சேசாத்திரி ஸ்ரீதரன்

பண்டு கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக, ஆடல் இசைக் கலைக் கூடங்களாக மட்டுமே இருக்கவில்லை அவை இலவச உண்டு உறையும் வேதக் கல்வி நடுவமாகவும் ஆயுர்வேத மருத்துவச் சாலையாகவும் விளங்கின. அத்தோடு நூலகங்களும் கோவில்களைச் சார்ந்து இயங்கின.

வேதக் கல்வியொடு நில்லாமல் இலக்கியக் காவியம், தொன்மமாம் புராணம், வரலாறு, இலக்கணம், தெய்வியல் கூறும் மீமாம்சம் போன்றனவும் கற்பிக்கப்பட்டன. இவை அல்லாமல் ஆயுர் வேத மருத்துவம், சோதிடம் போன்ற சிறப்பு புலக் கல்வியும் கற்பிக்கப்பட்டன. இதனால் இவற்றுக்கான நூல் தேவை இயல்பாகவே எழுந்தது. மேலும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வோர் எல்லா இடங்களுக்கும் நூல்களை எடுத்துச் செல்ல முடியாத காரணத்தாலும், குறிப்பாக வெள்ள காலத்தில் எடுத்துச் செல்ல முடியாத காரணத்தாலும் இந்நூல்கள் கிடைத்தற்கரிய காரணத்தாலும் இவற்றை எழுதிப் பேண வேண்டிய கட்டாயத் தேவையும் ஏற்பட்டது. அதனால் உண்டானது தான் சரசுவதி பண்டாரம் (bandaram) என்னும் ஓலைச் சுவடி நூலகம். பல்வேறு புலங்களுக்கான நூல்களை ஓலையில் எழுதுவதற்கென்றே அன்னாளில் தனியே ஆள்கள் இருந்தனர். இவர்கள் தவசக் கூலி, ஆடை (புடைவை) முதல், நெல், ஆண்டு காசிற்கும் அமர்த்திக் கொள்ளப்பட்டனர். விருப்பமுள்ள யாரும் கட்டணம் செலுத்தி இந்த ஏடுகளைப் படியெடுக்கலாம், ஒப்பிட்டுப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் சில ஊர்களில் இத்தகு நூலகங்கள் செயற்பட்டதற்கான கல்வெட்டுகள் சில கோவில்களில் காணக் கிடைக்கின்றன. இவற்றுக்கு வேந்தர்கள், மன்னர்கள், அரையர்கள் அல்லாமல் சில தனியாரும் கொடை ஈந்து பேணி வந்துள்ளனர்.

நாட்டைக் காப்பதோடு அறம் காப்பதும் (தர்ம ரக்ஷ்ணம்) ஆட்சியாளர் கடமை என்பதால் இவ்வாறு மதக் கல்விக்கும் அதைச் சார்ந்த கல்விக்கும் அன்றைய ஆட்சியாளர் தாராளமாக நன்கொடை ஈந்தனர். இதில் தவறு ஒன்றும் இல்லை என்றே தோன்றுகின்றது. படைச் செலவு, நிருவாக செலவு தவிர இப்படி மதம் வளர்த்துக் காக்க வேதக் கல்விக்கு செலவு செய்திராவிட்டால் அந்த பணத்தை வேறு ஒன்றுக்கும் செலவிட்டிருக்க மாட்டார். அப் பணத்தை அவர் தம் கருவூலத்திலேயே சேகரித்து வைத்திருந்திருப்பார். ஏனென்றால் முடியாட்சி என்பது மக்களாட்சி போல் மக்கள் நலஅரசு (welfare state) அன்று. இக்கால் மக்கள் வரிப்பணம்! மக்கள் வரிப்பணம்! என்று கூப்பாடு போடுவோர் ஒரு வேந்தன் இன்னொரு வேந்தன் மீது போர் தொடுத்து வென்று அவனிடம் உள்ள வரிப்பணத்தை எல்லாம் கொள்ளையிடும் போது மட்டும் மக்கள் வரி பணம் கொள்ளை போனதே என்று புலம்பாமல் வென்ற வேந்தனின் வெற்றிச் சிறப்பை பாடத் தொடங்குகின்றனர்.  ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? எனவே இன்றைய மக்களாட்சியின் மக்கள்நலக் கருத்தை கொண்டு போய் பண்டைய அரச செயற்பாடுகளில் திணிப்பது அறியாமையின் உச்சம் ஆகும்.

இக்காலத்தில் சிலர் வேதக் கல்விக்கு இப்படி செலவு செய்ததை கடுமையாகச் சாடி எழுதி தம் அறிவின்மையை வெளிப்படுத்தி உள்ளனர்.  அது அவர்களின் வேதநெறி மீதான வெறுப்பின் வெளிப்பாடே ஆகும். வேதக் கல்வி தான் இப்படி என்றில்லை புத்த விகாரையிலும், சமண பள்ளியிலும், மதரஸாக்களிலும் கூட மதக் கல்வி தான் புகட்டப்பட்டன என்பதை கூர்ந்து நோக்கினால் இந்த அறிவின்மை புலனாகும். திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றில் பயிற்சி கொடுப்பதும் மதக் கல்வியை சார்ந்தது தான். இன்று நமக்குள்ள மதம் சாரா பொதுக் கல்வி என்பது ஐரோப்பியரால் அறிமுகமானது. இக்கால பொதுக் கல்வியை பழைய கல்வி முறையோடு ஒப்பிட்டு பார்ப்பது வரலாற்றை புரிந்து கொள்ள உதவாது மாறாக அதில் குற்றமே மேலெழும்பி நிற்கும். இராசராசன், இராசேந்திரன் ஆட்சியைக் குறை கூறுவோர் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

மேற்கண்ட நூலகத் தேவைக்கான செய்திகளை நோக்க பல்லவர் கோவில் வழிபாட்டை ஒட்டி வேதக் கல்வியொடு பிற புலக் கல்வி, ஆயுர்வேத மருத்துவம் ஆகியன ஒருங்கே வளர்க்கப்பட வேண்டும் என்பதாலேயே சதுர்வேதி மங்கலம் என்ற பிராமணக் குடியேற்ற ஊர்களை ஆங்காங்கே ஆற்றை அண்டி அமைந்தனர் என்று புரிந்து கொள்ள முடிகின்றது. கோவிலை நம்பி 3-4 பிராமணப் பூசகர் மட்டுமே வாழ்ந்திருக்க வில்லை மாறாக கோவிலைச் சார்ந்த இந்த கல்வி வினைகளிலும் பிராமணர் ஈடுபட்டிருந்ததால் தான் கோவில் ஊர்களில் கோவிலையும் குளத்தையும் சுற்றி 30 – 40 பிராமண வீடுகள் இருக்கக் காண முடிகின்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் அரங்கநாதர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் திருப்பணியார அறைக்கு பக்கத்து அறையில் உள்ள 7 வரி சிதைந்த கல்வெட்டு.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ பாலபள்ளி நீலகண்ட நாயக்கர் செய்வித்த இந்த ஸரஸ்வதி பண்டாரத்துக்கு ஸேஷமான இத்[திருமண்]
  2. [டபத்து] இவர் உகந்தருளுவித்து திருப்ரதிஷ்டை பண்ணித் திருவாராதநங் கொண்டருளுகிற ஹயக்ரீவ நாயனாற்கும் [சரஸ்வதி]
  3. [தே]விக்கும் ஸ்ரீ வேதவ்யாஸ பகவானுக்கும் திருவாராதனத்துக்கும் அமுதுபடி சாத்துபடி உள்ளிட்ட விஞ்சனங்களுக்[கும் உட]
  4. [லா]க நூறாயிரங்காசு ஸ்ரீ பண்டாரத்திலே ஒடுக்கவும் இதில் பொலிசை கொண்டு இவ்விடங்களுக்கு திருவாராதனமும்
  5. அமுதுபடி சாத்துபடிகளுக்கு வேண்டுவன திருக்கொட்டகாரத்திலே ப_ _ தாக விட்டு நடத்திப் பண்ணவேணு [மென்று]
  6. சொல்லுகையாலே, இப்படியே பெருமாள் திருப்பள்ளி அறையில் பே[ரருளாள]ன் திவ்யஸிம்ஹாஸனத்து நாச்சியாரொ_ _ _ _
  7. இதுக்கு ஜீயரும் திருப்பதி ஸ்ரீ வைஷணவரும் _ _ ண்ணப்ப _ _ _ _ (முழுமை பெறவில்லை)

சரசுவதி பண்டாரம் – ஓலைச் சுவடி நூலகம்; ஸேஷமான – சிறப்பு வாய்ந்த; திருவாராதனம் – கடவுள் பூசை; அமுதுபடி- திருச்சோறு படையல்; சாத்துபடி – தெய்வச் சிலை அலங்காரம்; விஞ்சனம் – சமையலுக்கான பண்டம்; உடலாக – நிபந்தனையுடன் இட்ட முதல்; ஸ்ரீ பண்டாரம் – கோயில் கருவூலம்; ஒடுக்கு – பணம் செலுத்து, pay; பொலிசை – வட்டி; திருக்கொட்டாரம் – கோவிலில் பொருள் வைக்கும் அறை,  store room.

விளக்கம்:  இதில் நாயக்கர், ஜீயர் ஆகிய சொல்லாட்சி இடம் பெறுவதை வைத்து இக்கல்வெட்டு விசயநகர ஆட்சியின் 15-16 ம் நூற்றாண்டினது எனக் கொள்ளலாம். பால பள்ளியை ஆளும் நீலகண்ட நாயக்கர் இந்த ஓலைச் சுவடி நூலகத்தை முன்பு ஒருபோது ஏற்படுத்தினார். அந்த நூலகமாம் சரசுவதி பண்டாரம் அமைந்த சிறப்பு வாய்ந்த இந்த திருமண்டபத்தில் இவர் விரும்பி நிறுவி பூசனை செய்யப்பட்டு வரும் பரிமுகப் பெருமாளான ஹயக்ரீவர், நாமகளாம் சரசுவதி தேவி, வேத வியாச பெருமான் ஆகியோரது சிலைகளுக்கு பூசனை ஆற்றவும் திருச்சோறு படையல், அலங்காரம் உள்ளிட்ட சமையல் பொருள்களுக்கென்றே முதல் பணமாக நூறாயிரம் (1 லட்சம்) காசினை கோயில் கருவூலத்தில் இவர் செலுத்தினார். இக்காசினைக் கொண்டு வட்டி பெற்று அந்த வட்டிப் பணத்தில் சிலைகளுக்கு அன்றாட பூசனை, திருச்சோறு படையல், அலங்காரம் ஆகியவற்றுக்கு தேவைப்படும் பொருளை கோவிலின் பொருள் வைக்கும் அறையில் வாங்கி வைத்து இதனை நடத்தி வரவேண்டும் என்று சொல்லுவதாலும், அதே போல் பெருமாளின் பள்ளிஅறையில் இறைவனை தெய்வ சிம்மாசனத்தில் நாச்சியாரொடு எழுந்தருளிவிக்க வேண்டுமாய் ஜீயரும் திருப்பதி வைணவர்களும் விண்ணப்பம் செய்தபடியால் என்பதோடு கல்வெட்டு சிதைந்து விட்டது. எனவே முழுச் செய்தியை அறிய முடியவில்லை.

இதற்கு முன்பே சுந்தர பாண்டியன் காலத்தில் இக்கோவிலில் சரசுவதி பண்டாரம் செயற்பட்டு வந்தது. ஆனால் அது இசுலாமியப் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டதால் மீண்டும் விசயநகர ஆட்சியில் நீலகண்ட நாயக்கரால் சரசுவதி பண்டாரம் தொடங்கப்பட்டு செயற்பட்டது போலும்.

பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள் – தொகுதி 24, பக். 297 (A.R. No. 130 of 1938-39), இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்  துறை வெளியீடு.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் சேரன்மாதேவி தெய்வீசுரமுடையார் கோவில் 8 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவத்திகள் கோனேரின்மை கொண்டான் சேரவன் மஹாதேவி சதுர்வேதி மங்கலத்து
  2. ஸபையாற்கு. தங்களூர் சீமித்துவார்பதி அப்பன் கோயிலில் கைச்சிக்கு வாச்சபாண்டிய பிரம்மாதிராயர்
  3. தன்மமான ஸரஸ்வதி பண்டாரத்துக்கு நாலாவது முதல் கண்ணாறு விளையும் நிலத்திலே பசானப்
  4. பண்டத்துடனே முதற்காலத்திலே இரண்டுமா நிலம் முதலடங்க இறையிலியாகக் குடுத்த
  5. இந்நிலம் இரண்டுமாவுக்கும் எப்பேற்பட்ட சர்வ உபாதிகளும் உட்பட தவிர்த்து சந்திராதித்த வரை செல்ல
  6. இறையிலியாகக் குடுத்து வரியிலார் கணக்கிலும் கழிக்கச் சொன்னோம் சந்திராதித்தவற் செல்லக்
  7. கல்லிலும் செம்பிலும் வெட்டிக் குடுக்கவும். பாற்க யாண்டு நாள் 377. இவை விக்கிரம பாண்டியக்
  8. காலிங்கராயன் எழுத்து. இவை வரந்தரும் பெருமாள் எழுத்து.

கண்ணாறு – சிறு வாய்க்கால்; பசானப் பண்டம் – சித்திரையில் அறுவடை ஆகும் விளைச்சல்; இரண்டு மா- ; உபாதி – கடமை எனும் வரி இனம்; பாற்க யாண்டு.

விளக்கம்: இது 13 ம் நூற்றாண்டு கல்வெட்டு. சேரன் மாதேவி சதுர்வேதி மங்கலத்து சபையோருக்கு அரச அதிகாரிகளான விக்கிரம பாண்டிய காளிங்கராயனும், வரந்தரும் பெருமாளும் வழங்கிய ஆணை ஓலையில் “உமது ஊரில் உள்ள மித்துவார்பதி அப்பன் கோவிலில் பிராமண அதிகாரியான கைச்சிக்கு வாச்ச பாண்டிய பிரம்மாதிராயர் அறக்கொடையாக ஏற்படுத்திய சரசுவதி பண்டாரத்திற்கு ஊரில் நாலாவதாக உள்ள கால்வாயின் முதல் சிறுவாய்க்காலை அண்டி அமைந்த நிலத்தில் விளைந்த சித்திரை விளைச்சலோடு அந்த இரண்டுமா அளவு நிலம் முன்பு நூலகத்திற்கு இறையிலியாகக் கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு மா நிலத்திற்கு எல்லா வகை வரியும் தவிர்த்து நிலவும் ஞாயிறும் உள்ள வரை இறையிலியாகவே வரியிலார் கணக்கு புத்தகத்தில் எழுதி கழிக்க சொன்னோம். இது நிலவும் ஞாயிரும் உள்ள வரை செல்வதாக கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க” என்று கூறி உள்ளனர்.

நூலக நிலத்திற்கு வரிகட்ட வேண்டும் என்று சபையோர் கூறியிருக்க வேண்டும் அதனால் நூலக பொறுப்பாளர் இந்த அரச அதிகாரிகளைச் சந்தித்து இந்நிலத்திற்கு வரி எதையும் விதிக்கக் கூடாது என்று ஊர் சபையோருக்கு கூறுவது போல புதுஆணை ஒன்றை பெற்றுவந்தனர் என்று தெரிகின்றது. இந்த கல்வெட்டு கோவிலில் இடம் பெறுவதற்கும் இந்த நூலகப் பொறுப்பாள பிராமணரே காரணம் என்பதை அறிஞர் புரிந்து எளிதில் கொள்வர்.

பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள் (பொ.ஆ. 300 – 1800), பக்.286. ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம். (ARIEp 1916 SL No 695).

தென்னார்காடு மாவட்டம் சிதம்பரம் நடராசர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் உள்ள சுப்பிரமணியர் கோவிலுக்கு வடக்கே வட கோபுரத்திற்கு அருகே உள்ள மண்டபத்தில் உள்ள 6 வரி சிதைந்த கல்வெட்டு.

1. ஸ்வஸ்தி ஸ்ரீ ஸரஸ்வதி பண்டாரத்துக்கு பல க்ரந்தங்கள் பார்க்கவும் எழுதவும் அவிழ்த்து…தேவர்…ஞானஸமுத்ரதேவர் … ற்ற … க்கு உள்வரி யெழுதிக் கொ[டு*]த் … ன திஸ்யாகத்துக்கும் வ்ய…ப்பிக்கவும் வாசிக்கவும் காரம்பிச் செட்டுச் சொக்கத் தே … ழகந்த . றத்து ஸுப்ரமண்யன்.  புளிங்குறுபட் … …

2.ருமாள். வங்கிப்புறத்து வினாயகபட்டன். காஞ்சிகுறி திருவெண்காவுடையா …பொத்தகங்கள் அவிழ் … … றை வித்யாபதி பட்டர்.  தி…சறை முதலியார். இந்…ற மங்க … …கோம[ட]த்து திருவானைக்காவுடையார். எழுதும் பேர்க்கு கோமடத்து மண்டலபுருசஷன்வங்கிபுறத்துத் திருநம் … ஆழ்வார்.

3.குரோவி திருவலஞ்சுழி உடையார்.வினாயகதேவர் நொரட்டூர் வெள்ளைப்பிள்ளை. காஞ்சி …நிர்த்தராஜன் ஆழ்வான். திருவல…கு குண்டூர்த் திருவம்பல … க்கன் …புராணத்துக்கு முப்ரால் பெரியதேவர். ஜோதிஷ ஸாஸ்த்ரத்துக்கு குரோவி ஆயத்[ராஜ]ன். ஆகப் பேர் இருபதுக்கு எழுதின ஏவற் தீட்டுப்படி அனைத்துலகுங் கொண்டருளிய … … ணி … ஒன் … னூற்று அறுவரும்.

4. வில்லவதரையன் ஓலை தென்னவன் ப்ரஹ்ம……க்ரம சோழ ப்ரஹ்மராயரும் ஜயதுங்கப் பல்லவரையரும் குருகுலத்தரையரும் உடையார் திருச்சிற்றம்பலமுடையார்…ண்காணி செய்வார்களும் … ஞ் செய்வார்களும் சாமுதாயஞ் செய்வார்களும் கோயில்னாயகஞ் செய்வார்களும் திருமாளிகைக்கூறு செய்வார்களும் பண்டாரப் பொத்தகமுடையார்களும் கணக்கரும் … [கண்]டுவிடு தந்ததாவது இரா[ஜாதிராஜ] … … மேல்பக்கத்து ஸரஸ்வதி பண்டாரத்துடனே

5. சேர தேவர் ஸு[வாமி]தேவர் செய்வித்த…ஸரஸ்வதி பண்டாரஞ் செய்விக்குமிடத்து முன்[பத்]தை ஸரஸ்வதி பண்டாரத்தில் எழுதிக்கிடக்கிற க்ரந்தங்கள் இப … … யச் ..[செ] … து இதுக் … ன்று போதுகிற பேர்ரிட்டும் முன்பு தேவை செய்து போதுகிறபடிகளிலே நின்று தேவை செய்து போதக்கடவார்களாகவும் இப்பண்டாரத்து …ங் … … ரிக க்ரந்தங்கள் …. க்ரந்தங்கள் இ…லெ இந்த க்ரந்தங்கள்

6. எழுதி சேர்க்கவேண்டுகையில் … … த்துடனே சேர் … கவு[ம்] வேண்டும் இடம்பெற வகுத்து … காணியே பண்டாரத்தி … ழுதின … … இருக்கு … னவும் இப்பண்டாரத்தில் இக் க்ரந்தங்கள் எழுத[ப்] பேர் பத்து முன்பத்தைப் பண்டாரத்தில் உள்ள க்ரந்தங்கள் தேஸா[ந்த்ர]ங்களினின்றும் … வி … க்கவும் இ … … டியாலே பண்டார … …1

 1continuation lost

க்ரந்தம் – நூல்; அவிழ்த்துக் கட்டு – ஏட்டைப் பிரித்துக் கட்டு; உள்வரி – அந்தராயம்; ஜோதிஷ – ஜோதிடம்; ஏவற் தீட்டு – ஆணை ஓலை; சாமுதாயம் செய்வார் – ஊர்ப் பொது நிர்வாகம் செய்பவர்; திருமாளிகைக்கூறு – கோயில் உட்புறமாக உள்ள கட்டடங்கள், மண்டபம், சுற்றுக் கோயில்கள் ஆகியனவற்றில் வேலை செய்து தம் பங்கைப் பெறும் அர்ச்சகர்; பொத்தகம் – நூலக வரிப் புத்தகம்; போதுகிறபடி – போகிறபடி; நின்று – இருந்து; தேசாந்திரம் – வெவ்வேறு இடம்.

விளக்கம்:  நூலகத்திற்கு பல நூல்களைப் பார்த்திடவும், எழுதிடவும், நூல்களைப் பிரித்துக் கட்டவும் ஞானசமுத்திர தேவர் எழுதிக் கொடுத்த உள்வரி விவரம் யாதெனில் திஸ்யாகம், வாசிப்பு ஆகியவற்றிற்காக சொக்கத் தே _ _ _ , சுப்ரமணியன், புளிங்குறு பட்டன், _ _ _ பெருமாள், வங்கிப்புறத்து வினாயக பட்டன், காஞ்சிக்குறி திருவெண்காவுடையான் ஆகியோரும் நூல்களைப் பிரித்துக் கட்ட _ _ றை வித்யாபதி பட்டர், தி_ _ _ சறை முதலியார், _ _ _, கோமடத்து திருவானக்காவுடையான் ஆகியோரும் ஏடுஎழுதும் பொறுப்பிற்கு கோமடத்து மண்டல புருஷன், வங்கிபுறத்து திருநம்_ _ _ஆழ்வான், குரோவி திருவலஞ்சுழி உடையார், _ _ வினாயக தேவர், நொரட்டூர் வெள்ளைப் பிள்ளை, காஞ்சி _ _ _ நிர்த்தராஜன் ஆழ்வான், திருவம்பல_ _க்கன் ஆகியோரும் _ _ _ புராணத்திற்கு முப்ரால் பெரியதேவர், ஜோதிடத்திற்கு குரோவி ஆயத்ராஜன் ஆகியோர் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆக இந்த இருபது பேருக்கு கையெழுத்திட்ட ஓலை ஆவணப்படி  அனைத்துலகுங் கொண்டருளிய (சடவர்மன் சுந்தர பாண்டியன் என உய்த்துணரப்பட்டுள்ளது) மேலும் தெளிவாக அறியமுடியாதபடி கல்வெட்டு சிதைந்துள்ளது.

வில்லவத்தரையன் விடுத்த ஓலைஆவணம் யாதெனில் தென்னவன் பிரம்ம_ _ _,  (வி)க்ரம சோழ பிரம்மராயரும், ஜயதுங்க பல்லவரையரும், குருகுலத்து அரையரும், உடையார் திருச்சிற்றபலமுடையார் (இறைவன் நடராஜன்) _ _ _ கங்காணி செய்பவர்களுக்கும், கோயில் நிர்வாகம் (ஸ்ரீகாரியம்) செய்பவர்களுக்கும், ஊர்ப் பொது நிர்வாகம் செய்பவர்களுக்கும், தமக்கான பங்கைப் பெறும் கோயில் உட்பிரிவு அர்ச்சகர்களுக்கும், நூலக வரிப்புத்தகம் பேணுபவருக்கும், கணக்கருக்கும் வழிகாட்டுதல் தந்தது யாதெனில் இராஜாதிராஜன் _ _ _ அமைந்த மேல்பக்கத்து நூலகத்துடன் சேர்த்து விரிவாக்கிடும் போது வேந்தரின் அரசகுரு எழுதிய நூல்களை நூலகத்தை ஏற்படுத்தும் போது முன்னம் நூலகத்தில் எழுதிவைத்துள்ள நூல்களோடு சேர்க்க வேண்டும்.

முன்னர் எவ்வாறு தேவையானவற்றை செய்து கொண்டு போகிறபடியிலேயே இருந்தனரோ அப்படியே இப்போதும் தேவையானவற்றை செய்யக் கடவார்களாக. இந்த நூல்களை எழுதிச் சேர்க்கின்ற போது அவற்றுடன் அரசகுருவின் நூல்களும் அதில் இடம்பெறச் செய்து (தெளிவில்லாதபடி சிதைந்துள்ளது). இந்த நூல் களஞ்சியத்தில் இந்நூல்களை எழுதப் பத்து பேரை அமர்த்தி முன்பு இருந்தது போல வெவ்வேறு இடங்களில் இருந்து நூல்களைக் கொண்டு வந்து இப்படியாக நூலகத்தை நடத்திச் செல்ல வேண்டும். (இதன் மேல் தொடர்ச்சி விடுபட்டுள்ளதால் கல்வெட்டின் முழு விவரத்தை அறிய முடியவில்லை).

பார்வை நூல்:  (A.R. B. 168 of 1961-62), இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை.

தென்னார்காடு மாவட்டம் சிதம்பரம் நடராசர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் உள்ள சுப்பிரமணியர் கோவிலுக்கு வடக்கே மேற்கு கோபுர அடுக்குகளுக்கு அருகே உள்ள மண்டபத்தில் உள்ள 8 வரி கல்வெட்டு. நடுப்பகுதி கட்டடத்தில் மறைந்துள்ளது.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ த்ரிபுவனச் சக்ர.. ருவையாறுடையானும் மதுராந்தக… …நும் ஆளுடையார் கோ… த் திருமாளிகைக்கூறு தில்லைஅம்பலப் பல்லவரையனும் ஸ்ரீகாரியஞ் செய்வார்க்ளும் ஸாமுதாயஞ் செய்வார்களும் கோயில்நாயகஞ் செய்வார்களும் திருமாளிகைக்கூறு செய்வார்களும் செய்யத் திருவாய்மொழி … கோயிலில் இராசா[தி]ரா… மாளிகை மேலைத் திருமாளிகையில் ஸுப்ரமண்யப் பிள்ளையார் எழுந்தருளி இருக்கிற இடத்துக்கு வடக்காக … … …

2. ச் செய்த ஸரஸ்வதி பண்… …உடையார் ஸ்வாமி தேவர் எழுதிவித்தனவாய்ப் புகுந்த பொத்தகங்களும் இவ் … [பெ] … ஸித்தாந்தாகரமும் உள்ளிட்டன எழுதின பொத்தகங்களும் நின்பை ஆட்கொண்டான் பட்டனும் கௌதமன் உய்யக் கொண்டான் பட்டனும் கோ … பட்டனும் தபஸ்ஸிவக …சம்பந்தன் …ணலூர் கிழவன் திருஞானசம்பந்தன் திருச்சிற்றம்பலமுடையானும் அவிழ்த்துக் கட்டவும் …ஜீர்ண்ணத்தவை …

3. எழுதவும் இவையும் ஆளுடை … ம் … ன் இலைச்சினை … ணிய … இவனும் புல்லூருடையா[ன்] திருநீலகண்டன் மெய்காப்பானாய் இ … பல .. கோக்கவும் இவர்களுக்குக் கொற்றுக்கும் புடவை முதலுக்கும் இவர்களில் நின்பை ஆட்கொண்டான் பட்டனுக்கும் கௌதமன் உய்யக் கொ…னுக்கு … … நாள் ஒன்றுக்கு நெல்லு தூணியும் ஆட்டைக்கு காசு நாலும் …லிக்கு… [உய்]யக்கொண்டான் பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு … பதக்கும் ஆட்

4. ட்டைக்கு காசு இரண்டும் அலஞ்… …டைவானுக்கும் பேர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுத் தூணியும் ஆட்டைக்குக் காசு நாலும் இராமபட்டனுக்கு நாள். ஒன்றுக்கு நெல் முக்குறுணி நானாழியும் ஆட்டைக்குக் காசு மூன்றரையும் புல்லூருடையான் திருநீலகண்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுப் பதக்கு நானாழியும் … … க வந்த நெல்லுங் காசும் பெறவும் பெறுமிடத்து உடையார் த்ரிபு[வன] வீரஈஸ்வரமுடையார் கோயில் திருமலையில் [பெ]ரிய நாயனாரையும் நாச்-

5. சியாரையும் எழுந்தரு[ளுவி]த்த வி…[ள] நாட்டு [வடநா]லூரான குலோத்துங்க சோழ அரசூர் நிலம் இருபத்தெழே இரண்டுமா அரைக்காணி முந்திரிகையும் இறையிலியாய் வருகிறபடி தவிர்ந்து பழம்படியே காணியாய் விஸ்வாதிகவிவேக மங்கலமென்னும் பேராகவும் இன்நிலம் ஆளுடையார்க்கு அந்தரா … தேவதான இறையிலியாக இடவும் இன்னிலத்துக்கு முன்பு முதல் … ண்டு வருகிறபடியே எண்ணூற்றொருபதின் கல நெல்லு கொண்ட முதலும் இன் நெல்லில் மூன்று.

6. கூறிட்ட ஒரு கூற்றில்… …றவும் திருநாள் … க்கங்களில் இ … கரி … ப் பெறவும் இப்படி … இத்திருமாளிகையி[ல்] ஸுப்ரமண்யப் பிள்ளையார் … உடைப்பற்றக் கல்வெட்டவும் விக்கிரமசோழன் திருமாளிகைத் திருக்கை ஒட்டியில் க்ரந்தங்களிலும் தமிழ்களிலும் எழுதவேண்டுவன இவர்களில் வேண்டுவார் [பு]க்கு எழுதி ஒக்கப் பார்த்து இவை இ ஸரஸ்வதி பண்டாரத்துக்கும் கோயிலில் திருக்கை ஒட்டிக்கு முதலாக ஒடுக்கவும் செய்யக் கடவதாக வே[ண்டு]மென்று … …  ஸ்வாமிதேவர்

7. செய்தமையில் இப்படிக்…ம் இப்படி செய்யவும் ஆரி[யன்] இராமபட்டன் …றை கைத் தீ … ளுக்குள்ளும் புகக்கடவனாகவும் பண்ணுவது எழுதினான் தி …

ராஜெந்த்ர தே.. ….வேளான் என்றும் இப்படி திருவாய் மொழிந்தருளினார் … … இவை வீராடராய னெழுத்தென்றும் [சீ]த்தாராயனெழுத்தென்றும் இவை விசயராய னெழுத்தென்றும் இவை அங்கராய னெழுத்தென்றும் இவை தொண்டைமா னெழுத்தென்றும் ப்ரஸாத –

8. ஞ் செய்தருளின செய்யும்படி கல்வெட்… …1

 1 Build in (புதிய கட்டடம் மறைத்துள்ளது)

திருக்கை ஓட்டி – கோயிலில் திருமுறை ஓதுவார் மண்டபம்; சுவாமி தேவர் – அரச குரு; புகுந்த – வந்த; ஒக்க பார்த்து – ஒப்பிட்டு பார்த்து; கொற்று – தவசமாக பெறும் கூலி, daily wages received as grains; தீட்டு – எழுதிக் கொடுத்த ஓலை; பண்டாரக் கண்காணி – நூலக அதிகாரி; புடவை – ஆடை, துணி; சாமுதாயம் செய்வார் – ஊர்ப்பொது நிர்வாகம் செய்வார்; பிரசாதம் செய்தருளினபடி – அரசாணைப்படி; ஜீர்ண்ண – அழிந்து, சிதைந்த

விளக்கம்:  திரிபுவனச் சக்கரவத்திகள் எனத் தொடங்கி கல்வெட்டு சிதைந்துள்ளதால் வேந்தனின் பெயர், ஆட்சி ஆண்டு அறியமுடிவில்லை. திருவையாறுடையனும் மதுராந்தக_ _நும், ஆளுடையார் கோமடத் திருமாளிகைக்கூறு தில்லை அம்பலப் பல்லவரைனும், கோயில் திருப்பணி செய்பவரும், ஊர்ப்பொது நிர்வாகம் செய்பவரும், கோயில் தலைமை ஏற்றிருப்பவரும், தமக்கான பங்கைப் பெறும் கோயில் உட்பிரிவு அர்ச்சகர்களுக்கும், கோயிலில் இராசாதிராசன் மாளிகை அமைந்த மேற்கு திருமாளிகையில் சுப்பிரமணிய பிள்ளையார் கோயில் இருக்கிற இடத்திற்கு வடக்காக ஏற்படுத்திய நூலகத்தில் வேந்தரின் அரசகுருவானவர் எழுதியது என்று வந்து சேர்ந்த நூல்களும், இவ்வாறு வந்து சேர்ந்த நூல்களில் சித்தாந்தாகாரம் உள்ளிட்டவையான நூல்களை நின்பை ஆட்கொண்டான்  பட்டனும், கௌதமன் உய்யக் கொண்டான் பட்டனும், கோ_ _ _ பட்டனும், தபஸ்ஸிவக _ _ சம்பந்தன், _ _ ணலூர் கிழவன் திருஞானசம்பந்தன் திருச்சிற்றப்பலமுடையான் ஆகியோர் பிரித்துக் கட்டுவதற்கும் அழிந்து சிதைந்த நூல்களை  எழுதுவதற்கும் அத்தோடு ஆளுடை_ _ _ம், இலைச்சினை_ _ _ ணியன், புல்லூருடையான் திருநீலகண்டன் நூலகத்திற்கு மெய்க்காப்பானாய் இருந்து பல நூல்களை கோர்க்க வேண்டும், இவர்களுடைய தவசக் கூலிக்கும், ஆடை முதலுக்கும் செய்யவேண்டியது யாதெனில் இவருள் நின்பை ஆட்கொண்டான் பட்டனுக்கும் கௌதமன் உய்யக் கொண்டானுக்கும் நாள் ஒன்றுக்கு தூணி அளவு நெல்லும் ஆண்டிற்கு நாலு காசும், உய்யக் கொண்டான் பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் பதக்கு அளவும் ஆண்டிற்கு காசு இரண்டும் பெறக்கடவதாக.

_ _ _ ஆள் ஒருவர்க்கு நாள் ஒன்றுக்கு தூணி அளவு நெல்லும் ஆண்டிற்கு நாலு காசும் தரவேண்டும். இராம பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு முக்குறுணி நானாழி நெல்லும் ஆண்டிற்கு காசு மூன்றரையும் தரப்படவேண்டும். புல்லூருடையான் திருநீலகண்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் பதக்கு நானாழி தரப்படவேண்டும். _ _ _ வந்த நெல்லையும் காசையும் பெற்று அப்படி வந்தவற்றை உடையார் திரிபுவன வீர ஈசுவரமுடையார் கோயில் இறைவனையும் இறைவியையும் எழுந்தருளச் செய்து வி_ _ளநாட்டு வடநாலூரான குலோத்துங்க சோழ அரசூர் நிலம் இருபத்தேழே இரண்டுமா அரைக்காணி முந்திரிகையும் இறையிலியாக வருவதை கருத்தில் கொள்ளாமல் தவிர்த்து பழையபடியே காணியாய் விஸ்வாதிகவிவேக மங்கலமென்னும் பெயராலேயே இந்நிலம் இறைவர்க்கு அந்தராயமாக தேவதான இறையிலியாக கொடுக்க இன்னிலத்திற்கு முன்னம் வருகிறபடியே 810 கல நெல்லைப் பெறும் போது இதில் மூன்றில் ஒரு பங்கை _ _ _. கோயிலில் சுப்பிரமணிய பிள்ளையார் உரிமை பெற கல்வெட்டாக வெட்டுவதற்கும் விக்கிரம சோழன் திருமாளிகையில் அமைந்த திருமறை ஓதுவார் மண்டபத்தில் சமஸ்கிருத நூல்களிலிருந்தும் தமிழ் விளக்க நூல்களிருந்தும் எழுத வேண்டியவற்றை எழுதக்கொள்ள விரும்புவோர் வந்து எழுதிக்கொள்ள, ஒத்துப் பார்த்து படியெடுக்க நூலகத்திற்கும் கோயில் திருமுறை ஓதுவார் மண்டபத்திற்கும் முதலாக கட்டணம் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசகுரு முன்ஏற்பாடு செய்ததால் அதன்படியே செய்ய ஆரியன் இராம பட்டனுக்கு ஆணைஓலை எழுதினான் இராசேந்திர தேவ வேளான். இதை வழிமொழிந்தார் _ _ _. இவை விராடராயன், சீத்தாராயன், விசயராயன், அங்கராயன், தொண்டைமான் ஆகியோரால் அரசாணைப்படுத்தியபடியே செய்யுமாறு கல்வெட்டு வடிக்கக்கடவது.

பார்வை நூல்:  (A.R. B. 169 of 1961-62), இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை.

சிதம்பரம் கோவில் இரு கல்வெட்டுகளின் மைப்படியை தந்த இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் மைசூர்க் கிளை தொல்லெழுத் துறைக்கும், கல்வெட்டை படித்து சரிபார்த்துத் தந்த திரு. இராஜகோபால் சுப்பையாவிற்கும் நன்றிகள் பல.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சரசுவதி பண்டாரம் எனும் நூலகம்

  1. இத்தகு நூகலகங்கள் பற்றிய கல்வெட்டுகள் சில ஊர்களில் மட்டும் காணக் கிட்டினாலும் பிடாகை அல்லாத பேரூர்கள் யாவற்றிலும் இத்தகு நூலகங்கள் இருந்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது. அப்படியானால் கோவில் என்ற நிறுவனம் பல்வினைக் களமாகவே முடியாட்சிக் காலத்தில் விளங்கி உள்ளது. இன்று ஒரு அர்ச்சகர், ஒரு மடைபள்ளி ஊழியர் என்ற அளவில் சுருங்கி விட்ட கோவிலில் 300 ஆண்டுகள் முன்னம் வரை 30-40 பிராமணர் வேலை செய்தனர் என்றால் அது பிராமணரின் உழைப்பால் ஆகக்கூடியதா? அல்லவே அல்ல மாறாக அதிகாரமும், படைவலுவும், செல்வ வளமும் உள்ள வேந்தர், மன்னர், அரையர் (அரசர்), கிழார் எனும் ஆட்சியாளரால் மட்டுமே இத்தகு கோவில் அமைப்பை நிறுவி நிலைநிறுத்த முடியும். ஆக வருணாசிரமத்தில் விப்ரர் என்ற பிராமண அடுக்கை பிராமணராலேயே கட்டி அமைக்க முடியாது என்று தெளிவாகின்றது. அது ஆட்சி அதிகாரத்தில் உள்ளோரால் தான் கட்டமைக்கப்பட்டது என்பதற்கு இந்த சரசுவதி பண்டாரக் கல்வெட்டுகள் விளக்கம் மற்றும் ஒரு சான்றாகின்றது. ஆனால் பகுத்தறிவு பேசி மக்களை முட்டாளாக்கும் அறிவிலிகள் பிராமணர் தான் வருணாசிரமத்தை உருவாக்கி சமூகத்தில் வேற்றுமையை, ஏற்றத் தாழ்வை விதைத்தனர் என்கின்றனரே!!! தம்முடைய பிராமணக் கட்டமைப்பையே பிராமணரால் கட்டி அமைக்க முடியாத போது பிராமணரால் பெரும்படையை கட்டமைத்து சத்திரியர் என்ற பிரிவை எப்படி கட்டி அமைக்க முடியுமா? அதுவும் ஆட்சியாளரால் கட்டமைக்கப்பட்டதன்றோ? நிலக்கிழமை, வணிகம் ஆகியவற்றில் அடங்கும் வருணாசிரம அமைப்பான வணிகர் பிராமணர் தொடர்பு இன்றி தனித்து செயற்படுபவர். இதையும் பிராமணர் கட்டமைக்க முடியாது, ஆட்சியாளர் தான் இந்த வணிகர் என்ற வருணாசிரமக் கட்டமைப்பையும் கட்டுப்படுத்தினர் என்பது தெளிவு. கூலிக்கு பொருள் செய்து தருவோர் சூத்திரர் என அறிவிக்கப்பட்டனர். இவர்களும் ஆட்சியாளரால் கட்டுப்படுத்தனப்பட்டனரே அன்றி பிராமணரால் கட்டுப்படுத்தப்படவில்லை. பின் எப்படி பிராமணர் தான் வருணாசிரமத்தை கட்டமைத்து ஏற்றத் தாழ்வை சமூகத்தில் விதைத்தினர் என்று இந்த உலகையே ஏமாற்றுகின்றனர் இந்த பகுத்தறிவு அறிவிலிகள்?

    இந்த உண்மையை வெளிப்படுத்தவே நான் இந்த கல்வெட்டுக் களஞ்சியத்தை பிராயலானேன் என்பதை நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ளவேண்டுமோ அறிஞர். வாழ்க அறிஞர் உலகம். இனியாவது இந்த உலகம் பகுத்தறிவு ஏமாற்றுக்காரர்களின் பொய்யுரைகளைத் தூக்கி எறியட்டும்.

    உண்மையாகவே வருணாசிரம உருவாக்கத்திற்கு பொறுப்பாக்கப்பட வேண்டியவர் யார் என்றால்? இந்த ஆட்சியாளர் எல்லாம் தம் சாதிமார் என்று உரிமை கொண்டாடும் “யாம் ஆண்ட பரம்பரையோம், ஆளப் பிறந்தோம், அடக்கி ஆண்டோம், மண் ஆண்டோம், பார் ஆண்டோம்” என்று சொல்லிக் கொள்ளும் சாதிமார் தானே? ஆனால் இவர்கள் தாம் இந்த வருணாசிரமம் பிராமணரால் கட்டமைக்கப்பட்டது என்று பிதற்றுகின்றனர். பகுத்தறிவாள அறிவிலிகள் பெரும்பாலார் இந்த ஆண்ட பரம்பரை கும்பலை சேர்ந்தவர் என்பது தான் வியப்பிலும் வியப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *