பள்ளியெழுச்சி
மதியழகன்
மெல்ல மெல்ல இருள்
கவிழ்கிறது பூமியில்..
முழு நிலவில்
கடற்கரையில்
தேவதை எனதருகில்..
அது கனவு என்று
விழித்ததும் தான் தெரிந்தது.
இரவு வானத்தை
அண்ணாந்து பார்த்தேன்,
இறந்த மனிதர்களெல்லாம்
ஆகாயத்தில்
நட்சத்திரங்களாகிப் போகிறார்கள்
என்று பாட்டி சொன்னது
நினைவிற்கு வந்தது.
பழுதை பாம்பாகக் கருதுவதும்
கிளை அசைவது பேயாகத் தெரிவதும்;
சாத்தான் கடவுளாகப்
போற்றப்படுவதும்
இரவில் தான் நடக்கிறது..
வேடம் களைகிறது,
பாற்கடலில் உறங்கிக்
கொண்டிருக்கும் கடவுள்
இன்னும் கண்விழிக்கவில்லை
எனச் சேதி வருகிறது.