அவள் பறந்து போனாளே
சு.கோதண்டராமன்
சேற்றிலே பிறந்தோம் நாங்கள் செந்தாமரைகள் அல்ல
காற்றிலே பறந்தே வாழ்ந்தோம் கருடனோ கழுகோ அல்ல
மூச்சிலே இசையை வைத்தான் முழுமுதற் கடவுள் எமக்கு
என்னுடை அன்பின் மனையாள் இனிதாகப் பிள்ளை பெற்றாள்
கவுரவர் பெற்றோர் போலே கருவத்தால் சிறகடித்தோம்
மறுமுறை மனைவி கர்ப்பம், மட்டிலா மகிழ்ச்சி கொண்டோம்
உடலிலே வலிமை குறைய உரியதோர் மருந்தை நாடி
உயிரினும் இனியாள் சென்றாள் உயர்ந்த ஒர் இல்லத்துள்ளே
மருந்தினை அருந்திச் சற்றே மயக்கமாய் இருந்த வேளை
ராட்சசக் கரமொன்றங்கு காட்டமாய் அடித்தது அவளை
அவளுடல் உருத் தெரியாமல் அவலமாய் நசுங்கிவிட்டாள்
அந்தகோ இறைவா நாங்கள் செய்திட்ட பாவம் என்ன
மருந்தினை நாடிச் செல்லல் மன்னிப்பு இலாத தவறா?
மனைவியை இழந்து வாடும் ஆண் கொசு துயரம் காணீர்.
(பெண் கொசு மட்டும் தான் கடிக்கிறதாம். அதுவும் ஒரு முறை முட்டை இட்ட பின், மறு முறை முட்டை இடுவதற்கு அதற்கு மனித ரத்தம் உதவுகிறதாம்.)
கொசுவின் ஆளுமை அதிகம். ஆகையால் கோசு என்று புது நாமம்!