நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 22
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்
குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு
இந்த ஒலகத்துல நாம மழைய தருத மேகத்துக்கு என்ன செய்யுதோம். அந்த மழை மாதிரி உள்ளவங்க பதிலுக்கு என்ன கெடைக்கும்னு எதிர்பாத்து ஒதவி செய்யமாட்டாங்க.
குறள் 212:
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
ஒருத்தன் முயற்சி செஞ்சு சம்பாதிச்ச பொருளெல்லாம் தேவைப்படுதவங்களுக்கு ஒதவி செய்யத்தான்.
குறள் 213:
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற
தேவ ஒலகத்திலயும் , இந்த பூமிலயும் ஒழைக்க முடியாம இருக்கவங்களுக்கு ஒதவுத கொணத்த மாதிரி வேற நல்ல செயல பாக்குதது சங்கடந்தான்.
குறள் 214:
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
ஒழைக்க முடியாதவங்களுக்கு ஒதவி செய்யுதவன் தான் உசிரோட வாழுதவன் மத்தவன் செத்தவனுக்கு சமானம்.
குறள் 215:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு
ஒலகம் நல்லா வாழணும்னு நெனைக்க பெருமக்களோட சொத்து எல்லாருக்கும் உபயோகப்படுத நீர் நெறஞ்ச ஊருணிக்கு சமானம்.
குறள் 216:
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்
ஈர நெஞ்சம்இருக்குதவன் கிட்ட சேருத சொத்து ஊருக்கு நடுவுல இருக்க மரம் பழுத்து குலுங்குதது போல எல்லாருக்கு ஒதவியா இருக்கும்.
குறள் 217:
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்
மத்தவங்களுக்கு ஒதவுத குணமுள்ள பெரிய மனுசன்கிட்ட சொத்து சேந்திச்சின்னா அது ஒரு மரத்தோட எல்லா பாகமும் மருந்தா பலன் தருதது போல ஆவும்.
குறள் 218:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்
செய்ய வேண்டிய கடமைய உணந்த ஒசந்த அறிவாளிங்க தங்கிட்ட கொடுக்குததுக்கு ஒண்ணுமில்லன்னாலும் ஒதவி செய்ய தயங்க மாட்டாங்க.
குறள் 219:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு
மத்தவங்களுக்கு ஒதவுதையே தங்கடமையா செய்யுத ஒருத்தன் ஏழையாயிட்டான்னு அறிஞ்சுகிடதது அவனால பொறத்தியாருக்கு ஒதவ முடியாம போகுத நெலமய வச்சிதான்.
குறள் 220:
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து
இருக்குதத மத்தவங்களுக்கு கொடுத்து ஒதவினா கெடுதல் வரும்னு தெரிஞ்சிச்சினா நம்மள வித்தாவது அந்த கெடுதல வாங்குத அளவுக்கு அது தகுதியுள்ளது.