சி. ஜெயபாரதன், கனடா

புத்தாண்டு பிறந்தது! நமக்கு
புத்தாண்டு பிறந்தது!
கடந்த ஆண்டு மறையுது, கரோனா
கடும் நோய்
தடம் இன்னும் விரியுது!
உயிரிழந்த சடலங்கள் குவிப்பு
வேலை இல்லா மக்கள் தவிப்பு
உணவின்றி எளியோர் மரிப்பு
சாவோலம் எங்கும்
நாள்தோறும் கேட்கும்!
ஈராண்டுப் போராட்டம்
தீரவில்லை இன்னும்!

அத்துடன்
பூகோளம் சூடேறி
பேரழிவுகள் நேர்ந்துவிட்டன!
பேரரசுகள்
போகும் திசை தெரியாது
ஆரவாரம் எங்கும்!
பேய்மழை, பேரிடர், பெருந்தீ மயம்,,
பிரளயக் காட்சிகள்!

புத்தாண்டு பிறந்தது!
புவி மக்களுக்குப் புத்துணர்ச்சி
புத்துயிர் அளிக்கட்டும்!
வித்தைகள் சிறந்து ஓங்கட்டும்!
விஞ்ஞானத் தொழில்கள் தழைக்கட்டும்!
வேலைகள் பெருகட்டும்!
ஊதியம் கூடட்டும்!
சித்தர்கள் ஞானம் விதைக்கட்டும்!
யுக்திகள் புதிதாய்த் தோன்றட்டும்.
ஜாதிச் சண்டைகள் குறைந்து,
ஜாதிகள் சேர்ந்து வாழட்டும்!
சமய இனத்தர் கைகோர்த்து வசிக்கட்டும்!
பொரி உருண்டை ஆச்சு
பூத உலகு!
உலக நாடுகள் ஒருமைப்பாட்டில்
வாணிபம் வலுக்கட்டும்,
செல்வீக நாடுகள்,
வல்லரசுகள்
வறுமை நாடுகட்கு
எல்லா உகவியும் செய்யட்டும்.
வறுமை குன்றி, வாழ்வு தழைக்கட்டும்.
மின்சக்தி பெருகி யந்திரங்கள் ஓடட்டும்.
வேளாண்மை விருத்தி ஆகட்டும்!
லஞ்ச மனிதர் அஞ்சி அடங்கணும்!
நீர்வளம், நிலவளம், சூழ்வெளி
ஊர் மக்கள் கூடி
துப்புரவு செய்யணும்!
விடுதலை நாடு சீராய்த் தழைக்க,
குடிமக்கள் தம்தம் கடமை
முடிக்கணும்;
நாட்டுப் பொறுப்புகள் ஏற்கணும்!
தேசப் பற்று ஊறணும்!
தேச விருத்தி ஒன்றே குறிக்கோள் ஆகணும்!
தேச மக்கள் நேசம் பெருகணும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *