தையெங்கள் வாழ்வில் தலையாய மாதம்
தைபிறந்த பின்னால் வழிபிறக்கு மென்போம்
பொங்கலெனும் பரிசைச் சுமந்துவரும் மாதம்
தையெனவே எண்ணித் தான்மகிழ்ந்து நிற்போம்
தைதொடங்கி விட்டால் தைரியமும் பெருகும்
தைப்பொங்கல் வாழ்வில் தனித்திருப்பம் அளிக்கும்
உள்ளமதில் உவகை ஊற்றெடுத்து நிற்கும்
உழைப்பதனை மனமும் ஏற்றுவிடத் துடிக்கும்
பொங்கலெனும் வார்த்தை பூரிப்பைக் காட்டும்
மங்கலமாய் பொங்கி மகிழ்கவென உணர்த்தும்
சொந்தமெலாம் சேர்ந்து நிற்கவெனச் சொல்லும்
சூழ்ந்திருந்து சுவையாய்ச் சுவைக்கும்படி வைக்கும்
முற்றத்தில் கோலமிட்டு விளக்கேற்ற வைக்கும்
மூத்தோரின் கால்தொட்டுப் பணியும்படி வுரைக்கும்
அத்தையொடு மாமாவின் ஆசியையும் பெற்று
அனைத்துமே பொங்கென்று அதுவுரைத்து நிற்கும்
புதுப்பானை எடுத்துப் பொங்கலிடச் செய்யும்
பொங்கிவரும் பால்பார்க்கச் சுற்றிநிற்கச் சொல்லும்
பருப்போடு பச்சரிசி பானையிட வைக்கும்
பக்குவமாய்ச் சர்க்கரையும் சேர்த்துவிடச் செய்யும்
அறமுடைய அரசாட்சி அமைந்துவிட வேண்டும்
ஆன்மீகம் அகமதிலே அமர்ந்துவிட வேண்டும்
அறநினைப்பு அகமதிலே எழுந்துவிட வேண்டும்
அனைத்துக்கும் பொங்கல் வழிசமைக்க வேண்டும்
மாநிலத்தை வதைத்தெடுக்கும் மாநோயகல வேண்டும்
மனமார அனைவருமே அதைநினைக்க வேண்டும்
மனவமைதி மனமகிழ்வு மனநிறைவு பெருக
மனமுருகி அனைவருமே வேண்டிடுவோம் வாரீர்
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.