நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 24 – புகழ்

குறள் 231:

ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு

ஏழைங்களுக்கு குடுக்கணும். அதனால புகழ் உண்டாவும். இந்த புகழ் இல்லாம மனுசனோட வாழ்க்கைல ஆக்கம் தருததுனு  வேற எதுவும் இல்ல.

குறள் 232:

உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்

புகழ்ந்து பேசுதவங்க எல்லாம் சொல்லுதது இல்லாதவங்களுக்கு பொருள குடுக்கவங்களோடபுகழப் பத்திதான்.

குறள் 233:

ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்

ஒசந்து நிக்குத புகழத் தவித்து அதுக்கு சமமா அழிவில்லாம நெலச்சு நிக்கும் னு ஒலகத்துல எதுவும் இல்ல.

குறள் 234:

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு

இந்த பூமியில பெரிய புகழ்ச்சியோட வாழ்ந்தவங்கள தான் தேவர் உலகத்துல போற்றுவாங்களே தவித்து அங்க இருக்க தேவர்கள இல்ல.

குறள் 235:

நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது

வாழ்க்கைல சிரமப்படும்போது கூட புகழ வளத்துக்கிடதும் செத்த பெறகுநெலச்ச புகழ பெறுததும் ஒசந்த அறிவாளிங்களால தான் முடியும் மத்தவங்களுக்கு சங்கடந்தான்..

குறள் 236:

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

எந்தத் துறையில ஈடுபட்டாலும் அதில புகழோட விளங்கணும். அப்டி செய்ய முடியாதவங்க அந்த துறையில ஈடுபடாம இருக்குதது நல்லது.

குறள் 237:

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்

புகழ் பெறுத மாதிரி வாழ முடியாதவங்க தன்னய தானே நொந்துகிடாம தன்னய எளக்காரமா பேசுதவன நொந்துகிடதது எதனால?

குறள் 238:

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்

தனக்குப் பின்னால நெலச்சு நிக்குத புகழ பெறாதவங்களுக்கு அது அந்த வாழ்க்கைக்கே வந்த பொல்லாப்பு னு ஒலகம் சொல்லும்.

குறள் 239:

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்

புகழ் இல்லாத ஒடம்ப இந்த பூமி சுமந்ததுனா அது வளம் கொறஞ்சு வெளச்சல் இல்லாம போயிடும்.

குறள் 240:

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

பொல்லாப்பு இல்லாம வாழுதது தான் வாழ்க்கை. புகழ் இல்லாம வாழுதது செத்ததுக்கு சமானம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *