-விவேக்பாரதி

பெண்மை என்பதோர் ஆயுதம் – நம்
பெருமை அளந்திடும் சீதனம்
பெண்மை என்பதோர் பூவனம் – அது
பேண வேண்டிய தோர்வளம்!
பெண்மை காப்பதே நம்கடன் – அப்
பேறு வாய்ப்பதே தெய்வதம்
பெண்மை வாழ்கெனப் பாடுவோம் – எந்தப்
பெண்ணைக் கண்டாலும் போற்றுவோம்!

ஆணின் பலமெலாம் ஊனிடம் – பெரும்
ஆன்ம பலமெலாம் பெண்ணிடம்
காண வேண்டிய கீர்த்திகள் – நம்
காரி கைவசம் பூர்த்திகள்
பேணும் நல்லறம் பெண்ணிடம் – பல
போரும் அமைதியும் பெண்ணிடம்
தூணைப் போலதைக் காத்துதான் – எதிர்
தோன்றும் போதெலாம் வாழ்த்துவோம்!

வானின் மாமழை தாய்க்குணம் – அலை
வண்ணக் கடலும் காதல்மனம்
சேனை ஆயிரம் ரௌத்திரம் – பல
செழுமை பெண்கொளும் பூரணம்!
ஞானம் அவர்சொலும் போதனை – அவர்
நாமம் தேன்வரும் கீர்த்தனை
தானு ணர்ந்திதை ஏத்துவோம் – பெருந்
தண்மை பெண்களைப் போற்றுவோம்!!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உலகம் அளந்து பார்க்காத ஆழம், பெண்மை!

  1. அருமை. உலகத்தின் அடி முடியறியா ஆழமே பெண்கள் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *