Author:

  • ஒவ்வொரு நாளும் நல்ல நாளே

    -தி.இரா.மீனா

     கர்நாடக இசைக்கும்,கன்னட மொழிக்கும் பெருமை சேர்ப்பதான தாச இலக்கியம் இறைவனை அடைய இசை ஓர் எளிய வழி என்பதை குறிக்கோளாகக் கொண்டது. சாதாரண மனிதனும் விரும்பி ஏற்கும் வகையில் பண்பாடு மற்றும் சமய மேன்மை சார்ந்த கருத்துக்களை தாசர்கள் கீர்த்தனைகளாக்கி தங்கள் பக்தியை வளப்படுத்தினர். ’நாதோபாசனா ’என்ற பெயரில் அமையும் இது இசை,பக்தி,இலக்கியம் என்ற மூன்றையும் உள்ளடக்கியது என்றாலும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இனம் கண்டறிய முடியாத அளவுக்குத் தமக்குள் இணைந்துள்ளது. ஹரிதாசர்களின் இலக்கியத்தைப் பொதுப் பாடல்கள், கவித்துவப் பாடல்கள், தத்துவப் பாடல்கள் என்ற மூன்று பிரிவுகளில் அடக்கலாம். ஹரிதாசர்களின் படைப்பில் மிக முக்கியமானது கீர்த்தனைகளே.இது கன்னட மொழியில் தேவர்நாமா என்றும் அழைக்கப்படுகிறது.

    சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் வேதம், உபநிடதம், புராணம் குறிப்பாக தசாவதாரம் ஆகியவற்றின் கருத்துக்களை எளிமையாக வெளிப்படுத்தியவர்கள் ஹரி தாசர்கள்.எளிய கருத்துக்களைக் கொள்கை போல இல்லாமல் இயல்பான கதைப் பாங்கில்,பேச்சு முறையில் கீர்த்தனைகள் வடிவத்தில் அமைத்ததால் மனிதர்கள் மனதில் அவை எளிதாகப் பதிந்தன. மறுக்கப்படாத சமய நிலைகளை எல்லாப் பாடல் களும்,கீர்த்தனைகளும் வெளிப்படுத்தின. வாழ்க்கையை, அதன் போக்கை மனிதன் தனக்குப் பிடித்தவகையில் தெரிந்து கொள்ள அவை உதவின. தசாவதாரக் கதைகளின் பின்னணியில் இறைவனின் தன்மையை வெளிப்படுத்தியதால் மத்ய,கூர்ம,வராக,நரசிம்ம அவதாரங்களின் கதைகளைக் படிப்பதும் ,குறிப்பாகக் கீர்த்தனைகளின் மூலம் அதை அறிந்து கொள்வதும் அன்று அவர்களுக்கு விருப்பமாக இருந்தது.வேதம் ,புராணம் ஆகியவைகள் சொன்ன கருத்துக்களை தாசர் கீர்த்தனைகள் மக்களுக்குக் காட்டின. ஹரிதாசர்கள் ஒன்றையும் விடாமல் எல்லா முக்கிய அம்சத் தையும்.கீர்த்தனைகளில் வெளிக்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.


    பாடல்களில் சொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான விஷயங்கள் ஒவ்வொரு வகையில் விஷேசமானவை ;அர்த்தம் நிறைந்தவை. மனிதன் தானாகப் புரிந்து கொண்டிருக்க முடியாதவை.இதனால் தனிமனிதன் அறிவு பெற்றதோடு மட்டுமில்லாமல் வாழ்க்கைச் செயல்பாடுகளில் விருப்பம் கொண்டவனாகவும் வாழமுடிந்தது குறிப்பிடத்தக்கது. அன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையின் திக்குத் தெரியாமல் இருந்த சாதாரண மனிதர்களுக்கு உண்மைகளின் அறிக்கைகளாக இருந்த கடினமான இலக்கிய வகைகள் புரியவில்லை.அந்நேரத்தில்ஹரிதாசர்களின் கீர்த்தனைகள் மக்களை வழிநடத்திச் செல்லும் விளக்காக இருந்தன. விறுவிறுப்பான நிலையில் சொற்றொடர்களை எளிமையான கன்னட மொழியில் வெளிப் படுத்தினர்.அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பழமொழிகள் போலக் கீர்த்தனைகளை அமைத்தனர்.எளிமை அவர்களின் அழகாகும். அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவையோ,துறையையோ பற்றிப் பேசவில்லை.பொதுவான பார்வையைக் கையாண்டதால் எல்லோரையும் ஈர்க்கின்ற தன்மை அந்த இலக்கியத்திற்கு இருந்தது. அகந்தை, ஆங்காரம், தந்திரம், ஆகியவைகளை ஒழித்த நிலையில் தான் அவர்கள் பாடல்களிருந்தன.மனித இனத்தைக் காப்பாற்றுவது பக்திதான் என்ற அடிப்படைத் தத்துவத்தை ஆழமாக வலி யுறுத்தியவர்கள். சாதாரண மனிதர்களோடு இவர்களுக்கிருந்த நெருங்கிய தொடர்பு வாழ்க்கையை அவர்கள் பார்வையில் தாசர்களைப் பார்க்க வைத்தது.அதனால் அவர்கள் பாடல்கள் இயற்கையாகவும், இயல்பாகவும் அமைந்து உள்ளத்தைக் கவர்ந்தன.மனித வாழ்க்கையின் குறுகிய ஆயுளைக் காட்டிப்,பொய்யான உலகத்தை வெளிப்படுத்தி இறைவனின் அருள் பெறும் போதனை நிலையில் அவர்கள் பாடல்கள் அமைந்தன. ஒவ்வொரு ஹரிதாசனுக்கும் தனியான நடையிருந்தது. தாசர்களில் புகழ்பெற்றவரான புரந்தரதாசர் சொற்றொடர்களையும்,உவமைகளையும பயன்படுத்தினார்.பல தத்துவக் கொள்கைகளும் கூட அவரால் எல்லோருக்கும் புரியும்படி எளிதில் சொல்லப்பட்டுள்ளன.

    தாசர்களின் தலைவனாகப் போற்றப்படும் புரந்தரதாசன் செல்வப் பரம்பரையில் வந்தவர். ஒரு கட்டத்தில் எல்லாவற்றிலிருந்தும் விலகி விஷ்ணு பக்தனானார்.உலக வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்து பல்வேறு சூழ்நிலைகளில் பழகியதால் அவர் கீர்த்தனைகளின் அணுகுமுறை நகைச்சுவை,கண்டனம்,சமூக விமர்சனம், அறிவுரை என எல்லாவற்றின் கலவையாகவும் அமைந்தது. நாமமகிமை,துதி,நிவேதனம், கிருஷ்ணலீலை, சமூக விமர்சனம்,அறிவுரை என்ற பிரிவுகளில் அவர் கீர்த்தனைகள் அடங்குகின்றன.’வயிற்று வைராக்கியம் ”என்ற கீர்த்தனை சமூக வாழ்க்கையின் குறைபாடுகளை பிரதிபலிக்கும் கீர்த்தனையாகும் ”வைகறையில் எழுந்து குளிரில் குளித்துவிட்டு மதம்,மாச்சர்யம்,கோபம் ஆகியவைகளோடு வாழ்தல்..நாவில் மந்திரம் சொல்லிக் கொண்டு மனதை அலையவிட்டு வெளியில் பரம நல்லவனாகக் காட்டிக் கொள்ளுதல்..மேடை வேடம் போட்டு வாழும் சோற்று ஞானம் “என்று சமூகத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டிச் சொல்கிறார்.’மடி மடி என்று [ ’ மடிமடியென்து’ ] என்ற பாடலில் ஈரஆடைகளை அணிந்து உலகத்தவருக்குத் தன்னைக் காட்டிக் கொள்வது மடியாகாது.மனதிலிருக்கும் கோபம், பொறாமை, வெறுப்பு ஆகியவைகளைஒழிப்பதுதான் உண்மையான மடி, என்கிறார். வெளிப்புறச் செயல்களுக்கு அதிக மதிப்புத் தந்து மற்றவர்கள் முன்பு தன்னைக்காட்டிக் கொள்ளும் தன்மை மனிதர்களிடம் அதிகமாகவுள்ளதுள்ளது. அது ஒழியவேண்டும்.புரந்தரதாசனின் காலகட்டத்தில் இருந்த சமூக அவலம் இன்று நாம் வாழ்கிற சூழலிலும்உள்ளது என்பது தான் அவலம் அநீதி யையும், ஆடம்பரத்தையும் பழிப்பதான பார்வையிலும் சில கீர்த்தனைகள் உண்டு.”சிரிப்புத்தான் வருகிறது.[’நகுவே பர்த்திதே நநகே]உடல் தண்ணீருக்குள் இருந்து பயன் என்ன?வேம்பினை வெல்லத்தில் இணைப்பதால் என்ன பயன்?புலையன் நம்மிடையிலன்றி வெளியிலா இருக்கிறான் உடல் அழுக்கை கழுவ முடியும்போது மனஅழுக்கைக் கழுவ முடியாதா?”என்பன போன்ற கருத்துக்கள் குறிப்பிடத் தக்கவை.சமூக போதனைக்குச் சான்றாக “தருமமே ஜயம்”[தர்மவே ஜயா ’] என்ற கீர்த்தனை அமைகிறது.”நஞ்சு கொடுத்தவனுக்கு நல்ல உணவு தர வேண்டும்: பழித்தவனைப் பாராட்ட வேண்டும்”என்ற கருத்து இன்னா செய்தவனுக்கும் நன்னயம் செய்யத் தூண்டும் வள்ளுவத்தை நினைவுபடுத்துகிறது’ இது பாக்கியம் [இது பாக்யா’] என்ற கீர்த்தனையில் “கல்லாயிருக்க வேண்டும் கடின சம்சாரத்தில்,வில்லாக வளைய வேண்டும் பெரியோரிடம்”என்ற வரி பழமொழிபோல இன்றும் எல்லோராலும் பயன்படுத்தப்படும் எளியதொடராகிறது.எதையும் எதிர்த்து நிற்கும் ஆன்மபலம் மனிதனுக்கு வேண்டும் என்ற வற்புறுத்தல் அவர் பாடல்களில் தொடர்ந்து இடம் பெறுகிறது பக்தி என்பது பல கோயில்களுக்குச் செல்வதல்ல.சரியான வாழ்க்கை முறைதான் பக்தி என்கிறார்.மண்,பொன்,பெண் மீது இருக்கும் ஆசை நீக்கப்பட வேண்டும் என்ற செய்தி சொல்லப்படும் விதம் புதுமையானதாக உள்ளது.”ஆசைகளை நீக்கும் படி நேரில் உபதேசம் செய்வது இயல்பு. ஆனால் திருமால் தன் கையால் கடிதமெழுதி இவைகளை நீக்கும்படி வேண்டுகிறான்”என்ற தொனியிலான கீர்த்தனை புதுமையாக மட்டுமின்றி வியப்பையும்,கற்பனை ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. மனிதனின் உயர்வு, அவனுடைய குணம்செயல்பாடுகள், நம்பிக்கைகள் ஆகியவைகளால் தீர்மானிக்கப்படுகிறதே தவிர சாதியால் தீர்மானிக்கப் படுவதில்லை என்ற ஆழமான எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தை பல பாடல்கள் காட்டுகின்றன. ஏழைகளின் உணவான ராகியைப் பாடலாக்கி ’ராகி என்ற சொல்லை ’பல்வேறு பாவனைகளில் வெளிப்படுத்தியிருக்கும் தன்மை அற்புதமானது. ஒரு வயதான மூதாட்டியிடம் தனக்கு உணவு தரும்படி விட்டலன் வேண்டுகிறான்.தன்னிடம ராகிரொட்டி மட்டுமே இருப்பதாக அவள் சொல்கிறாள்.அது தனது தேவைக்கு மேலானது என்கிறான். அது முதல் தினமும் பிச்சைக்கு வந்து ராகியையே வேண்டுகிறான்.இந்தப் பாடலின் மிகச் சிறந்த அம்சம் ’ராகி’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் விதம்தான்.”யோக்ய ராகி”,”போக்யராகி”, ”பாக்யவந்தராகி” என்று எல்லாம் இரட்டைப் பொருளில் அமைகின்றன.சான்றாக “யோக்ய +ராகி—சாப்பிடுவதற்கு ஏற்ற ராகி ,”யோக்யர்+ஆகி—கொடை கொடுப்பதற்கு தகுதியானவர், போக்யர்+ ஆகி கொடுப்பதில் அவருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி “என இந்தப் பாடலுக்கு அறிஞர்கள் விளக்கம் தந்துள்ளனர்.இது அவருடைய மிகச் சிறந்த பாடலெனவும் கூறப்படுகிறது.

    “ராகி தந்தீரோ பிக்ஷ்க்ஷேக்கே ராகி தந்தீரோ
    அன்னதான மாடுவராகி அன்னசத்ராவணிதவாராகி
    குருகள் சேவைய மாடுவராகி
    புரந்தரவிட்டலன சேவிப்பவராகி
    போக்யராகி யோக்யராகி பாக்யவந்தராகி
    ராகி தந்தீரா பிக்ஷ்க்ஷேக்கே ராகி தந்தீரா”

    ஒவ்வொரு நாளும் நல்லநாளே.திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம் ஆகியவை பற்றியெல்லாம் மனிதர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.கடவுளை வழிபட்டால் எல்லா நாளும் நல்லநாளாகும் என்ற மிக உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையான முறையில் “இந்த தினம் சுபதினம்[’ஈ தின சுபதின ’] இந்த நட்சத்திரம் சுபநட்சத்திரம் “என்ற பாடல் காட்டுகிறது.“மனிதர்களுக்கு வாழ்க்கை என்பது வானவில்லைப் போல பல்நிறம் கொண்டதாக, கவர்ச்சி யானதாகத் தெரிகிறது.ஆனால் அவையெல்லாம் மாயையே என்பதை அவர்களுக்கு நினைவு படுத்தும் வகையில் .”யாருக்குக் கவலை” என்ற பாடலில் [’யாரிகே யாரெந்து ’] எந்த நேரமும் உடையும் நீர்க்குமிழியைப் போல உள்ள வாழ்க்கையில் யாரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும். யானைகள்,குதிரைகள், கஜானா, நாடு,கௌரவம், புனிதமான உறவுகள்,நட்பு எல்லாம் மாயையும் ,குறைவான ஆயுளும் உடையவைநிரந்தமற்ற தன்மையை உணர வைப்பது அவர் கருத்தாகிறது.என்ன சாதியாக ,இருந்தாலும மனித நேயத்தைப் புரிந்து கொள்ளா விட்டால் என்ன பயன் .வெவ்வேறு நிறமுடைய பசுக்கள் தரும் பாலும், வெவ்வேறு வடிவங்கள் கொண்ட கரும்பின் சுவையும் வித்தியாசப்பட முடியுமா? தோற்றத்திலிருக்கும் வேறுபாடு யாருடைய தன்மையையும், பக்குவத்தையும் மாற்ற முடியாது என்பது அவரது கொள்கை.
    தீண்டாமை அவரால் பொறுக்க முடியாததாகிறது.பிறந்த சாதியை வைத்து மனிதன் தீண்டத்தகாதவன் என்று முத்திரை குத்துவது சரியல்ல.அவன் செயல்பாடுகள்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும்.தீண்டாமை என்பது தொடுவுணர்ச்சியை முன் வைத்து அமையும் பொருளல்ல என்றொரு பாடல் சொல்கிறது. [ ’ஹொலையா ஹொரகிதனே ’} சுயஒழுக்கமில்லாதிருப்பது, செல்வனாக இருந்து கொண்டு பொருள்தர மறுப்பது, மென்மையான பேச்சைப் பயன்படுத்தத் தெரியாமலிருப்பது இறுதியில் புரந்தர விட் டலனை வணங்காமலிருப்பது ஆகியவைகள்தான் அவர் பார்வையில் தீண்டாமையாகும். புரந்தரதாசனின் அக்கருத்து நம் சமூகத்தின் தீண்டாமைக்குத் தரும் அடியாகும்.புரந்தர விட்டல என்பது எந்தக் கடவுளுக்கும் பயன்படுத்தப்படும் பெயராகும் என்ற கருத்தையும் அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.

    புரந்தரதாசர் சிறந்த கணக்குப்பிள்ளையும் கூட.நல்ல செயல்களைச் செய்யும் போதும்,கெட்ட செயல்களைச் செய்யும் போதும் ஒருவன் தன் மனதையே தணிக்கை செய்து கொள்ளவேண்டும் மனம்தான் தணிக்கைக் கருவி என்கிறார்.”மனதைச் சோதித்துக் கொள்” [”மனவ சோதிசபேக்கு” ] என்ற பாடல் இதைக் காட்டுகிறது பாடல் இப்படித் தொடங்குகிறது.”எல்லா ஹரிதாசர்களுக்கும் இது ஓர் எச்சரிக்கை அழைப்பு. நேரம் குறைந்துவிட்டது. நூறுஆண்டுகள் ஆயுளாக இருந்தால் ஐம்பதாண்டுகள் தூக்கத்தில் போய்விடுகிறது.மீதமுள்ள ஐம்பதாண்டுகளில் முதல் பதினைந்து ஆண்டுகள் அறிவுக் குறைவான இளமையிலும்,கடைசி இருபத்தைந்தாண்டுகள் முதுமையிலும் கழிகின்றன.இடையிலுள்ள இளமையான நிலையிலுள்ள இருபதாண்டுகள் இளரத்தம் என்பதால் மனம் அரேபியக் குதிரை போல உலகத்து ஆசைகளை நோக்கி ஓடுகிறது.இப்படி இருந்தால் எந்த நேரத்தில் கடவுளை நினைத்து வாழமுடியும்’.என்று பாடல் அமைகிறது.

    சில கருத்துக்கள் பழமொழி போல சமுதாயநலம் சார்ந்து அமைகின்றன.”வயது முதிர்ந்தவனோடு திருமண உறவுக்கு எதிர்ப்பு, இரு மனைவியர் வாழ்க்கைக்கு எதிர்ப்பு, கீழ்ச்சாதி வந்தான் என்ற பேச்சுக்கு எதிர்ப்பு ” எனச் சமூக அவலங்களை அகற்ற முயல்கிறார். ’லம்போதர லகுமிரா’, ’கஜவதனா பேடுவே’,’பாக்யதலட்சுமி பாரம்மா ”,என்று எல்லோரும் அறிந்த சில பாடல்கள் அவருடைய எளிமை நடைக்கும், எவரும் புரிந்து கொள்ளும் தன்மைக்கும் சான்றுகளாகும் புரந்தரதாசருக்குப் பின்வந்தவர்கள் அவர் மரபையே பின்பற்றினர்.இன்றும் அது தொடரப்படுகிறது..தியாகராஜரும் ராகம்,பாவம்,தாளம்.என்று புரந்தரதாசர் வழியைத் தொடர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ’தாசர் என்றால் புரந்தரதாசர்தான்”என்ற அடைமொழியோடு கன்னட மண்ணில் இன்றும் போற்றப்படுபவராக உள்ள அவரையும் ,கனகதாசரையும் இணைத்து ’கனக புரந்தரா’ என்ற செய்திப்படம் ஒன்று கிரீஷ் கர்னாடால் இயக்கப்பட்டுள்ளது.

    Share
  • மகாகவி பாசாவின் ’பிரதிமா’ நாடகக் களன்

    தி.இரா.மீனா

    வடமொழி இலக்கிய உலகில் நாடகம் என்ற சொல்லைக் கேட்ட அளவில் நினைவில் நிற்கும் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில்  கேரளத்தைச் சேர்ந்த கணபதி சாஸ்திரியால் கண்டு பிடிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. பாசாவின் காலத்தைப் பற்றிய கணிப்புகள் பலவாக இருந்தாலும் சாகுந்தல காளி தாசனுக்கு முற்பட்டவர் என்பதில் இரண்டாவது கருத்து  கிடையாது. மாளவிகாகினி மித்திரத்தில்“ பாசா, கவிபுத்ரா போன்ற மிகச் சிறந்தவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா” என்று காளிதாசன் எழுதியுள்ள குறிப்பு, இதை உறுதி செய்கிறது. காளிதாசன் தன் படைப்புகளில் பாசாவின் உத்திகளைப் பயன்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    சிறந்த ஓவியங்களையும், சிற்பங்களையும்  பார்க்கும் போது படைத்த கலைஞனை விட அவன் படைப்புகளே  சாஸ்வதமாகி  நிற்கின்றன. இந்தியச் சிந்தனையைப் பொறுத்தவரை  படைப்பாளியின்  சுயவரலாறு முக்கிய இடம் பெறாததால் கடந்த கால மனிதர்களின் வரலாறு எவ்விதத் தேடல்களுக்கும்  சிக்காமல் போய் விடுகிறது. பாசாவும் இதற்கு விதி விலக்கல்ல. மகாபாரத, இராமாயணக் கதைகளே இவருடைய படைப்புகளின் கரு. இதில் 6 நாடகங்கள், மகாபாரதப் பின்புலம் கொண்டவை. நாட்டிய சாஸ்திரம் என்ற இலக்கண நூலின் விதிகளுக்குப்  புறம்பான  வகையில் முதலில் அவல முடிவுகளை படைப்புகளில்  வெளிப்படுத்தியவர். அவ்வகையில் உறுபங்கம், கர்ணபாரம்  என்ற இரண்டு நாடகங்களும் அளவில் சிறியவையாக அமைந்து, அவலச் சுவை முடிவு  கொண்டவை. நவீன நாடக   உலகினராலும் பேசப்பட்டும், இயக்கப்பட்டும் வருபவை.

    இராமாயணத்தின் அயோத்தியா, ஆரண்யா காண்டங்களைப் பின்னணியாகக் கொண்டு சமஸ்கிருத நாடக ஆசிரியரான பாஸனின் ’பிரதிமா’ நாடகக் களன் அமைகிறது. இந்நாடகத்தின் மூன்றாவது அங்கத்தில் இடம் பெறும் சிலையை நாடகத்திற்கு மூலமாக பாஸன்    கருதியதால் ’பிரதிமா’[ பிரதிமம்–உருவம்] என்பது நாடகப் பெயராகிறது. சிலை பற்றிய சிந்தனை, ஆசிரியனின் முழுக் கற்பனையாக அமைந்து நாடகத்தின் பெயருக்கும் கருவுக்கும் வலுவூட்டுகிறது.

    இராமனின் முடிசூட்டு விழாவை தசரதன் அறிவிப்பதான நிலையில் இந்நாடகத்தின் முதல் அங்கம்  தொடங்குகிறது.  இந்த அறிவிப்பு எங்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்த, தொடர்ந்து மங்கல முழக்கங்கள் கேட்கின்றன. தன் தோழியர் கூட்டத்தோடு மிக இயல்பாக பேசிக் கொண்டிருக்கும் சீதைக்கு இச்செய்தி ஆச்சர்யமாக உள்ளது. சீதையின் பல நல்லியல்புகளை அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் அவத்திகா என்னும் பணிப்பெண் கையில் மரவுரி ஒன்றை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதைப் பார்த்த சீதை தான் அணிந்தால் அது தனக்கு  அழகாக இருக்குமா எனக் கேட்கிறாள். ஆசையில் உடனடியாக அதை  அணிந்தும் பார்க்கிறாள். அவள் அணிந்த பிறகு மரவுரி  பொன்போல மாறி விட்டதென பெண்கள் சொல்லிச் சிரிக்கின்றனர். முடிசூட்டு விழா நின்றுவிட்டதாக திடீரெனப் பேச்சு எழுகிறது. அது தடைப்பட்டதற்கான காரணத்தை அறியாமல் இராமன், சீதை இருக்குமிடம் வருகிறான். கைகேயி தன் தந்தைக்குத் தசரதன் தந்த வரத்தை நினைவூட்ட, பரதனுக்கு நாடாளும் உரிமை கிடைத்ததாக, கூடியுள்ள அனைவரும் அப்போது பேசுவதைக் கேட்கிறான். இது இராமன், சீதை இருவருக்குமே வருத்தம் தரவில்லை. தசரதன், கைகேயி  இருவரும் வனவாசம் போகும்படி தன்னிடம் சொல்லாதபோதும் இராமன் புறப்படுகிறான். மங்கல ஒலியும் அடங்குகிறது. வனவாசத்திற்குப் புறப்படும் இராம இலக்குவரோடு சீதையும் புறப்படுகிறாள். கைகேயின் இரண்டு வரங்களையும் பாஸன் குறிப்பாகக் கூட இந்த இடத்தில் சுட்டிக் காட்டவில்லை. இந்தக் காட்சி தசரதனையும், கைகேயியையும் பழியிலிருந்து காக்க, ஆசிரியர் செய்யும் முயற்சிதான். கைகேயியை அயோத்தி பழிக்கக் கூடாது என்ற முறையிலேயே இராமனின் வனவாசச் செயல்பாடு அமைகிறது. இராமன் அரண்மனைக்கு வந்தபோது  சீதை மரவுரியை அணிந்து பார்த்ததும் இதே மாதியான மற்றொரு நயமான பாஸனின் சிந்தனை அடையாளம். சீதை விளையாட்டாக அணிந்த தவ ஆடை, கைகேயி வரம் நடைமுறையாவதற்கு முன்பே இயல்பாக அமைந்தது என்ற சிந்தனை வெளிப்பாடு குறிப்பிடத்தக்கது. இந்த அங்கத்தில் மிக முக்கியமான பாத்திரங்களாக அமையும் தசரதன், கைகேயி, மந்தரை ஆகிய மூவரும் மேடையில் பங்கு பெறாததும் குறிப்பிடத்தக்கது.

    இரண்டாவது அங்கத்தில் இராமன் தம்பியோடும், சீதையோடும் வனவாசம் சென்றது தந்தைக்கு அளவில்லாத துயரம் தருகிறது. புலம்பியும் வருந்தியும் தவித்தும், இறந்து போகிறான். இப்பகுதியில் மூலக் கதையிலிருந்து எவ்வித பெரிய மாற்றத்தையும் பாஸன் செய்யவில்லை. நீண்ட காலமாகவே பாட்டன் குடும்பத்தோடிருந்த பரதனுக்கு தந்தையின் மரணச் செய்தி அறிவிக்கப்படவில்லை. அயோத்தி திரும்ப ஆணை மட்டுமே பிறப்பிக்கப்படுகிறது.

    மூன்றாவது அங்கத்தில் ஆசிரியரின் அணுகுமுறை மிகப் பெரிய அளவில் மாறுகிறது. ’பிரதிமா நாடகம்’ என நாடகத்திற்குப் பெயர் தரும் பெருமை இந்த அங்கத்திற்கு உரியதாகும். பாட்டன் வீட்டில் இருக்கும் பரதனுக்குத் தந்தையின் இறப்பு தெரிவிக்கப்படவில்லை. தசரதனுக்கு உடல் நலமில்லையாதலால் பரதன் உடனடியாக வரவேண்டும் என்ற வேண்டுகோளோடு தேரோட்டி பரதனை அழைத்து வருகிறான். வரும் வழியில் தந்தையின் உடல் நலம் குறித்துப் பரதன் விசாரிக்கிறான்.

    பரதன்                  :    இப்பொழுது தந்தை எப்படி இருக்கிறார்?

    தேரோட்டி           :    சித்திரவதைப்பட்டுத்தான்.

    பரதன்                  :    மருத்துவர் என்ன சொல்கிறார்?

    தேரோட்டி            :   அவர்களால் இப்போது எதுவும் செய்ய முடியாது.

    பரதன்                  :   சாப்பிடுவது, தூங்குவது எல்லாம்…?

    தேரோட்டி            :  எதுவும் சாப்பிடாமல் தரையில்தான் படுத்திருக்கிறார்.

    பரதன்                   : என்ன செய்வது?

    தேரோட்டி            :  கடவுள்தான்..

    என்ற உரையாடலில் மறைமுகமாக தசரதனின் நிலையைத்  தேரோட்டி  சொல்வது போலக் காட்சி அமைகிறது. ஆழமாகவும் மிகத் தெளிவாகவும் அமைந்த உரையாடலை உற்று ஆராய்ந்தால் உள்ளமைப்பு புரியும் என்பதான  நாடக ஆசிரியன் பார்வை இங்கு வெளியாகிறது. பேசியபடியே அயோத்தியை நெருங்குகின்றனர். நல்ல நேரம் பார்த்துத் தான் அரண்மனைக்குள் வர வேண்டும் என அப்போது  ஊர்ப்பெரியவர்கள் சொல்கின்றனர். பரதன் அதைக் கேட்டு ஊருக்கு வெளியே இருக்கிறான். மிக அழகான கோயில் போன்ற அமைப்பில் அங்கிருந்த ஓரிடத்தின் அமைதி, சூழல், மணம் ஆகியவை  அவனைக் கவர்கின்றன. உள்ளே சென்று பார்த்து வரப் போகிறான். வரிசையாகச் சிலைகள் உள்ளன. இறந்து போன அரசர்களின் சிலைகள் அவை. அங்குள்ள பாதுகாப்பாளர் அந்தச் சிலைகளின் பெயர்களைச் சொல்கிறார். இறந்தவர்களுக்கு மட்டுமே அங்கு சிலைகள் இருக்கும் என அவர் விளக்கமும் தருகிறார். சிலைகளாக உள்ளவர்கள் தன் தந்தையின் வம்சம் என்று அறிந்து கொண்டு ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறான். அப்போது அவர் அவன் பரதன் என்பதை அறிந்துகொண்டு ‘கைகேயின் மகன்’ எனச்சொல்லி  அவன் தாய், கேட்ட வரத்தால் தான் இராமன் காட்டுக்குப் போனான் என்கிறார். அதே நேரத்தில் வரிசையில் உள்ள  கடைசிச் சிலையைப் பார்த்த பரதன், அதிர்ச்சி அடைகிறான். அது தசரதனின் சிலை. வார்தைகளின்றி மயங்கி விழுகிறான். தெளிந்த போது கோசலை, கைகேயி, சுமித்திரை என்று தாயர் மூவரும் நிற்கின்றனர். சிலைகள் உள்ள இடம் என்பதால் பிரதிமாகிருகம்’ என்ற இடம் [ பிரதிமா-சிலை. கிருகம்-இடம்] நாடகத் தலைப்பாவது இங்கு குறிப்பிடத் தக்கது.  விவரமறிந்து கைகேயியைப் பலவாறு இகழ்ந்து பேசுகிறான். அவள் தன் தாயாக முடியாது என்கிறான். தான் பட்டத்துக்கு வர எந்த நாளிலும் தயாராக இல்லை எனவும் காட்டிற்குச் சென்று இராமனை அழைத்து வரப் போவதாகவும் சொல்கிறான். பரதன் தன் தாயைவிட இராமனிடம் அதிக அன்பு வைத்திருந்தாகக் காட்சியின் போக்கு அமைகிறது. தவிர இந்த பிரதிமா கிருகம் என்ற இட அறிமுகமும், காட்சி நிலையும் இயல்பான சூழலாக ஒருங்கிணைந்து அமைந்துள்ளது. பார்வையாளனாலும் எந்தத் தயக்கமும் இன்றி இதை மிக இயல்பாக உணர முடிவதும் நாடக ஆசிரியனின் கலை வெளிப்பாட்டுத் திறமையாகிறது. இந்த அங்கத்தில் தந்தை சிலையைப் பார்த்ததன் மூலமாக இறப்புச் செய்தியை பரதன் அறிகிறான் என்பதும், தாய் கைகேயியின் மூலம் அது சொல்லப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும். பிரதிமாகிருகக் காட்சி, நாடக அமைப்பிலும் மேடைச் சூழலிலும் தனித்துவம் பெற்றதொரு காட்சியாகிறது, என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    நான்காம் அங்கம் இராமனும் பரதனும் சந்தித்துப் பேசுவதான சூழலாகும். இருவரும் பெற்றோரிடம் கொண்டிருந்த அன்பையும், சகோதரர்கள் தமக்குள் கொண்டிருந்த நெருக்கத்தையும் இக்காட்சி வெளிப்படுத்துகிறது. காட்டு வாழ்க்கையை விட்டுவிட்டுத் தன்னோடு அயோத்தி திரும்ப வேண்டும் என இராமனை அன்பாகவும் பணிவாகவும் பரதன் வேண்டுகிறான். ஆனால் இதை மறுக்கும் இராமன் தாய் கைகேயியின் விருப்பப்படி 14 ஆண்டுகள் கழித்து அயோத்தி வருவதாக உறுதியளிக்கிறான். இராமனின் பிரதிநிதியாகவே தான் நாட்டை ஆள்வதாக பரதன் சொல்கிறான். பரதனைக் குற்றமற்றவனாகக் காட்டும் வகையில் இராமனின் காலணிகளை அரச பொறுப்பில் பரதன் போற்றுவதான உறுதி மொழியும் நாடகத்தில் ஆசிரியரால் வெளிப்படுத்தப்படுகிறது.

    இராமனும் இராவணனும்  போருக்கு முன்னர்ச் சந்திப்பதான நிலையில் ஐந்தாம் அங்கத்தை அமைத்திருப்பது பாஸனின் காட்சி அமைப்பிற்கும், படைப்புத் திறத்திற்கும் சான்றாகும். இராவணன் ஒரு சந்நியாசியைப் போல  இராமன் குடிலுக்கு வருகிறான். தன் குடில் வரும் இராவணனை இராமன் வணங்குவது போலக் காட்சி அமைகிறது. அது இராமன் வனவாசத்தின் இறுதி ஆண்டான 14ஆம் ஆண்டாகும். அடுத்த நாளில்தான் செய்ய வேண்டிய தந்தையின்  திதி குறித்து அப்போது சீதையோடு இராமன் பேசிக்கொண்டிருக்கிறான். திதி சாத்திரங்களில் சிறந்தவனான இராவணன் பேச்சால் இராமனை தன் வயப்படுத்துகிறான். இமய மலையில் மிக அபூர்வமாகக் காணப்படும் பொன்நிறம் கொண்ட உடலுடைய மானின் தோலில் தர்ப்பணம் செய்வது மிகப் புண்ணியமானது என்கிறான். ஆனால் அவ்வகையான பொன்மான் கிடைப்பது அபூர்வம் எனவும் இராவணன் சொல்கிறான். தந்தைக்குத் தர்ப்பணம் செய்வது சிறப்பாக அமைய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இராமனுக்கு எப்படியாவது அந்தச் செயலைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பு எழுகிறது.  அந்த நேரத்தில் சந்நியாசி சொன்ன அடையாளத்தோடான ஒரு பொன்மான் வருகிறது.  அதைப் பிடித்து விட வேண்டும் என்ற ஒரு சிந்தனை மட்டுமே அப்போது இராமன் நெஞ்சில் நிற்கிறது. மானைப் பின் தொடர்ந்து புறப்படும் அவன் சீதையிடம் விடை பெறுகிறான். செல்லுமுன், எப்போதும் உடன் இருக்கும் இலக்குவனை அழைக்கிறான். திதி தொடர்பான குருவை அழைத்து வரப் போயிருக்கிறான் எனச் சீதை இராமனுக்கு தம்பி இல்லாததை நினைவூட்டுகிறாள். இலக்குவனைத் தான் அனுப்பி வைத்ததை மறக்கும் அளவுக்கு அவன் மனத்தில் தந்தையின் திதிச் செயல் பதிந்திருக்கிறது.  சந்நியாசிக்கு வேண்டியதைச் செய்து அவரை அனுப்பி  வைக்கும்படி சீதையிடம் சொல்லி  விட்டு  மானைப் பிடிக்கப் போகிறான். இங்கு எவ்விதச் சந்தேகங்களுக்கும் இடம் தராத வகையில் தன் உரையாடலை திதியோடு தொடர்புபடுத்தி இராவணன் பேசுவதால் அவர்கள் இடையே நடக்கும் உரையாடல்  மிக இயல்பாக இருக்கிறது. இலக்குவனும் வேறு பணி காரணமாகச் சென்றிருக்கிறான் என்ற செய்தி சீதையை இராவணன் கவர சிறந்த  சந்தர்ப்பமாகிவிடுகிறது. வில்லோடு இராமன் சென்று விட்டதைப் பார்த்து மகிழும் இராவணன் தான் யார் என்பதைச் சீதைக்கு அறிவித்து விட்டு அவளைக் கவர்ந்து போகிறான். மான் வேண்டும் என மனைவி கேட்க அவள் விருப்பத்தை  நிறைவேற்ற இராமன் சென்றதாக மூல கதை அமைகிறது. ஆனால் இங்கு தந்தையின் ஆத்ம சாந்திக்கும் திதிக்கும் மிகச் சிறந்தது பொன்மான் தோல் எனச் சந்நியாசி சொன்ன  செய்திதான், அவன் மானைத் தொடர்ந்து போகக் காரணமானது என்று நாடக ஆசிரியனின்  அணுகுமுறை அமைகிறது. இதுவும் பாத்திரப் படைப்பின் உன்னதம்தான். மானைப் பிடித்துத் தரும்படி சீதை வேண்ட  அதை நிறைவேற்றும் வகையில் இராமன் மானைப் பின் தொடர்ந்தான் என்ற சாதாரண வாழ்வுப் பின்னணியில் மனைவி ஆசை, அதை நிறைவேற்ற கணவன் துடிப்பு போன்ற  செயல்கள் இங்கில்லை இராமனின் பாத்திர உயர்வு இப்படித்தான் பாஸனிடமிருந்து வெளிப்படுகிறது.

    ஆறாம் அங்கத்தில் இராமன் காட்டிற்குச் சென்ற பழிக்கு தானே காரணம் என்று கைகேயி  ஒப்புக் கொள்வதான சூழலை பாஸன் காட்டுகிறான். வேட்டைக்குச் சென்ற தசரதன், குளத்தில் யானை தண்ணீர் குடிப்பது போன்ற ஒலியைக் கேட்கிறான். யானை என்று நினைத்து அவன் விட்ட அம்பு  பார்வையற்ற தந்தைக்காக  தண்ணீர் எடுக்க வந்த மகனைக் கொன்று விடுகிறது. தன்னைப் போலவே தசரதனும் புத்திர சோகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற  சாபம், முதிய தந்தையால் தரப் படுகிறது. இது அறியாமல் செய்த பிழையேயாயினும் விதிவலிமை காட்டுவதாகிறது. இதிலிருந்து தசரத னும் இராமனும் விடுபட வேண்டுமென்றால் இராமன் உயிருக்கு எந்தத் தீங்கும் ஏற்படக் கூடாது எனக் கைகேயி நினைக்கிறாள். அதன் எதிரொலிதான்  இராமனைத் தசரதனிடமிருந்து பிரித்துக் காட்டுக்கு அனுப்பும் செயலாகிறது. இதை,

    கைகேயி  :    அரச பதவி மீது வெறி கொண்டு இராமனைக் காட்டுக்கு   அனுப்பவில்லை. இராமன் வனவாசம் சென்றால் ஒழிய இந்தத்  தவிர்க்க முடியாத சாபத்திலிருந்து மீள  முடியாது.  இதனால்   தான் என் மீது பழி விழுந்தது.

    பரதன்   : மகனின் வனவாசம் அப்படி அவசியமானது என்றால் என்னை  அனுப்பி இருக்கலாமே..?

    கைகேயி  : முதலில் இருந்தே நீ தாய்மாமனோடு  இருந்ததால் அந்த  வாழ்க்கை வனவாசம்  போலப்  பிரிந்து இருப்பதுதான்.

    பரதன்      :    பின்பு ஏன்  14 ஆண்டுகள் என்று நிர்ணயித்தீர்கள்  ?

    கைகேயி   : 14  நாட்கள் என்று சொல்ல வந்தது மனக்குழப்பத்தில் 14    ஆண்டுகள் என்று  மாறிவிட்டது.

    பரதன் :    ‘விவேகம்’ என்பது நிதானமாக இருப்பது என்பது. இது  பெரியவர்களுக்குத் தெரியாதா?

    என்ற தாய்-மகன் இடையேயான உரையாடல் பொருள் செறிவும் பாத்திர உயர்வும்  உடையதாகிறது. மகனின் பிரிவு தாங்காமல் தசரதன் இறந்து போகிறான். இந்த உண்மை வசிட்டர், வாமதேவன், சுமந்திரன் ஆகியோருக்குத் தெரியும் என்று கைகேயி பரதனுக்கு விளக்குகிறாள். இராமனிடம் பேரன்பு கொண்டவளாக கைகேயி இருப்பதால்தான் அவனுக்குரிய சாவைத் தவிர்த்து தந்தையிடமிருந்து பிரித்துக் காட்டுக்கு அனுப்பினாள் என்பது பாஸனின் அணுகுமுறையாகும். மகன் பரதனுக்கு ஆட்சியைக் கொடுப்பது அவள் எண்ணமல்ல என்பது அவர் வெளிப்படையாகச் சொல்ல வரும் செய்தியாகும். பரதன் உண்மையை உணர்ந்து தாயிடம் மன்னிப்பு கேட்கிறான். இராமனுக்குப் போர் உதவி செய்யப் போகிறான்.

    ஏழாவது அங்கம், இராமன் போரில் இராவணனை அழித்துவிட்டு வீடணனுக்குப் பட்டம் சூட்டுவதான நிலையில் தொடங்குகிறது. சீதையுடன் இராமன்  மகிழ்ச்சியாக பரத்வாச முனிவரின் ஆசிரமத்திற்கு வருகிறான். கரடி, குரங்குகள், ஆகியவையும் அவனோடு ஆசிரமம் வருவதாக நாடகம் மகிழ்ச்சிப் பின்னணியில் முடிகிறது.

    இராவணன்-இராமன் போர் விரிவாக பாஸனால் காட்டப்படவில்லை. இராவணன் அழிவு பொதுவாகச் சொல்லப்படுகிறதே தவிர தனிக் காட்சிகளாக அவை இடம் பெறவில்லை. மூல கதையில் இடம் பெறும் முக்கிய பாத்திரங்களான அனுமன்,  இந்திரஜித் போன்ற பாத்திரங்கள் இங்கு இடம் பெறவில்லை. வீடணன் பாத்திரம் முடிசூட்டுதல்  என்ற நிலையில் குறிப்பிடப்படுகிறதே தவிர தனியான பாத்திர முக்கியத்துவம் இல்லை. நாடகக் கதை முடிந்ததென்றாலும் பார்வையாளனுக்கு  இராமனைப் பற்றிய முழுக் கதை தெரிந்ததான திருப்தி  இல்லை என்பதைப் பாஸன் உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் இக்கதையின் தொடர்ச்சியாக ’அபிஷேக நாடகம்’ என்ற அடுத்த நாடகம் உருவாகியிருக்கிறது என்பதில் இரண்டாவது அபிப்ராயம் இல்லை.

    ———————–

    படத்துக்கு நன்றி: https://www.exoticindiaart.com/book/details/pratimanataka-of-mahakavi-bhasa-NZB287/

    Share
  • புகையை அறிந்தவன், அக்னியை அறிந்தவனா?

    -தி.இரா.மீனா

    ஆத்மாவிற்கும் தனிப்பட்ட மனிதர் மற்றும் பொருட்களுக்கும் இடையிலான அன்பின் முக்கியத்துவத்தைச் செவ்வியலாக விரித்துரைக்கும் மிக உயர்ந்த நிலை கொண்டதாக பிரஹதாரண்ய உபநிடதத்தில் யாக்ஞவல்கியருக்கும் மைத்ரேயிக்கும் இடையில் நடக்கும் உரையாடல் அமைகிறது. இதை ’பிரம்மத்தை ‘அறிவதான உரையாடல்’ என்று வேத உலகமும் அறிவுசார் ஆராய்ச்சியாளர்களும் காலந்தோறும் போற்றி வருகின்றனர்.

    வைசம்பாயனரின் மாணவரான யாக்ஞவல்க்கியர் வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவற்றில் ஆழமான அறிவுடையவர். யஜுர் வேதத்தில் தன் குரு புகுத்திய சில திருத்தங்களை எதிர்த்ததால் குருவுக்கும் மாணவருக்கும் கடும் விவாதம் ஏற்படுகிறது. கோபம் அடைந்த குரு தான் கற்றுத் தந்த வேதங்கள், அதன் பின்னணியிலான அறிவு அனைத்தையும் திருப்பித் தர ஆணையிடுகிறார். குருவின் கட்டளைப்படி கற்றது அனைத்தையும் செரித்த உணவாக யாக்ஞவல்க்கியர் உமிழ்கிறார். பிறகு சூரியக் கடவுளிடம் இருந்து யஜுர் வேதம் அறிகிறார். இதனால் யஜூர்வேதம் கிருட்டிண யஜுர் வேதம், சுக்கில யஜுர் வேதம் என இரண்டாகப் பிரிந்தது என்பது ஆராய்ச்சியாளர் செய்தி. இவர் சதபத் பிரமாணம், பிரஹதாரண்ய உபநிடதம் போன்ற நூல்களை எழுதியவர்.

    மிதிலை மன்னர் ஜனகரின் அமைச்சரான மித்திரர் வேதங்களில் தேர்ந்தவர் அவருடைய மகளான மைத்ரேயி சாத்திரங்கள், வேதங்கள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவள். அவளு டைய அத்தையான கார்க்கி வேத சாஸ்திரங்களில் மைத்ரேயி ஓரளவு பயிற்சி பெற உதவு கிறாள். மிதிலை நாட்டு மன்னன் ஜனகன் நடத்தும் யக்ஞத்திற்கு கார்க்கி தன்னுடன் மைத்ரேயியை அழைத்துப் போகிறாள். அந்த யக்ஞத்தில் பங்கு பெற யாக்ஞவல்க்கியரும் வருகிறார். அவர் ஜனகனின் குருவும் கூட. அந்த யக்ஞத்தின் போது பிரம்மத்தின் வியாப கத்தைப் பற்றி, பிரம்ம தத்துவத்தைப் பற்றி யாக்ஞவல்கியர் விவரித்ததையும், அங்கிருந்த வர்கள் கேட்ட எல்லாவற்றிற்கும் அவர் விரிவான விளக்கம் தந்ததையும் கவனித்து மைத் ரேயி வியப்பு அடைகிறாள். இயல்பாகவே வேதப் பின்னணியுள்ள மைத்ரேயி பிரம்ம ஞானத்தைப் அவரிடமிருந்து பெற விரும்புகிறாள். கன்னிப் பருவத்தில் இருக்கிற ஒரு பெண்ணுக்கு குருவாக அவர் அமைவதில் உள்ள சிக்கல்களை நினைத்துப் பார்க்கிறாள். அவருக்கு மனைவியாக இருந்து தான் விரும்பியவற்றைக் கற்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது.எனவே அவருடைய முதல் மனைவியான காத்யாய னியி டம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறாள்.மைத்ரேயியின் உண்மையான ஆர்வத்தைப் புரிந்து கொண்டு காத்யாயனி தன் கணவனிடம் தானே பேசி அவர்கள் திருமணத்திற்கு உதவுகிறாள்.மைத்ரேயி அறிவு நிறைந்த மனைவியாய் வேதங்களில் தேர்ச்சி பெறுகிறாள் .குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு யாக்ஞவல்கியர் தான் சந்நியாச வாழ்க்கையை மேற் கொள்ளப் போவதாகச் சொல்கிறார்.உலக நியதிப்படி தான் செல் வதற்கு முன்னால் தன்னிடம் உள்ள செல்வத்தை இரு மனைவிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்புகிறார். அவ்வாறு அவர் முடிவு செய்த பிறகு மைத்ரேயியை அழைத்துப் பேசுகிறார். அப்போது அவருக்கும் மைத்ரேயிக்கும் நடந்த உரையாடல் பகுதி இது.உலக வாழ்வின் நிலையில்லாத தன்மையை உணர்ந்து கொண்ட அறிவு நிறைந்த பெண்ணின் மன வெளிப்பாடாக வினாக்கள் அமைகின்றன.

    யாக்ஞ: “ மைத்ரேயி! நான் இந்த வாழ்க்கையில் இருந்து விடை பெறப் போகிறேன். வாழ்க்கையின் நான்காவது படியான சந்நியாசத்தில் அடி எடுத்து வைக்கப் போகிறேன். போவதற்கு முன்னால் என் செல்வத்தை உனக்கும் காத்தியாயினிக்கும் பிரித்துத் தருவது என முடிவு செய்திருக்கிறேன்.”

    மைத்: “ சுவாமி ! நீங்கள் வாழ்க்கையின் நான்காவது கட்டத்தில் அடி எடுத்து வைக்கப் போவதால் ,அது உங்களுக்கு முற்றிலும் புதியதான பார்வையைத் தரப் போகிறது. உங்களுடைய செல்வத்தை எங்கள் இருவருக்கும் தரப் போவதாகச் சொல்கிறீர்கள். அதை வைத்துக் கொண்டு நாங்கள் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்கிறீர் கள்.அந்தச் செல்வத்தை வைத்துக் கொண்டு நாங்கள் நிரந்தரமாக மகிழ்ச்சியாக இருப்ப தற்கான சாத்தியம் இருக்கிறதா? இந்தப் பெரிய உலகில் செல்வம் உடையவளாக நான் இருந்தால் ,எனக்கு நிரந்தரமான மகிழ்ச்சி கிடைக்குமா? அழிவில்லாத வாழ்வு இருக்குமா? அல்லது வேறு ஏதாவது என் மகிழ்ச்சியில் குறுக்கிட முடியுமா?”

    யாக்ஞ : “இல்லை மைத்ரேயி. நீ மகிழ்ச்சியாக இருக்க முடியாது. செல்வம் அதிகம் உடை யவர்களின் வாழ்க்கை எப்படி இருக்குமோ அது போல உன் வாழ்க்கையும் வசதியாகத் தான் இருக்கும்.ஆனால் மற்ற விதங்களில் நீ அதே நிலையில்தான் இருப்பாய். அது தான் சமுதாயத்தில் உயர்ந்த இடங்களில் இருப்பவர்களின் நிலை.மரணம் இல்லாத பெருவாழ்வை செல்வத்தால் ஒரு நாளும் தர முடியாது. மரணமில்லாத பெரு வாழ்க்கை முற்றிலும் வேறானது.”

    மைத்: “ அப்படியானால் நீங்கள் பிரித்துத் தரும் இந்தச் செல்வத்தால் என்ன பயன்? இறப்பு ஒருநாள் என்னை அழித்துவிடும் என்றால், உலகின் நிலையாமை என்னை அச்சுறுத்தும் என்றால் ,எதுவுமே பாதுகாப்பற்றது என்றால்… எதுவும் எவ்வளவு காலம் பயன் தரக் கூடியது என்பதற்கான உறுதியை என்னால் அறிய முடியவில்லை என்றால் …நீங்கள் எனக்குத் தரும் இந்தச் செல்வம் எப்படி நல்லது என்று சொல்ல முடியும்? எங்க ளுக்கு நல்லதைத் தர முடியும் ? மதிப்புடையதாக இருக்க முடியும்? திருப்தியையும், நிரந்தர மகிழ்ச்சியையும் தராத ஒன்றை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? சுவாமி ! குழப்பமாக இருக்கிறது இது தொடர்பாக உங்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதை எனக்குச் சொல்லுங்கள். என் மனதில் உள்ள சந்தேகம் என்னும் நோயை நான் தீர்த்துக் கொள்கிறேன். நிரந்தரமான மகிழ்ச்சியை அடைய நான் என்ன செய்ய வேண் டும்? எப்படிச் செயல் படவேண்டும் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு எதனிடம் இருந்தும் எனக்கு அச்சம் ஏற்படாது. இது சாத்தியமா? எப்படி நான் நிலைத்த திருப்தியைப் பெறுவது?”

    யாக்ஞ: “மிக அருமையான கேள்வி மைத்ரேயி. நீ எப்போதும் எனக்கு அருமையான வளாகவே இருந்து வந்திருக்கிறாய். இதோ, இப்போதும் அப்படித்தான். அளவற்ற செல்வத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டுப் போகும் போது இப்படி ஒரு கேள்வியை நீ கேட்பாய் என்று நான் நினைக்கவில்லை.இப்போது இது தொடர்பான எல்லா ரகசியத் தையும் உனக்குச் சொல்கிறேன். நான் சொல்வதை கவனமாகக் கேள். என் முன்னால் நீ வைத்துள்ள மிகப் பெரிய சிக்கலுக்கான ரகசியத்தைச் சொல்கிறேன். நீ கேட்ட கேள்வி மிக அர்த்தம் உடையது. செல்வத்தை வைத்திருப்பதன் மூலம் மக்கள் நிரந்தர மகிழ்ச்சியை அடைய முடியாது. கணவனுக்காக கணவன் மீது மனைவி அன்பு காட்டுவதில்லை. அவனுடைய ஆத்மாவை விரும்புவதால் அவள் கணவனை விரும்புகிறாள்.அது போலத் தான் கணவன் மனைவியை நேசிப்பதும். குழந்தைகளுக்காக யாரும் குழந்தைகளை விரும் புவதில்லை. ஆத்மாவை விரும்புவதால் குழந்தைகளை விரும்பும் தன்மை தான் அது. எனவே மைத்ரேயி நாம் காண வேண்டியது ஆத்மாவைத்தான் .உன் சிந்தனைகளும் ,தியா ன மும் நிலத்திருக்க வேண்டியது ஆத்மாவின் மீதுதான்.இந்த ஆத்மா, கேட்கப் படுவ தும்,காரணப்படுத்தப்படுவதும், தியானிப்பதும் ஆகும். ஒவ்வொரு முறையும் ஒரு பொருளைக் ’குறிப்புப் ’ படுத்துகிறோம்.அதைத் தன்னிடம் இருந்து வேறு படுத்துகிறோம். நான் ஒரு பெண்ணைக் காதலிக்க முயற்சிக்கிறேன்.அந்தப் பெண் என்ற குறிப்பு வந்த வுடன் ஆத்மா என்பதிலிருந்து அவள் விலகிவிடுகிறாள். அவளுக்கான என் காதல் அது. அது சோகத்தில் முடிகிறது. ஆனால் அந்தப் பெண்ணை நான் ஆத்மாவாகப் பார்க்கும் போது அந்தக் காதல் பூரணமாகிறது. துன்பம் எதுவும் அடைவது இல்லை.ஆத்மாவை விட்டு மற்றவற்றை விரும்பினால் உலகில் துன்பமும், வருத்தமும்தான். ஆத்மாவில் இருந்து எல்லாம் வேறுபட்டது என்று மனிதன் நினைக்கும் போது அவனை எல்லாம் கை விட்டு விடுகின்றன.ஆத்மாவை உணர்வதுதான் பேரானந்தம். இந்த நிலைக்குள் எப்படி வருவது? உலகம் எல்லையற்றது.ஆத்மாவை அறியாமல் எப்படி ஒவ்வொன்றிற்கும் உள்ள ஆத்மாவை அறிவது ?ஒரு முரசு இசைக்கப்படும்போது நாம் தொலைவில் இருந்தால் அந்த ஓசையைக் கேட்க முடியாது. அருகில் வந்து நம் கைகளை அதன் மீது வைத்தால் ஓசையை அனுபவிக்க முடியும்.இனிமையை உணர முடியும். சங்கு முழங்கும் போது அருகில் இல்லாதவரை அதன் முழக்கம் கேட்காது. அருகே வந்து தொடும் போது அதை உணர முடிகிறது. வீணை நாதத்தை உணர்வதும் இப்படித்தான். மற்ற பொருட்க ளில் பரம்பொருள் உள்ளூர உறைந்து இருப்பதை அறிந்து அதன் வழியாகவே அதனை அடைய முடியும். இதுதான் பரம் பொருளை அறியும் வழியாகும். ஈற வி்றகைப் பற்ற வைத்தால் அதனிடம் இருந்து எழும் புகை மேலே செல்வது போல பரம்பொருளில் இருந்துதான் வேதங்களும், ஸ்மிருதிகளும் உருவாயின. புகையை அறிந்தவன் அக்னியை அறிந்தவனாவான் என்று சொல்ல முடியாது.வேதங்களை அறிந்தால் மட்டும் போதாது. விறகு எரியும்போதுதான் அக்னியைக் காண முடிவது போல ஞானம் ஏற்படும் போதுதான் பரம்பொருளை காண முடியும்.எந்தத் தண்ணீருக்கும் கடலை அடைவதுதான் குறி. எல்லாத் தொடு உணர்ச்சிக்கும் தோல்தான் மூலம் .எல்லா நுகர்வுகளுக்கும் மூக்கு தான் மையம்.எல்லா சுவைகளுக்கும் நாக்குதான் அடிப்படை.எல்லா வடிவங்களுக்கும் கண் தான் மூலம்.எல்லா ஓசைகளுக்கும் காதுதான் அடையாளம். எல்லாச் செயல்களுக்கும் கைதான் மூலம் எல்லா எண்ணங்களுக்கும் மனம்தான் அடிப்படை. உப்பு தண்ணீரில் கரைந்த பிறகு முன்னிருந்த வடிவத்தில் இருக்காது . ஆனால் எங்கு தண்ணீரைச் சுவைத்தாலும் உப்புதான் மைத்ரேயி ! பரமாத்மா எல்லையற்றது. எந்தச் சேர்க்கையில் உருவம் படைத்தது போல இருந்ததோ அந்த பஞ்ச பூதங்களில் இருந்து பிரிந்து மீண்டும் விஞ்ஞான கனத்தில் அதிலேயே மறைந்து போகிறது.மரணத்தின் பின் உணர்வு நிலையில்லை.அறிவு இல்லை. ஆத்மா பரமாத்மாவை அடைந்த பிறகு தனித்து நிற்கும் உலகம் ஏது ? தான் ஏது? இதுதான் நான் உனக்குச் சொல்வது !”

    மைத்: “மறைந்த பிறகு அறிவு இல்லை,உணர்வு இல்லை என்று நீங்கள் சொல்வது எனக்கு குழப்பத்தை தருகிறதே!”

    யாக்ஞ: “நான் உன்னைக் குழப்பவில்லை மைத்ரேயி !ஞானம் அடைய ,உண்மை அறிவைப் பெற இது போதும் என்கிறேன். இருமை [இரண்டு என்ற நிலை] இருக்கும் போது ஒன்று மற்றொன்றைப் பார்க்கலாம். மற்றொன்றைக் கேட்கலாம். மற்றொன்றை நினைக்கலாம். ஆனால் எல்லாம் ஆத்மாவாய் இருக்கும் போது ,காணும் போது,உணரும் போது எதைப் பார்க்க முடியும்? அறிய முடியும் ? கேட்க முடியும்?எல்லாமும் யாரால் அறியப்படுகிறதோ அதனை எதனால் அறியமுடியும்?அறிவோனை எதைக் கொண்டு அறியமுடியும்?ஆத்மா தன்னையே வேறு ஒரு பொருள் போலக் காண முடியாது. அறிப வனும்,அறியப்படுபவனும் ஒன்றேயான பிறகு அறிதல் எப்படி நிகழ முடியும்? ஆத்மா ஒன்றை மட்டும் அறிந்து விட்டால் உலகில் அறிய வேண்டியது எதுவும் இல்லை.உலகமே ஆத்ம வடிவம்தான்.ஆத்மாவின் பொருட்டே அனைத்தும் பிரியத்துக்கு உரியதாகிறது. கண்ணெதிரில் காணக் கூடிய எல்லாமும் அழியக் கூடியது. ஆத்மா அழிவற்றது. அதை அறிவதே மோட்சம். மைத்ரேயி ! மரணத்தை வெல்வதற்கான வழி ஆத்மாவை ஆராய்ந்து அறிவதுதான்” என்று மனைவிக்கு யாக்ஞவல்கியர் சொன்னதாக பிரஹதாரண்ய உபநிடத்தில் ஒரு சிறு பகுதி அமைகிறது.
    இதை அடுத்து யாக்ஞவல்கியர் சந்நியாசத்தை மேற்கொள்கிறார். வாழ்வின் உண்மையை அறிந்து கொண்ட மைத்ரேயி தானும் தவ வாழ்க்கையில் ஈடுபட்டதாக வரலாறு அமைகிறது.

    image.png

    வேதாந்தினியான மைத்ரேயி தன்னுடைய வேத ஞானத்தால் ’ரிக் வேதத்தில் ’பத்து பாடல்களைச் சொல்லிய பெருமைக்கு உரியவள் என்ற கருத்து உண்டு. ’மைத்ரேயி உபநிடதம்” என்ற உபநிடதத்தை உருவாக்கியவள் ,கார்க்கி மைத்ரேயி, போன்றவர்கள் ’ பிரம்மவாதினிகள்என்று அழைக்கப் பட்டிருக் கின்றனர். [பரம்பொருளை அறிய விரும்பியவர்கள் , வேத வியாக்கியானம் செய்தவர்கள்,: கற்றவர் சபைகளில் கலந்து கொண்டவர்கள் என்று இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.]

    வேத காலத்திலேயே ,வேதாந்த அறிவுப் பசியில் வாழ விரும்பிய ஒரு பெண்ணுக்கு அவள் விரும்பிய வகையில் இடம் தந்து, அவள் விருப்பத்தை நிறைவேற்றியதற்கான சூழலில் இதைப் பெண் சிந்தனை உயர்வு, தன்னைப் பெண் உணர்ந்த விதம் என்று வகைக்குள் அடக்கி வேதகாலப் பெண் உயர்வை உணரலாம்.
    ————————–

    Share
  • பெண் வசனக்காரர்கள்

    தி.இரா.மீனா

    பெண் வசனக்காரர்கள் :  நான் நான்  என்பதே  ஆன்மாவின்   மறுப்புதானே?

    சாதிகளற்ற சமுதாயம், வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இருபாலாரும் சமம் என்ற கருத்து நிலைப்பாடு பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவ சாரணர்களின் விருப்பமாக இருந்து அது செயல்படுத்தவும்பட்டது என்பதற்குச் சான்றாக பெண் வசனக் காரர்களின் பங்கையும் வெளிப்பாட்டையும் காட்ட முடியும். சமுதாய நலன் மற்றும் வேதாந்த நிலைகளில் பெண் தன் சிறப்பை வெளிப்படுத்த முடிந்தது பெண் வசனக்காரர்களின் மிகப் பெரிய வெற்றியாகும்.

    கன்னட இலக்கிய, பக்தியுலகில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்த ’வசனக்காரர்கள்’ என்ற அடைமொழிக்குரியவர்கள் வீர சைவர்களாக அமைந்து ’வசனங்கள் ’மூலம் புதிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டனர். வீரசைவ நெறியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் தமக்குள் சாதி, குலம் போன்ற பாகுபாடுகளைப் பார்க்கக் கூடாது என்பது வீரசைவத்தின் அடிப்படையான கொள்கையாகும். ஒருமுறை வீரசைவரான பிறகு அவர்கள் எல்லோரும் சமம். அதனால் பக்திக்கு முதலிடம் தந்து  அறிவையும் தொழிலையும் வீரசைவம்  பின்னிறுத்தியது. சாதி, பொருளாதார வேறுபாடுகள் இல்லாத தன்மை, பெண்ணை மாயையாக விரட்டாத உயர்வு, அவர்களுக்குச் சம மதிப்புத் தந்து போற்றிய தன்மை ஆகியவை வீர சைவத்தின் தலைசிறந்த இயல்புகளில் முக்கியமானவையாகும்.

    வசனக்காரர்கள் சொல்லவந்த  கருத்துகளை வசனங்கள் என்ற வடிவில் வெளிப்படுத்தினர். வசனம் என்பது உரைநடை மற்றும் பாடல் என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட நடைகொண்டது. கருத்துகளைச் சுருக்கமாகவும், எளிமையாகவும் நேரடியாகவும் கூறுவதான முறையிலமைந்தது. அறிவை வளர்க்கும் முயற்சியை விட, மனத்தை அறியும் முயற்சியை வெளிப்படுத்துவதுதான் அவற்றின் சிறப்பாகும். முற்போக்கான சிந்தனை வெளிப்பாட்டு நிலையில் பெரும்பாலான வசனங்கள் இருப்பதும் அவை நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்துவதும் குறிப்பிடத்தக்கது.

    பசவேசருக்கு முன்னாலேயே இந்த இலக்கிய வகை இருந்தாலும் அவரே இது வளரக் காரண கர்த்தாவாக இருந்தார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சாதி வேறுபாடுகளால்தான் சமுதாயம் சீரழிகிறது என்ற கருத்தில் அவர் உறுதியாக இருந்ததால், எல்லாத் தரப்பு மக்களையும் பக்தி என்ற அடிப்படையில் ஒன்று சேர்ப்பதன் மூலம் மனிதர்களிடையேயான வேறுபாடுகளை நீக்க முடியும் என்று நம்பினார். அதனால் அனுபவ மண்டபம் [திருச்சபை] என்ற அமைப்பு அவரால் உருவாக்கப்பட்டது. அதில் விறகுவெட்டி, படகோட்டி,  விவசாயி, மருத்துவன், மாடு மேய்ப்பவன் என்று அனைவரும் உறுப்பினர்களாக இருந்தனர். பல்வேறு வகையான தொழில்களைச் செய்பவர்களாக இருந்தாலும் எந்தப் பாகுபாடும் அவர்களிடையே இல்லை. ’செய்யும் தொழிலே தெய்வம்’’ [காயகவே கைலாசா] என்ற அடிப்படையில் எல்லாப் பணியும் சமமானதாகக் கருதப்பட்டதும் வீர சைவத்தின் சிறப்பம்சமாகும்.

    தவிர ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டிருந்த பெண்ணின் தன்மையைப் பசவேசரும் பிற வசனக்காரர்களும் தம்முடைய அணுகுமுறையால் மாற்றினர். “பெண் மாயையல்ல. பார்ப்பதற்கு இரு கண்கள் தேவையானதைப் போல வாழ்வதற்கு ஆண்-பெண் என்ற இருவரும் வேண்டும். அவர்களிடம் காணப்படும் வேறுபாடு என்பது புறத் தோற்றத்தில் மட்டும்தான்’ என்று வலியுறுத்தி தம் அனுபவ மண்டபத்தில் பெண்களைப் பங்கேற்கச் செய்தனர். பல்வேறு வகையான தொழில்களைச் செய்பவர்களாக இருந்தாலும் திருச்சபை ஒருவரையொருவர் விமரிசிக்கவும் குறைகளை வெளிப்படையாகச் சொல்லி மனிதர்கள் தம்மை மாற்றிக்கொள்ளவும் வழி வகுத்தது.

    அனுபவ மண்டபக் கூட்டங்களில் கலந்து கொள்வது என்பதாக மட்டுமில்லாமல் விவாதங்களில் பங்கேற்பது, பணிகளில் உதவுவது, வாழ்வனுபவங்களை வசனமாகப் படைப்பது என்று பெண்களின் பங்கு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. ஏறக்குறைய முப்பத்து மூன்று பெண்கள், வசனக்காரர்கள் என்ற அடையாளத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்களைப் படைத்துள்ளனர். அக்கமாதேவி, முக்தாயக்கா, பொந்தாதேவி, லக்கம்மாள், மூலிகே மகாதேவி, லிங்கம்மா, துக்களே,  சத்யக்கா, காளவ்வெ என்று ஒரு பெரிய பட்டியலை பெண் வசனக்காரர்களுக்குச் சானறாகக் காட்ட முடியும். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு முத்திரையுண்டு.

    பெண் வசனக்காரர்களில் அக்கமாதேவி, மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும் சிறந்த ஞானியாகவும் சிவபக்தியின் அடையாளமாகவும் இருந்தார். விருப்பமின்றித் திருமண வாழ்வில் ஈடுபடுத்தப்பட்ட அவர், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி அல்லமபிரபு, பசவேசர் ஆகியவர்களோடு சேர்ந்து அனுபவ மண்டபத்தில் பங்கேற்றுச் சிவனின் மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்தி, இறைவனோடு கலந்தார். இளம் பெண்ணாக இருக்கும் அவரை அல்லமாபிரபு, அனுபவ மண்டபத்தில் சேர்த்துக் கொள்ளும் போது இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அக்கம்மாவின் பேச்சுத் திறனுக்கும், சிந்தனை ஆற்றலுக்கும்  சான்றாகும்.

    உருவமற்ற ஒருவனோடு உருவமான ஒன்று எப்படிச் சேரமுடியும் என்ற பிரபுவின் கேள்விக்கு, ”சந்தன மரம் துண்டு துண்டாக வெட்டப்படும் போது அதன் வாசனை குறையுமா? தங்கத்தை அறுத்துச் சுடும்போது அது அதன் பொலிவை இழக்குமா? கரும்பு சக்கையாகப் பிழியப்பட்டு சுடப்படும் போது அதன் சுவை குறையுமா? பாம்பின் விஷப் பல்லைப் பிடுங்கிய பிறகு யாரும் அதோடு விளையாடலாம். சதையோடு இருக்கும் தொடர்பு சரியாகப் புரிந்துகொள்ளப்படுமென்றால் அது சரியானது தான். தாய் அரக்கியாக மாறினால் அவளுடலின் உணர்ச்சிகளும் அரக்கத் தன்மை உடையதாகிவிடும். விருப்பப்படுகிறவனுக்கு உடல் உண்டென்று நினைக்கக் கூடாது. கடந்து போனவற்றைச் சொல்லி என் முகத்தில் அறைந்தாலும் இழப்பு உங்களுக்குத் தான். என்னைக் கொன்றாலும் அவன் மீது அன்பு காட்டுவதை நிறுத்த மாட்டேன். அவன் இளமையானவன், உருவற்றவன், இறப்பில்லாதவன், அளக்க இயலாதவனாகிய சென்ன மல்லிகார்ச்சுனன், என் கணவன்”  என்று சொல்லிக் கடவுளோடு  தனக்குள்ள உறவை வெளிப்படுத்துகிறாள். எளிமையான உவமைகள் கொண்டு வாழ்வின் தன்மையையும் வாழ்வின் பொருளையும்

    “மலையில் வீடுகட்டும்போது
    காட்டு விலங்குகளைப் பார்த்து பயப்படுதல் கூடாது
    கடற்கரையில் வீடு கட்டும்போது
    அச்சம்தரும் அலைகளைப் பார்த்து பயப்படக் கூடாது
    சந்தையருகே வீடுகட்டும்போது  சத்தம் கேட்டு பயப்படக் கூடாது
    சென்னமல்லிகார்ச்சுனா
    உலகத்தில் பிறந்த பிறகு
    புகழுக்காகவோ, குறைகளுக்காவோ  அமைதியை இழக்கக் கூடாது”

    என்று ஒரு வசனத்தில் வெளிப்படுத்துகிறாள்.

    அஜகணன் என்னும் சிவயோகியின் தங்கை முக்தாயக்கா. இளம் வயதில் பெற்றோர் இறந்துவிட அஜகண்ணன் அவளுக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருக்கிறான். திடீரென்று அவன் இறந்துவிட, அந்தச் சோகம் அவளை வாட்டுகிறது. எதிலும் விருப்பமின்றி எந்த நேரமும் வருந்திக்கொண்டிருக்கும் அவளை வசனக்கார மும்மூர்த்திகளில் ஒருவரான அல்லமபிரபு பார்க்கிறார். ஒருவரின் முயற்சியாலும் பயிற்சியாலும்தான் மெய்யுணர்வு பெற முடியும் என்று தொடர்ந்து அறிவுறுத்துகிறார்.

    மனம் குழம்பிக் கிடக்கும் அந்த நேரத்திலும் அவள் அல்லமபிரபுவுடன்  வாதம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். சரியான பயிற்சி செய்ய ஒருவருக்குக் கண்டிப்பாக ஒரு குரு தேவை என்கிறாள். வழிநடத்திய  தனது ஆசானும் அண்ணனும் இல்லாத வருத்தத்தை வாதமாக்குகிறாள். சிறிது கால கட்டத்திற்குப் பிறகு ஓரளவு ஆறுதலடைந்து வீரசைவப் பணிகளில் ஈடுபடுவதாக அவள் வரலாறு அமைகிறது. வேதாந்தமும் அதோடு மனித மனநிலையும் பொருத்தப்படுவதாக அவள் வசனங்கள் அமைந்துள்ளன. வாழ்வின் மிக உயர்ந்த தத்துவத்தை எளிமையாக அவள் சொல்லிய விதம் கீழ்வரும் வசனத்தில்:

     “நான் பேசமாட்டேன் என்னும்போதே
    அதில் பேச்சிருக்கிறது
    நான் செயல்படமாட்டேன் என்னும்போதே
    அதில் செயலிருக்கிறது
    நான் சிந்திக்கமாட்டேன் என்னும்போதே
    அதில் சிந்தனையிருக்கிறது
    எனக்குத் தெரிந்தது மறந்துபோனது என்னும்போதே
    அதில் அறிவும் மறதியும் தெரிகிறது
    உடலைத் துறந்தேன் என்னும்போது
    உடலோடான நெருக்கம் அதிகமாகிறது
    நான் நான் என்னும்போதே
    அது ஆன்மாவிற்கு மறுப்பாகிறது.
    ஓ..அஜகண்ணா! “

    என்ற வசனம் மேலோட்டமாக மிகச் சாதாரண சொற்களைக் கொண்டு அமைந்துள்ளது போலத் தோன்றினாலும் அறிவுத் தெளிவும் ஆழ்ந்த பார்வையும் வெளிப்படுகிறது. இன்னொரு வசனத்தில் அறிவுப் பயிற்சிதான் அனைத்துக்கும் தூண்டுகோல் என்று உளவியல் இன்று சொல்வதை அன்றே வசனமாக்கியிருக்கிறார்.

    “தீய சொற்களைப் பேசக் கூடாது;
    தீய வழிகளில் நடக்கக் கூடாது.
    பேசினால் என்ன ஆகும், பேசாவிட்டால் என்ன ஆகும்?
    உறுதிமொழியை மீறாமல் செயல்படுவதே
    அறிவின் பயிற்சியில்தான்
    ஓ..அஜகண்ணா!“

    ஒருமை அவர் சார்ந்த வாழ்வு. அந்தச் சிந்தனையில் இன்னொரு வசனம்

    “இருமையை ஒழித்துவிட்டோம்
    ஒருமையை நிறுவியிருக்கிறோம் என்று சொல்பவர்கள்
    கனவு காணும் குழந்தைதான்
    அவர்கள் அதைப்பற்றிப் பேசும்வரை
    இருமையாளர்கள் அன்றி வேறென்ன?”

    என்று அமையும் வசனமும் எல்லாக் காலத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதாகும். பெண்கள் அத்வைத தத்துவார்த்தம் சார்ந்திருப்பது என்பது மிகச் சிறிய அளவில் என்றிருந்த காலக்கட்டத்தில், முக்தாயக்கா அவ்வழி வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆய்தக்கி மாரையன்  என்பவனின் மனைவி, லக்கம்மாள். அவன் பசவேசரின் வீட்டில் வீரசைவர்களுக்கு அரிசியைப் படியாலளந்து கொடுக்கும்போது கீழே சிந்தும் அரிசியைத் திரட்டிச் சுத்தம்செய்து வீட்டுக்குக் கொண்டுவருவான். அதுவே அவர்களது உணவு. ஒரு நாள் அவன் தங்களுக்குத் தேவையானதற்கு அதிகமாக அரிசியை வீட்டிற்குக் கொண்டு வந்தபோது லக்கமாள் சிவத் தொண்டர்களுக்கு பற்று இருக்கக் கூடாதென்று சொல்லி அதை மீண்டும் கொண்டு போய்வைத்துவிட்டு வரச்சொல்கிறாள். அவனும் உடன்படுகிறான். நிகழ்காலமே வாழ்க்கை என்பதும், சொர்க்கம் என்பது உழைப்புத் தான் என்பதையும் உணர்த்தும் அவள் கருத்து ஒரு வசனமாகிறது.

    “செய்யும் வேலையும் சேவையும்
    சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்
    என்று நினைக்கிறாயா?
    உன்னுடைய கூலி மோட்சமென்று நினைக்கிறாயா
    உழைப்பில் கவனம் வேண்டும்
    எதிர்காலக் கனவு வேண்டாம்
    இறந்தகால நினைவு வேண்டாம்
    மாரய்யாபிரியா அமலேஸ்வரலிங்கா
    எங்கிருக்கிறானோ அதுவே சொர்க்கம் “

    என்ற மிக எளிமையான வசனம் மூலம் நிகழ்கால வாழ்வின் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்படுகிறது. இது காலங்கள் கடந்தும் நிற்கும் வசனமாகும்.

    வெற்றிலை— பாக்கு விற்கும் ஹடபதா அப்பண்ணாவின் மனைவியான லிங்கம்மா, அடிப்படைக் கல்வி இல்லாத போதும் தத்துவார்த்தமும் தெளிவும் உடையவள். தன் சம காலத்து வசனக்காரர்கள் போற்றுமளவிற்கு அவள் வசனங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பொருள் நிறைந்ததும் தெளிவானதாகவும் உள்ள ஒரு வசனம் இங்கே.

    “நிலையற்ற மனிதர்களே உங்கள் மனத்தைப்
    புனிதப்படுத்திவிட்டதாகச் சொல்கிறீர்கள்
    ஆனால் உடலை உருக்கியும்
    மனத்தைத் துன்புறுத்தியும்
    உங்கள் வழியறியாமல்..
    சந்தேகத்தில் குழம்புகிறீர்கள் .
    மனத்தை எப்படிப் புனிதப்படுத்துவது
    என்று சொல்கிறேன் கேளுங்கள்
    தண்ணீர் காற்றால் குலையாததைப் போல
    சூரியன் மேகத்தால் மூடப்படாததைப்போல
    கண்ணாடி உரசி சுத்தம் செய்யப்பட்டது போல
    மனம் சுத்தம் செய்யப்படாத வரை
    கடவுளைக் காண முடியாது
    அப்பண்ணாபிரியா சென்னபசவண்ணா”

    என்பது அவ்வசனமாகும்.

    காஷ்மீர் அரச பரம்பரையைச் சேர்ந்த மாரய்யா- மொலிகே மகாதேவி தம்பதி பசவேசரின் சித்தாந்தத்தால் கவரப்பட்டனர். தங்கள் வசதியான வாழ்க்கையைத் துறந்துவிட்டுக் கல்யாண் வந்தனர். பசவேசரைச் சந்தித்தனர். மரச் சாமான்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு தங்களால் இயன்ற வரை சிவசாரணர்களுக்கு உணவு படைத்து, அன்பு காட்டி வாழ்ந்தனர். மொலிகே மகாதேவி, அறுபதுக்கும் மேலான வசனங்களைப் படைத்துள்ளார்.

    “பூமியின் ஆதரவின்றி தண்ணீர் இருக்குமா?
    மண்ணின் அடிப்படையின்றி விதை முளைவிடுமா?
    முயற்சியின்றித் திறன் பெறமுடியுமா?
    அறிவாற்றலின்றி அறிவுபெற முடியுமா?
    செயல்படுதலும் அறிவும் இணையானவை
    இதுதான் கட்டமைப்பின் அடிப்படை
    என்னையப்பிரியா இம்மாடி நிக்கலங்க மல்லிகார்ஜுனா”

    என்று அறிவும் அதன் பின்னணியிலான செயலும் குறித்த சிந்தனாவாதத்தைப் புரிய வைக்கிறார்.

    காமீரில் உள்ள மண்டாவ்பூர் அரச பரம்பரையில் வந்த பொந்தாதேவியின் இயற்பெயர் நிஜாதேவி. இளம் வயதிலிருந்தே சிவபக்தையான அவள் கல்யாண் வந்தாள். அவளுடைய பக்தியால் கவரப்பட்ட சிவன், உள்ளம் மகிழ்ந்து அவருக்கு ஒரு  போர்வை [பொந்தே] தந்ததாகவும் அது முதல் அவர் பொந்தாதேவி என அழைக்கப்பட்டதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. மனிதர்களிடையே சமத்துவம் வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அதைக் காட்டும் ஒரு வசனம் கீழே. எல்லா இடங்களிலும் அலைந்து திரிபவன் என்ற பொருளில் ’பிடாடி’ என்பது இவர் முத்திரையாகும்.

    ’வெற்றிடம் என்பது கிராமத்திற்குள் இருக்கிறதா?
    வெற்றிடம் என்பது கிராமத்திற்கு வெளியில் இருக்கிறதா?
    அந்தணர்பகுதி ஒரு கிராமத்திற்குள்ளா?
    தாழ்ந்தவர்பகுதி கிராமத்திற்கு வெளியிலா?
    எங்கே நீங்கள் போனாலும் வெற்றிடம் என்பது அதேதான்
    சுவரைப் பிரிப்பதால்தான்
    உள்வெற்றிடமும் வெளிவெற்றிடமும்
    எங்கிருந்து பார்த்தாலும்
    உங்கள் அழைப்புக்குச் செவிகொடுப்பது பிடாடிதான்”

    என்பது அவ்வசனம். இன்றும் கன்னட மக்களால் அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படும் வசனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

    தங்கள் ஆன்மாவின் வெளிப்பாடு என்ற நிலையில்தான் அவர்களால் வசனங்கள் படைக்கப்பட்டுள்ளன. நவீன சிந்தனையாளர்கள் சொல்லும் கருத்துகளையும் கூட அந்தக் காலக்கட்டத்திலேயே வசனங்கள் வெளிப்படுத்தியிருப்பது, அவர்களின் சிந்தனை ஆளுமையைக் காட்டுகிறது.

                         ——————————–

    Share