Author: சந்தர் சுப்ரமணியன்

  • குயில் பாட்டின் நயம்

    -சந்தர் சுப்ரமணியன்

    பண்ணிசைப் பரப்பி எங்கும் பலவுயிர் சிலிர்க்கச் செய்து
    வண்டமிழ் ஒலிக்கும் பேடை வனமமர் குயிலின் நீலக்
    கண்களில் காதல் கண்டான், கண்டதைக் கவியாய்த் தந்தான்;
    உண்டதேன் உரைப்பேன் இங்கே உளத்திடை ஊறு மட்டும் (1)

    பாவலர் கண்கள் என்றும் பார்த்திடும் அகத்தின் தோற்றம்
    பூவளர் பொழுதும், பொன்னார் பொழுதது புலரும் போதும்,
    தூவிடும் மழையின் தோற்றம், தொலைவுள நிலவும், யாவும்
    பாவளர் கருவாய் ஆகிப் பாட்டுடை பொருளாய் மாறும் (2)

    தேடலும் தேடும் இன்பத் தீதரும் சுகமும் கண்டென்?kuyil0
    கூடடை உயிரும் நீங்கும் கூற்றுவன் அருகும் வேளை;
    வேடவன் வாரா நாளே விருந்தெனும் பறவை என்று
    பாடலில் புலவன் சொன்னப் பாங்கது புதுமை அன்றோ (3)

    ஓடிடும் மனத்தின் எண்ணம் ஒருமுகப் படுமவ் வேளை
    பாடகன் கனவில் நெஞ்சம் பளிச்செனப் படமொன் றேர்க்கும்
    தேடிய கவிதை யங்கே தெரிந்திடும்; வரியாய்ச் சொற்கள்
    கூடிடக் கருத்தின் ஊற்றாய்க் கொள்ளெனக் கவியா(று) ஓடும் (4)

    பேசிடுங் குயிலைக் கூட பெருங்கவி பார்க்கக் கூடும்;
    ஓசையோ டுறவு கொண்டே உளத்தினை யிழக்கக் கூடும்;
    ஆசையாய்க் குயிற்பால் காதல் அடைந்திடும் மனிதன் மெல்ல
    ஊசியோ டோடும் நூற்போல் உலவுவான் கனவின் ஊடே (5)

    காதலில் வெற்றி ஒன்றே காதலர் உயிர்ப்பென் றாகும்;kuyil1
    சாதலே நன்றாம் வெற்றி சாத்தியம் இலாத போழ்து;
    நாதமாய் ஒலிக்கும் காதல் நலிந்திடும் வேளை நெஞ்சில்
    சேதமே, கவிஞன் நன்றாய்த் தெளிந்திதைப் பாவாய்த் தந்தான் (6)

    ஓசையில் விதங்கள் உண்டோ? ஒன்றிலை கோடி யென்றான்
    பேசிடும் மொழியும், கானில் புள்ளதன் ஒலியும், பெண்டிர்
    மூசிடும் அளிகம் போலே மொழிந்திடும் போதும், கையில்
    நேசமாய் வளையல் என்றாய் நிகழ்வுகள் எதிலும் ஓமே (7)

    காதலை வேண்டிப் பேடை கரைதலும், இல்லை யாயின்
    சாதலே சரியாம் என்றே தவிப்பதும், சிந்தை சேர
    வேதனை உயிருள் ஊறி உளத்தினை உழற்றப் பேடைப்
    போதலை மனிதன் கண்டே பொருள்தெரி யாது நின்றான் (8)

    சத்தியைத் தந்தான், தானே தந்துணை தேடு மாறு
    வித்தையை விரைந்து கற்க வினையினை உளத்தில் வைத்தான்;
    சித்தமும் செயலும் நெஞ்சின் சிந்தனை தன்பால் ஈர்க்கும்
    தத்துவம் இதையே இப்பா தந்திடும் எனக்கொள் வோமா? (9)

    பொம்மையாய்ப் பொழுதைப் போக்கும் பொய்வழிப் போதை மாயை;
    சும்மையாய் உடலம், சோகம் சொட்டிடும் கண்ணில் நீராய்;
    வெம்மையும் குளிரும் ஒன்றே, விளைவுகள் காணும் மாற்றம்;
    இம்மொழி உவமை யாக இயன்றிடும் பாடல் ஈதோ? (10)

    வந்தது மறுநாள், அன்று வனத்திடை குயிலைத் தேடி
    முந்தைய மரத்தைப் பார்த்தான், வரவிலை, வேறோர் கொம்பின்
    சந்தியில் கண்டான், அந்தோ! தனித்திலை, குரங்கி னோடே;
    நொந்தவன் நொடியில் நெஞ்சும் நொடிந்திடும் நிலைமை உற்றான் (11)

    வாலுடை வான ரத்தை வாஞ்சையோ டடையும் பேடை;
    ஓலமே உளத்துள் ஓங்க ஓடினான் வீட்டைத் தேடி;
    காலமாய்ப் போனான், கண்கள் கருத்திட மூர்ச்சை யாகி
    நாலுபேர் அவனைச் சூழும் நிலையினில் மனிதன் வீழ்ந்தான் (12)

    பார்ப்பது குயிலா? இல்லை, பரமதே, ஆன்ம ரூபம்;
    சேர்ந்திடும், சிலநாள் தங்கும், திகைத்திட வைத்துப் பின்னர்
    சார்ந்திடும் உடலம் விட்டுத் தாவிடும், பிறிதோர் கூட்டைத்
    தேர்ந்திடும்; நிலைத்து நீங்கும் தெய்வதம் இதுவே ஆகும் (13)

    என்புடை உடலம் என்றும் இப்புவி மண்ணில் தங்கும்;
    அன்புடை உயிரே என்றும் அலைந்திடும் ஆன்மம் ஆகும்
    சென்றிடும் மேலும் கீழும் செலவொடு வரவு மாக;
    இந்நெறி ஒன்றை யன்றோ இயன்றிடும் இப்பா என்றும்? (14)

    நீண்டிடும் இரவ டுத்து நினைவினில் மூன்றாம் நாளாம்;
    காண்கையில் மிரண்டு நின்றான், காளையும் குயிலும் ஒன்றாய்;
    வேண்டியே நெஞ்சின் காதல் விளக்கிடும் குயிலின் பேச்சைத்
    தாண்டியும் போக ஒண்ணாத் தவிப்பினில் தானு றைந்தான் (15)

    ஆவியை உருக்கிப் பொன்னாய் அதனுடன் உடலம் சேர்க்கக்
    கூவிடும் குழந்தை ஒன்றைக் குவலயம் பிறப்பாய்க் காணும்;
    மேவிடும் உலக வாழ்வில் மெய்யது பொய்யே ஆகும்;
    தேவனின் விளையாட் டொன்றின் செயற்பலன் பிறப்பென் றாகும் (16)

    தொல்லைகள் தொடரும் வாழ்வில், தொலைந்திடும் ஓர்நாள்; பின்னர்,
    இல்லையென் றான போழ்தில் இருட்டினில் ஒடுங்கி ஓய்வோம்;
    முல்லையாய்ப் பொழுதும் பூக்கும், முனைந்துநாம் பிறப்போம் மீண்டும்;
    அல்லுடன் பகலு மாக அடுத்தடுத் தமையும் வாழ்க்கை (17)

    வந்தது நான்காம் நாளும், வருகையில் குயிலும் மெல்ல
    முந்தைய வாழ்வைப் பற்றி மொழிந்தது மனிதன் காதில்;
    விந்தைதான், காதல் வெப்பில் உருகியே குறைகள் நீங்கும்;
    சிந்தையில் சேர்தல் ஒன்றே தேவையென் றாகிப் போகும் (18)

    நான்கெனும் கணக்கேன் தேவை? நம்மனம் நினைத்துப் பார்க்கும்;
    நான்முறை வருணம் தன்னை நயமுடன் சொல்கின் றானோ?
    வான்மணின் ஊடே ஓடி வாழ்ந்திடும் வாழ்வும் நான்கோ?
    ஏன், மனத் தோற்றம் கூட இருப்பது நான்காய்த் தானே? (19)

    ஆய்ந்திடின் கோடி உண்மை அளித்திடும் குயிலின் பாட்டு;
    தோய்தமிழ்ச் சான்றோர் என்பா சொலும்பிழை பொறுக்க வேண்டும்;
    பாய்மரம் காற்றின் போக்கில் பாய்ந்திடும் அன்றோ? அஃதாய்
    சேய்கவி என்றன் எண்ணம் சென்றவா றெழுந்த திப்பா (20)

     

    Share
  • கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்

    சந்தர் சுப்ரமணியன்

    images (7)

    அவருக்குள் தமிழ்மணக்கும், அறிந்தே முன்னர்
    அன்னைபெயர் புட்பமென அமைந்த தாமோ?
    குவளைக்குள் பூகம்பம்! கொடையாய்ச் செந்தீ!
    கொடுங்காலூர் வரையெழுந்து கொதித்த செந்நா!
    திவளைக்குள் பொறியேற்றுத் தீயைச் சேர்த்துத்
    திரையாக்கிச் செந்தமிழாய்த் தெறிக்கும் தாரா!
    இவருக்கோர் கவிமலரை இயற்றி வந்தேன்!
    இவரெழுத்தை என்குரலில் இயம்பு கின்றேன்! (1)

    காவியங்கள் பாடவில்லை; காதல் என்னும்
    கற்பனைக்குள் கரையவில்லை; கானல் நீரைத்
    தூவிநஞ்சை வளர்க்கவில்லை; சொல்லால் பொய்யைத்
    தொடுத்தளிக்கும் கவிதையில்லை; சொகுசு வாழ்க்கை
    மேவுதற்காய் மாறவில்லை; மேன்மை கொன்று
    மேனிலையை அடையவில்லை; மேடை வேண்டிப்
    பாவையெங்கும் பாடவில்லை; பசப்புச் சொற்கள்
    பகன்றுநிற்கும் பழக்கமில்லை; பகட்டு மில்லை! (2)

    பாடுகின்ற பழக்கமுண்டு; பாட்டில் கீழோர்ப்
    பாடுகளைப் பகர்வதுண்டு; பழமை எண்ணம்
    சாடுகின்ற வழக்கமுண்டு; சாதிப் பூசல்
    தனையெதிர்க்கும் நெஞ்சமுண்டு; சமத்து வத்தைத்
    தேடுகின்ற தாகமுண்டு; சிறப்பாய்ப் பெண்டிர்
    சேமமுறச் சிந்தையுண்டு; செயலில் தூய்மை
    நாடுகின்ற நேர்மையுண்டு; நலிந்தோர் வாழ்வில்
    நலம்சேர விழைவதுண்டு; நியாயம் உண்டு! (3)

    துண்டமிலாச் சமுதாயம் தொடங்க வேண்டி,
    செந்தமிழா! ஒருவார்த்தை செப்பிச் சென்றார்!
    கண்டதெலாம் அறிவியலால் கணக்கால் ஆயக்
    கைப்பிடிக்குள் அடங்குமவை காண்போம்; வான
    மண்டலமும் விரலசைவில் நடக்கும்! பூவாய்
    மாரியும்நம் குரல்கேட்டுச் சுரக்கும்! இங்கே
    விண்டதெலாம் விளைவிக்கும் வேகம் கொண்டால்
    விடிகின்ற வேளைவரும்! விரைக வென்றார்! (4)

    அல்லுலகை ஆள்கின்ற அந்தப் போதில்
    ஆதவன்காண் கிழக்கிந்த அன்னை பூமி!
    புல்வெளியைப் பூக்காடாய்ப் புதுக்கி எங்கும்
    புன்னகையைப் புழங்கவிட்ட புதுமை தேசம்!
    சொல்லுலவுங் கவிபடைத்துச் சொந்த நாட்டின்
    தூய்நெறியைத் தீந்தமிழால் சொல்லிச் செல்வோர்
    நல்லுலகில் அன்றமைந்த நாற்றங் காலாய்
    நடைபயின்ற பாரதத்தை நயந்து நின்றார்! (5)

    சேய்மையதும் அண்மையதும் தொலைந்தே ஒன்று
    செய்வினையைச் செயப்பாட்டு வினையைச் செய்தார்!
    தாய்மையெனத் தமிழ்மொழியின் தன்மை தன்னைத்
    தமதாக்கி முன்னிலையில் படர்க வென்றார்!
    ஆய்தம்போல் தனிநிலையை அடையச் செய்ய
    அகச்சுட்டு புறச்சுட்டென் றறிவைச் சுட்டி
    வாய்மையெனும் ஒன்றன்பால் வளர்க என்றார்!
    மற்றெவையும் பயனிலைதான் எழுவாய் என்றார்! (6)

    சாதியெனும் அமைப்புகளேன்? சங்கம் வைத்துச்
    சந்தையென மனிதரையேன் தரம் பிரித்தாய்?
    போதைநிலைப் பொய்க்கணக்கின் போக்கில் இன்று
    பொதுநிலையே மனக்கணக்காய் போன திங்கு!
    தீதெனினும் தொடர்கின்ற தீயாய்ச் சாதி!
    தேசத்தின் கறையிவைதான்! தெரிந்தி வற்றை
    வீதியிலே தூக்கியெறி! மெய்யாய் நல்ல
    வேள்விக்கோர் தேதிகுறி! விடியும் என்றார்! (7)

    மண்புழுவாய்ப் பிறந்திருந்தால் மண்ணைத் தின்னும்
    மந்திரம்தான் தெரிந்திருக்கும்; மனிதர்க் கெங்கே?
    எண்ணளவில் அதிகரிக்கும் ஏழை மக்கள்!
    இதைத்தானா சுதந்திரத்தின் ஏற்றம் என்றோம்?
    கண்ணெதிரே தெருவிலிவர்! காசு கொண்டோர்
    காலமாயும் காணிநிலம் காண்பர்!; ஆயுள்
    தண்டனைதான் பசியிவர்க்கு! சனத்தில் பாதி
    தவித்திருக்கப் பாரதமோர் ஏழைச் சந்தை! (8)

    பொய்யுரையை முதலீடாய்ப் போட்டு நாட்டின்
    பொதுசனத்தை விற்கின்ற புதிய சாதி!
    கையிரண்டு போதாது கயமைக் கென்றே
    கைந்நூறு வேண்டிவிழும் கடவுள் தாளில்!
    மெய்ந்நெறியை மறைத்துயர்தல் மேன்மை என்ற
    ‘மெய்ப்பொருளை’ அரசியலாய் விற்கும் கூட்டம்!
    செய்கையிலே தன்மானம் சிதைத்தோர் தம்மைச்
    சேர்த்தீன்ற கருப்பையும் சினந்து நாணும்! (9)

    வெறுங்கரங்கள் என்செய்யும்? வினவு வோர்க்கு,
    விரல்பத்தும் மூலதனம்! விளங்க வேண்டும்!
    நொறுங்கட்டும் மதிமயக்கும் நோயாம் சோம்பல்!
    நோகாமல் இலக்கடையும் நுட்பம் இல்லை!
    சிறுங்கற்கள் சேர்ந்தெழுந்த சிகரம் போலே
    சிந்தனைகள் சேருமெனின் தெரியும் வெற்றி!
    குறுஞ்செயல்கள் நமையாங்கே கொண்டு செல்லும்!
    கொண்டசெயல் வேலையல்ல வேள்வி என்றார்! (10)

    மண்ணதற்குள் அழிந்தொழியும் மனிதம் என்னும்
    மறைகின்ற இலக்கணத்தை மாற்றிக் காட்டு!
    திண்மையினைக் கொண்டுயர்ந்த திறனால் என்றும்
    திரும்பாத சரித்திரத்தில் திளைத்து வாழ்நீ!
    உண்மையிதே! உன்னளவில் உயர்வு வேண்டி
    உடைமைதேடி உலகுழல்தல் உயர்வே அன்று!
    திண்ணைதனை இடித்தங்கோர் தெருவை ஆக்கு!
    தெருவாங்கே விரியுமதில் தேசம் காண்பாய்! (11)

    பள்ளத்து மண்புழுவைப் பாம்பாய் மாற்றிப்
    படமெடுக்க வைக்குமவர் பாக்கள்! பூக்கள்
    அள்ளித்தான் அவர்தெளித்தார்! அனைத்தும் தீமை
    அழிப்பதற்காய்த் தீயுமிழும் நாக்கள்! தீக்குள்
    தெள்ளுந்தேன் அவர்கவிதை! தெறிக்கும் போதே
    சிந்தனையின் சுடரேற்றும் தீக்கள்! மக்கள்
    உள்ளத்தை உலுக்கும்பொய் உதறச் செய்தே
    உயர்வுக்காய் வழிகாட்டும் ஊக்கப் பூப்பே! (12)

    அண்ணல்கை வில்லதுவே அன்னை சீதை
    அகமெரிக்கும் விறகெனவாய் ஆன தின்று!
    கண்ணீரில் சீதனங்கள் கடத்தி வந்து
    கல்யாணச் சிறைபுகுந்த கைதி பெண்டிர்!
    மண்ணெண்ணெய் விளக்கெரிக்கும் வழக்கம் எல்லாம்
    மாண்டுவிட்ட கதையாகி மறைந்த நாளில்
    பெண்ணெண்ணெய் எரிக்கின்ற பேய்கள் கூட்டம்!
    பெயருக்காய்த் திருமணங்கள்! பிணமாய்ப் பெண்மை! (13)

    தெருவளைவின் சந்தையதில் தேர்ந்து வாங்க
    தெருப்பொருளா கால்நடையா தையல் இன்னும்?
    பொருளளித்துப் பொருள்பெறுதல் பொதுவில் மெய்ம்மை!
    பொருள்கொடுத்துப் பெண்கொடுக்கும் பொய்ம்மை தீமை!
    கருவறைக்குள் போற்றுன்றன் கருணை தன்னை!
    கயவரெனின் காட்டுன்றன் கண்ணில் தீயை!
    புருவமிலை மீசையது! புலியாய் மாறு!
    புதியகீதை பாடுலகைப் புரட்டிப் போடு! (14)

    பேரிருளில் தீச்சுடராய்ப் பொலிந்து நன்மை
    புரிகின்ற பிறப்பதுவே பெண்மை! உண்மை!
    ஈரமிலா இயல்பேற்ற இரும்புத் தன்மை,
    இதயத்தில் நல்லெண்ண மின்மை வன்மை!
    பாரதனில் மங்கையரின் பங்கு தம்மைப்
    பாடலினால் அவர்விரித்தார்! பன்மை மென்மை
    சேருமெனில் தோள்புடைக்கச் சேரும் திண்மை!
    செந்தமிழில் தெரிவித்தார் தெண்மை! நுண்மை! (15)

    வேருக்கு நீருழவன் விடுவ தாலே
    விளைவிங்கே வருகிறது! விழலே நாமும்!
    பாருக்குள் தெய்வதத்தைப் பாராப் போதும்
    பயிரெல்லாம் அவன்சிரிப்பைப் படைத்து நிற்பான்!
    ஏருக்கே அவன்கால்கள் என்ற போதும்
    இதயத்துள் உலவியவன் எண்ணில் நிற்பான்!
    ஊருக்கே உலைவாய்தான்! உழைப்பால் உண்டி
    உவந்தளிக்கும் எழுவாயே உழவன் தானே! (16)

    கள்ளத்தின் போக்காலே காற்றின் தூய்மை
    காணாமல் போனதுபார்! கழிவே எங்கும்!
    அள்ளத்தான் நீரில்லை! ஆற்றின் தூய்மை
    அதற்கின்னும் வழியில்லை! அடுத்து வாழும்
    பிள்ளைக்கோர் நல்லுலகைப் பேணிக் காக்கும்
    பெருங்கடமை உனக்கிலையோ? பிழைகள் தீர
    உள்ளத்தின் பரப்பதனில் வெள்ளை தீட்டு!
    ஓசோனைத் தைப்பதற்கோர் ஊசி தேடு! (17)

    விண்ணதனை மின்னல்கள் வெட்டும் போக்கின்
    விளைவாக விரிசல்கள் வாரா தென்றும்!
    மண்ணதன்மேல் கலப்பையினை மடக்கி ஓட்ட
    மண்ணுக்கே புண்ணாகும் வழக்கம் உண்டோ?
    கண்ணதனை இமையுரசக் காயம் உண்டோ?
    கண்ணீரால் கொப்பளிக்கும் கன்னம் உண்டோ?
    பெண்ணுளத்தின் ஊடலதைப் புரிய வைக்கப்
    பெருங்கவிஞன் சொன்னதிவை! புதுமை அன்றோ? (18)

    சொல்லுக்குள் கருத்தடைத்த தோட்டா சீறும்
    துப்பாக்கி அவர்கவிதை! துளைத்த போதும்
    மல்லுக்காய் முன்நிற்க மயங்கும் நெஞ்சம்!
    மரணத்தில் புதுநெறியை மலர வைக்கும்!
    வில்லுக்கு வளைகின்ற நாணைப் போலே
    வளையாது தலையெனினும் விரட்டும் அம்பை!
    அல்லுக்குள் வெளிச்சத்தின் ஆற்றல் காட்டும்
    அறிவுப்பூப் பூகம்பம்! அமைதிப் பூதம்! (19)

    கவிதைக்கென் றுதித்தாரா? கவிழ்ந்தோர் தம்மைக்
    கரைசேர்க்கச் செனித்தாரா கவிஞர் தாரா?
    புவியோர்க்காய்ப் பிறந்தாரா? பொதுமை தாராப்
    பொய்யகற்றப் புதுநெறியைப் போதித் தாரா?
    செவிசேர்க்கத் தீங்கவிகள் தெரிந்த தாரா,
    தெவிட்டாதக் கவியாறா? செல்வத் தாரா?
    அவைகேட்க அளித்தாரா? அகிலம் தாரா
    அறமழையைப் பொழிந்தாரா? அதுநம் பேறா? (20)

    கவிமொந்தை! கருத்துடந்தை! கள்ளார் சிந்தை!
    கால்மறக்கும் மனமந்தை! கனவுச் சந்தை!
    செவியுந்தும் தமிழ்ச்சிந்தும்! தேனைத் தந்தும்
    திகட்டாத ஒருபந்தம்! தெரியா தந்தம்!
    புவியெங்கும் புதுக்கந்தம்! புதிதாய் வந்தும்
    புதிரவிழ்க்கும் அவர்சிந்தும்! புலமை முந்தும்!
    அவையெங்கும் புகழ்தங்கும்! அவருட் பொங்கும்
    அறிவொளியில் இருள்மங்கும்! அவர்பாச் சிங்கம்! (21)

    அமிலத்தில் கரைத்தெடுத்த அமுதச் சாற்றை
    அளிக்கின்ற பாற்கடல்தான் அவர்தம் பாக்கள்!
    கமலத்தின் கள்ளூற்றில் கரைந்த தீப்பூ!
    கவிதைக்குள் குறுவாளாய்க் கரந்த சொற்கள்!
    விமலத்தின்* வெளிப்பாடு! வெளிச்சத் தேடல்! (*சுத்தம்)
    விடியல்கள் அவர்கவிகள்! வேரால் பொய்ம்மை
    இமயத்தைப் பொடியாக்க எழுந்த ஆல்கள்!
    இதயத்தைக் குடைகின்ற எழுத்துப் பூச்சி! (22)

    எழுத்துக்குள் வேள்வித்தீ ஏற்றி வைத்தே
    எளியோரின் ஏற்றத்துக் கிலக்கை வைத்தார்!
    பழமைக்குள் புதுமைதனைப் பகுத்து வைக்கப்
    பாட்டுக்குள் காட்டுத்தீப் பதுக்கி வைத்தார்!
    விழுதுக்குள் புதுக்கருத்தை விளைய வைத்து
    விளைவாகும் ஞானத்தை விருந்தாய் வைத்தார்!
    முழத்துக்குள் இவ்வுலகை முடக்கும் தாரா
    மொழிகின்ற கவியென்றும் வாழ்க! வாழ்க! (23)

    Share