-மேகலா இராமமூர்த்தி

பிரேமின் இந்தப் புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 204க்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தெரிவாளர் இருவருக்கும் என் நன்றி!

கைகளை அகல விரித்துத் தன் அகலா மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்தப் பெண்ணைப் பார்க்கும்போது, சிட்டுக்குருவியாகக் கட்டுக்களின்றி மாந்தரை வாழப் பணித்த மாக்கவி பாரதியின்,

“விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு”
எனும் சிந்தனை என் மனவானில் சிறகடிக்கின்றது.

தளைநீங்கி விடுதலையொடு வாழ விழைபவையே மண்ணில் வாழும் உயிர்கள் அனைத்தும்!

இதோ…இவ்வாரப் புகைப்படத்துக்குப் பொருத்தமாய்க் கவி தீட்ட கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள். வரவேற்போம் அவர்களை!

*****

எல்லார்க்கும் எல்லாமாகப் பெண்கள் இருந்தபோதிலும் இன்னல்கள் வெந்தணலாய் வாட்டுவதென்னவோ அவர்களைத்தான்! வல்லூறுகள் இணைய வானில் வட்டமிட்டும்; வலைகள் வசீகரமாய்த் திறன்பேசிகளில் விரிக்கப்படும்; பொல்(ள்)லா(ளா)ட்சிக் கசப்புகள் நமக்கு புத்தி புகட்டுமா? என்று தன் வேதனையைக் கவிதையில் பதிவுசெய்திருக்கிறார் திரு. யாழ். பாஸ்கரன்.

பொல்(ள்)லா(ளா)ட்சி கசப்புகள்!

மானுடம் உயிர்த்திட மண்ணுலகம் நிலைத்திட மடிதந்த
மாதவ மங்கையர்க்கு மனம்நிறை மகிழ்வான தலைவணக்கம்
மாசில்லாப் பெண்மையின் மாண்புகள் காப்போம்
மதியுடை மாதர்கள் மானம் காப்போம்

அன்பு காட்டும் தாயாய்
அறிவுரை சொல்லும் அமைச்சராய்த் தாரம்
அள்ளிக்கொஞ்சும் மழலையாய் மகள்கள்
ஆறுதல்தரும் ஆதரவாய் அக்கா தங்கைகள்

இயன்றவரை எல்லார்க்கும் எல்லாம் தரும்
இறையாய் மங்கையர் இருந்தும்
இன்னல்கள் எல்லாம் வெந்தணலாய் வருவது
இந்தத் தேவதைகளுக்குத்தான்!

மேலை நாட்டின் பண்பாடு
ஏழை நாட்டுக்கு ஏன் வேண்டும்?
வாழும் முறையில் மாற்றம் வேண்டும்தான்
வழுக்கி விழுவது சேறாக இருத்தல்தான் வேண்டுமா?

வல்லூறுகள் இணைய வானில் வட்டமிட்டும்
வலைகள் விரிக்கப்படும் திறன்பேசிகளில் வசீகரமாய்
பொல்(ள்)லா(ளா)ட்சிக் கசப்புகள் புத்தி புகட்டுமா நமக்கு?
வழக்குகள் வலுவிழக்கப்படும் வாதாட நேரமின்றியே!

துள்ளல் நடைக்கும் உடலொட்டி உடைகளுக்கும் விடையளிப்போம்
நிலை தடுமாறாமல் இருக்க மீசை பாரதியின்
நிமிர்நேர் பார்வை பெறுவோம்!
பொல்லாச் சுவர்ணத்தின் தேவதைகளாக வேண்டாம்
பொல்லாங்கில்லா நல்லாட்சிப் புவியின் பூ மகள்களாவோம்!

*****

”தற்காத்துக்கொள்ளாத பெண்மையும், பெண்மையின் பெருமை காக்க உதவா ஆண்மையும் அர்த்தமற்றவையே” என்று அழுத்தமாய் உரைக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

ஆட்டம்…

எல்லை தாண்டிடும் ஆட்டங்கள்
வாழ்வில்
எடுத்துத் தருவது வாட்டம்தான்..

ஆணோ பெண்ணோ
ஆட்டம் அதிகமானால்
ஆபத்து அருகினில்தான்,
ஆனாலும்
பாதிப்பு அதிகம்
பெண்ணுக்குத்தானே..!

காலம் காலமாய்க்
காண்பதும் இதுதானே..!

தன்னைக் கட்டுப்படுத்தித்
தற்காத்துக்கொள்ளாத
பெண்மையும்,
பெண்ணின் பெருமைக்குத்
துணை நில்லா
ஆண்மையும்,
அகில வாழ்வில்
அர்த்தமற்றவைதான்…!

*****

இணைய யுகத்துக்கேற்ற அறிவுரைகளைச் சிறப்பாய் வழங்கியிருக்கும் பாவலர்களைப் பாராட்டுகின்றேன்.

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து… 

பெண் சுதந்திரம்!

பெண் என்று அறிந்து 
கலைக்கப்படும் கருவில் தப்பி
இனிதாய்த் துவங்கியது உனது வெற்றி பயணம்!
கள்ளிப்பால் கொலையில் தப்பி 
வெற்றிப்பாதையின் முதல் படியில்
பள்ளி சென்று பட்டம் படித்து
வெளிச்சத்திற்கு வந்த வாழ்க்கைப் படிகள் 
வாசல்வரை வந்து வழியனுப்பிக் 
காத்திருந்த காலம்போய்
காற்றைக் கிழித்து செல்லும் 
விமான ஓட்டியாய் வளர்ந்து நின்றாய்! 
மூலையில் முடங்கிக் கிடந்த காலம்போய் 
முன்னேற்றப் பாதையில் முந்திச் சென்றாய்! 
பின்தொடர்ந்து சென்றதெல்லாம் போதும் என்று
உன் நிழல்கூட முன்னேற்றப் பாதையில்
முன்னே விழுந்ததோ?!
காந்தி கண்ட கனவு சுதந்திரம்
வந்ததோ என்று வியந்தது 
பல விழிகள் உன்னைக் கண்டு! 
வரைபடம்கூட உயிர்த்தெழுந்ததே
தேவதை உன்னைக் கண்டு
சொர்க்கம் என்று எண்ணி! 
சுதந்திரம் என்பது பார்க்கும் விழிகளில் இல்லை
உரிமைக்காகப் போராடும் பாவை உன் மனதில் இருக்கும்! 
முடிந்தவரை போராடி முன்னேறு
வெற்றி உன்னைத் தொடர்ந்துவரும் பின்னோடு! 

”கள்ளிப்பால் கொலையில் தப்பி, பள்ளிசென்று படித்து, விமானத்தில் வானை அளக்கும் வனிதையே! வரைபடம்கூட உன்னைக்கண்டு உயிர்த்தெழுகின்றது உற்சாகத்தால்! முன்னேற்றத்தையே நாடும் உன் மனத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உன்நிழல்கூட முன்னால் விழுகின்றதே!” என்று படத்தில் காணும் பாவையைப் போற்றிப் பாடியிருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 204-இன் முடிவுகள்

  1. மிக்க நன்றி, எனது கவிதையால் இந்த வார சிறந்த கவிஞராய் என்னை தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி

  2. மிக்க நன்றி திரு. யாழ் பாஸ்கரன் அவர்களே

Leave a Reply to ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்

Your email address will not be published. Required fields are marked *