்கு எல்லாத்தையும் படிச்சு அறிஞ்சிகிட்ட நல்ல புத்தி இருந்தாலும் அதால என்ன பிரயோசனம்.
குறள் 176:
அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்
அருளைப் பெறுததுக்கு ஆசப்பட்டு குடும்ப வாழ்க்கைல நல்லதனமா இருக்குத ஒருத்தன் தெரியாத்தனமா மத்தவம் பொருளுக்கு ஆசப்பட்டு கெட்டது செய்தாம்னா அழிஞ்சு போவான்.
குறள் 177:
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்
மத்தவம் பொருள புடுங்கிக்கிட்டு வாழ்க்கைல வளமா இருக்கணும்னு நெனச்சாம்னா அந்த வளத்த அனுபவிக்க நேரத்துல அது நல்லதில்ல னு உணத்திடும்.
குறள் 178:
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்
சொத்து கொறையாம இருக்கதுக்கு ஒரே வழி மத்தவம் பொருள் மேல ஆச வைக்காம இருக்கதுதான்.
குறள் 179:
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு
மத்தவம் பொருள் மேல ஆச வைக்காம இருக்கதுதான் அறம் னு நெனைக்க பெருமக்கள் கிட்ட (திருமகள்) லச்சுமி தானே போய் குடியிருப்பா.
குறள் 180:
இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு
பின் விளைவ எண்ணாம மத்தவம் பொருள் மேல வைக்குத ஆச நமக்கு அழிவ கொடுக்கும். ஆசப்படாம இருக்குதது வாழ்க்கைல வெற்றிய கொடுக்கும்.
______________________________________
கட்டுரையாளரைப் பற்றி
இயற்பெயர் – பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்