ஆகாசவாணி
மதியழகன்
‘ஆல் இண்டியா ரேடியோ’
என்பார்கள்.
ஊர்ச் செய்திகளையெல்லாம்
மக்களிடம் எடுத்துச் சொல்வது
அவன் வேலை.
நாளைய நாளிதழில்
என்ன தலைப்புச் செய்தி
என்று துல்லியமாகச் சொல்லி
அசத்துவான்.
ஆண்டிப்பட்டியிலிருந்து
அமெரிக்கா வரை
அரசியல் நிலவரங்களை
புட்டுப் புட்டு வைப்பான்
பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களைத்
துல்லியமாகக் கணிப்பான்.
சிகரெட் வாங்கிக் கொடுத்தால்
கண்ணதாசன் பாட்டுக் கேட்கலாம்
தண்ணியை வாங்கிக் கொடுத்தால்
தத்துவமாய்க் கொட்டுவான்
என்னத்தடா சாதிக்கப் போறே’ன்னா,
‘சாதிச்சவனெல்லாம் என்னவானான்’
என்று எதிர்க் கேள்வி கேட்பான்.
‘மண்ணாப்போச்சி போ’ என நாம்
தலையில் அடித்துக் கொள்ள
வேண்டியது தான்.