முதல் வரிசை!

ஜெ.ராஜ்குமார்

உன்னைத் தூக்கினேன் – என்

மார்பை மிதித்தாய்!

உன்னைத் தூங்க வைத்தேன் – என்

மார்பை அணைத்தாய்!

உனக்குச் சோறூட்டினேன் – என்

இடையில் அமர்ந்தாய்!

உனக்கு நடக்கக் கற்றுக் கொடுத்தேன் – என்

கைவிரல் பிடித்தாய்!

உனக்குப் பிடித்ததை வாங்கித் தந்தேன் – என்

கன்னத்தில் முத்தமிட்டாய்!

உனக்குக் கால் கழுவி விட்டேன் – என்

கால்களில் குப்புறப் படுத்தாய்!

 

உன் ஒவ்வொரு அழுகையிலும் – புதுப் புதுத்

தாலாட்டு படைத்தேன்!

உன் ஒவ்வொரு சிரிப்பிலும் – என்

வயதைக் குறைத்தேன்!

 

இப்பொழுது நினைக்கிறேன் – நீ

குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று…!

இந்த முதியோர் இல்லத்தில் – என் பெயர்

சேர்க்க 

முதல் வரிசையில் நீ முதலில் நிற்பதைக் கண்டு…!  

 

படத்திற்கு நன்றி: http://blogs.oracle.com/vasanth/entry/sun_s_worldwide_volunteer_week

ராஜ்குமார் ஜெயராமன்

ராஜ்குமார் ஜெயராமன்

கணினி பொறியியல் வல்லுநர்.
மணிமேகலை பிரசுரம் மூலம் “முழுமையான பெண் நீ” மற்றும் “மனிதர்களின் வாழ்க்கையையும் படிப்போம்” போன்ற இரண்டு கவிதை புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

Share

One Comment on “முதல் வரிசை!”

  • sankaranarayanan balasubramanian wrote on 15 December, 2011, 9:37

    நிகழ்கால நிஜத்தை கவிதையாக திரு.ராஜ்குமார் அவர்கள் வடித்திருப்பது அருமையாக இருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டுமென்றால்,பெற்றவர்களுக்கு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து செயல்படுவதை போல, தன்னை வளர்த்த பிள்ளைகளும் தங்கள் பெற்றோர்களை கடைசி காலத்தில் நன்கு கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.அப்படி எண்ணம் இல்லாத பிள்ளைகளினால்தான் ஒரு புறம் முதியோர் இல்லங்கள் உருவாகின்றன என்பது உண்மையென்றாலும், பெரியவர்களான முதியோர்களும் தங்களது இளவயது வாத ப்டிவாதங்களை விட்டு கொடுத்துவிட்டு,குடும்ப பொறுப்புக்களை பிள்ளைகளிடம் பகிர்ந்துகொடுத்து அவர்களுக்கு முக்கியத்துவம் வருமாறு நடந்து கொள்வதுடன், வீடுகளை அன்றாட நிகழ்வுகளில் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொண்டு செல்ல வேண்டும் என்பதும் தெளிவான உண்மை. காலையில் பள்ளிக்கு/ வேலைக்கு செல்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் சென்ற பின் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வது போன்ற வகையிலாவது வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்களின் சூழ்நிலையினை அறிந்து கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொண்டு போகும் முதியோர்கள் கண்டிப்பாக முதியோர் இல்லம் போகாமல் இருக்க முடியும். விட்டுகொடுக்கும் எண்ணம் வயதான காலத்திலும் தொடரவேண்டும் முதியோர்களுக்கு…..!

Write a Comment [மறுமொழி இடவும்]


+ 8 = 12


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.