-மேகலா இராமமூர்த்தி

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களை நாம் வரிசைப்படுத்தினால் அதில் குறிப்பிடத்தக்கதோர் இடத்தைப் பெறுபவர் வல்லிக்கண்ணன் அவர்கள். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திறனாய்வு என்று இலக்கியத்தின் பல வகைமைகளிலும் சுவடுபதித்த வல்லிக்கண்ணன், கட்டுரையாளராகத் தனிமுத்திரை பதித்த சாதனையாளராவார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திலுள்ள திசையன்விளை எனும் ஊரில் நவம்பர் 12, 1920இல் சுப்பிரமணியப் பிள்ளை, மகமாயி அம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் ரா.சு. கிருஷ்ணசாமி எனும் இயற்பெயர்கொண்ட வல்லிக்கண்ணன்.

பின்னாளில் அவர் எழுத்தாளராக மாறியபின் தமக்கொரு புனைபெயர் சூட்டிக்கொள்ள விழைந்து, தம் முன்னோர்களின் பூர்வீகமான இராஜவல்லிபுரத்திலுள்ள ’வல்லி’யையும், தம் பெயரான கிருஷ்ணசாமி என்பதன் தமிழாக்கமான ’கண்ணனை’யும் இணைத்து வல்லிக்கண்ணன் ஆனார்.

சிறு பத்திரிகைகளுடனான அறிமுகம் வல்லிக்கண்ணனுக்குச் சிறுவயதிலேயே கிடைத்துவிட்டது. பரலி சு. நெல்லையப்பரின் லோகோபகாரி எனும் சிற்றிதழும், சங்கு சுப்பிரமணியம் என்பவர் நடத்திய சுதந்திரச் சங்கு எனும் பத்திரிகையும், காந்தி, மணிக்கொடி போன்ற இதழ்களும் அவருக்குப் பள்ளி நாட்களிலேயே படிக்கக் கிடைத்தன. அதனால் இளம்பருவத்திலேயே சிற்றிதழ்களின் காதலன் ஆனார் வல்லிக்கண்ணன்.

படிப்பதில் இருந்த ஆர்வம் எழுதுவதிலும் அவருக்கு ஏற்பட்டது. எனவே, தாமும் கதைகள் கட்டுரைகள் என்று எழுதத் தொடங்கினார். அவ்வாறு பதினாறு வயதில் தொடங்கிய அவரின் எழுத்துப்பணி அவர் வாழ்வின் இறுதிவரைச் சலிப்பின்றித் தொடர்ந்தது.

பள்ளியிறுதிப் படிப்புக்குப் பின் அரசுவேலையில் சேர்ந்த வல்லிக்கண்ணன், தம்முடைய ஓய்வுநேரத்தை படிப்பதிலும் எழுதுவதிலும் செலவழித்துவந்தார். அதனால், பணியிடத்தில் மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளானார். ஒருகட்டத்தில் அரசுப்பணி தம் எழுத்துப்பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதை உணர்ந்து அதனைத் துறந்து முழுநேர எழுத்தாளரானார்.

சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன் உள்ளிட்ட சிறு பத்திரிகைகள் பலவற்றில் வல்லிக்கண்ணனின் தொடக்ககாலப் படைப்புகள் வெளிவந்தன. திருமகள், சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன் முதலிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு.

புகழ்பெற்ற குடந்தை எழுத்தாளரான தி. ஜானகிராமனின் முதல் நாவலான ‘அமிர்தம்’ கிராம ஊழியன் பத்திரிகையில் வல்லிக்கண்ணன் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான் வெளிவந்தது.

பாரதி பரம்பரையில் வந்த கவிஞர்களுள் தலைசிறந்தவரான பாவேந்தர் பாரதிதாசனின் கவியாளுமையை விளக்கும் வகையில், ’பாரதிதாசனின் உவமை நயம்’ என்ற கட்டுரைத் தொடரை கிராம ஊழியன் இதழில் எழுதினார் வல்லிக்கண்ணன். பாவேந்தரே அக்கட்டுரைகளைப் படித்துவிட்டு வல்லிக்கண்ணனைப் பாராட்டியிருக்கின்றார்.

வல்லிக்கண்ணன் என்ற பெயரே அல்லாமல் நையாண்டி பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம் எனப் பல புனைபெயர்களிலும் அவர் எழுதியுள்ளார். எனினும், வல்லிக்கண்ணன் என்ற பெயரே அவருக்கு நிலைத்தது.

ஈட்டிமுனை, கோவில்களை மூடுங்கள், எப்படி உருப்படும்?, கொடு கல்தா போன்ற சமூக விழிப்புணர்வூட்டும் கட்டுரை நூல்களை கோரநாதன் என்ற பெயரில் அறச்சீற்றங் கொண்ட இளைஞனாக எழுதியவர் வல்லிக்கண்ணன்.

’எப்படி உருப்படும்?’ என்ற நூலில் சினிமா உலகின் இயல்பையும் அது சமூகத்தைச் சீரழிக்கும் விதத்தையும் கண்டு உள்ளங் குமுறி,

”இன்றைய பட முதலாளிகளுக்குக் கலை வளரவேண்டும், நாட்டுக்கு நல்லன புரியவேண்டும், மக்களின் பண்பாட்டை உயர்த்த வேண்டும் என்பதெல்லாம் நோக்கமல்ல. இவர்களுக்கு வேண்டியது பணம், படாடோப வாழ்க்கை. செலவுசெய்கிற பணத்தைவிட அதிகமான லாபம் வருகிறது; அத்தோடு ரகரகமான உருப்படிகளை, நட்சத்திரங்களை இஷ்டம்போல் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற வெறி நினைப்பு, மன அரிப்பு முதலியவைகளால் உந்தப்பட்டு சினிமாத் தொழிலில் ஈடுபட்ட முதலாளிகளே அதிகம் காணப்படுகின்றார்கள்.” என்று சினிமா எனும் மாய உலகின் நடப்புகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார்.

மிவாஸ்கி என்ற புனைபெயரில் வல்லிக்கண்ணன் எழுதிய ’அடியுங்கள் சாவுமணி’ என்ற நூலில்,

”புதுயுகம் பிறக்கவேண்டுமா?
அடியுங்கள் சாவுமணி மக்களின் அறியாமைக்கு!
மக்களை அடிமைகளாக்க முயல்கின்ற சுரண்டும் கும்பலுக்கு!
மக்களின் மிருக வெறிக்கு!
மக்களின் கண்மூடிப் பழக்கங்களுக்கு!” என்கிறார் ஆவேசமாக.

இரஷிய இலக்கிய மேதையான மேக்ஸிம் கார்க்கியின் (Maxim Gorky) கட்டுரைகள் சிலவற்றையும், அவரின் சிறுகதைகள் சிலவற்றையும், இரஷிய இலக்கியத்தின் மற்றொரு மகத்தான ஆளுமையான லியோ டால்ஸ்டாயின் கதைகள் சிலவற்றையும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ள வல்லிக்கண்ணன், இந்தியப் பயண இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் இராகுல் சாங்கிருத்தியாயன், தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இவையல்லாமல், பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை, எழுத்தாளர்களும் பத்திரிகைகளும், வாசகர்கள் – விமர்சகர்கள், சரஸ்வதி காலம், தமிழ்ப் பத்திரிகைகள் அன்றும் இன்றும், ஊர்வலம்போன பெரிய மனுஷி, மத்தாப்பு சுந்தரி, கேட்பாரில்லை, அமர வேதனை, ஆண் சிங்கம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார் வல்லிக்கண்ணன்.

‘ஊர்வலம் போன பெரிய மனுஷி’ என்ற வல்லிக்கண்ணனின் சிறுகதை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புக்குரியது.

‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற அவருடைய நூலுக்கு1978-இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. இந்நூலைத் தாம் எழுத நேர்ந்ததன் காரணத்தை விளக்கவரும் வல்லிக்கண்ணன்,

“புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பிலான கட்டுரைகள் வரலாற்று நோக்கில் எழுதப்பட்டவையாகும். தீபம் இலக்கிய ஏட்டில் ’சரஸ்வதி காலம்’ பற்றிய கட்டுரைத் தொடரை நான் எழுதி முடித்திருந்த நேரம், அடுத்ததாக இலக்கியக் கட்டுரைத் தொடர் ஒன்றை நான் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் தீபம் இதழின் ஆசிரியர் நா. பார்த்தசாரதி.

அதே சந்தர்ப்பத்தில் எனக்குக் கடிதம் எழுதிய இலங்கை எழுத்தாளர் கலாநிதி க. கைலாசபதி அவர்கள், ”புதுக்கவிதை பற்றி ஏதேதோ விவாதங்கள் நடைபெறுகின்றனவே; அதன் வரலாறு உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியுமே; நீங்கள் ஏன் அவ்வரலாற்றை எழுதக்கூடாது?” என்று கேட்டிருந்தார். கவிஞர் மீராவும் புதுக்கவிதைகளின் தோற்றம் அவற்றின் வளர்ச்சி குறித்து நான் எழுதவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு நண்பர்கள் பலர் கேட்கவே, புதுக்கவிதையின் வரலாற்றை 1972 நவம்பர் முதல் 1975 மே முடிய தீபம் இதழில் கட்டுரைத் தொடர்களாக எழுதினேன்.

இது புதுக்கவிதையின் வரலாறுதான்; புதுக்கவிதைகள் குறித்தோ, கவிஞர்கள் குறித்தோ எழுதப்பட்ட விமர்சனமோ ஆய்வுரையோ அன்று. புதுக்கவிதைகளின் வரலாறு ஆண்டுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு இதில் எழுதப்பெற்றுள்ளது. போகிற போக்கில் ஆங்காங்கே சிற்சில இடங்களில் எனது அபிப்ராயங்களையும் மேலோட்டமாகக் குறிப்பிட்டிருக்கின்றேன்” என்கிறார்.

இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பின்னர் நூலாக வெளிவந்தது.

பாலாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் 1950ஆம் ஆண்டு வெளிவந்த ‘லைலா மஜ்னு’ என்ற படத்திற்கு வசனம் எழுதுமாறு வல்லிக்கண்ணனை அவரின் நண்பர் ஒருவர் மிகவும் வற்புறுத்தவே, அப்படத்தின் சில காட்சிகளுக்கு வசனம் எழுதியிருக்கின்றார் வல்லிக்கண்ணன். அதன்பிறகும் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால், இலக்கியத்துறையில் ஈடுபடுவதிலேயே ஆர்வங் கொண்டிருந்த வல்லிக்கண்ணன் சினிமாத் துறையில் தன்னைத் தொலைக்க விரும்பாததால் அவ்வாய்ப்புகளை ஏற்கவில்லை.

திறனாய்வாளராகவும் திகழ்ந்த வல்லிக்கண்ணன், படைப்பாளிகளைப் பாராட்டுகின்ற நேரிய அணுகுமுறையையே அதிகம் கடைப்பிடித்தார்; அதுவே அவரின் குறையாகவும் பலரால் விமர்சிக்கப்பட்டது. ”வல்லிக்கண்ணன் படைப்பாளிகளைத் தேவைக்கு அதிகமாகப் புகழ்கின்றார்; படைப்புகளின் குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்டுவதில்லை” என்ற குற்றச்சாட்டு அவர்மீது வைக்கப்பட்டது.

அதற்கான பதிலை ஒரு நேர்காணலில் அளித்த வல்லிக்கண்ணன்,

”பாராட்ட வேண்டியதைப் பாராட்டாமல் தவறவிட்டதாலே, பல நல்ல காரியங்கள் வளராமலே போய்விட்டன’’ என்று மகாகவி பாரதியே சொல்லியிருக்கிறார். பொதுவாக, பாராட்ட வேண்டியதை பாராட்டுகிற மனநிலை நம்மவர்களிடம் இல்லை. வளர விரும்புகிறவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். பாராட்டு அவர்களுக்கு மகிழ்ச்சியையும், மேலும் உழைக்க உற்சாகத்தையும் வளர்வதற்கான ஊக்கத்தையும் அளிக்கும்.” என்றிருக்கின்றார்.

உண்மையில் மிகவும் அரிதான, வியக்கத்தக்க பெருந்தன்மை இது!

‘வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள்’ என்ற அவருடைய நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் பிரிவில் பரிசு பெற்றுள்ளது.

‘வாழ்க்கைச் சுவடுகள்’ என்ற தன்வரலாற்று நூலில் தம் வாழ்வின் சுவையான அனுபவங்களைப் பதிவுசெய்திருக்கின்றார் வல்லிக்கண்ணன். இந்நூல் ஓர் அரிய வரலாற்று ஆவணமாய்த் திகழ்கின்றது.

தம் வாழ்வின் இறுதிவரை திருமணமே செய்துகொள்ளாத வல்லிக்கண்ணன், சென்னையிலும் நெல்லை இராஜவல்லிபுரத்திலுமாக மாறி மாறி வசித்துவந்தார். அவர் இராஜவல்லிபுரத்தில் தங்கியிருக்கும் காலத்தில் அவரைக் கண்டு அளவளாவிச் செல்வதற்காக அந்நாளைய இலக்கிய இளவல்களான வண்ணதாசன், வண்ணநிலவன், நம்பிராஜன், கலாப்பிரியா போன்றவர்களும், கி.ராஜநாராயணன் (கி.ரா), தீப. நடராஜன் (இரசிகமணி டி.கே.சியின் பேரன்), தஞ்சை பிரகாஷ் போன்றோரும் அடிக்கடி வந்து சென்றிருக்கின்றார்கள்.

பல எழுத்தாளர்களுக்குப் பெயர்சூட்டிய பெருமையும் வல்லிக்கண்ணனுக்கு உண்டு. வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அப்பெயர்களைச் சூட்டியவர் வல்லிக்கண்ணனே ஆவார்!

”வல்லிக்கண்ணனின் முத்து விழாவின்போது அவருக்குக் கவிஞர், நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல கிரீடங்கள் சூட்டப்பட்டன. இந்த கிரீடங்கள் அனைத்திலும் கட்டுரையாளர் என்ற கிரீடமே அவர் தலைக்கேற்ற அளவில் பொருத்தமாய்ச் செய்யப்பட்ட சரியான கிரீடமாகும்” என்று குறிப்பிடும் அமுதசுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்,

”மிக நேர்த்தியான வடிவமைப்பு, பிசிறில்லாத தெளிந்த நடை, திடீரென உரத்த குரலில் பேசாமல் கட்டுரை முழுவதையும் ஒரே தொனியில் பேசச் செய்திடும் ஆற்றல், கடும் உழைப்பைத் தந்து நம்பகமான தகவல்களைத் திரட்டித் தரும் பொறுப்புணர்ச்சி இவையெல்லாம் வல்லிக்கண்ணனுடைய  கட்டுரைகளின் பொதுத்தன்மைகள்” என்று பாராட்டுகின்றார்.

ஆடம்பரம் என்ற சொல்லையே அறியாதவராய் மிக எளிமையாய் வாழ்ந்து காட்டியவர் வல்லிக்கண்ணன். ”ஒல்லிக்கண்ணன்” என்று அவருடைய எழுத்தாள நண்பர்கள் வேடிக்கையாய்க் குறிப்பிடும் அளவுக்கு மெலிந்த தேகம் படைத்தவர்; ஆனால், அழுத்தமான நெஞ்சுறுதி உடையவர்.

இலக்கியத்துக்கே தம்மை முழுமையாக அர்ப்பணித்து எழுத்தையும் எழுதுகோலையுமே தெய்வங்களாய்க் கருதிவாழ்ந்த வல்லிக்கண்ணன், 2006-ஆம் ஆண்டு தம்முடைய 85ஆம் அகவையில் நிமோனியா காய்ச்சலால் மறைந்தார்.

தற்காலக் கவிதை இலக்கியத்தின் வரலாற்றைத் தம் எழுத்துக்களால் நிலைநிறுத்திய வல்லிக்கண்ணனும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்பார் சிறந்ததோர் தமிழ் ஆளுமையாய்!

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

https://ta.wikipedia.org/wiki/வல்லிக்கண்ணன்
http://www.geotamil.com/pathivukal/vallikkannan_a.htm
https://www.hindutamil.in/news/blogs/63933-10-2.html
http://tamilonline.com/thendral/article.aspx?aid=3121

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *