நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 30
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 30 – வாய்மை
குறள் 291:
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்
வாய்மைங்கது என்னன்னா மத்தவங்களுக்கு சிறிசா கூட கெடுதல் செய்யாத சொல்ல சொல்லுதது.
குறள் 292:
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்
குத்தங்கொறயில்லாத நன்மைய குடுக்கும்னா உண்ம பேசுத எடத்துல பொய்யக்கூட சொல்லலாம்.
குறள் 293:
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
மனசறிஞ்சு பொய் சொல்லுதது தப்பு. அப்டி சொன்னாம்னா அவன் மனசாட்சியே அவன தண்டிக்கும்.
குறள் 294:
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
மனசால கூட பொய்ய நெனையாம இருக்கவன் ஒலகத்துல இருக்கவங்க மனசுல எல்லாம் இருப்பான்.
குறள் 295:
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை
மனசார உண்ம பேசுதவங்க தவமும் தானமும் செஞ்சவங்கள விட ஒசந்தவங்க.
குறள் 296:
பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்
பொய் சொல்லாம இருக்குதது போல புகழ் வேற ஒண்ணுமில்ல. அது அவனயறியாம அறவழில அவனுக்கு எல்லா நல்லதையும் குடுத்துபோடும்.
குறள் 297:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
பொய் சொல்லாம ஒருத்தன் வாழ்ந்தாம்னா மத்த அறங்கள செய்யாம இருந்தாக் கூட நல்லாதாவே ஆவும்.
குறள் 298:
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
அழுக்கு போவ மேலுக்கு தண்ணி ஊத்தி கழுகினா சுத்தம் ஆவும். மனசுக்குள்ளார இருக்க அழுக்கு உண்ம பேசுததுனால தான் சுத்தம் ஆவும்.
குறள் 299:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
கருக்கல் ல இருட்ட போக்குத எல்லா விளக்கும் விளக்காவாது. மனசுக்குள்ளார இருக்க இருட்ட போக்குத பொய் சொல்லாத தன்மைங்குத விளக்குதான் பெரியமனுசங்களுக்கு விளக்கு.
குறள் 300:
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற
வாய்மை யப் போல ஒசந்த கொணம் இப்பம் வர வேற இல்ல ங்குததுதான் ஆஞ்சு அறிஞ்சு உணந்துக்கிட்ட உண்ம.