பட்லூர் வாகீசுவரர் கோயில் – அனுலோம பாரசிவர் பற்றிய கல்வெட்டு

1

சேசாத்திரி ஸ்ரீதரன்

பட்லூர் வாகீசுவரர் கோயில்

அனுலோமர், பிரதிலோமர் எனக் கலப்பினச் சாதி மக்கள் இரண்டு பெரும் பிரிவினராக முறைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்கு மனு தர்மம் சான்றாகக் காட்டப்படுகின்றது. அனுலோமர், உயர்சாதி தந்தைக்கும் தாழ்ந்த சாதி அன்னைக்கும் பிறந்தவர். இதாவது சத்திரிய உயர்சாதி ஆணுக்கும் வைசிய குல தாழ்ந்த சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர், அனுலோமர் எனப்பட்டனர்.  கராணி என்போர் வைசிய தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர். இது தந்தை வழிமுறை பிறங்கடையை அடையாளப்படுத்தி சொல்லப்படுகின்றது. தமிழ்க் கல்வெட்டுகளில் அனுலோமர் பாரசிவர், பஞ்ச கம்மாளர்கள், பதினெண் விஷயத்தார்கள் என்ற வாணிகக் குழுவில் உள்ள பலர், வணிகர்களாக அறியப்படுகின்றனர். பொற்கொல்லர் என்பாரும் இதில் ஒருவர்.

அனுலோமர், பிரதிலோமர் என்ற வரைவிலக்கணப்படி தான் (definition) இச்சாதிகளில் உள்ள எல்லா ஆடவருடைய பெண்டிருடைய தாயும் தந்தையும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களா? என்றால் தெளிவான விடை இல்லை. இதாவது, ஒரு சாதியின் கலப்பு முன்னோர் என்றோ, எப்போதோ, ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு நாட்டின் ஒரு மூலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வாறு சேர்ந்த கலப்புச் சாதியர் தானே ஒழிய, ஒவ்வொரு தலைமுறையின் தாயும் தந்தையும் கலப்புச் சாதியர் அல்லர் என்ற புரிதல் ஏற்பட்ட மாத்திரத்திலேயே இதன் பொருள் குளறுபடி எல்லோராலும் உணர முடிகின்றது. அவ்வகையில் அனுலோமர் பிரதிலோமர் என்போர் கலப்புச் சாதியார் அல்லர் என்பதே உண்மை.

இதை எல்லாம் சாஸ்திரத்தில் மட்டுமே படித்து அறிந்திருந்த ஒரு சில முட்டாள் பிராமணர்கள், கல்வெட்டுகளில் சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறித்துவிட்டனர். இவ்வாறு கல்வெட்டில் அனுலோமராக, பிரதிலோமராகக் குறிக்கப்பட்ட இச்சாதி மக்களுக்கு தாம் அவ்வாறான கலப்புச் சாதியர் என்பதே தெரியாது. தெரிந்திருந்தால் அதை ஏற்றிருக்க மாட்டார்கள், எதிர்த்திருப்பார்கள் என்பது தான் உண்மைக்கும் உண்மை. ஏனென்றால் அவர் தம் பெற்றோர் எல்லோரது பெற்றோரையும் போல ஒரே தொழிலைச் செய்கின்ற ஒரே சாதி மக்கள் தாம், கலப்புச் சாதியர் அல்லர்.

ஆனால் இக்காலத்தே வரலாறு எழுதும் தொல்லியல் வல்லுநர்கள் பலர்,  இந்த உண்மையைச் சற்றும் எண்ணிப் பாராமல், கல்வெட்டில் தவறாகக் குறித்த பிராமணர்களைப் போல, இவர்களும் இதற்கு மதிப்பு (weightage) கொடுத்து சோழர் ஆட்சிக் காலத்தே வர்ண ஏற்றத் தாழ்வு, சாதி வேறுபாட்டுக் கொடுமை தலைவிரித்தாடியது, ஆதலால் சோழ ஆட்சி கேடுகெட்ட ஆட்சி என்று மதிப்பளிக்கின்றனர். இது இவர்கள் எந்த அளவிற்கு முட்டாள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிவிடுகின்றது.

உண்மையில், ஊருக்கு ஊர் இடம் பெயருகின்ற ஆண்களில், குறிப்பாக, சத்திரியர், வணிகர் என்போர், மனக்கட்டுப்பாடு இல்லாமல் வேற்று சாதிப் பெண்கள் மூலம் கலப்புப் பிள்ளைகளுக்கு வழிகோலினர். அப்பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும் பிழைப்பிற்கு ஏதோ ஒரு தொழிலை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகின்றது. அந்நாளில் இந்நாளைப் போல் விரும்பிய தொழிலை ஒருவர் ஏற்றுச் செய்ய முடியாது. அத்தொழிலை ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் சாதி மக்கள் அதை எதிர்ப்பார்கள். இதைக் குற்றம் என்று மன்னனிடம் முறையிடுவார்கள். அப்படி ஒரு சூழல் வரும் போது மன்னன் புதிய கலப்பு சாதிக்கு ஒரு பெயரை வழங்கி ஏற்பிசைவு (recognize) தந்து பிழைப்பதற்கு இன்னின்ன தொழிலை மேற்கொள்ளலாம் என்ற உரிமையையும் தந்து பிணக்கைத் தீர்த்து வைக்கிறான்.

இப்படித் தான் சாதிகளை மக்கள் உருவாக்கி விடுகிறார்கள் அதற்கு மன்னன் ஏற்பிசைவு மட்டும்தான் தருகிறான்.  மன்னன் வேண்டும் என்று எந்த ஒரு சாதியையும் உருவாக்குவதில்லை. ஆனால் வரலாறு எழுதுவோர், பழிபோடுவது என்னவோ மன்னன் மீது அல்லது பிராமணர் மீது தான். தமிழ்நாட்டில் தமிழ்ச் சமூகத்தில் வர்ணக் கோட்பாடு, மனு தர்மக் கோட்பாடு கல்வெட்டளவில் தான் இருந்தது. பலரும் உரைப்பது போல அது சமூகப் பிரச்சனையாக தலைவிரித்தாடியது இல்லை.

பாரசிவர் என்பவர் பிராமணத் தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர் என்ற சாஸ்திரக் கூற்றின் படி அனுலோமப் பிரிவில் வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டுக் கோவில்களில் அம்மனுக்குப் பூசனை ஆற்றிய உவச்சர் மரபினர் ஆவர். இவர்கள் பல கோவில்களில் பிராமணருடன் பிராமணரல்லாத பூசகராக, காணி உரிமையோடு பணி புரிந்தது கல்வெட்டுகளில் பதிவாகி உள்ளது. ஈங்கு  நாலு கல்வெட்டில் அவர் பற்றிய குறிப்பு கீழே. 

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பட்லூர் அமைந்த வாகீசுவரர் கோயில் கருவறை தென்மேற்கு ஜகதி கல்வெட்டு:

  1. ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க ஸ்ரீ வீரராசேந்திர தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவதற்கெதிர் ஒன்பதாவது வ
  2. டகரை நாட்டு பட்டில் ஊரும் ஊராளிகளோம் எங்களூர் இந்நாயனார் வாகீஸ்வரமுடையாற்கு னாங்கள் ஏரி இட்டுக் குடத்தபடியாவ
  3. து பசுங்கண்ணித் தாழையோமுற்று இதில் நீர் பாஞ்ச நிலங்கண்டிட மெல்லாம் இறையின்றி ஏகபோகமாக இட்டு
  4. குடுத்தோம் வாகீசுரமுடையாற்கு. இக்கோயில் காணியுடைய பிராமணரில் பாலாசிரிய கோத்திரத்து பொ[ல்]லாத பிள்ளை ம
  5. கன் மாதேவ பட்டனும் இக்கோயிற் காணி உடைய உகச்சரில் பாரேசிவரில் பூமந்வந்நியான வீரபத்திர சக்கரவத்திய் இக்குளம்
  6. உழுது மூன்றிலொன்று னாயநாற்கு குடுப்பார்களாகவும் இவ்வேரியைக் கோயிற்றமந்னாதல் ஊராராதல் மாற்றுவாந் யாதொ
  7. ருவன் வழியேச்சமறுவாந். இது பன்மாஹேஸ்வர ரட்சை.

ஊரும் – ஊரில் வாழ்வோர்; ஊராளிகளும் – ஊரைச் சேர்ந்த வெளியிடத்தில் வாழ்பவர்; ஏகபோகமாக – முழுஉரிமையாக; கோயில்காணி உடைய பிராமணர் – official priest; உவச்சர் – காளி, துர்க்கை பூசகர்; ஏரி – குளம்; கோயிற்றமன் – கோயில் பணி நிகழ்த்தும் பூசகர் மேற்பார்வை; ஊராராதல் – ஊரார் மேற்பார்வை; மாற்றுவான் – தனக்கு உரிமை மாற்றுவான்; ஏழு அச்சம் அறுவான் – ஏழுதலைமுறை இல்லாது ஒழிவான்; மாகேசுவரரர் – சிவனடியார்.

விளக்கம்: கொங்கு சோழன் வீர ராசேந்திரனின் 29+9 =38ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 1244) போது வடகரைநாட்டில் அடங்கிய பட்டில் ஊரான இன்றைய பட்லூர் ஊரைச் சேர்ந்தவர்களும் அதில் வாழ்வோரும் சேர்ந்து தமது ஊர் இறைவரான வாகீசுவரருக்கு ஏரி ஒன்றைக் கட்டிக் கொடுத்தனர். அதற்குப் பசுங் கண்ணித்தாழை முற்று எனப் பெயரிட்டனர். இந்த ஏரியையும் அதன் நீர் பாயும் நிலத்தையும் வரியின்றி முழு உரிமையாக வாகீசுவர கோயில் இறைவர்க்கு கொடுத்தனர். இக்கோயில் காணியுடைய பிராமணர் பாலாசிரிய கோத்திரத்தில் பிறந்த பொல்லாப்பிள்ளையின் மகன் மாதேவ பட்டன், அதேபோல இக்கோயில் காணி கொண்ட அம்மன் கோயில் உவச்சன் ஆன பாரசிவரில் பூமன் வந்நியான வீரபத்திர சக்கரவர்த்தி ஆகிய இருவரும் இக்குளத்தின் நீரைக் கொண்டு உழுவித்து அதில் விளையும் பயிரில் மூன்றில் ஒன்றை இக் கோயில் இறைவனுக்கு கொடுக்க வேண்டும். இவ் ஏரி கோயில் மேறபார்வையில், ஊரார் மேற்பார்வையில்  இருப்பதைத் தடுத்துத் தம் சொந்த நலனுக்கு மாற்றிக் கொள்பவன் குலம் ஏழு தலைமுறைக்கு இல்லாததாகிப் போகும். சிவனடியார் இதை முறைமையைக் காக்க வேண்டும்.

பொதுவாக, கோயிலுக்கு நிலம், விலங்கு, பொன் ஆகிவற்றைத் தான் கொடையாகத் தருவார்கள். அதைத் தவிர்த்து இந்த ஊர் மக்கள் நீர்ப் பாசனத்திற்கு வேண்டி ஏரி அமைத்துக் கொடுத்து உள்ளனர். நீரை எந்த நிலத்தில் பாய்ச்சிப் பயிர் செய்வது என்பதைக் குறிக்காமல் 3இல் 1 பங்கு விளைச்சலை மட்டும் இறைவனுக்குத் தப்பாமல் கொடுக்க வேண்டும் என்பது கேள்விக்கு இடம் அளிக்கின்றது.

பார்வை நூல்:  ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக்.192

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பட்லூர் அமைந்த வாகீசுவரர் கோயில் தெற்கு கிழக்கு  பட்டிகைக் கல்வெட்டு:

  1. ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலம் சிறக்க கோவிராஜகேசரி பந்மராநத் திரிபுவனச் சக்கரவர்த்திகள் வீர ராசேந்திர தேவர்க்கு திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநல்லியாண்டு 201 (21) எதிர் பத்தாவது ஆநிமாஸ முதலாக வடகரை பட்டில்லூராளிகளும் நடுவில் நித்யகண்ட சக்கரவத்திகளும் தேவர்க்கும் எம்மிலி _ _ _
  2. _ _ _ யாவது மேக்கடுக்கு கல்லுக்கு மறைக்கும் கிழக்கு  பிடாரியார் தேவதானத்துக்கு மேற்கும் தெற்கு இட்டேறிக்கு வடக்கும் இவ்வெல்லைக்குட்பட்ட நிலமும் இந்நாயனாற்கு பூசிக்கும் நம்பிமார் பட்டில் காணியாளருக்கும் மாணபோகத்துக்கும் பட்டில் காணியாள உவச்சரில் பாரேசிவர் பூமந் வந்நியாந வீரபத்திர சக்கரவத்திக்கு மாணபோகம் _ _ _ மேற்கு பிடாரியார் தேவதானத்துக்கு கிழக்கும் கிழக்கு இட்ட கல்லுக்கு மேற்கும் தெற்கு ஒழுகு கல்லிச்சிறு பொழிக்கு வடக்கும் _ _ _

திருவெழுத்திட்டு – முடிசூடி; செல்லா நின்ற – நடப்பாண்டு, current year; திருநல்லி யாண்டு – ஆட்சி ஆண்டு; எதிர் – வருகின்ற, வந்த; நடுவில் – சூழ அமர்ந்து; பிடாரி – காளி, துர்க்கை போன்ற அம்மன்; இட்டேறி – வயல்கள் நடுவே செல்லும் வரப்புப் பாதை; நம்பிமார் – பிராமணர்; மாணபோகம் – மழைநம்பி பயிரிடுதல் அல்லது சாய்நிலத்தில் பயிரிடுதல் ; ஒழுகு – பாயும்

விளக்கம்: கொங்கு சோழன் வீர ராசேந்திரனின் 21+10 = 31 ஆம் ஆண்டு ஆட்சியின் போது (கி.பி. 1237) ஆனி மாதம் முதலே பட்டில் ஊரைச் சேர்ந்தவர்களும் அவர்க்கு நடுவே நித்யகண்ட சக்கரவர்த்தியும் கொலுவிருக்க, தம்மால் இயன்ற கொடையான மேற்கில் அடுக்கிய கல்லுக்கு மறையிலும் கிழக்கில் பிடாரி  கோயில் தேவதானமும் தென்மேற்கில் இட்டேறிக்கு வடக்கும் என உள்ள நிலத்தை இக்கோயில் இறைவர்க்கு பூசனை ஆற்றும் பிராமணர்க்கு பட்டில் நிலமாகவும், மாணபோகமுள்ள பட்டில் நிலம் உள்ள இடத்தில் பாரசிவரான பூமன் வந்நியான  வீரபத்திர சக்கரவத்திக்கு மாணபோக நிலமும் தந்தனர். அந்நிலம் பிடாரி கோயிலுக்கு கிழக்கும், தெற்கே ஓடும் கல்லிச்சிறு குளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது என்று நில எல்லைகளை குறித்து உள்ளனர். மேலே உள்ள முதல் கல்வெட்டில் குறிக்கப்பட்ட பாரசிவ உவச்சரும் இவரே.

பண்டு பரவலாக கோயில்களில் பிராமணப் பூசகரோடு பிராமணரல்லா பாரசிவ பூசகரும் பணியாற்றி உள்ளனர் எனத் தெரிகின்றது.

பார்வை நூல்:  ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக்.190.

கோயம்பத்தூர் மாவட்டம் அவினாசி வட்டம் அன்னூர் எனும் இடத்தில் அமைந்த மன்னீசர் கோவில் கல்வெட்டு:

  1. _ _ _ _ ம
  2. ண்டல முதலி துறையூரில் உவச்சக்காணியுடைய பராசிவன்
  3. வாச்சிய மாராயனுக்கு அந்நாள் வதிமுகம் கொடுத்து இவன் ஆளுடையார்
  4. திருமுருகன் பூண்டி நாயனார் கோயிலுக்கும் ஆளுடையார் _ _ _ _
  5. களில் உள்ள உவச்சக் காணிகளுக்கும் இக்கோயில்களில்
  6. கோயிற் காணிகளும் இவர்களுக்கு காணியாக கொடுத்தோம் சோழகுல மாணிக்க _ _ _

வதிமுகம் – தங்க இடம் கொடுத்து உவச்சர் காணி – அம்மன்கோயில் பூசகருக்கு ஒதுக்கிய நிலம்

விளக்கம்: 13 ஆம் நூற்றாண்டின் இக்கல்வெட்டில் வேந்தன் பெயரும், ஆட்சி ஆண்டும் குறிக்கப்படவில்லை. மண்டலமுதலி துறையூரில் உவச்சருக்கான காணியை உடைய பாரசிவன் வாச்சிய மாராயனுக்கு முன்னாளிலே தங்கு இடம் கொடுத்து இவன் தெய்வமான திருமுருகன் பூண்டி இறைவர் கோயிலுக்கும் கல்வெட்டில் சிதைந்துள்ள கோயில்களில் உள்ள உவச்சருக்கான காணிகளுக்கும் மற்றும் இக்கோயில்களின் காணிகளுக்கும் (வரிவிலக்கு தந்து) அவற்றை இவனுக்குக் காணியாக கொடுத்தேன் என்று சோழகுல மாணிக்கம் என்ற அரையன் தெரிவிக்கிறான்.

பார்வை நூல்:  கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக். 82

எளவானரைசூர் கோவில் கல்வெட்டு , திருக்கோவிலூர் வட்டம்:

  1. ஸ்வஸ்த்திசிரி கோச்சடைய பன்மாரான திரிபுவனச் சக்கரவத்திகள் சிரிசுந்தர பாண்டிய தேவற்கு
  2. யாண்டு 13- ஆவது எதிர் மூன்றாவது உடையார் ஊர்பாகங்கொண்டருளிய நாயனார்
  3. கோயில் தானத்தாரோம் இக்கோயில் பாரசிவற்கு விவாஸ்தாபத்திரம் பண்ணிக் குடுத்த பரிசாவது
  4. நலங்கிங்குகளுக்கு அனுதரிக்கும் இடத்து பாண்டி மண்டலம்,
  5. சோழ மண்டலம், மகத மண்டலம் இம்மண்டல்களிலும் பலதிருப்பதிகளில் செய்தபடியும் நடுவில்மண்டலத்தில் திருமுதுகுன்றமும்
  6. திருவாமாத்தூரும் திருவதிகை திருவெண்ணைநல்லூர் செய்த மரியாதை செய்யக்கடவராகவும்
  7. இப்படி செய்தோமாகில் சிவத்துரோகிகளும் இராசத்துரோகிகளுமாக கடவதாகவும்
  8. இப்படி சம்மதித்து விவஷ்த்தாபத்திரம் பண்ணிக் குடுத்தோம் பாரசிவற்கு தானத்தாரோம்.

விவஸ்தா பத்திரம் – தீர்மான ஆவணம்; அனுதரிக்கும் – பின்பற்றும்; திருப்பதிகளில் – கோவில்களில்

விளக்கம்: மதுரை சுந்தர பாண்டியனின் 13 + 3 =16 ஆவது ஆட்சி ஆண்டில் எளவனூர் இறைவர் கோயில் பொறுப்பாளர்களாகிய நாங்கள் இக்கோயிலில் திருப்பணி செய்யும் பாரசிவற்கு தீர்மான ஆவணம் செய்து கொடுத்ததாவது நலங்கிங்குகள் கடைபிடிக்கும் போது பாண்டி மண்டலம், சோழ மண்டலம், மகத மண்டலம் ஆகிய மண்டலங்களில் உள்ள பல கோவில்களில் செய்தபடியே நடுவில் மண்டலம் திருமுதுகுன்றமான விருத்தாசலம், திருவாமாத்தூர், திருவதிகை, திருவெண்ணை நல்லூர் ஆகிய ஊர்களில் செய்த மரியாதையை இந்த பாரசிவருக்கும் செய்யக்கடவராக அல்லாக்கால் சிவதுரோகிகள், இராசதுரோகிகள் போல்வார் ஆகுவராக. இப்படியாக கோவில் பொறுப்பாளர்கள் நாங்கள் இசைந்து பாரசிவருக்கு தீர்மான ஆவணம் செய்து கொடுத்தோம்.

கோயில் பெயர்கள் சமஸ்கிருதம் ஆனது என்னவோதெலுங்கு நாயக்கர் ஆட்சியில் தான் என்பதை கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன.

பார்வை நூல்:  தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள் (C.Era 300 – 1800), க.பன்னீர்செல்வம், 2018.  ARIEp 1938 B. No 492

https://www.facebook.com/pg/ஶ்ரீ-வாகீஸ்வரர்-திருக்கோவில்-பட்லூர்-245845535884081/posts/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பட்லூர் வாகீசுவரர் கோயில் – அனுலோம பாரசிவர் பற்றிய கல்வெட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *