படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 10

1

முனைவர் ச.சுப்பிரமணியன்                  

நூல் மதிப்பீடு

முன்னுரை

முதல் மரியாதை’ படத்தைப் பற்றிக் கவிஞர் வைரமுத்து கூறுகையில் ‘தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்தற்குள் நடந்துபோன திருப்தி எனக்கு’ என்று நந்தவனத்தில் நடைபயின்று அனுபவித்த இன்பத்தை  உவமமாக்கிப் பார்த்துக் களித்த படத்தைப் பொருளாக்குவார். நான் அந்த நந்தவனத்தையே பொருளாக்குகிறேன். வைரமுத்துக்கு நந்தவனமாக இருந்தது கவிஞர் அந்தோணிசாமிக்குச் சோலையாகியிருக்கிறது. நந்தவனம் வடநூல் வழக்கு. சோலை தமிழ்வழக்கு. பழமுதிர்ச்சோலை, திருமாலிருஞ்சோலை, திருவளர்சோலை, என்பன போல!  படத்தின் பன்முகச் சுவையை அனுபவித்த வைரமுத்து பல்வகை தருக்கள நிரம்பிய சோலை நிழலின் குளிர்சசியோடு ஒப்பிட்டார்.  கவிதைப் பூக்கள் பூத்திருக்கும் இந்தச் சோலைக்கு இதற்கு முந்தைய கட்டுரையின் பொருளான கவிதை ஊருணியைத்தான் உவமமாக்க வேண்டியிருக்கும். ‘கவிதை ஊருணி’ என்னும் நூல் தணிக்கையாளர் திரு தணடபாணி அவர்களால்  எழுதப்பட்டது எனின், தமிழக்கவிதைகளால் நிரம்பியிருக்கும் இந்த நூல் ஆங்கிலப் பேராசிரியர் ஒருவரால் எழுதப்பட்டதாகும். சுவையுணர்விலும் திறனாய்விலும் எந்த நிலையிலும் சமரசம் செய்துகொள்வதை விரும்பாத நான் இந்த நூலின் கவிதைகளால் கவரப்பட்ட பாங்கினை இந்தக் கட்டுரை வழியாகச் சுருக்கமாக பந்தி வைக்க முயல்கிறேன்!.

தமிழ் இலக்கியமும் பிறதுறை அன்பர்களும்

இலக்கியப் புலமை என்பது வேறு இலக்கிய ஆர்வம் என்பது வேறு. இவையிரண்டும் வேறுபட்டனவேயன்றி முரண்பட்டவை அல்ல. ஒரு மொழியில் புலமை என்பது அம்மொழிச் செவ்விலக்கியங்களில் ஆழங்கால்படுவதும் இலக்கணத்தில் மீயுயர் புலமை பெறுவதுமாகும். வாகீச கலாநிதி, அறிஞர் மு.வ. முதலியோர் இந்த நிரலில் வருவர். இலக்கிய ஆர்வம் காரணமாகத் தமிழின் பல்வகை இலக்கியங்களைத் தாமே கற்று அவற்றின் நுண்ணியம் தேர்ந்து சுவைத்துப் பிறருக்கும் பரிமாறுபவர்கள் சிலர். சிலம்புச் செல்வர், கலைஞர், ஜீவா கண்ணதாசன், வாலி  முதலியோர் ,இந்த நிரலில் அடங்குவர். இவர்களுடைய தமிழார்வமும் உணர்ச்சியும் புலமையினும் சிறந்தது. இந்தக் குழுவில் பிறதுறை அன்பர்களும் பிறமொழிப் பேராசிரியர்களும் சில நேர்வுகளில் ஒளிர்வதுண்டு. தூத்துக்குடி பேராசிரியர் அ.சீனிவாசராகவன், மதுரை  எஸ்.இராமகிருஷ்ணன் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை முன்னாள்  தலைவர் பேராசிரியர் கா. செல்லப்பன் முதலியோர் .இதில் வருவர். கா.நமசிவாய முதலியார், ஆய்வறிஞர் வையாபுரிபிள்ளை, பல்கலைச்செல்வர் ;தெ.பொமீ முதலிய அறிஞர்கள் வழக்கறிஞராய் இருந்து தமிழ்வளர்த்த செம்மல்கள். அந்த நிரலில் வந்திருப்பவர்தான் நல்லாசிரியர் திரு. அந்தோணிசாமி அவர்கள். ஆங்கிலத்தில் முதுகலைப் படடம் பெற்று அத்துறை ஆசிரியராகப் பணியாற்றித் தமிழில் கவிதை யாக்கும் அளவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

படைப்பாளரும் படைப்பும்

ஆங்கிலத்தில் ஒன்றும் தெரியாமல் முற்றும் கற்றவர்போல் போலித் தகுதியைத் தாமே கற்பித்துக் கொள்பவர் ஒருபுறம் தமிழில் பட்டம் பெற்றிருந்தும் ‘எனக்கு ‘ஆங்கிலத்தைப்போல் தமிழ் வராது’ என்று தம்மையே ஏமாற்றிக் கொள்ளும் இரண்டுங்கெட்டான்கள் இன்னொரு புறம்! சுருங்கச் சொன்னால் ஆங்கிலத்தை அறிந்தாலேயே ஆண்டவனை அறிந்தது போன்ற மயக்கம் நிலவுகிற ஒரு போலிச் சமுதாயக் கட்டமைப்பு இது. இந்தக் கட்டமைப்பில் ஆங்கிலத்தை முறையாகக் கற்று அத்துறையில் கல்விப் பணியாற்றிவரும் ஆசிரியர் ஒருவர் தமிழைப் படிப்பது என்பது முதல் நிலை! அதில் உரைநடை இலக்கியங்களைப் படைப்பது இரண்டாவது நிலை! கவிதைகளைப் படித்துப் புரிநது கொள்வது மூன்றாவது நிலை! அதில் கவிதை படைப்பது நான்காவது நிலை! ஆங்கில ஆசிரியர் திரு அந்தோணிசாமி அந்த நிலையை அடைந்திருக்கிறார்! நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்!  சமுதாயத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டுன் என்ற அவர்தம் துடிப்பைத் தாமறிந்துணர்ந்த ஆங்கிலத்தில் வெளிப்படுத்தாமல் தாய்மொழி தமிழில் வெளிப்படுத்தயிருப்பதே ‘கவிதைச் சோலை’ பிறரை ஈரக்கின்ற தலையாய காரணியாக அமைந்துவிடுகிறது.

சான்றோர்களை மதிக்கின்ற மரபு!  

பணிவும் இன்சொல்லும் தனிமனிதனுக்கே பெருமை தருவதெனின் கவிஞனுக்குச் சொல்ல வேண்டியதில்லை. நல்ல மனிதனாக இல்லாத எவனும் நல்ல கவிஞனாக ஒளிர இயலாது.. கள்ளமில்லாத வெள்ளை உள்ளமே கண்ணதாசனின கவிதை மூலதனம். முரண்பட்ட தத்துவங்களோடு அவர் உறவு வைத்துக் கொண்டாடினார்.  எந்தச் சூழலில் எந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தாரோ அந்த நேரத்தில் அந்தக் கொள்கைக்கு நம்பிக்கையானவராக அவர் இருந்தார். அந்த உள்ளம் தன்னல மறுப்புக்கு வழிகாட்டும். காட்டவே அனைவரையும் மதிக்கச் சொல்லும். கவிஞர் அந்தோணிசாமி தன்னைச் சூழ்ந்திருப்பவர்களையும் தன் சமுதாய முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட தலைவர்களையும் பாடி மகிழ்கிறார். சுருங்கச் சொன்னால் பாடாண் திணை பாடாத கவிஞனை நாம் எளிதில் எடைபோட்டு விடலாம்.

அந்தோணிசாமி பார்வையில் பெரியார்

பெரியாரின் போராட்டக்களம் உலகளவில் சற்று வேறுபட்டது. மககளால் பல்லாயிரம் ஆண்டுகளாக ஒப்புக்கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டு வந்த வேர் பிடித்த மரபுகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த பெருமை அவருக்கு உண்டு. அந்த விசாரணைக் கூண்டில் குற்றம் சாட்டப்பட்டவற்றுள் சாதியமும் ஒன்று

“சாதிவெறி பரப்பியதால் சாதித்த கூட்டத்தில்
சாதியத்தை வேரறுத்துச சமதர்மம் படைத்திடவே
பாதித்த மக்களிடம் பாசமுடன பகுத்தறிவைப
வதத்தால் வளர்த்தாரே இறுதிவரை பெரியாரே!

என்று பாடுகிறார். பெரியாரின் எல்லாக் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எலலாக் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகக் கருத்துக்களைக் கூறிய மகான் இது வரை பிறக்கவில்லை. ஒருவன் தான் தனிப்பட்ட முறையிலும் சமுதாய அளவில் பிறருடைய பார்வையில் மதிக்கப்படுவதற்கும் முன்னேற்றமடைவதற்கும் காரணமாயிருந்தவரை அடையாளம் காண்பதும் அவரை வணங்குவதும் மானுட இயல்பு. இங்கே இராமனைப் பாடிய கம்பரும் கவிஞர்தான். சிவனைப் பாடிய சேக்கிழாரும் புலவர்தாம். இருவர் கொள்கைகளையும் ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு எறறுக் கொள்ளப்படாததால் அவர்கள் குறையுடையவர்கள் என்றோ கறைபடிந்தவர்கள் என்நோ தரமதிப்பீடு செய்யும் தகுதி நம்மில் யாருக்கும் இல்லை. பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் பரவியிருந்திருக்காவிட்டால் கைம்மைத் துன்பததைப் போக்கியிருக்க முடியாது. பெண்கள் தங்களைப் புரிந்து கொண்டிருக்க முடியாது. மனித நேயத்தின் மாண்பினை நாம் உணர்நதிருக்க முடியாது. இநத அளவிலே அந்தோணிசாமி பெரியாரைப் பாடுகிறார். பாராட்டுகிறார்.

கவிதை மதிப்பீடு

ஒரு கவிதை நூலையோ அந்த நூலில் உள்ள கவிதைகளின் தரத்தையோ அதனை எழுதிய ஆசிரியரையோ மதிப்பிடுகிறபோது அந்த நூல் முழுமையும் அருமையான கவிதைகளால் நிரம்பியிருக்க வேண்டும என்பதில்லை. எலலாக் கவிதைகளும் கவிதை மூலங்களான கற்பனை உணர்ச்சி, கருத்து வடிவம் என எல்லாக் கூறுகளிலும் செப்பம் உடையதாக இருக்க வேண்டும் என்பதில்லை. கவிஞனும் ஒரே கொள்கை சார்ந்தவனாக முரண்பாடே இல்லாதவனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும என்பதுமில்லை.காரணம் அது கவிதை. அது ஒரு பரப்புரை சாதனமன்று. அதனைப் பரப்புரையாகப் பயன்படுத்திக் கொள்வது படைப்பாளனின் தனித்திறன். கவித்துவம் நம்மை அசைத்துப் பார்த்தால் அதனைக் கவனிப்போம்! நமக்கு அறிவுரை மட்டும் கூறுவதாக இருந்தால் பழைய ஔவையாரின் ஆத்திசூடிக்குள் போய்விட மாட்டோமா? கவிதையின் ஏதாவது ஒரு கூறு நம்மை அசைத்துப் பாரத்தால் அது போதும் நமக்கு! வைக்கப்படுகிற பந்தியில் ;உட்கார்ந்து எழுந்திருப்பவரும் இருக்கிறார்கள். இலையை மார்கழி மாதத்து வானமாக்கி வழித்தெடுப்பவர்களும் இருக்கிறார்கள். அது இலைகளின் உள்ளடக்கத்தைப் பொருத்தது.

கடுகும் வேம்பும் நிறைந்த கவிதைச் சோலை

முனைப்புடைய கவிஞர் என்பாரைக் காசு நெருங்கலாம். கவிதை நெருங்காது. இரக்கம், அன்பு, மனிதநேயம், ஒப்புரவறிதல் என்னும் மனிதகுல விழுமியங்களே சாதாரண மனிதன் ஒருவனை பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. வள்ளலாரும் பாரதியும் இதற்குச் சரியான எடுத்துக்காட்டு. அவர்கள் இருவரும் மாபெரும் அருளாளர்களாயிருந்து கவிஞராய் பரிணமித்தவர்கள். அவர்கள் தேமா புளிமா கவிஞர்கள் அல்லர்! உலகியலில் நகலுக்கு; இருக்கிற மதிப்பு அசலுக்கு இருப்பதில்லை. கவர்ச்சிக்கு இருக்கிற செல்வாக்கு அடக்கத்திற்கு இல்லை

“கண்கவரும் வண்ணவண்ண விளக்கெரிய
கண்ணாடிக் கதவுகளால் கவர்ந்திழுக்க
சொன்னவிலை கொடுத்துவார்க்கும் கடைகளிலே
சொக்கிப்போய் பொருள் வாங்கும் நண்பர்களே”

என்று போலித்தனத்திற்கு மயங்கிச் செல்வாரைப் பாசத்துடன் அழைத்துப் பேசுகிற கவிஞர் என்ன சொல்கிறார்?

வீடு தேடி வருவதாலே விலை குறைத்து
விற்கத்தான் வேண்டுமென ஏதிர்பார்த்தல்
பாடுபடும் எளியோரின் வாழ்வினையே
பாதிக்கும் என்றுணர மறுப்பதேனோ?

“அஞ்ஞானத்தைத் தேடிச் சென்று அறியாமையை வாங்கிவருகிறீர்கள். வெளிசசத்துக்குள் சென்று ;இருளில் மறைகிறீர்கள்1 வீடு தேடிவரும் ஞானத்தைப் புறக்கணிக்கிறீர்கள்.” என்கிறார். பழ வணிகர்கள், பூவிற்கும தாய்மார்கள், வேர்க்கடலை விற்றுப் பிழைக்கும் முதியவர்கள்  ஆகிய  இவர்களிடம் பேரம் பேசுவதும் ஒருவகை சுரண்டல்தானே!

கவிதைச் சோலையில் கற்பனை மணம்

இயற்கையைப் பேணுவோம் என்று எல்லாரும் முழங்குகிறார்கள். விழித்துக் கொண்டே இருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துகிறார்கள். அவர்களும் தூங்கிக் கொண்டே நடக்கிறார்கள். இது ‘தினசரி மூன்று காட்சிகள்’ என்பது போல நடந்து கொண்டேதான் இருக்கிறது ஆற்றுநீரைச் சுரண்டுவது பற்றி அந்தோணி எழுதுகிறார்

‘ஆறுகளின் முதுகெலும்பு தண்ணீர’

இத்தகைய அழகியல் சார்ந்த வளமான கற்பனை ஆங்கில ஆசிரியர் ஒருவருக்கு வந்திருக்கிறது. முதுகெலும்பு உள்ளவனைப் பார்த்து முதுகெலும்பு இல்லாதவன் என்று சொல்லும் உலக வழக்கை நோக்கியவர்க்கு இந்தக் கற்பனையின் அழகு இன்னும் அழகு பெறும். கண் அழுவது உண்டு. காற்றுமா அழும்? அந்தோணிசாமிக்கு நீரில்லாத ஆறு நிற்க முடியாமல் படுத்துக்கிடப்பதன் காரணமாக முதுகெலும்பு இல்லாத ஆறு கற்பனை வந்திருக்கிறது! பெருவெள்ளக் கோலமே ஆறு ‘நின்ற கோலம்!’

“மணல்அள்ளித் துகிலுரித்த போதெல்லாம் செயலற்று
மண்ணாக இருந்து விட்டு
அனலிடை அகப்பட்டுத் துடிக்கின்ற புழுவாக
அவனியிலே தவிப்ப தேனோ?”

என்று அதே பாட்டில் அவருடைய  மற்றொரு கற்பனைப் பதிவைக் காணலாம். இந்த இடத்தில் மரபு சார்ந்த கற்பனையைத் தன் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். ஆற்றினைப் பெண்ணாகக் கருதி பாடுவது தமிழ்க்கவிதை மரபு! கண்ணகியின் துன்பத்தைக் கண்ட வையை ஆறு.

“வையை என்ற பொய்யாக் குலக்கொடி
தையற் குறுவது தானறிந்தனள் போல்
புண்ணிய நறுமலர் ஆடைபோர்த்த
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
புனல்யாறு அன்றிது பூம்புனல் ஆறு”

சென்றதாக அடிகள் பாடியிருக்கிறார். அடிகள் போர்த்திய ஆடையை இங்கே பல முதலாளிகள் அவிழ்க்கிறார்கள். பண்பாடு குறைவான செயல் மட்டுமன்று பாதகமான செயலும் கூட!. அந்தப் பாதகத்தை இவர் பாட்டிலே பதிவு செய்திருக்கிறார்.

கவிதைச் சோலையில் கட்டுமானச் சிறப்பு

யாப்பு என்பது கற்பு, காப்பு, கலைப்பு என்பன போன்றதொரு  தொழிற்பெயர். கவிதையில் யாப்பு என்பது அதன் புறக்கட்டுமானத்தைக் குறிப்பது. படைப்பாளன் தான் எடுத்துக் கொண்ட அல்லது அவன் உள்ளத்தில் தோன்றிய பாடுபொருளுக்குத் தக்கவாறும் தன் மனநிலைக்கும் தக்கவாறும் அமைத்துக் கொள்கிற வெளிப்பாட்டு உத்தி. இந்தச் சிறிய கவிதை நூலில் காணப்படும் ஒரு சில கவிதைக் கட்டுமானத்தை ஆராய்வதாக இப்பகுதி அமைகிறது.

“நான்விட்டுத் தரமாட்டேன் என்று சொல்லும்
நட்பினரும் அதுபோலே நினைப்ப தாலே
நானிலத்தில் குழப்பங்கங்கள் முற்றிப் போக
நாள்தோறும் துன்பங்கள் தொடரும்போது
நான் நினைக்கும் அத்தனையும் சரியே என்று
நாள்தோறும் வாதிடுதல் சரியா சொல்வீர்?
நானுணர்ந்தேன் என்தவற்றை! நாளும் வெற்றி
நனிபெறவே தடைகளின்றி முயல்வோம் நாமே!”

என்பது போன்ற எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் படைப்பாளின் ஆற்றொழுக்கான நடைக்கும் கவிதை படைப்பதில் அவருக்கிருக்கும் ஆர்வத்திற்கும் சான்றாகத் திகழ்கிறது!. தமிழ்க்கவிதைப் படைப்புலகில் மிகவும் நீர்த்துப்போன யாப்பு இது! இந்த யாப்பினைத் தக்க முறையில் தன் கவிதைப் பயிற்சிக்குப் பயன்படுததிக் கொண்டிருக்கிறார் பாவலர்!.

சினத்தைத் தூண்டும் சொற்களையே
சிறிதும் சொல்ல வேண்டாமே
மனத்துள் சினத்தை அடக்குவதால்
மனத்தில் அழுத்தம் உயர்கிறதே!
குணத்தை யாரும் ஒப்பிட்டே
குறையாய்க் கூற வேணடாமே!
பணத்தைச் சிறுகச் சேர்ப்பதுபோல்
பண்பை வளர்க்க முயல்வோமே!

என்னும் பாட்டு அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் பல வடிவங்களில் ஒன்று. மா மா காய் என்று அரையடிக்கான இலக்கணத்தைப் பெற்று அமைகின்ற இநதப் பாட்டின் சந்தம் மகாகவிக்குப் பிடித்தமான சந்தங்களுள் ஒன்று. இதனை

“மொய்க்கும கவலை பகைபோக்கி
முன்னோன் அருளைத் துணையாக்கி
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி
உடலை இரும்புக் கிணையாக்கிப்
பொய்க்கும் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே
மெயக்கும் கிருத யுகத்தினையே
கொணர்வேன தெய்வ விதியிஃதே!

என்னும் பாடலால் அறியலாம். ‘விநாயகர் நான்மணி மாலையில்’ அமைந்துள்ள நான்கு வடிவஙகளில் ஒன்றினை இந்த யாப்பிற்கு அவர் அளித்திருக்கிறார். இனி இந்த அறுசீர்களை இதே வாய்பாட்டில் பன்னிரு சீர்களாக அமைத்துக் கொண்டு அமைப்பதே பிள்ளைத் தமிழ். இதனை

பேரா தரிக்கும் அடியவர் தம்
பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும்
பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா!!
சேரா நிருதர் குல கலகா,
சேவற் கொடியாய்த் திருச்செந்தூர்த்
தேவா, தேவர் சிறைமீட்ட
செல்வா என்று உன் திருமுகத்தைப்
பாரா மகிழ்ந்து முலைத் தாயார்
பரவிப் புகழ்ந்து விருப்புடன் அப்பா
வா வா என்று உன்னைப் போற்றப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்
வாரா திருக்க வழக்குண்டோ?
வடிவேல் முருகா வருகவே
வளரும் களபக் குரும்பை முலை
வள்ளிக் கணவா வருகவே!!

என்னும் பகழிக்கூத்தர் எழுதிய திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமழின் வழியும் ஏனைய பிள்ளைத் தமிழ் நூல்களின் வழியும் உணர்க. இது பிள்ளைத் தமிழில் பெருவழக்கு இனி இந்த கட்டுமானத்தின் முதலடியிலும மூன்றாம் அடியிலும் தனிச்சொல் பெய்து சந்த இனிமையைக் கூட்டி அதனைச சிந்தாக்கும் முயற்சியும் நடந்தேறியிருக்கிறது.

“அஞ்சி நடுங்கி வாழ்வதுவும்  — பிறர்
அடிமையாக உழல்வதுவும்
கெஞ்சித் திரிவதும் வாழ்வாமோ?  பிறர்
கேட்டில் மகிழ்வது அறமாமோ?”

என்று கவிஞர் கடவூர் மணிமாறன் பாடியிருக்கிறார். ஆற்றல் மிக்க கவிஞர் வல்லாளர வைரமுத்து

“மாயக் கனவுகள் தின்பவரை – உயிர்
மயங்கிக் கிடக்கும் தோழர்களை
தீயைத் தின்னும் இளைஞர்களாய் – கவி
செய்யாதொழிந்தால் ஏது பயன்?”

என்று பாடியிருக்கிறார். பிறரும் பாடியிருக்கிறார்கள். விரிப்பின் பெருகும்.

“குறுக்கிட்டுப் பேசுவதால் இருவ ருக்கும்
குறைவான புரிதலுடன் மனவ ருத்தம்
பொறுமையாய் இறுதிவரைக் கேட்ப தாலே
பொன்னான நட்புகளைத் தொடர லாமே!”

என்பதை யொத்த பாடல்களால் தனக்குக கலித்தாழிசையும் கைவந்ததே என்பதைக் காட்டியிருக்கிறார் அந்தோணிசாமி.

“பொருதடக்கை  வாளெங்கே? மணிமார் பெங்கே?
போர்முகத்தல் எவர்வரினும் புறங்கொடாத
பருவயிரத் தோளெங்கே எங்கே என்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின்! காண்மின்!

என்பது கலிங்கத்துப் பரணி! எனவே எளிய சொற்களில் இனிய சந்தங்களக் கொண்ட பாடல்களை இயற்றுவதிலும் யாப்பிலக்கண நெறி பற்றி எழுதுவதிலும் அந்தோணிசாமி அவர்களின முயற்சி பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.. இவர்தம் கவிதைகளில் இழையும் தொடைவிகற்பங்களைப் பற்றி ஆராய்ந்து சொல்லலாம். அது கட்டுரையின் அளவை விஞ்சக்கூடும். யாப்பமைக் கவிதைகளில் காணப்படும் ஒரு சில பிழைகள் கவிதை வல்லாளர்களுக்கும் ஏற்படக்கூடியனவே என்பதாலும் எதிர்காலத்தில் மிக எளிதாக தவிர்க்கப்படலாம் என்பதாலும் அவை கருத்திற் கொள்ளப்படவில்லை.

ஆன்றோரை மதிக்கும் அந்தோணிசாமி

பண்பாட்டு விழுமியங்களின் அருமையறியா யாரும் மரபுக்கவிதை எழுதுவதாகச் சொல்லிக் கொள்வது அருவெறுப்பாக உள்ளது. வள்ளுவனுக்கு என்ன  தெரியும்? கபிலர் பாடல்களில் கற்பனை உண்டா? கதை சொன்னதைத் தவிர கம்பன் வேறு என்ன செயதான்? பாரதிக்கு யாப்பிலக்கணம் தெரியுமா? பாரதிதாசனுக்கு எந்தப் பல்கலைக்கழகமாவது டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறதா?’ என்று சான்றோர்களை எள்ளி நகையாடும் ஒரு கூட்டம் தமிழகத்து உயர்கல்வி நிலையங்களிலேயே இடம் பெற்றுள்ளது. இது என் நேரடி அனுபவம். என் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஒரு முறை என்னிடம் சொன்னார். ‘திருக்குறளில்;  ‘கூறியது கூறல்’ என்ற குற்றம் அதிகமாக இருககிறது’ என்று. நான் திருப்பிக் கேட்டேன். ‘அப்படியானால் குறைவாக இருக்கலாமா? என்று. அதாவது திருக்குறளில் குறை காணும் அளவிற்குத் தன்னை தன் முனைப்பை வெளிப்படுத்திக் கொள்ளும் பேராசரியர் (?) ஒருவர் எப்படி மரபாளுநராக பணியாற்ற முடியும்?

அந்தோணிசாமி அவர்கள் அந்த வகையில் பண்பின் கொள்கலமாகத் திகழ்வதைக் காணமுடிகிறது. ஆங்கிலப பேராசிரியர் ஷெல்லியைப் பாராட்டலாம். பைரனைப் புகழலாம். சேக்‌ஸ்பியரைச் சிலாகிக்கலாம். வால்ட் விட்மனை வாயாரப் புகழலாம். ராபர்ட் பிராஸ்ட் கவிதைகளை மெச்சலாம். அவர் முடியரசனைப் பாராட்டுகிறார். பாரதியைப் பேசுகிறார்!.சுரதாவின் உவமங்களில் இவர் சொக்கிக் கிடந்ததை இவருடைய கவிதைகளில் காணப்படும் மயக்கமே உணர்த்துகிறது. அதிலிருந்து இன்னும் எழவில்லை இவர்!

“இல்லத்தில் பாராட்டைத் தொடங்கிடுவோம்!
இளையோரை முதியோரைப் புகழ்ந்திவோம்1
நல்ல செயல் செய்தவுடன சிறிதெனினும்
நற்பண்பாய்ப் பாராட்டி ஊக்குவிப்போம்!

என்று உளவியல் கற்ற இந்த ஆசிரியர் பின்னும் தொடர்கிறார்!  விடுதலைக் கவிஞர் நாமக்கல்லாரை நாவினிக்கப் போற்றுகிறார்! நகைச்சுவைப் புயல் சின்ன அண்ணாமலையை நினைவு கூர்ந்து பாடுகிறார். நான் சின்ன அண்ணாமலை அவர்களைச் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களோடு கண்டவன். அந்த நகைச்சுவை இமயத்தை அந்தோணிசாமி பாடியிருக்கிறார். எனக்குத் தெரிந்து சின்ன அண்ணாமலையின் படத்தைக்கூடத் திறக்காத தமிழகத்தில் அவரைக் கவிதையின் பாடுபொருளாக்கிய பெருமை அந்தோணிசாமிக்கு உண்டு.  அவருக்கு மட்டுமே உண்டு!

நிறைவுரை

‘படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! என்ற பகுதியில் எழுபத்தாறு வயதான நான் எழுதிவரும் கட்டுரைகள் முழுமையும் என் நலன்  நோக்கியதே!  எனது தனிமைக்கு இந்தப் பிள்ளைகள் எழுதும் கவிதைகள் துணையாகின்றன.  இவர்களில் பெரும்பாலோரை நான் நேரில் சந்தித்தது கூட கிடையாது. சிலர் அலைப்பேசியில் தொடர்பு கொள்வர். அவ்வளவதான்! தம்பி அந்தோணிசாமி  ஆங்கிலமொழியிலக்கியத்தில் மேனிலைக் கல்வி ஆசிரியர் அவர் கொஞ்சம் முயன்றிருந்தால் ஒரு சிறிய நூலை ஆங்கிலத்திலேயே வெளியிட்டிருக்க இயலும். அவர் தமிழில் பாடியிருக்கிறார். சொந்தச் செலவில் பதிப்பித்தும் இருக்கிறார். பாராட்ட வேணடாமா? சமுதாய நோக்கு, கற்பனை, வடிவம், உணர்ச்சி என்னும்  கவிதைக்கான பல கூறுகளையும் கலந்த கலவையாகப் படைத்துக் காட்டியிருக்கும் இந்த நூலில் சொத்தைக் கருத்துக்கள இல்லை!. தூங்க வைக்கும் வடிவம் இல்லை!. தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுவது எளிமை! எளிமை! எளிமை! எளிமையுடையவர் பேறு பெற்றார். அந்தோணிசாமி கவிதைகள் உட்பட!

நல்லாசிரியர் ம.அந்தோணிசாமி M.A.,M.A.,M.Ed.,M.Phil.,

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 10

  1. உள்ளன்புடன் பாராட்டும் குணம் உயர்வான நூல்களை ஒப்பீடு செய்யும் வல்லமை, தேடலை கவிஞர்களிடம் உண்டாக்கும் தேடல். எங்களையும் ஒரு பொருட்டாய்க் கொண்டு வாழ்த்தையே ஆய்வேடாக எங்களுக்கு ஆவணமாக தந்தைக்கு என்றும் நன்றியுடையேன்
    குளித்தலை முகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *