(Peer Reviewed) இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகளும் சிக்கல்களும்

0
செ. சிலம்பு அரசி

முனைவர் பட்ட ஆய்வாளர்

ப. வேல்முருகன்

நெறியாளர்

தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்

ராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகளும் சிக்கல்களும்

முன்னுரை

படைப்புகளைப் சரியான முறையில் உரிய நெறிமுறைகளோடு பதிப்பித்து மக்களிடையே கொண்டு சேர்க்கும் அரும்பணி, பதிப்புப் பணி ஆகும். தொடக்க காலத்தில் சுவடிகளைப் பெயர்த்தெழுதிப் படியெடுத்துக் கொண்டனர். அப்பிரதிகள் அச்சியந்திரங்களின் வருகையினால்   அச்சிடப்பட்டுப் பரவலாக்கப்பட்டன.   பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட  பாடல்களைத் திணை, அடி, பாடுபொருள் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுத்தும் தொகுப்பித்தும் வந்துள்ளனர். சங்க இலக்கியத்திற்கு 1834–இல் திருமுருகாற்றுப்படையைப் பதிப்பித்த சரவணப் பெருமாள் ஐயர் தொடங்கி சி.வை. தாமோதரன் பிள்ளை, உ.வே. சாமிநாதையர், செளரிப்பெருமாளரங்கன், அ.பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ராஜகோபாலார்யன், எஸ்.வையாபுரிப்பிள்ளை முதலான பலர் சங்க இலக்கியப் பதிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

வே. ராஜகோபாலார்யன் செய்த அகநானூற்றுப் பதிப்புகளை அறிமுகம் செய்வதும், பதிப்பாசிரியர்; பதிப்பாண்டுகளில் உள்ள சிக்கல்களை எடுத்துரைப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. இவ்வாய்வுக்கு வே. ராஜகோபாலார்யன் பதிப்புகள் முதன்மையாதாரமாகவும், அகநானூறு குறித்த திறனாய்வு நூல்கள் துணைமையாதாரமாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அகநானூறு

கடைச்சங்க காலத்தில் இயற்றப்பெற்ற நூல்களுள் ஒன்று அகநானூறு என்பர்.    அகத்திணை ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் 400 பாடல்கள் உள்ளன. இந்நூல் அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு என்று வேறு பெயர்களையும் கொண்டுள்ளது. 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்டு அடியளவில் பெரியது. பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்தைப் பாடியுள்ளார். அகநானூற்றுப் பாடல்களைப் பாடியவர் 145 பேர். மூன்று (114, 117, 165) பாடல்களுக்குப் புலவர் பெயர் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை உப்பூரிக்குடிக்கிழார் மகன் உருத்திரசன்மனார் தொகுத்தும், பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தும் உள்ளனர்.

1 -120 களிற்றியானை நிரை, 121- 300 மணிமிடைப்பவளம், 301-400 நித்திலக் கோவை  என   400 பாடல்களையும் முப்பிரிவாகப் பகுத்துப் பெயரிட்டுள்ளனர்.

பதிப்பு

ஓலைச் சுவடிகள், காகிதப்பிரதிகள் இவற்றை ஒப்பு நோக்கிப் பாட வேறுபாடுகள் சுட்டிக் காட்டிப் பதிப்புச் செய்வதே பதிப்பு என்பர்.

அகநானூற்றுப் பதிப்புகளை நோக்குகையில் பெரும்பாலும் பகுத்து வெளியிடப்பட்டுள்ளன. ‘அகநானூறு முதல் பதிப்பு 1918 தொடங்கி 2010 வரை வந்துள்ள பதிப்புகள், வெளியீடுகள் என்ற நிலையில் 47 நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் 13 நூல்களே பதிப்புகளாக அமைகின்றன’ என்று மா.பரமசிவன் (2010:39) அகநானூறு பதிப்பு வரலாறு (1918-2010) எனும் நூலில் குறிப்பிடுகிறார். 1918, 1920, 1923, 1926, 1933–இல் (இரு பதிப்பு) ஆறும் வே. இராஜகோபாலாரியனால் பதிப்பிக்கப்பட்டவை. 1940-இல் சைவ சித்தாந்த மகாசமாஜம், 1943-இல் களிற்றி யானைநிரை, 1944-இல் மணிமிடைபவளம், நித்திலக்கோவை மூன்றையும் பாகனேரி வெ.பெரி.பழ.மு. காசிவிசுவநாதச் செட்டியார், 1958-இல் மர்ரே.எஸ். இராஜம், 1990-இல் களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை மூன்றையும் மயிலம் வே.சிவசுப்பிரமணியன், 2018-இல் களிற்றியானைநிரை மட்டும் ஏவா வில்தன் ஆகியோர் பதிப்பித்துள்ளனர்.

1918 முதல் 2018 வரை அகநானூற்றிற்குப் பதிப்புகளாக 14 நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் இராஜகோபாலார்யன் பதிப்புகளை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

இராஜகோபாலார்யன் பதிப்பு

1918, 1920, 1923, 1926, 1933 (இரு பதிப்பு) ஆம் ஆண்டுப் பதிப்புகள் ஆறும் வே.இராஜகோபாலாரியனின் பதிப்புகளாகும்.

அகநானூற்றை முதலில் பதிப்பித்து வெளியிட்டவர், கம்பர் விலாசம் ராஜகோபாலார்யன் (வே. இராஜகோபாலையங்கார்). 1918–இல் தொடங்கி 1933 வரை சிற்சில மாற்றங்களோடு பதிப்பித்து வெளியிட்டுள்ளார். பதிப்பிக்கத் தூண்டியவர்கள், சுவடி கொடுத்தவர்கள், பொருள் உதவி செய்தவர்கள், சரிபார்த்துத் தந்தவர்கள் போன்றன கூறுவதைப்  பதிப்பறங்களாகக் கடைப்பிடித்துள்ளார்.

1918   :  முதல் பதிப்பு

முதல் பதிப்பு 1918-இல்

அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதி, MADRAS, KAMBAR VILAS BOOK DEPOT, MYLAPORE, 1918 ’

என்று உள்ளது. இப்பதிப்பின் முகப்புப் பக்கத்தைத் தவிர வேறு எந்தப் பக்கமும் கிடைக்கவில்லை என்று இரா. ஜானகி ‘சங்க இலக்கியப் பதிப்புரைகள்’ (ப.38) எனும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

முதல் பதிப்பாசிரியர் யார்?

அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் ரா. இராகவையங்கார் என்று சிலர் கருதுவதாக மா. பரமசிவன் (2010:2) தம் நூலில் கூறியுள்ளார். 1923ஆம் ஆண்டுப் பதிப்பின் முகப்பு அட்டையில் ‘ஸேதுஸமஸ்தான வித்துவான் ஸ்ரீ உ. வே. ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் சோதித்துத் தந்தன’ என்று உள்ளதால் ரா. இராகவையங்கார் சோதித்துத் தர, ராஜகோபாலார்யன் பதிப்பித்திருக்க வேண்டும்.

1918–இல் வெளிவந்துள்ள பதிப்பில் KAMBAR VILAS BOOK DEPOT என்று பதிப்பகம் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. கம்பர் விலாசப் பதிப்பகம், ராஜகோபாலார்யனால் நடத்தப்பட்டது என்பதை ராஜகோபாலார்யனின்  1933ஆம் ஆண்டுப் பதிப்பின், மறுபதிப்பில் இடம்பெற்றுள்ள வாழ்க்கை வரலாறு அகச் சான்றாக அமைந்து உறுதிப்படுத்துகிறது.  இவற்றைக் கொண்டு ராஜகோபாலார்யனே முதல் பதிப்பாசிரியர் என்று கூறலாம்.

90 பாட்டா? 120 பாட்டா?

முதல் 90 பாடல்களுக்குப் பழைய உரை உள்ளது. அது யார் உரை என்று தெரியவில்லை.  முகப்பட்டையில் ‘முதற்பகுதி’ என்று உள்ளதால். பழைய உரை கொண்ட 90 பாடல்கள் மட்டும் பதிப்பிக்கப்பட்டதா? அல்லது பழைய உரையுடன் 30 பாட்டுக்கு (91 முதல் 120வரை) மூலத்தைச் சேர்த்து களிற்றியானைநிரை (120) முழுவதும் பதிப்பிக்கப்பட்டதா? என்ற ஐயம் தோன்றுகிறது. இந்த ஐயத்திற்கு அவர் எழுதிய ஸ்ரீ பொன் ஆடு என்ற நூல் விடை கூறுகிறது. 1918–இல் களிற்றியானை நிரை மட்டும் வெளிவந்துள்ளது என்பதை

1927-இல் (பிரபவ) வெளிவந்துள்ள ராஜகோபாலார்யனின் ‘ஸ்ரீ: பொன் ஆடு’ எனும் நூல்வழி அறியமுடிகிறது. அந்நூலின் பின் அட்டையில் தம் அகநானூற்று நூலுக்குக் கிடைத்துள்ள நூலக ஆணை பற்றிய செய்தியை இராஜகோபாலார்யன் பதிவு செய்துள்ளார் (விவரம்: பின்னிணைப்பு – 4). அப்பதிவின் மையப்பகுதி வருமாறு:

“ A copy of the first part of  “Ahananuru” containing 120 stanzas is a useful edition to the library and the Deputy Inspectors of School are permitted to purchase a copy of the same from the allotment placed at their disposal under“ Books and periodicals “in the current year’s budget” (1927: பின் அட்டை).” (மா.பரமசிவன் 2010:7)   அறிய முடிகிறது.

1920   : இரண்டாம் பதிப்பு

1920-இல்

‘ஸ்ரீ: அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதியும், இரண்டாம் பகுதியும்’ MADRAS, KAMBAR VILAS BOOK DEPOT, MYLAPORE, 1920, copyright], [price Rs. 9.’

என்ற பதிப்பு வெளிவந்துள்ளது. இப்பதிப்பிலும் பதிப்பாசிரியர் பெயர் இல்லை; பதிப்பகப் பெயர் உள்ளது.  முகவுரை எதுவும் இல்லாமல் கடவுள் வாழ்த்துடன் தொடங்கி, 90ஆம் பாடல்வரை பழைய உரையுடனும் பிற பாடல்களின் மூலமும், இறுதியில் பாயிரமும், செய்யுள் முதற் குறிப்பகராதியும் உள்ளன.

1920-இல் இராஜகோபாலார்யன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எவ்வித முன்னுரையும் இல்லாமல் 90 பாடல்களைப் பழைய உரையுடன் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பு, இராஜகோபாலார்யன் பதிப்பு என்பதை 1923-இல் பதிப்பித்துள்ள அகநானூற்று நூலின் ஒரு விஞ்ஞாபனம் என்னும் பகுதி உறுதிப்படுத்துகின்றது. அப்பகுதி வருமாறு:

பதிப்பாசிரியர் பெயர் இடம் பெறாதது ஏன்?

பதிப்பகத்தின் பெயர் இடம்பெற்று, பதிப்பாசிரியர் பெயர் இடம் பெறாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. அதாவது உள்ளதை மட்டும் பதிப்பித்துப் பதிப்பாசிரியர்க்குரிய பதிப்பறங்களை மேற்கொள்ளாத போது பதிப்பாசிரியர் பெயரை ஏன் சேர்க்க வேண்டும் என்று இராஜகோபாலார்யன் நினைத்திருக்கலாம்.  1923-இன் பதிப்பில் பாடல்களைத் தவிர முகவுரை தொடங்கிப் பொருட்குறிப்பகராதி வரை, பதினைந்து தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. பதிப்பாசிரியர் இப்பதிப்புகளில் பதிப்பறங்களைச் சிறந்த முறையில் கடைப்பிடித்துள்ளதால் பதிப்பாசிரியர் பெயரைச் சேர்த்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது. இதிலிருந்து வே. இராஜகோபாலார்யன் பதிப்பறங்களை மேற்கொண்டால் மட்டுமே பதிப்பாசிரியார் பெயர் இடம் பெறவேண்டும் இல்லையென்றால் பதிப்பாசிரியர் பெயர் இடம் பெறல் கூடாது என்ற கருத்துடையவராக இருந்துள்ளதை உணர முடிகின்றது. இதன் மூலம், அவர்   சிறந்த பதிப்பாசிரியருக்குரிய இலக்கணத்தைக் கடைப்பிடித்துள்ளார் என்றே கூறலாம்.

1923   : மூன்றாம் பதிப்பு

1923-இல்

‘ஸ்ரீ: எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும், இவை ஸேது ஸம்ஸ்தான வித்துவான் ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் சோதித்துத் தந்தன, மயிலாப்பூர் கம்பர் விலாஸம் வே. இராஜகோபாலையங்கார் பதிப்பு, ருதிரோத்காரி ளு], [விலை ரூ.10.’

என்பது அவரின் மூன்றாம் பதிப்பாகும்.

1920–இல் குறைப் புத்தகமாக வெளியிட்ட ராஜகோபாலார்யன் உடல்நிலை சரியானபின் 1923–இல் இரா. இராகவையங்காரைப் பரிசோதிக்கச் செய்து தம் பதிப்பைச் செம்மை செய்துள்ளார்.

‘1923 இல் ரா.இராகவையங்காரைப் பரிசோதித்துத் தருமாறு வேண்டுகிறார்; அவரும் பரிசோதித்துத் தர இணங்கிப் பரிசோதித்து 69 பாடல்களைச் (விவர: பின்னிணைப்பு-8:அட்டவணையில் 1923ஆம் ஆண்டிற்குரிய பகுதி) செம்மை செய்கிறார்’ (2010:43)

1.முகவுரை – ரா. இராகவையங்கார், 2. ஒரு விஞ்ஞாபனம் – வே. இராஜகோபாலன், 3.சோதனைப் பத்திரம், 4.பாடினோர் வரலாறு, 5.தொகுத்தோர் வரலாறு, 6.தொகுப்பித்தோர் வரலாறு, 7.அரசர் முதலியோர் வரலாறு, 8.உரையாசிரியர் வரலாறு, 9.அகநானூற்று ஆராய்ச்சிக் குறிப்பு, 10.ஐந்திணைக்கு உரிய பாடல்கள், 11. இலக்கணக் குறிப்பு, 12.சுருக்கக் குறியீடு, 13.கடவுள் வாழ்த்து, 14.90 பாட்டுக்குப் பழைய உரை + (91-400) மூலம், 15.பாயிரம் 16.செய்யுள் முதற்குறிப்பு அகராதி, 17.அபிதான குறிப்பு அகராதி, 18.பொருட்குறிப்பு அகராதி ஆகியன இடம் பெற்றுள்ளன.

1926   : நான்காம் பதிப்பு

1926-இல்

‘ஸ்ரீ: எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு களிற்றியானைநிரை மூலமும் முதற்றொண்ணூறு பாட்டிற்குப் பழைய உரையும், இறுதி முப்பது பாட்டிற்கு ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் எழுதிய குறிப்புரையும்’ சென்னை, கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், அக்ஷய ளு சித்திரை மீ, விலை ரூ. 4.’

என்னும் பதிப்பு வெளிவந்துள்ளது. அப்பதிப்பில், 1.முகவுரை – ராஜகோபாலார்யன், 2.அகநானூறு முகவுரை – இரா.இராகவையங்கார், 3.ஒரு விஞ்ஞாபனம் – வே.இராஜகோபாலன், 4.சோதனைப் பத்திரம் 5.கடவுள் வாழ்த்து, 6.120 பாட்டு, 7.அபிதானக் குறிப்பு முதலியன, 8. சோதனைப் பத்திரம், குறிப்புரை ஆகியன இடம் பெற்றுள்ளன.

முன்னர் மூலத்தை மட்டும் பதிப்பித்தவர், இப்பதிப்பிலிருந்து உரை எழுதத் தொடங்குகிறார். இதனை ‘இறுதி முப்பது பாட்டிற்கு ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் எழுதிய குறிப்புரையும்’ என்பதிலிருந்து அறிந்துகொள்ளலாம். மேலும், ஒரு முகவுரையையும் ராஜகோபாலார்யன் எழுதுகிறார். ஏனென்றால் உரை எழுத தூண்டுகோலாக இருந்தவர் பற்றியும், பின் கிடைத்த ஏட்டுப் பிரதிகளால் பல திருத்தங்களை மேற்கொண்டுள்ளதைப் பற்றியும் கூறுகிறார். இவற்றைப் பதிவு செய்தல் பதிப்பாசிரியர் கடமை என்பதை அறிந்தே மேலும் ஒரு முகவுரை அவர் எழுதியுள்ளார் எனக் கருதலாம்.

ராஜகோபாலார்யன், அ. பின்னத்தூர் நாராயணசாமியுடன் இருந்ததால் அவருக்கு உரை எழுதும் அனுபவம் கிடைத்தது. அதனால் உரை எழுத தொடங்கினேன் என்று கூறியுள்ளார்.  அம்முகவுரைப் பகுதியின் ஒரு பகுதி வருமாறு: அ. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்

இப்பகுதியின் மூலம் பழைய உரையுடன் 30 பாட்டிற்கு ராஜகோபாலார்யன் குறிப்புரை என்று உரை எழுதியும், பின் கிடைத்த சில ஏட்டுப் பிரதிகளால் பல திருத்தங்கள் செய்தும் இப்பதிப்பைப் பதிப்பித்துள்ளார் என்பதை உணர முடிகின்றது.

1926 ஆண்டு பெயரில் இரு பதிப்பு நூல்கள் வேறுபட்டு கிடைக்கின்றன. இது மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளது.

எ.கா.  முதல் பாடலில் நவிரல் என்ற சொல்லுக்குப் பொருள் மாறுபட்டுக் காணப்படுதல்

  1. நவிரல் – சூதல் (1926 -அ)
  2. நவிரல் – குலைதல் (1926 -ஆ)

1933   :  ஐந்தாம் பதிப்பு

‘ஸ்ரீ: எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும்’ இவை ‘ஸேது ஸமஸ்தான மகாவித்துவான் பாஷா கவிசேகரர் ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் பரிசோதித்துத் தந்தன,’ ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் பதிப்பு, கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம் மயிலாப்பூர், ஸ்ரீ முகளு], [விலை ரூ. 7-8-0.’

என்பது இப்பதிப்பின் முகப்புப் பக்கம் ஆகும்.

இந்நூலில் 1. இரண்டாம் பதிப்பின் முகவுரை – ராஜகோபாலார்யன், 2. முகவுரை – இரா. இராகவையங்கார், 3. ஒரு விஞ்ஞாபனம் – வே. இராஜகோபாலார்யன், 4. செய்யுள் முதற்குறிப்பு அகராதி, 5. அபிதானக் குறிப்பு முதலியன, 6. இலக்கணக் குறிப்பு, 7. சுருக்கக் குறியீடு, 8. கடவுள் வாழ்த்து, 9.முதல் 90 பாட்டுக்குப் பழைய உரையும்+70 பாட்டுக்கு ராஜகோபாலார்யன் உரையும் மற்றவை மூலம் மட்டும் இடம்பெற்றுள்ளன. 10. பாயிரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இப்பதிப்பு 91-160 பாட்டுக்கு ராஜகோபாலார்யன் உரையைக் கொண்டுள்ளது.

இரண்டாம் பதிப்பின் முகவுரையில் உள்ள,

பகுதியைக் கொண்டு,

  1. அகநானூற்று உரை மு. இராகவையங்கார் உரையா?

‘121-160 ஆம் பாடல்களின் உரை, மு. இராகவையங்கார் செய்ததாக இருக்கலாமோ என எண்ணத் தூண்டுகிறது என்பர்.

2.பதிப்பாண்டு எது?

1935 -இல் அவர் மரணம் அடைகிறார்.  அவர் இறந்த  செய்தி 1933 நூலில் எப்படி இடம் பெற்றுள்ளது? மேற்பகுதி 1933 –இல் இடைச்செருகப்பட்டதா? அல்லது முன்னர் (1933-இல்) அச்சிடப்பட்ட பகுதிகள் 1935 பிறகே அச்சுடன் சேர்த்து நூலாக்கப்பட்டனவா?’என்ற இரண்டு வினாக்களை மா.பரமசிவன் எழுதிய அகநானூறு ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும் (2016) என்ற நூலின் அணிந்துரையில் ஆ.மணி எழுப்பியுள்ளார்.  முதல் கேள்வி, மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளது.

1933-ஆம் ஆண்டு பதிப்பில் எவ்வித மாற்றமுமின்றி ராஜகோபாலார்யனின் இறந்த செய்தியுடன் கூடிய வாழ்க்கை வரலாற்றை இணைத்து  1935–இல் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். 1935ஆம் ஆண்டுப் பதிப்பு, மறுபதிப்பு என்று பதிப்பாசிரியர் கூறாததன் விளைவே ஆய்வில் குழப்ப நிலை  ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

1933  : ஆறாம் பதிப்பு

1933இல் நித்திலக் கோவையையும் பதிப்பிக்கிறார். ஸ்ரீ:எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூன்றாவது நித்திலக் கோவை மூலம், இது ‘ஸேது ஸமஸ்தான வித்துவான் ஸ்ரீ உ.வே.ரா.இராகவையங்கார் ஸ்வாமிகள் பரிசோதித்துத் தந்தது, கம்பர் விலாசம் ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் பதிப்பு, கம்பர்  புஸ்தகாலயம், மயிலாப்பூர்,  சென்னை ஸ்ரீ முகளு  – ஆவணி மீ.

  1. இரண்டாம் பதிப்பின் முகவுரை – ராஜகோபாலார்யன், 2. அகநானூறு -முகவுரை – ரா. இராகவையங்கார், 3. ஒரு விஞ்ஞாபனம் -வே. இராஜகோபாலன், 4.செய்யுள் முதற்குறிப்பு அகராதி, 5. அபிதானக் குறிப்பு முதலியன, 6. இலக்கணக் குறிப்பு, 7. இப்பதிப்பில் எடுத்துக் காட்டிய நூற்பெயர் முதலியவற்றின் முதற்குறிப்பு விளக்கம், 8. மூன்றாவது நித்திலக் கோவை (301-400), பாயிரம்.

தொகுப்புரை

1918, 1920, 1923, 1926, 1933(இரு பதிப்பு)ஆம் ஆண்டுப் பதிப்புகள் ஆறும் வே. ராஜகோபாலாரியனால் சிற்சில மாற்றங்களோடு பதிப்பிக்கப்பட்டுள்ளன.  

இவற்றில் 1918ஆம் ஆண்டுப் பதிப்புஅகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதி, MADRAS, KAMBAR VILAS BOOK DEPOT, MYLAPORE, 1918 ’ என்ற முகப்பு பக்கத்தைத் தவிர வேறு எந்தப் பக்கமும் கிடைக்கவில்லை. பதிப்பகத்தைக் கொண்டே முதல் பதிப்பாசிரியர் வே. ராஜகோபாலார்யன் என்றும், அவர் எழுதிய  ‘ஸ்ரீ பொன் ஆடு’ என்ற நூல் வழி 120 பாடல்களைக் கொண்டது இப்பதிப்பு என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

1920ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + மூலம்) எவ்வித முகவுரையும் இல்லாமல் வெளிவந்ததற்கு உடல்நலமே காரணம் என்று 1923ஆம் பதிப்பில் கூறுகிறார்.

1923ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + மூலம்) 18 தலைப்புகள் கொண்டு ஒரு முழுமையான பதிப்பாக அமைகிறது.

1926ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + 30 பாட்டுக்கு குறிப்புரை, களிற்றியானை நிரை மட்டும்) வே.ராஜகோபாலார்யனைப் பதிப்பாசிரியராகவும், 30 பாட்டுக்குக் குறிப்புரை எழுதியதால் உரையாசிரியராகவும் அறிமுகப்படுத்துகிறது.

1926 ஆம் ஆண்டினையுடைய  இரு பதிப்பு நூல்கள் கிடைக்கின்றன. இந்நூல்கள், பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளன.

1933ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + 91 இலிருந்து 60 பாட்டுக்கு உரை + மூலம்) 10 தலைப்புகளைக் கொண்டுள்ளது. இப்பதிப்பின் முகவுரையைக் கொண்டு மு. ராகவையங்கார் உரை எழுதியிருக்கலாம் என்ற ஐயம் ஏற்படுகிறது. இது மேலாய்வுக்குரியது. இவ்வாண்டிலே நித்திலக்கோவையையும் பதிப்பித்துள்ளார்.

1933 ஆம் ஆண்டு பதிப்போடு ராஜகோபாலார்யன் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றதைத் தவிர்த்து, வேறு எவ்வித மாற்றமுமின்றி 1935–இல் மறுபதிப்பு வெளிவந்துள்ளதை அறிய முடிகிறது.

அடிக்குறிப்பு

இரண்டாவது கேள்வி குறித்து மா. பரமசிவன் அவர்களை நேரில் சந்தித்தபோது, என்னிடம் உள்ள ராஜகோபாலார்யன் பதிப்பு நூலில் வாழ்க்கை வரலாறு பகுதியே இல்லை. நீங்கள் எப்படி கொடுத்தீர்கள் என்று கேட்டேன். நான் உ.வே.சா. நூலகத்திலிருந்து பெற்ற நூலில் அச்செய்தி இடம் பெற்றுள்ளது என்று கூறி அவரிடமுள்ள அகநானூறு நூல்களைப் படியெடுத்து தந்துதவினார்.  நான் வைத்துள்ள அந்தப் படியை அவரிடம் காட்டினேன். இந்நூல் எனக்குக் கிடைக்கவில்லை என்று கூறிப் பின் என் கருத்து ஏற்கும் வகையில் உள்ளது என்றார்.

இது குறித்து ஆ. மணி அவர்களிடமும் தெரிவித்தேன்.  அப்போது, ஒரு படப்படியில் (pdf)  உள்ள நூல் அவர் இறப்புக்குப் பின் இராஜகோபாலார்யன் புகைப்படத்துடன், அவர் வாழ்க்கைக் குறிப்பைத் தனியே அச்சிட்டு முன்பகுதியில் இணைத்து, 1935-இல் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே நீங்கள் எழுப்பிய வினாவுக்கு விடையாக இருக்கும் என்றும் கூறினேன்.  அதற்கு அவர் உன் கருத்து ஏற்கும் வகையில் இருந்தாலும், ராஜகோபாலார்யன் பதிப்புகளின் உண்மைப் படிகளைப் பார்த்த பிறகே உறுதி செய்ய முடியும் என்று கூறினார்.

துணைநூல் பட்டியல்

  1. ஸ்ரீ அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதியும் இரண்டாம் பகுதியும், Madras: KAMBAR VILAS BOOK DE OT, Mylapore,1920.
  2. இராஜகோபாலார்யன் வே. (பதி.), எட்டுத்தொகை ஆகும் அகநானூறு மூலமும் உரையும், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், சென்னை, 1923.
  3. ராஜகோபாலார்யன் வே. (பதி.), ஸ்ரீஎட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு முதலாவது களிற்றியானைநிரை மூலமும் முதற்றொண்ணூறு பாட்டிற்குப் பழைய உரையும் இறுதி முப்பது பாட்டிற்கு ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் எழுதிய குறிப்புரையும், கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், சென்னை, 1926.
  4. ராஜகோபாலார்யன் வே. (பதி.), ஸ்ரீஎட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும், கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், சென்னை, 1933.
  5. பரமசிவன் மா., அகநானூறு ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும், காவ்யா கோடம்பாக்கம், சென்னை, 2016.
  6. பரமசிவன் மா., அகநானூறு பதிப்பு வரலாறு (1918 – 2010), காவ்யா கோடம்பாக்கம், சென்னை, 2010.
  7. பரமசிவன் மா., அகநானூற்றுப் பதிப்புப் பின்புலம், காவ்யா கோடம்பாக்கம், சென்னை, 2012.
  8. ஜானகி இரா., சங்க இலக்கிய பதிப்புரைகள், பாரதி புஸ்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை, 2010.
  9. ஏவா வில்தன், களிற்றியானைநிரை, EFEO & IFP, புதுச்சேரி, 2018.

=========================================================

ஆய்வறிஞர் கருத்துரை [Peer Review]:

சங்க இலக்கியங்களில் நெடுந்தொகை நானூறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவது அகநானூறு. 1918ஆம் ஆண்டு முதல் வே.இராஜகோபால ஐயங்கார் அவர்களால் அகநானூறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுரையாளர் இராஜகோபால ஐயங்காரின் அகநானூற்றுப் பதிப்புகள் அமைந்துள்ள முறை, வெளியிடப்பட்டுள்ள ஆண்டுகள், பதிப்புகளின் அமைப்பு ஆகியன குறித்து அறிமுகப்படுத்துகின்றார். இவர் 1918 முதல் 1933 வரையில் வெளிவந்துள்ள வே.இராஜகோபால ஐயங்காரின் அகநானூற்று பதிப்புகளைத் தனித்தனியே விளக்கியுள்ளார். வே.இராஜகோபால ஐயங்காரின் பதிப்பாக்கப் பின்புலத்தில் ரா.இராகவையங்கார் செயல்பட்டுள்ளார் என்பதை இவரது பதிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

– வே. ராஜகோபாலார்யன் செய்த அகநானூற்றுப் பதிப்புகளை அறிமுகம் செய்வதும், பதிப்பாசிரியர் – பதிப்பாண்டுகளில் உள்ள சிக்கல்களை எடுத்துரைப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

– 1926ஆம் ஆண்டுப் பெயரில் இரு பதிப்பு நூல்கள் வேறுபட்டுக் கிடைக்கின்றன. இது மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளது.

– ‘121-160 ஆம் பாடல்களின் உரை, மு. இராகவையங்கார் செய்ததாக இருக்கலாமோ என எண்ணத் தூண்டுகிறது என்பர்.

– 1926 ஆம் ஆண்டினையுடைய இரு பதிப்பு நூல்கள் கிடைக்கின்றன. இந்நூல்கள் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளன.

ஆய்வாளர் மேற்கண்ட கேள்விகளையும் ஆய்வுச் சிக்கல்களையும் கட்டுரையில் நுட்பமாக முன்வைக்கின்றார். ஆனால் அவற்றிற்கான முழுத் தீர்வைக் கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்தவில்லை.

இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகள்தோறும் முகவுரை பகுதியில் முன்வைக்கின்ற கருத்துகளை, தலைப்புகளின் அடிப்படையில் மட்டும் கட்டுரையாளர் தொகுத்துத் தருகின்றார். அத்தலைப்புகளுக்குள் முன்வைத்துள்ள கருத்துகள் குறித்த கட்டுரையாளரின் பார்வை, கட்டுரையில் வெளிப்படவில்லை

வே.இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகளை அறிமுகப்படுத்துவதாகவே கட்டுரை பெரிதும் அமைகின்ற காரணத்தினால் ஆய்வுக் கட்டுரையாக வெளியிட இயலாது. ஆயினும், ஆய்வாளரின் உழைப்பையும் ஈடுபாட்டையும் கருத்திற் கொண்டு இக்கட்டுரையினை இலக்கியக் கட்டுரைப் பகுதியில் வெளியிடுகிறோம்.

=========================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *