சு. செல்வகுமாரன்

அந்திவானம் இருள் கவிழ்ந்து மழை லேசாகத் தூவானம் போட்டுக் கொண்டிருந்தது.

பள்ளி வகுப்பு முடிந்து மணியடித்ததும் அறையை விட்டு வெளியில் வந்த சுமிதா, நேராக ஒன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் தனது தம்பி குணாவை அழைத்துச் செல்வதற்காக அவனது வகுப்பிற்கு முன் வந்தாள்.

மழை சாரலாகத் தூவிக் கொண்டிருந்ததால் தனது துப்பட்டாவைக் குணாவின் தலையில் எடுத்துப் போட்டு சுமிதா, தம்பியின் தலை நனையாதவாறு தம்மோடு இறுக அணைத்துக்கொண்டு விறுவிறு என வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

காட்டில் நின்றுகொண்டிருந்த மாரியம்மாளுக்கு அந்திவானம் மப்பும் மந்தாரமுமாகக் காட்சிதரத் தொடங்கியதும் அவள் மனம் நிலை கொள்ளவில்லை. ஒடித்த விறகுகளை அவசர அவசரமாகக் கட்டி தலையில் தூக்கி வைத்தவாறு வேகமாக வீட்டுக்குப் புறப்பட்டாள்.

வரும் வழியில் சாய்ப்பு தெருவினை மாரியம்மாள் கடக்கின்ற போது, பள்ளிவாசல் வெளிப்புறச் சுவரில் மாவரிக்கும் வட்ட வடிவ அரிப்பினைப் போல தொங்கிக்கொண்டிருந்த மணியில் சிறியமுள் நான்கினையும் பெரியமுள் பன்னிரண்டையும் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.

வீட்டை நெருங்கையில் தூவானமும் போடத் தொடங்கியிருந்தது.

சுமந்து வந்த விறகினை முற்றத்தில் போட்ட மாரியம்மாள், குழந்தைகள் மழையில் நனைந்துவிடக் கூடாது என்று வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவள், காலையில் தலை துவட்டி விட்டு, கொடிக்கயிற்றில் காயப்போட்டிருந்த துண்டுகளை எடுத்துத் தோளில் போட்டவாறு வீட்டின் வடக்குப் புறமுள்ள ஓடையைக் கடந்து எட்டி நடந்தாள்.

ஆடிக்கச்சம் அப்போது தான் தொடங்கியிருந்ததால் ஓடையில் இன்னும் வெள்ளம் வரவில்லை.

எதிரில் தம் குழந்தைகள் இருவரும் வருவதைக் கண்ட மாரியம்மாள் தம் கையில் கொண்டு சென்ற இரண்டு துண்டுகளையும் இருவரின் தலையிலும் போட்டுவிட்டாள்.

சின்னவன் குணாவின் கையில் இருந்த புத்தகப்பையை வாங்கித் தோளில் மாட்ட, தானும் பள்ளிக்கூடக் குழந்தையானாள். இப்போதைக்குக் குழந்தைகளோடு புன்னகைத்தபடி மழையில் நனைந்தபடி மெல்ல நடந்தாள், மழையின் குளிர்ச்சியும் மனத்தின் ஈரமும் மாறாதபடிக்கு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *