-நாகேஸ்வரி அண்ணாமலை

பிளாஸ்டிக்கைப் பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. எங்கள் நண்பர்களிடமெல்லாம் பிளாஸ்டிக்கை மறுபடி உபயோகிப்பது பற்றி நிறையக் கூறிவிட்டோம். ஆனாலும் இன்னும்சிலர் பிளாஸ்டிக் பைகளை, டப்பாக்களைத் தாறுமாறாக உபயோகிக்கிறார்கள். அவற்றை மறுசுழற்சி செய்வதில்லை; திரும்ப உபயோகிப்பதும் இல்லை. இவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை.

இன்று பத்திரிக்கையில் வந்த செய்தி மனதில் மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கரை வந்துசேர்ந்த ஒரு திமிங்கலத்தின் வயிற்றில் 88 பவுண்டு பிளாஸ்டிக் (40 பவுண்டு பைகள், மீதி குப்பையில் இருந்த பல விதமான பிளாஸ்டிக் சாமான்கள்) இருந்ததாம். அதன் எடையே 1100 பவுண்டுதான். அதன் எடையில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கு பிளாஸ்டிக்கை சுமந்து கொண்டிருந்திருக்கிறது அந்த வாயில்லா ஜீவன். அதன் உடலைப் பிரேத பரிசோதனை செய்தவர் இதுவரை இத்தனை பிளாஸ்டிக் சாமான்கள் ஒரு பிராணியின் வயிற்றுக்குள் இருந்ததில்லை என்கிறார். திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் வெகு நாட்களாக அங்கு இருந்ததால் அப்படியே கட்டியாகி செங்கல்போல் ஆகியிருந்ததாம்.

பிளாஸ்டிக்கை உட்கொள்ளுவதால் திமிங்கலங்களுக்கு வயிறு நிறைந்த ஒரு உணர்ச்சி ஏற்படுமாம். அதனால்தான் அவை பிளாஸ்டிக்கினால் மற்றப் பிராணிகளைவிட அதிகமாக ஈர்க்கப்படுகின்றனவாம். ஆனால் இப்படிப்பட்ட பிளாஸ்டிக்கினால் அந்தப் பிராணிக்கு அதற்குத் தேவையான எந்தவித உணவுச் சத்தும் கிடைப்பதில்லை. இப்படி வயிற்றில் பிளாஸ்டிக் சேருவதால் அவற்றின் எடை குறைகிறது; பலம் குறைகிறது; வேகமாக நீந்தும் சக்தியை இழக்கின்றன. அதனால் இவற்றை உண்ணும் அல்லது தீமை விளைவிக்கும் மற்றவகை ஜீவராசிகளிடமிருந்து தப்ப முடியவில்லை. ஒரு முறை அவற்றை உட்கொண்டுவிட்டால் அந்தத் திமிங்கலங்களால் அவற்றை ஜீரணிக்கவும் முடியாது; வெளியே தள்ளவும் முடியாது.

2015-இல் நடந்த ஒரு ஆராய்ச்சியின் முடிவின்படி வருடத்திற்கு 50 லட்சத்திலிருந்து ஒரு கோடியே முப்பது லட்சம் மெட்ரிக் டன் வரை பிளாஸ்டிக் குப்பைகள் கடலுக்குள் சேருகின்றனவாம். இப்படிக் கடலுக்குள் பிளாஸ்டி குப்பை சேருவதில் சீனா முதல் இடத்தையும் இந்தோனேஷியா இரண்டாவது இடத்தையும் பிப்பைன்ஸ் மூனறாவது இடத்தையும் பிடித்திருக்கின்றனவாம். இந்தியா இந்தப் பட்டியலில் சேராததற்கு முக்கிய காரணம் இந்தியர்களால் நிறையச் சாமான்கள் வாங்க முடியவில்லை என்பதுதான் முக்கிய காரணமாக இருக்க வேண்டும். மேலும் மேலே குறிப்பிட்ட நாடுகளில் சட்டங்களும் அவ்வளவு கடுமையாக இல்லாததும் அவை சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப் படாததும் காரணங்கள் என்று சொல்கிறார்கள். மேலும் பிளாஸ்டிக் குப்பைகள் உருப்படியாக மறுசுழற்சி செய்யப்படுவதும் இல்லை.

கடல்களிலோ ஆறுகளிலோ பிளாஸ்டிக் குப்பைகள் சேரும்போது பல வகை இனப் பிராணிகள் அழிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. அதிலும் திமிங்கலங்கள் நிறையப் பிளாஸ்டிக்கை தங்கள் வயிற்றுக்குள் வைத்துக்கொள்ள முடிவதால் அவைதான் நிறையப் பாதிக்கப்படுகின்றன. பிப்ரவரி மாதம் ஸ்பெயினில் இறந்த ஒரு திமிங்கலத்தின் வயிற்றிலும் குடலிலும் 64 பவுண்டு பிளாஸ்டிக் குப்பை இருந்ததாம்;போன வருடம் ஜூன் மாதம் தாய்லாந்தில் ஒரு திமிங்கலம் 18 பவுண்டு குப்பையைச் சாப்பிட்டிருந்ததாம்; நவம்பரில் இந்தோனேஷியாவில் ஒரு திமிங்கலம் 13 பவுண்டு குப்பையை விழுங்கியிருந்ததாம்.

இந்த அப்பாவிப் பிராணிகள் நமக்கு எத்தனையோ விதத்தில் – உணவாக, மருந்தாக – பயன்படுகின்றன. இவற்றுக்கு நாம் செய்யும் கைம்மாறு இதுதானா?மேலும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு நமக்கு எவ்வளவு உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகள் இந்த அப்பாவிப் பிராணிகளுக்கும் இருக்கின்றன. இதை நாம் ஏன் உணறுவதில்லை? உணர்ந்து பிளாஸ்டிக் உபயோகத்தை ஏன் குறைப்பதில்லை? அல்லது அறவே விடுவதில்லை?

இனி ஒவ்வொரு மனித இனத்தைச் சேர்ந்தவனும் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தும் முன் அது தேவையா என்று பல முறை யோசிக்க வேண்டும்; கண்டிப்பாகத் தேவையென்றால் மட்டுமே வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் அதை மறுபடி மறுபடி உபயோகிக்க வேண்டும். இதற்குமேல் உபயோகிக்க முடியாது என்னும் பட்சத்தில் அதை மறுசுழற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் நாம் மிகச் சிறிய அளவுதான் பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைக்க முயற்சி செய்கிறோம். இது ஒரு சிறிய ஆரம்பம்தான். ஆனால் அதையாவது ஆரம்பிப்போமே.

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை என்ற ஒன்று அமலானதே. அது என்னவாயிற்று. ஊழல் நிறைந்த தமிழ்நாட்டில் அது எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *