-மேகலா இராமமூர்த்தி

புகைப்படக்கலைஞர் திரு. மாரியப்பன் கோவிந்தன் எடுத்திருக்கும் இந்தப் படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து  தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 296க்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவரும் என் நன்றிக்கு உரியர்!

கூடைகளை ஏற்றிக்கொண்டு வேகாத வெயிலில் உடல்நோக வண்டிமிதித்துச் செல்லும் இந்தத் தோழரின் உழைப்பை வந்தனை செய்வோம்; உழைக்காது வீணில் சோம்பியிருப்போரை நிந்தனை செய்வோம்!

உழைப்பின் மகத்துவம் சொல்லும் இந்தப் படத்திற்குச் சகத்திலுள்ள கவிஞரெல்லாம் கவியெழுத வாருங்கள்! நற்சிந்தனைகளைத் தாருங்கள்! என்று அன்புபாராட்டி அழைக்கின்றேன்.

*****

”சிறுதிவலைகள் பலசேர்ந்து பெருவெள்ளம் ஆவதுபோல் எடைகுறைந்த கூடைகளும் அளவில் அதிகமானால் தள்ளுவண்டி தடம் மாறும்!” எனும் அரிய கருத்தை எளிய சொற்களில் விளக்கியிருக்கின்றார் திருமிகு. இராதா.

அவரே தம்முடைய இரண்டாவது கவிதையில் இப்படத்தை வேறொரு கோணத்தில் அணுகி, ”வண்டிமிதித்து வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டும் அவலப் பிழைப்பு இவரோடு போகட்டும்; இவரின் அடுத்த தலைமுறையாவது பசியின்றி நல்வாழ்வு வாழட்டும்!” என்றுரைத்து மனிதவாழ்வைத் தன் விருப்பப்படி எழுதிச்செல்லும் விதியின் போக்கையும் வியக்கின்றார். 

வண்டி கூறும் வாழ்க்கைப் பாடம்

சிறு திவலைகள் சேர்ந்து
சிறு துளிகளாய் மாறி
பெருவெள்ளமாகிறது போல

எளிதான எடை கொண்ட
கூடைகள் குவியலாய்ப்
பலதாய்ப் பெருகிப் பாரமாகத்
தள்ளுவண்டிகூடத் தடம் மாறும்

அதுபோலத்தான்…
நம் வாழ்க்கையும்

அமிர்தமே ஆனாலும் அளவிற்கு மிஞ்ச
நஞ்சாகி விடும்
எதற்கும் அளவீடு உண்டு
எவை தேவையோ அதனைக் கொண்டு
எளிமை வாழ்க்கை கண்ட
மா மனிதர் நம் மண்ணில் வாழ்ந்தவர்கள்
எண்ணில் அடங்கார்…

இக் கருத்தினை
ஏட்டில் வடித்துத் தந்த நீதி நூல்கள்
எங்கோ முடங்கிக் கிடக்கிறது
ஏராளமாய் முதிர் கனிகளாய்ப்
பரிசங்கள் படாமல் இன்னும்…

தேடி எடுத்து
இளைய இத்தலைமுறைக்குக்
கொடுக்கும் கடமை நமதே!

*****

விதியா இல்லை வினையா?

விதியை வெல்ல முயன்ற இவனது
மதிகூடச் சதி செய்துவிட
வயிற்றை நிரப்ப வழி தேடி
வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்ட…
சோர்வடைந்தாலும் சோற்றுக்காகப்
பசியுடன் தன் பிள்ளைகளுக்காக
மிதிக்கிறான் மிதிவண்டிச் சக்கரத்தை!

இவனது விதி இவனோடு போகட்டும்!
இவனது தலைமுறையாவது வாழட்டும் பசியில்லாமல்….

இதற்கு விடை இன்னும்
வினாக்களாகவே நிற்கின்றன!
விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள்
விண்ணைத் தொட்டாலும்….

வெல்ல முடியவில்லை இவ்விதியை
விடையையும் தேடித் தர முடியவில்லை
விஞ்ஞானிகளால் அரசியல் தலைவர்களால்

இது விதியின் சதியா இல்லை
இது மதியின் கதியா அல்லது
இவனது வினையின் பயனா?

இன்னும் இங்கு இருக்கிறார்கள்
இவ்வறுமைக் கோட்டின் கீழே
இல்லை இதற்கு விடை ஏட்டினிலே
இருப்பவரின் இதயங்களில் தான்
இருக்கிறது இதற்கு விடை…

அதுவரை மிதிவண்டிகள் ஓடும்
ஆறு வழிச் சாலையிலும்
அகல வழிச் சாலையிலும்…

*****

”இந்த வண்டிக்காரர் தம் வாழ்க்கை பாரத்தைக் குறைக்க வண்டியில் ஏற்றுகின்றார் அதிக பாரம்! இவர் போன்றோருக்கு இரங்குங்கள்; இவ்வண்டியில் ஏறாது இறங்குங்கள்!” என்று கவிநயத்தோடு வேண்டுகோள் விடுக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

பாரம்…

வண்டிப் பயணங்கள்
வந்திடும் வாழ்க்கையில் பலவாய்,
வண்டியோட்டிக்கு
வாழ்க்கைப் பயணமே
வண்டியானது…

வாழ்க்கை பாரத்தைக் குறைக்க
வண்டியில் ஏற்றுகிறார்
அதிக பாரம்…

மிதிக்கும் கால்களுக்கு
வலுவில்லாதபோதும்
வலு வந்துவிடுகிறது,
வாழ்க்கை வண்டியும்
சேர்த்து ஓட்டுவதால்…

இவர் போன்றவர்களுக்கு
இரங்குங்கள்,
ஏறிவிடாதீர்கள் வண்டியில்-
இறங்குங்கள்…!

*****

”சந்தேகத்தின் பாரம் நம்பிக்கையின் அச்சை முறிக்காதவண்ணம் நம்பிக்கையோடும் நேரிய எண்ணங்களோடும் நம் பயணத்தைத் தொடர்வோம்!” என்று பொருத்தமான உவமைகளோடு திருத்தமாகக் கவி வடித்திருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

பயணம் தொடர்!

எதிர்பார்த்துக் காத்திருந்து
ஏங்கித் தவித்து ஏமாறி,
காயத்தின் வடுக்களைக்
காலமெலாம் சுமந்து
மயங்கித் தவித்து
மனமொடிந்து மாள்கின்றோம்

மெய்யன்புத் தேடலிலே
துரோகத்தின் தாக்கத்தால்
தூக்கி எறியப்படும் நேரம்
சந்தேகத்தின் பாரம்
நம்பிக்கையின் அச்சை
முறிக்காமல் காத்திருப்போம்!

நடக்காதவற்றை நீக்கி
நம்பிக்கை மனதிருத்தி
நேர்மறை நல்லெண்ணம்
நமதாக்கித் தொடர்ந்திருந்து
நாளைய பொழுதை நமதாக்கி
நம் பயணம் நாம் தொடர்வோம்!

*****

சிந்தனை நாரிலே சீரிய சொன்மலர்களால் கவிஞர்கள் தொடுத்துத் தந்திருக்கும் மணமிகு பாமாலைகளை மனமாரப் பாராட்டுகின்றேன்.

அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுபெற்றிருப்பது…

வாழ்வென்னும் பாதையில் ஓடும் எங்கள் வண்டி
வயிறுதனைக் காக்கவே வலி்களையும் தாண்டி

ஏற்றப்படும் சுமைகளோ இங்கே பலவாகும்
ஏற்றுக்கொண்டு சுமப்பதே எங்கள் வாழ்வாகும்

கூலி பெறும்பொழுது குடும்பமது நினைவில் வரும்
குண்டு குழிச் சாலைகளும் குதூகலத்தைத் தரும்

பாவி எங்கள் பாதையிலே அந்த டாஸ்மாக் வரும்
பாதிப் பணம் செலவழியப் பள்ளங்கள் பெரிதாகும்

புயல்மழை வரும்பொழுது ஒதுங்குவதற்கும் இடமில்லை
பொந்துக்குள் வாழும் எலிபோன்றதே எங்கள் நிலை

உழைத்து உழைத்து வியர்த்தாலும் உறக்கம் வருவதில்லை
உண்பதற்கு மூன்று வேளை உணவுகூடக் கிடைப்பதில்லை

இலவச அரிசியெல்லாம் எதற்கென்று ஏசுகின்றார் பலர்
அதுகூட இல்லையெனில் என்னவாகும் எங்கள் நிலை?

வாக்குத் தந்து வாக்குக் கேட்டு எத்தனையோ தேர்தல்கள் வரும்
எங்கள் வாழ்க்கையில் என்றுதான் நல்லதொரு மாற்றம் வரும்?

கூடைகூடைகளாய் சுமைகள்தான் தினம் பெருகிவிடும்
விடைதெரியா வினாவுடன் பயணமும் தொடர்ந்துவிடும்!

”உழைத்துழைத்து வியர்த்தாலும் உறக்கமது வருவதில்லை; உண்பதற்கு மூன்றுவேளை உணவுகூடக் கிடைப்பதில்லை. இலவச அரிசி எதற்கென்று ஏ(பே)சுவோரே! அதுகூட இல்லையெனில் எங்கள் நிலை என்னாகும்?” என்று ஏழைபடும் பாட்டைத் தம் பாட்டில் நேர்த்தியாய்ப் பதிவுசெய்திருக்கும் திரு. கொ.வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 296இன் முடிவுகள்

  1. இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக எனது கவிதை் தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி.!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *