புதுவையில் கனமழை; மக்கள் அவதி!
முனைவர் மு.இளங்கோவன்
புதுவையில் 2011 அக்.25 அன்று இரவிலிருந்து மழை தொடர்ந்து பெய்கின்றது. மழை அதிகம் என்பதால் மக்கள் தீபாவளி கொண்டாட வழியில்லாமல் போனது. எங்கும் வெடிச் சத்தம் இல்லை. புதுவையின் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
சூரியகாந்தி நகர்ச் சாலைகள், நீரில் மூழ்கியிருப்பதைப் படத்தில் காணலாம்.
கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், சூரியகாந்தி நகர், செந்தாமரை நகர்,வசந்த் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாய்க்கடை உடைப்பெடுத்து தெருவெங்கும் சாய்க்கடை நீராக உள்ளது.
சூரியகாந்தி நகர்ச் சாலையில், கார் ஒன்று மூழ்கியிருப்பதைப் படத்தில் காணலாம்.
இலாஸ்பேட்டை, கோரிமேடு பகுதிகளில் பெய்த மழைநீர் ஓடும் வாய்க்கால் தூர் வாரப்படாததால் வாய்க்கால் நீர் தெருவுக்குள் புகுந்துள்ளது. தரைத் தளத்தில் இருக்கும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் வீட்டிலிருந்த அத்தியாவசிய பொருள்கள் நனைந்துள்ளன. சில வீடுகளில் பீரோக்கள், வாஷிங் மெஷின்கள், பிரிஜ் உள்ளிட்ட பொருள்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சூரியகாந்தி நகர்ச் சாலைகள், நீரில் மூழ்கியிருப்பதைப் படத்தில் காணலாம்.
பள்ளமான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மேட்டுப் பகுதிக்குச் செல்கின்றனர். வீட்டில் நிறுத்திவைத்திருந்த கார், மோட்டார் பைக் முதலியவை நீரில் மூழ்கியுள்ளன. சாய்க்கடை நீர் குடிநீரில் கலந்துள்ளதால் தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது.
இரு சக்கர வாகனத்தை சூழ்ந்து, வீட்டுப் பகுதியில் புகுந்துள்ள மழை நீர்.
விட்ட மழை, இப்போது வேகம் எடுத்துப் பெய்கின்றது. மீட்புப் பணிகள் விரைந்து நிகழ வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
=====================
படங்கள்: மு.இளங்கோவன்