உருகிக் கொண்டிருக்கிறேன்
கீதா மதிவாணன்
இறுகிக் கிடக்கிறேன் என்பதாலேயே
உணர்வற்றுக் கிடப்பதாய் உள்ளர்த்தம் கொள்கிறாய்!
முகமெதிர்கொள்ள விரும்பாது,
முன்னிலையில் நில்லாக் காரணத்தால்
முதுகெலும்பில்லாதவன் என்றே
ஏறி மிதித்தென்னை ஏளனம் செய்கிறாய்!
நினைவில் வைத்துக் கொள்,
ஆவியாய்ப் போனாலும் ஆயுள் நீடிக்கும்
நீரைப் போன்றவனே நானும்!.
பனியாய் உறைந்திருக்கிறேன் இன்று!
பாறையாய் அன்று!
உமிழும் சுடுசொற்களால்
பெரும் உக்கிரம் பெற்று
உருகிக் கொண்டிருக்கிறேன் உள்ளே!
வலிந்து உதைக்கும் பாதங்களை
வெடுக்கென்று பற்றியிழுத்து
உள்வாங்கும் நாளொன்று உருவாகுமுன்னே…
தாக்குதல் விடுத்து
தற்காத்துக் கொண்டு ஓடிவிடு!
ஆவியாய்ப் போனாலும் ஆயுள் நீடிக்கும்!
அச்சமாகுதே, ஆவி!
நல்லதொரு கவிதை. புதிர் மண்டியுளது ஒரு வியப்பு. பல விதமாக உரை கூற வாய்ப்பு உண்டு.