சேக்கிழார் பா நயம் – 35
-திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி
திருவதிகை வீரட்டானத்தில் சித்த வட மடத்தில் தங்கியிருந்த சுந்தரமூர்த்தி தலைமேல் திருவடியைப் பலமுறை வைத்தருளியதன் உட்பொருளைச் சுந்தரர் உணர வில்லை. அவருக்கே உரிய இறுமாப்புக்கொண்டு இறைவனிடமே கேள்விகேட்டார்! இறுமாப்பு என்பது தன்னை அறியாத தருக்கு! அது தலைவனையும் அறிந்து கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளிவிடும்! அதனால் தம்செயல், இறுமாப்பினால் அதாவது செம்மாப்பினால் விளைந்தது என்பதை ’’செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் !’’ என்று வருந்தும் நிலைக்குத் தள்ளியதே என்று சுந்தரர் கூறுகிறார்! அதன் பின்னர் அவர் தெளிவடைகின்றார். இங்கே இறைவன் சுந்தரர் தலைமேல் பலமுறை திருவடியை வைத்தது, அவருக்கு அவர் நிலையைத் தெரிவிக்கவே என்பது புலனாகின்றது. அருணகிரிநாதர் தம் தலைமேல் முருகன் திருவடி பட்டமையால் நிகழ்ந்த நன்மையைக் கூறுகிறார்!
‘’அவன் கால் பட்டழிந்தது இங்கு என்தலைமேல் அயன் கையெழுத்தே!’’ என்பது அவர் இயற்றிய கந்தரலங்காரம்! இதனைச் சித்தாந்தம் ‘’;திருவடி தீட்சை’’ என்று கூறும். இவ்வாறு வலிய வந்து சிவபெருமான் தம்திருவடியால் சுந்தரருக்கு ஞானம் தந்தார் .அதனால் யான் அறியாமையால் தவறு செய்தேன் இப்போது அறிவு பெற்றேன்! அதனால் ‘’எத்தகைய தவறுசெய்தேன்! ‘’ என்று வருந்துகிறார். அதனால் தம் இழிந்த மனநிலைமையால், தம்தலைவரைக்கூட அறியாத தொண்டனாகி விட்டேனே! என்றுவருந்தி,
‘’தம்மானை அறியாத சாதியார் உளரே!’’ என்று கூறுகின்றார். அனைவருக்கும் தலைவராய், வீரட்டானம் என்ற தலத்தில் எழுந்தருளிய சிவபிரானை நினைக்கிறார்! அப்பிரான் ஆணவத்தால் எதிர்த்து வந்த மதங்கொண்ட யானையின் தோலை உரித்து அணிந்த வீரச் செயல் புரிந்த தலம், வீரட்டானம்! ஆகவே செம்மாப்பை, – இறுமாப்பை விலக்குவதற்காக அவர் திருவடி பதித்தார்! முன்பு திருக்கைலையை விட்டுநீங்கிய நிலையில் நினைவால் ஞானம் தரும் ‘’மானஸ தீட்சை’’ எனப்படும் திருவுள்ளதீக்கை யாலும், திருவருட்டுறையில் காட்சிதந்தபோது, நேரில் கண்டு ‘’சட்சுதீட்சை’’ எனப்படும் திருக்கண் தீக்கையாலும், பின்னர் அந்தண வேடத்துடன் சித்தவடமடத்திற்கு வந்த போது, திருவடி தீட்சை எனப்படும் பரிச தீக்கையாலும், ‘’எம்மைப்பாடு!’’ என்றபோது, உபதேச தீட்சை எனப்படும் வாக்குத் தீக்கையாலும், தடுத்தாட் கொண்டார். இவையனைத்தையும் தம் திருப்பாடலில், சேக்கிழார் அமைக்கிறார்.
‘தம்மானை அறியாத சாதியாருளரே’ – இது உண்மையுணர்ந்தவுடனே நம்பிகள் பாடிய திருப்பதிகத்தின் முதற்குறிப்பு. தமது தலைவனையும் அறிந்துகொள்ளாத வகுப்பாரும் உலகத்தில் உண்டோ? சாதியார் – வகுப்பினர் – வகையிலே – பட்டவர் – அறியாத வகையினர். சாதி – வகுப்பு என்ற பொருளில் வந்தது. தமது தலைவனைத் – தம்மை ஆளாகக்கொண்டு காக்கின்றவனைத் தமது நலங்கருதியேனும் யாவரும் அறிவர். அவ்வாறு அறியாத வகையினர் உலகில் இல்லை என்றபடி. உளரே – ஏகார வினா இல்லை என்ற விடை குறித்து நின்றது. வேறு ஒருவரும் இல்லை; ஆயினும் யான் ஒருவன் இறைவனை யறியாது இறைபோதும் இகழ்வன் போலும் என்பது பதிகக் கருத்து. முன்னர் ஆணவ மறைப்பினாலே ‘பலகாலும் மிதித்தனை’ என வெறுத்த அந்தக் கழலையே மறைப்பு நீக்கம் பெற்ற இப்போது பணிந்து துதித்தார்.
(1) எம்மான்ற னடிக்கொண்டென் முடிமேல் வைத்திடு மென்னு மாசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் – இது திருவடி தீக்கையிலே நம்பிகள் ஆசை வைத்திருந்ததைக் குறிக்கும் “இறைதாள் புரிவுடைய மனத்தினராய்“ என்ற சரிதத்துக்கு அகச்சான்றாம். அறிவிலா நாயேன் – முன்னர் வழக்கு இட்டபோது அறியாததுபோலவே இன்றும் இறைவர் தாமே வெளிவந்தபோதும் அறியாமலிருந்ததற் கிரங்கிய கூற்று.
(2) முன்னே எம்பெருமானை மறந்தேன்கொல் மறவா தொழிந்தேன்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன். இதுவும் நம்பிகளது அறிவு நிலையை மிக நன்றாக உணர்த்தும் அகச்சான்றாம்.
(3) வளராத பிறையும் வரி அரவும் உடன்றுயில வைத்தாளும் எந்தை – உடன்றுயில
– ஒன்றாய் வாழ; வளராத பிறை –
‘மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமே னாகந்
தெறுமென்று தேய்ந்துழலு மாவா – உறுவான்
தளரமீ தோடுமேற் றானதனை யஞ்சி
வளருமோ பிள்ளை மதி’
– காரைக்காலம்மையார் அற்புதத்திருவந்தாதி – 36
காண்க.
4) நாற்றானத் தொருவனை – ‘இது நாலா நிலையாகிய சிவயோகத்தைக் குறிக்கும் என்பர். நாற்றானத் தொருவனை – என்பது திருக்களிற்றுப்படி. நின்மல துரிய நிலையே தசகாரியத்துள் சிவயோகநிலை. சிவம் தெளிவாக விளங்கும் நிலை இதுவே! நம்பிகள் ஞானயோக நெறியை விளக்கவந்த ஆசாரியராதலும் காண்க
“பத்திப்போர் வித்திட்டே பரந்த வைம்புலன்கள் வாய்ப்
பாலே போகா மேகாவாப் பகையறு வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள் வாய்
மூடாவூடா நாலந்தக் கரணமு மொரு நெறியாய்ச்
சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப்பரம் பொருள்
சேர்வார் தாமே தானாகக் செயுமவன்’’
தலவிசேடம் – அட்டவீரட்டங்களில் ஒன்று. திரிபுரமெரித்த வீரம் நிகழ்ந்த தலம். அப்பர் சுவாமிகளை ஆட்கொண்ட வரலாறு அப்புராணத்துக் காண்க. திலகவதியம்மையார் திருப்பணி செய்தமர்ந்த தலம். இவர்களது திருவுருவங்கள் இங்கு அமைத்துப் பூசிக்கப் பெறுகின்றன. திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு இறைவன் இங்கு முன்னே எதிர்காட்சி கொடுக்க ‘ஆடும் வீரட்டானத்தே’ என்ற குறிப்புடன் பதிகம் பாடியருளினர். இறைவனது இலிங்க அருட்டிரு மேனி மிக உன்னதமாய் விளங்குவது. தீர்த்தம் – கெடிலநதி. சுவாமி – திரிபுராந்த கேசுவரர். தேவியார் – திரிபுரசுந்தரி. இது நடுநாட்டுத் தலங்களில் 7-வது தலம். கெடில நதியின் வடகரையில் உள்ளதென்பது பதிகம் . பண்ணுருட்டி இருப்புப்பாதை நிலையத்திலிருந்து கிழக்கே ஒரு நாழிகையளவில் அடையத்தக்கது. இனி ,முழுப்பாடலையும் காண்போம்.
‘’செம்மாந்திங்கு யான்அறியா தென்செய்தேன் எனத்தெளிந்து
‘தம்மானை அறியாத சாதியார் உளரே ‘ என்று
அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்தமர்ந்த
கைம்மாவின் உரியானைக் கழல்பணிந்து பாடினார்!’’