கனிமவாசன்

“வணக்கம், வேதி…..”

நண்பர் கணிதநேசன் (கணி) வந்திருப்பதை உணர்ந்தார் வேதிவாசன் (வேதி).

“அடடே… வாங்க.. வாங்க. எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க…?”

“சவுக்கியம் தான். உட்காருங்க, கணி.”

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார் கணிதநேசன். அப்பொழுது, “என்ன வேதி, கிளீனர் பாட்டில ஆராய்ஞ்சுக்கிட்டு இருக்கீங்க?”

“ஒன்னும் இல்லப்பா… இந்த கிருமிநாசினியில பென்சல்கோனியம் குளோரைடு (Benzalkonium chloride) -ங்கற வேதிப்பொருள் இருக்கான்னு பார்த்தேன்.”

“என்ன திடீர்ன்னு…. வேதிப்பொருள்லாம் இருக்கான்ணு ஆராயிறீங்க”

“கணி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஒரு புதிய கண்டுபிடிப்பு பற்றி படிச்சேன். அதான்….”

“அப்படியா…. நீங்க படிச்சத எனக்கும் சொல்லுங்களேன்.”

“நிச்சயமா…. சந்தையில பல வகையான கிருமிநாசினிகள் கிடைக்குது”

“ஆமாம்… வேதி… ரோஸ், பச்சை, ஆரஞ்சுன்னு பல வண்ணங்கள்ல வருதே.”

“உம்ம்… உலகத்துல 400-க்கும் மேற்பட்ட கிருமிநாசினிகள் பயன்பாட்டுல இருக்குது.”

“ஓ…..”

“ஆமாம். இவற்றுல, பொதுவா ஐசோ புரொபைல் ஆல்கஹால், ஃபார்மால்டிஹைடு, சோடியம் ஹைப்போ குளோரைடு, குலுடரால்டிஹைடு போன்ற வேதிப்பொட்கள தான் கிருமிநாசினியா பயன்படுத்தறாங்க.”

“அப்படியா….”

“இந்த வேதிச்சேர்மங்களுக்கு பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள அழிக்கும் பண்பு இருக்கு.”

“வேதி. எனக்கு ஒரு சந்தேகம்…”

“சொல்லுங்க, கணி”

“கிருமிநாசினி வைரஸையும் சாகடிக்குமா…?”

“ஆம்ம்.. கிருமிநாசினிகள், வைரஸ்களையும் அழிக்கும்.”

“சரி சரி. நீங்க தொடர்ந்து சொல்லுங்க வேதி… “

“இம்ம்… பென்சல்கோனியம் குளோரைடு வேதிச்சேர்மமும் கிருமிநாசினியில முக்கிய மூலப்பொருளா பயன்படுத்தப்படுது. ஆனா, இது மனித தோல் மற்றும் கண்களுக்கு எரிச்சலூட்டும் தன்மை கொண்டது. அதிக அளவு பென்சல்கோனியம் குளோரைடால மீன், நீர்வாழ் முதுகெலும்பில்லா உயிரினங்கள் மற்றும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதா, சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால, பென்சல்கோனியம் குளோரைட அதிக செறிவுகளில் பயன்படுத்த முடியாது.”

²அப்ப ரொம்ப கவனமா இருக்கணும்.²

“ஆமாம். கணி, நான் படிச்சேன்னு சொன்னேனே, அந்த ஆய்வுல என்ன பண்ணாங்க தெரியுமா”

“சொல்லுங்க வேதி…”

“புற ஊதா-சி (ultraviolet-C) ஒளியை பயன்படுத்தி பென்சல்கோனியம் குளோரைடு சேர்மத்தின் நச்சுத்தன்மையை முழுமையாக குறைக்க முடியுங்கறத கண்டுபிடிச்சிருக்காங்க.”

“என்ன வேதி சொல்றீங்க. புற ஊதா ஒளியால நச்சுத்தன்மை குறையுதா…? எப்படி சொல்றாங்க?”

“சொல்றேன். முதல்ல, பென்சல்கோனியம் குளோரைடு கரைசலை புற ஊதா-சி விளக்கு ஒளியில் வைக்கறாங்க. ஐந்து நிமிடங்களுக்கு பிறகு, ஆய்வகத்துல உருவாக்கப்பட்ட மனித கார்னியல் செல்களில் (cultured human corneal cells) இந்தக் கரைசல பயன்படுத்துறாங்க. அதன்பின்னர், உயிரணு வளர்சிதை மாற்ற செயல்பாடு (cell metabolic activity) போன்ற ஆய்வுகள செய்யறாங்க. முடிவுல, பென்சல்கோனியம் குளோரைடு கரைசல் புற ஊதா-சி ஒளியால முற்றிலும் நடுநிலையாக்கப்படுவதால, மனித கார்னியல் செல்கள பாதிக்கவில்லைங்கறது தெரியவந்திருக்கு. இதுமூலமா, புற ஊதா-சி ஒளியில் வைக்கப்பட்டு பின்னர் பயன்படுத்தப்படும் பென்சல்கோனியம் குளோரைடு கொண்ட கிருமிநாசினியால, மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் தீங்குகள் வெகுவா குறையுமுன்னு ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறாங்க”

“ரொம்ப நல்லது, வேதி.”

“உம்ம்… கிருமிநாசினியோட நச்சுத்தன்மை முழுவதுமா நீங்குவதோட, அதன் செயல்திறனும் அதிகமாச்சுன்னா, எல்லா இடங்களையும் மேலும் பாதுகாப்பானதாக மாற்ற முடியும். விரைவுல இந்த கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தா நல்ல இருக்கும்.”

“ஆமாம் வேதி”

அப்பொழுது தான் வேதிவாசன் உணர்ந்தார். உடனே, “மன்னிச்சுக்குங்க கணி. நீங்க வந்த காரணத்த முதல்லையே கேட்கல…”

“அட பரவால்லப்பா… நான் கடைக்கு போறேன். நீங்களும்  கடைக்குப் போணும்முன்னு சொன்னீங்களே, அதான் கேக்கலாமுன்னு வந்தேன்.”

“ஆமாம். நான் மறந்திட்டேன். வீட்ட சுத்தம் செய்யறதுக்கு தேவையான பொருட்கள வாங்கணும். இரண்டு நிமிஷம் பொறுங்க. வந்திடுறேன்.”

கணிதநேசன், இரண்டு நிமிடத்தைக் கணக்கிடத் தொடங்கினார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *