பழ.நெடுமாறன் நலம் வேண்டி வழிபடுவோம்

0

நோயுற்றிருக்கும் பழ.நெடுமாறன் நலம் வேண்டி வழிபட அழைக்கிறேன்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை, இலங்கை

87 வயதைக் கடந்த திரு. பழ நெடுமாறன் ஐயாவுக்குச் சென்னையில் அரசு மருத்துவமனையில், முள்முடி நோய்த் தொற்று காரணமாக மருத்துவம் செய்கிறார்கள்.

எனக்கு 40 ஆண்டுக்கால நண்பர்.

1980இலேயே ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் குரல் கொடுத்தவர்.

திருவாளர்கள் குட்டிமணியை, தங்கத்துரையை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்றவர்.

திருவாளர்கள் பிரபாகரனையும் உமாமகேசுவரனையும் பிணையில் எடுத்து வெளிக்கொணர்ந்தவர்.

இராமேஸ்வரத்திலிருந்து ஈழத் தமிழர் நலம் காக்கப் படகுப் பயணத்தைத் தொடங்கியவர்.

திரு. அமிர்தலிங்கத்தை இந்திரா காந்தியிடம் அழைத்துச் சென்று இலங்கை சிக்கலை எடுத்துச் சொல்லி, இந்திராகாந்தியை ஈழத்தமிழர்கள் சார்பாகத் திருப்பியவர்.

ஈழத் தமிழர்கள் தொடர்பாக நூற்றுக்கும் கூடுதலான வெளியீடுகளை, அவற்றுள் சில ஓராயிரம் பக்கங்களுக்கும் கூடுதலான பக்க நூல்கள், வெளியிட்டவர்.

50 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழருக்காகத் தன்னுடைய உடல், பொருள், செல்வாக்கு அனைத்தையும் காலம் கருதாது, இரவு பகல் எனவும், தூரம் கருதாது இந்தியா முழுவதும் சென்று உலகத்தில் பல நாடுகளுக்கும் சென்று ஆதரவு திரட்டியவர், கடுமையாக உழைத்தவர்.

மதுரையில் வட இந்தியத் தமிழர்களையும் ஏனைய மாநிலத் தலைவர்களையும் அழைத்து, ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு நடத்தியவர். திருவாளர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய், என்.டி. இராமராவ் என அந்த மாநாட்டுக்கு, கட்சி மாச்சரியங்களுக்கு அப்பால், அனைத்து இந்தியத் தலைவர்கள் வந்திருந்தனர்.

தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு நடத்தி, விழிப்புணர்வை உருவாக்கியவர்.

தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கியவர்.

அவருடைய திருமகள் உமா, ஈழத் தமிழர்களுக்காக ஆற்றும் பணிகள் பட்டியலிட முடியாத அளவு நீளும்.

திரு. பழ.நெடுமாறன் நோயுற்று இருக்கிறார், மருத்துவமனையில் இருக்கிறார்.

முன்பு நோயுற்றிருந்த பொழுதெல்லாம் அவரை மருத்துவமனையில் சென்று பார்க்கும், ஆறுதல் சொல்லும், அவருக்குத் தேவையானது செய்யும் வாய்ப்புகளைப் பெற்றவன்.

இன்று போக முடியாமல் தவிக்கிறேன்.

21.02.2020 ஞாயிற்றுக்கிழமை காலை நல்லூர் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனாய முருகன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்த முயல்கிறேன்

சிறப்பு வழிபாட்டில், கட்சி, கருத்து வேறுபாடுகளை ஒதுங்கிப் புறந்தள்ளி, தமிழர் அனைவரும் வழிபாட்டில் கலந்துகொள்க.

அப் பெரியார் நலம் பெற, வழிபடுவோம். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அருள்மிகு வள்ளி தெய்வானை உடனாய முருகன் திருக்கோயிலுக்கு வருமாறு ஈழத் தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *