-நாங்குநேரி வாசஶ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 29 – கள்ளாமை 

குறள் 281:

எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு

அடுத்தவங்க எளக்காரமா பாக்கக்கூடாது னு நெனைக்கவன் மத்தவங்க பொருள மனசால கூட களவாங்க நெனைய கூடாது.

குறள் 282:

உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்

மத்தவம் பொருள அவனுக்குத் தெரியாம களவாங்கணும் னுமனசால நெனைக்குததே தப்புதான்.

குறள் 283:

களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்

களவாங்கதுனால வர சொத்து அதிகமாகுதது போல தோணுச்சினாலும் பொறவு முன்ன அவங்கிட்ட இருந்ததயும் சேத்து அழிச்சுப்போடும்.

குறள் 284:

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்

அடுத்தவம் பொருள களவாங்குத ஆச களவாண்ட பொறவு அழியாத துன்பத்த கொடுக்கும்.

குறள் 285:

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்

மத்தவன் எப்ப அசருவான் களவாங்கலாம்னு நேரம் பாத்து இருக்கவன் கிட்ட அருள் கருதி நேசமா நடக்குத கொணம் இருக்காது.

குறள் 286:

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்

சிக்கனத்த கடபிடிச்சி வாழ்க்க வாழாதவங்கதான்  அடுத்தவம் பொருள களவாண்டு வர ஆசப் படுவாங்க.

குறள் 287:

களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில்

அளவறிஞ்சு வாழ்க்க நடத்துதவங்ககிட்ட அடுத்தவம் பொருள களவாங்குதது ங்குத கெட்ட புத்தி கெடையாது.

குறள் 288:

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு

அளவறிஞ்சு வாழுதவங்க மனசுக்குள்ள அறம் நிக்குதது போல களவாண்டு பழக்கப்பட்டவன் மனசுக்குள்ள வஞ்சம் நிக்கும்.

குறள் 289:

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்

அடுத்தவம் பொருள களவாங்குதது தவித்து வேற ஒண்ணும் தெரியாதவங்க ஆக்கங்கெட்ட செயல செஞ்சு அப்பமே கெட்டழிஞ்சு போவாங்க.  

குறள் 290:

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு

களவாங்குதவங்கள அவங்க உசிரே வெறுத்துபோயிடும். களவாங்காம இருக்கவங்கள தேவர் ஒலகமும் வெறுக்காது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *