Category: செல்லம்

  • கூடா நட்பு (பள்ளி நாடகம்)

     

    காட்சி அறிமுகம்

    அனைவருக்கும் வணக்கம்.

    முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
    வஞ்சரை அஞ்சப் படும்.

    என்பது கூடா நட்பு அதிகாரத்தின் 824வது குறட்பா.

    இதன் பொருள், முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.

    ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். நண்பர்களுடன் பேசும்போது நம்முடைய மனம் நேர்மறை சிந்தனைகளில் அல்லாமல் எதிர்மறை சிந்தனைகளில் வளர்கிறதெனில் அந்த நட்பு தவறானது என்பதைக் கண்டு கொள்ள வேண்டும். கூடா நட்பு கேடாய் தான் முடியும் .

    “உன் நண்பனைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன்”, என்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக எதற்காகவும் பழகிய நட்புக்கு துரோகம் செய்யக் கூடாது. அதன் வலி தாங்கமுடியாதது என்பதையும் உணரச் செய்யும் காட்சிகளைத்தான் காண இருக்கிறோம். வாருங்கள் நிகழ்ச்சிக்குள் போகலாமா…

    காட்சி – 1  பள்ளி வகுப்பறை

    ஆசிரியர் : வணக்கம் குழந்தைகளே! ஒரு நல்ல செய்தி. இந்த ஆண்டும் வழக்கம்போல் ஆண்டு விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கப் போகின்றன. கண்மணி, தமிழ்ச்செல்வி தவிர வேறு யாரெல்லாம் பெயர் கொடுக்கப் போகிறீர்கள்?

    மாணவர்கள் ஒன்றாக டீச்சர் ஏன் அவர்களைத் தவிர என்கிறீர்கள்? என்ற கூச்சல்.

    ஆசிரியர்: ஆமாம் அவர்கள் எப்போதும் கலந்து கொள்பவர்கள்தானே. அதான் நானே அவர்களுடைய பெயர்களை எழுதிக்கொண்டேன்..

    ஓ …..

    ஆசிரியர்: சரி, விரைவில் மற்றவர்களும் பெயர்களைக் கொடுங்கள். இப்போது பாடத்திற்குச் செல்லலாம்.

     

    காட்சி – 2

    கண்மணி : “தமிழ், எப்படியும் இந்த முறையும் நீதான் சுழற்கோப்பையை தக்க வைத்துக்கொள்ளப் போகிறாய். அப்படித்தானே?”

    தமிழ்ச்செல்வி : அதெல்லாம் இல்லைப்பா. எனக்குப் போட்டியாத்தான் எப்பவும் நீ இருக்கிறாயே? அப்புறம் எப்படி ?

    (தமிழ்ச்செல்வி அந்த இடத்தை விட்டு அகன்றாள்)

    மணிமொழி : “ஏய் கண்மணி எப்படியும் இந்தப் போட்டியிலும் வழக்கம் போல நீதான் வெற்றி பெறப் போகிறாய்”

    கண்மணி : “அதெல்லாம் இல்லப்பா விளையாட்டுப் போட்டி என்று வந்தால் தமிழ்ச்செல்வியை யாரும் முந்திச் செல்ல முடியாது”

    மணிமொழி : “அப்படியெல்லாம் இல்லைப்பா. நீதான் இந்த முறை கோப்பையை வாங்கப் போகிறாய் என்று நான் பந்தயம் கட்டியுள்ளேன்”

    மற்ற 3 மணவிகள் : ஆமாம் .. ஆமாம். மணிமொழி சொல்வது சரிதான். நீதான் இந்த முறை கோப்பையை வெல்லப் போகிறாய்.

    “கண்மணி இந்தப் போட்டியில் கட்டாயம் முதல் பரிசு உனக்குத்தான். அதற்கு நாங்கள் பொறுப்பு. நீ மட்டும் நாங்கள் சொன்னபடி கேட்டால் போதும். சுழற்கோப்பை இந்த முறை உனக்குத்தான்”

    கண்மணிக்கு மெல்ல சபலம் தட்ட ஆரம்பித்தது. யோசிக்க ஆரம்பிக்கிறாள். “எப்படியும் சுழற்கோப்பையை அடைந்தே தீரவேண்டும்” என்று தனக்குத்தானே சபதம் மேற்கொள்கிறாள்.

    (புதிய நண்பர்களின் பேச்சை முழுமையாக நம்ப ஆரம்பித்தாள் கண்மணி. கண்மணியிடம் ஒரு பெரிய திட்டத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். எப்படியாவது இருவரையும் தோற்கச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டிருந்தனர்).

    “கண்மணி ஓட்டப் பந்தயத்தில் நீ வெற்றி பெற வேண்டுமானால் நாங்கள் சொல்வதுபோல் நீ செய்ய வேண்டும்”

    கண்மணி : “என்ன அது..  இதனால் வேறு பிரச்சனைகள் வராது அல்லவா?”

    தோழிகள் : “அதெல்லாம் ஒன்றும் வராது. எப்படியும் நீங்கள் இருவரும்தான் முன்னிலையில் ஓடி வந்து கொண்டிருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் நாங்கள் சைகை காட்டுவோம். அப்போது மெதுவாக ஒரு கல்லை வழியில் உருட்டி விடுவோம். நீ அந்த நேரம் பார்த்து தமிழ்ச்செல்வியின் காலை இடறச் செய்துவிட்டால் போதும். அவள் கீழே விழுந்து விடுவாள். நீ முன்னால் ஓடிச் சென்று பரிசை தட்டிச் செல்லலாம்” .

    கண்மணி : (மனதிற்குள்)  மனசு என்னமோ உறுத்திக் கொண்டே இருக்கிறதே. இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அன்புத் தோழி தமிழ்ச்செல்வியை இக்கட்டில் மாட்டி விட்டுவிடுவோமா? சே..சே.. அப்படியெல்லாம் ஆகாது. பார்த்துக்கலாம் …

     

    காட்சி – 3

    அன்று போட்டி நாள். எப்போதும் உற்சாகமாகக் கிளம்பும் கண்மணி அன்று ஒரு பதட்டத்திலேயே கிளம்பிக் கொண்டிருந்தாள். இதை கவனித்த அவளுடைய அம்மா,

    அம்மா :  “கண்மணி இன்று ஏன் இப்படி உற்சாகமே இல்லாமல் இருக்கிறாய். இத்தனை முறை காரணம் கேட்டும் சொல்லவும் மறுக்கிறாய். இந்த மனநிலையில் போனால் எப்படி போட்டியில் வெற்றி கிடைக்கும். ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் சொல்”.

    கண்மணி : “அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா”

    அம்மா மனதிற்குள் .. : ஏதோ பிரச்சனை இருக்கிறது. என்னமோ அசம்பாவிதம் நடக்கப் போவதாகத் தோன்றுகிறதே. பேசாமல் போட்டி நடக்கும் மைதானத்திற்கு போய்விடலாம்”.

    போட்டி ஆரம்பித்தது. மூன்றாவது விசிலும் ஊதப்பட்டது. எல்லோரும் பந்தயத்திற்கு தயாராகி விட்டனர். கண்மணியின் மனதில் மட்டும் ஒரு சலனம். தேவையற்ற இந்த மனக்குழப்பம் அவளுடைய வெற்றிப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாகவும் நின்றது.

    சில மாணவிகள் வந்து கண்மணியிடம் இரகசியம் பேசிச் செல்கிறார்கள்.

    அம்மா மனதிற்குள் : “போட்டி நடக்கும்போது அந்தப் பிள்ளைகள் ஏதோ செய்யப் போகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும்”.

     

    குறிப்பிட்ட அந்த இடம் வந்தவுடன் கண்மணியின் அம்மா கவனித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மணிமொழி குழுவினர் மெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர். கண்மணியும் வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்தாலும் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவளையறியாமல் கால்கள் அச்சத்தில் பின்னிக் கொண்டன. வேகம் குறைய ஆரம்பித்தது. கீழே விழப் போனவளை ஒரு நொடியில் அணைத்து காப்பாற்றி விட்டு முன்னேறிச் சென்ற தமிழ்ச் செல்வியைப் பார்த்து கூனிக்குருகி நின்றாள்.

    “தமிழ்ச்செல்வி முதல் இடத்தைப் பிடித்து விட்டாள்” என்ற அறிவிப்பு வருகிறது.

    கண்மணிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

    கண்மணி மனதிற்குள் : நல்ல வேளை. கூடா நட்பினால் நல்ல தோழியை இழக்க நேர்ந்த விபத்திலிருந்து தப்பி விட்டோம்”

    அம்மாவும் அதைப் புரிந்து கொண்டு அவள் முதுகில் அன்பாக தட்டிக் கொடுத்தார்.

    இறுதிக் காட்சி

    “நண்பர்களே, கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை புரிந்து கொண்ட கண்மணி அதைத் தன் வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொண்டாள். நமக்கும் இது ஒரு பாடம்தானே?

    நன்றி, வணக்கம்.”

     

     

    Share
  • அழகைப் பார்த்து ஏமாந்த மீன்!! (நீதி கதை)

    ஏ. எஸ். கோவிந்த ராஜன்

    இயற்கை எழில் நிறைந்த அழகான ஊர் தான் புதூர். அங்கு ஏரி, குளங்கள் என நீர் நிலைகள் நிறைந்திருக்கும். அங்குள்ள ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. அக்குளத்தில் உள்ள மீன் குட்டிகள் எப்பொழுதும் கூட்டமாக விளையாடிக் கொண்டிருக்கும்.

    அதில் ஜானி, பட்டு என்ற இரு குட்டி மீன்கள் விளையாடிக் கொண்டிருந்தன. ஜானி, ஏய்! பட்டு எங்கே என்னைப் பிடி பார்க்கலாம் என்றது. அதற்கு பட்டு, என்னிடமே சவால் விடுகிறாயா? இப்பொழுது பார். ஒரு நொடியில் உன்னை பிடிக்கிறேன் என்று கூறி விளையாடிக் கொண்டே கரையோரம் வந்தன.

    அச்சமயம் கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து, ‘ஏய் ஜானி, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான்.” மேலும் அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தாலே பயமாக இருக்கிறது. வா! ஜானி நாம் உள்ளே சென்று விடலாம் என்று கூறியதும், எல்லா மீன்களும் குளத்திற்குள் வேகமாக சென்றுவிட்டன.

    வேக வேகமாக மீன்கள் உள்ளே சென்றபோது, குட்டிகளா! ஏன் இப்படி அவசரமாக ஓடி வருகிறீர்கள்? என்று அங்குள்ள ஒரு பெரிய மீன் கேட்டது. கரையோரத்தில் ஒரு காகம் இருக்கிறது. அக்காகத்தின் நிறம் மற்றும் குரலைக் கேட்டால் பயமாக இருக்கிறது. அதனால்தான் வேகமாக ஓடி வந்தோம் என்றது, பட்டு.

    அதற்கு அந்த பெரிய மீன் காகத்தால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றது. ‘உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப்பற்றி தவறாக நினைக்கக்கூடாது” என்று பெரிய மீன் கூறியது. மற்ற மீன்குட்டிகள் இந்த தாத்தாவுக்கு வேறு வேலையே இல்லை. எப்பொழுதுமே உபதேசம் தான் என்று கூறிவிட்டு சென்றன.

    தினமும் காகத்தைப் பார்த்து கரைக்குச் செல்லாமல் குளத்தினுள்ளேயே விளையாடிக் கொண்டிருந்தன, மீன்கள். சில நாட்களுக்குப் பிறகு குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்திருந்தது.

    அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய்! அங்கே பாருங்கள். வெள்ளை நிறத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் அலகு நீளமாக மட்டுமில்லாமல் கூர்மையாகவும் உள்ளதே! அதனுடைய நடையைப் பார் என்று கொக்குவை வர்ணித்துக் கொண்டிருந்தது.

    மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது, கொக்கு. உடனே மீன் குட்டிகள் கொக்குவைப் பார்த்து நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், உங்களது அலகை தொட்டுப் பார்க்கலாமா? என்று ஒரு மீன் குட்டி கேட்டது.

    அக்குட்டிமீன் அவ்வாறு கேட்டதும் கொக்கு மகிழ்ச்சியில் மூழ்கியது. உடனே, கொக்கு தொட்டுப் பார் என்று கூறியது. ஒரு மீன் குட்டி கொக்கிடம் சென்றதும், கொக்கு அந்த மீனை கவ்விக் கொண்டது. நன்றாக மாட்டிக்கொண்டாயா? என்றது.

    கொக்கிடம் மாட்டிய மீன் ஆ! என்னை விட்டிவிடுங்கள்! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குட்டிகள் ஆபத்து ஆபத்து வேகமாக ஓடுங்கள் என்று அனைத்து மீன்களும் குளத்திற்குள் சென்றன. ஆனால், அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது. மற்ற மீன் குட்டிகள் அந்த தாத்தா மீன் சொன்னது சரிதான்.

    அழகை மட்டும் பார்த்து ஒருவருடன் பழகக்கூடாது என்று அனைத்து மீன்களும் உறுதியெடுத்துக் கொண்டன. அன்று முதல் அனைத்து மீன் குட்டிகளும் கவனமாக இருந்தன. மகிழ்ச்சியாக குளத்தில் வாழ்ந்து வந்தன.

    நீதி : அழகற்று இருப்பது எல்லாம் தீயதுமல்ல. அழகாக இருப்பது எல்லாம் நல்லதுமல்ல.

    Share
  • திறமையால் உயிர் தப்பிய குரங்கு!! (நீதி கதை)

    ஏ. எஸ். கோவிந்த ராஜன்

    திறமையால் உயிர் தப்பிய குரங்கு!!

    ஒரு ஆற்றின் கரையோரத்தில் பெரிய நாவற்பழ மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் குரங்கு ஒன்று வசித்து வந்தது. ஒரு நாள் ஆற்றில் வசிந்து வந்த பெரிய முதலை ஒன்று அந்த நாவல் மரத்திற்கு அருகில் வந்தது. குரங்கு முதலையை பார்த்து, முதலையே! அதிக சுவையுடைய நாவற்பழங்களை நீயும் ருசித்துப்பார் எனக்கூறி முதலைக்கு நாவற்பழங்களை கொடுத்தது.

    அன்றுமுதல் முதலையும், குரங்கும் நண்பர்களாகினர். தினமும் முதலை குரங்கைப் பார்க்க ஆற்றின் கரைக்கு வந்துவிடும். இருவரும் மகிழ்ச்சியாக கதைகளை பேசியும், வாழ்க்கை பற்றிய கருத்துகளை பகிர்ந்தும் வந்தன. மேலும், தான் சாப்பிட்டது போக மீதமிருந்த நாவற்பழங்களை முதலை தன் மனைவிக்கும் எடுத்துச் செல்லும்.

    ஒருநாள் முதலையின் மனைவி, அமிர்தம் போல் சுவையுடைய இந்த நாவற்பழங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது? என்றது. ஆண் முதலை, எனக்கு நெருங்கிய நண்பனான குரங்கு ஒன்று அன்பாக இந்தப் பழங்களை தருவதாக கூறியது. பின் முதலையின் மனைவி அமிர்தம்போல் இருக்கும் இப்பழங்களை எப்போதும் சாப்பிடும் அந்த குரங்கின் இதயமும் இதைப் போலவே சுவையாகத்தானே இருக்கும் அல்லவா? அதனால் அக்குரங்கை கொன்று அதனுடைய இதயத்தை கொண்டு வருமாறு கூறியது.

    உடனே ஆண் முதலை மனைவியிடம், குரங்கு நம்மிடம் நண்பனை போல் பழகுகிறது. மேலும் நம் பசிக்கு பழங்களை கொடுத்து உதவிகளை செய்கிறது. இவ்வளவு உதவிகள் செய்யும் குரங்கிற்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. அதனால் இந்த எண்ணத்தை இதோடு விட்டு விடு என்று கோபமாக கூறியது.

    அதற்கு முதலையின் மனைவியோ, அந்த குரங்கை எனக்காக கொன்று அதன் இதயத்தை கொடுக்க வேண்டும் என கண்டித்துக் கூறியது. அந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஆண் முதலை கண்ணீர் விட்டு வருந்தியது. எனக்கு பழங்கள் கொடுத்த குரங்கை நான் எப்படிக் கொல்வது? என வருத்தத்தில் குரங்கைப் பார்க்கச் சென்றது. வெகுநேரம் கழித்து முதலை கவலையோடு வருவதைக் பார்த்த குரங்கு, நண்பனே! ஏன் சோகமாக இருக்கிறாய்? என்று கேட்டது.

    அதற்கு அந்த முதலை, உன்னிடம் பழங்களை வாங்கிச் சாப்பிடும் நான் இத்தனை நாட்களாகியும் உன்னை வீட்டிற்கு அழைத்து வராததால் என் மனைவி என்னை திட்டிவிட்டாள் என்று கூறியது. அதனால் நீ உறுதியாக என் வீட்டிற்கு வர வேண்டும் என வற்புறுத்தியது. குரங்கும், சரி என ஒத்துக்கொண்டது. குரங்கும் ஆனந்தமாய் முதலையின் முதுகில் ஏறிக்கொண்டது.

    முதலை நடு ஆற்றை தாண்டி சென்றதற்கு பின் குரங்கிடம் உண்மையைக் கூறத் தொடங்கியது. நண்பனே! என்னை மன்னித்து விடு. என் மனைவிக்காக உன்னை நம்பவைத்து, உன்னைக் கொல்வதற்காக வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்றது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குரங்கு, நான் உங்களுக்கு என்ன தீங்கு செய்தேன்? என்னை ஏன் கொன்றுவிடுவதாக கூறுகிறீர்கள் என பயத்துடன் கேட்டது. நீ கொடுத்த நாவற்பழங்கள் அமிர்தம் போல் ருசியாயிருந்தன. ஆகவே, உன் இதயத்தை ருசித்துப் பார்க்க ஆசையாக உள்ளது என தன் மனைவி கூறியதை குரங்கிடம் முதலை கூறியது.

    உடனே சமயோசித புத்தியுள்ள குரங்கு, அதை நீ கரையிலேயே கூறியிருந்தால், நாவல்மரத்தின் அடியில் மறைத்து வைத்திருக்கும் ருசி மிகுந்த நாவற்பழங்களை அண்ணிக்காக எடுத்து வந்திருப்பேனே! அந்த ருசி மிகுந்த நாவற்பழங்களை சாப்பிட்டால் நீண்ட காலம் இளமையுடன் உயிர் வாழலாம்! என்றது குரங்கு. அதைக் கேட்டதும் முதலை, நண்பனே! அந்த நாவற்பழங்களை எனக்குக் கொடு. உன்னை நாவல் மரத்தடிக்கு திரும்ப அழைத்துச் செல்கிறேன் என்று கூறி இரண்டும் கரைக்கு வந்தது.

    முதலை, நாவற்பழங்களை தருமாறு கூறியது. ஆனால் குரங்கோ முதலையிடம் கோபமாக, உன்னை நல்ல நண்பனாக நினைத்தேன். ஆனால், நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய். உன் குணம் என்னவென்று எனக்கு இப்போது புரிந்தது. இனி இந்த நாவல்மரத்தடிக்கு வராதே! என்றது. அதைக்கேட்டு முதலை மிகுந்த வெட்கமடைந்து அந்த இடத்தை விட்டுச் சென்றது.

    நீதி : ஆபத்தில் நேரத்தில் புத்தசாலிதனமாக நடந்து கொள்வதே சிறப்பு.

    Share
  • நீதி தவறிய மன்னன்..!! (நீதி கதை)

    ஏ. எஸ். கோவிந்த ராஜன்

    நீதி தவறிய மன்னன்..!!

    பூஞ்சோலை என்னும் நாட்டை மதியழகன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அரசரின் மனைவி ஓரளவிற்கு இசைஞானம் அறிந்தவள். தன்னைத் தவிர வேறு யாரும் இசையில் ஞானமுள்ளவர் இல்லை என அவள் நினைத்திருந்தாள்.

    ஆண்டுதோறும் கோவில் திருவிழாவில் இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அத்திருவிழாவில் ராமர் என்ற இசைக்கலைஞர் மிகவும் அழகாக இசை நிகழ்ச்சி நடத்துவார். அவர் இறந்த பின், அவரது மனைவி இறைவனைப் புகழ்ந்துப்பாடுவாள். சில வருடத்திற்குப் பிறகு அரசியாரின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ராமரின் மனைவி தன்னை பாட அனுமதிக்காததால் மிகுந்த வேதனை அடைந்தாள். பின் சில காலம் எதிலும் கலந்து கொள்ளாமல் தனித்து நின்றாள்.

    இந்த ஆண்டும் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வருடம் எப்படியாவது இறைவனைப் புகழ்ந்து பாட வேண்டும் என முடிவு செய்தாள், ராமரின் மனைவி. வழக்கம்போல் திருவிழாவில் அரசியாரின் இசைக் கச்சேரி கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் அரசியாரின் இசையை ரசித்து கேட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென்று மக்கள் கூட்டம் குறையத் தொடங்கியது. அதைப் பார்த்த அரசருக்கு எதுவும் புரியவில்லை. எதற்காக மக்கள் அனைவரும் எழுந்துச் செல்கிறார்கள் என்று பார்க்கச் சொன்னார். அங்கு சென்று பார்த்தால் ராமரின் மனைவி இறைவனை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தாள். இதைக் கண்ட அரசியார் கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்.

    அரசி தன் கணவன் மதியழகனிடம் எவ்வளவு தைரியமிருந்தால் இவள் எனக்கே எதிராக இசைப்பாடுவாள். இவளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என கோபமாகக் கூறினாள். தன் மனைவியை திருப்திபடுத்துவதற்காக ராமரின் மனைவியை பழிவாங்க நினைத்தார், அரசர்.

    அச்சமயத்தில் அரசர் இசைக்கலையில் சிறப்புப்பெற்ற மணிமேகலை என்பவளை அழைத்து இசை நிகழ்ச்சி வைத்தார். நிகழ்ச்சியின் முடிவில், என்னுடன் போட்டியிட யார் தயார்? என்றாள். உடனே மன்னன் ராமரின் மனைவியைப் பார்த்து, அம்மையே! தாங்கள் தான் நம் நாட்டின் பெருமையை நிலைநாட்ட முடியும் என்றார்.

    அதற்கு ராமரின் மனைவி, அரசே! நம் நாட்டின் பெருமைக்காக கலந்து கொள்கிறேன் என்றார். உடனே போட்டி பற்றிய விதிமுறைகளை அரசர் அறிவித்தார். இப்போட்டி மூன்று நாட்கள் நடைபெறும். நடுவர் தீர்ப்பே இறுதியானது. மணிமேகலை வெற்றி பெற்றால் அரசவைக் கலைஞராகும் தகுதியும், ராமரின் மனைவி தோற்றால் நாடு கடத்தப்படுவதாகவும் மன்னர் அறிவித்தார்.

    அரசரின் சதிதிட்டத்தைப் பற்றி புரிந்துகொண்ட ராமரின் மனைவி, இறைவனிடம் சென்று இறைவா! நீ மட்டுமே எனக்குத் துணை என்று கூறி அழுதாள். தொடர்ந்து மூன்று நாட்கள் போட்டி நடைபெற்றது. மூன்று நாட்களும் மணிமேகலையே சிறந்தவள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அப்போது ஒரு முதியவர் எழுந்து நடுவர்களிடம் எதன் அடிப்படையில் மணிமேகலையின் இசைதான் சிறந்தது என்று தீர்ப்பு வழங்கினீர்கள்? மேலும், மணிமேகலையின் இசை, ராமரின் மனைவி இசைத்த இசை இரண்டிற்கும் இடையேயான நிறை, குறைகளைத் தெளிவாக விவரித்தார். ராமரின் மனைவி இத்தனை சிறப்பாக இசைக்க, அவரை எப்படி தோற்றவர் என்று அறிவித்தீர்கள்? நடுவர்கள் மனசாட்சியோடு தீர்ப்பு வழங்காமல் பொய்யாக தீர்ப்பு வழங்குவது சரியா? என்று கேட்டார்.

    இசைக்கும், இறைவனுக்கும் தொடர்பு உண்டு. இசைக்கு அநீதி செய்வதன் மூலம் இறைவனையே அவமதிக்கிறீர்கள் என்றார் முதியவர். இதைக்கேட்டு கடும் கோபத்திற்குள்ளான அரசர் அம்முதியவரை கைது செய்யுமாறு கூறினார். காவலர்கள் அவரை கைது செய்ய சென்றதும் அவர் அங்கிருந்து மறைந்து போனார். பின் கோவிலில் இருந்து பெரும் சத்தம் கேட்டது. முதியவர் இருந்த இடத்தில் இறைவன் காட்சியளித்து மறைந்தார்.

    அதிர்ச்சியடைந்த அரசர் தன் தவறை மன்னிக்கும்படி இறைவனிடம் வேண்டினார். தன் மனைவிக்காக தான் செய்தது தவறு எனப் புரிந்து கொண்டு, தன் மகனிடம் அரச பொறுப்பை ஒப்படைத்து அரச வாழ்வைத் துறந்து ஆன்மீக வாழ்விற்குச் செல்வதாக அறிவித்தார்.

    Share