அத்தி வரதரைத் தரிசிக்க, இன்னும் மூன்று யோசனைகள்
அண்ணாகண்ணன்
அத்தி வரதரைத் தரிசிக்க, இன்னும் மூன்று யோசனைகள். இவற்றை 2059இலாவது நிறைவேற்றப் பரிசீலிக்கலாம்.
யோசனை 1: அத்தி வரதர் நடுவில் வீற்றிருக்க, அவரைச் சுற்றி, 3 ரெயில் தடங்கள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு ரெயிலும் அத்தி வரதரை ஒரு சுற்றிவிட்டு, திரும்பி வரும். பக்தர்கள் அதில் இருந்தபடியே தரிசிக்கலாம். இதற்கு ஏற்ப, ரெயிலின் உள்ளே, எல்லாம் ஜன்னலோரம் இருப்பது போல் இருக்கைகளை வடிவமைக்க வேண்டும். மூன்று ரெயில்கள் ஓடும்போது, அடுத்த மூன்று ரெயில்களில் பக்தர்களை ஏற்றலாம். இந்த ரெயில் ஓட்டுபவர்களைச் சுழற்சி முறையில் மாற்றலாம். ரெயில்களை நள்ளிரவில் சரிபார்க்கலாம். இதே ரெயில்களை மாடி ரெயில்களாக அமைத்தால், ஒரே நேரத்தில் இரு மடங்கினர் தரிசிக்கலாம். இதற்கு மேல் ரோப்கார் அமைத்தால், அதில் ஓர் அணியினர் சென்று வரலாம்.
யோசனை 2: நடுவில் அத்தி வரதர் வீற்றிருக்க, எட்டுப் பாதைகள் அமைத்து, ஹைப்பர்லூப் குழாயில் காந்தக் கூடுகளில் பக்தர்களை ஏற்றி, ஒரு கிலோ மீட்டரை அரை நிமிடத்தில் கடந்து, அத்தி வரதரை வலம் வந்து திரும்பலாம். ஒரே நேரத்தில் 4 கூடுகள் வலம் வருமாறு செய்யலாம். இது, ஓட்டுநர் இல்லாமல், தன்னியக்கமாகச் செயல்படுமாறும் செய்யலாம். இதன் மூலம் ஒரே நாளில் இருபது இலட்சம் பேரையும் தரிசிக்கச் செய்யலாம். இதை உலகளாவிய திருவிழாவாக மாற்றி, அயல் நாடுகளிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கலாம்.
யோசனை 3: அத்தி வரதரை ஒரே இடத்தில் வைக்காமல், திருத்தேரில் ஏற்றி, தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் பவனி வரச் செய்யலாம். இதன் மூலம், பக்தர்கள் ஒரு நகரத்தில் குவிவதைத் தவிர்க்கலாம்.